இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு

அவரும், அவர்களும்!

எசாயா 55:6-9
பிலிப்பியர் 1:20-24,27
மத்தேயு 20:1-16

'அறிவோடு இருப்பதை விட அதிர்ஷ்டத்தோடு இருப்பது நன்று!' - இப்படி ஒரு குறுஞ்செய்தி நேற்று என் மொபைலுக்கு வந்தது. கொஞ்ச நாள்களாக நடக்கும் அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது இந்த குறுஞ்செய்தி உண்மை எனவும் தோன்றுகிறது. இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் நற்செய்தி வாசகத்தின் (காண். மத் 20:1-16) பின்புலத்தில் பார்க்கும்போது இதைக் கொஞ்சம் மாற்றிப் புரிந்துகொள்ளலாம்: 'உழைப்போடு இருப்பதை விட அதிர்ஷ்டத்தோடு இருப்பது நன்று!’

நாளின் வௌ;வேறு நேரங்களில் திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள். முதலில் வந்தவர்கள் தங்களின் உழைப்பிற்கேற்ற ஒரு தெனாரியத்தைப் பெறுகின்றனர். கடைசியில் வந்தவர்கள் தங்களின் அதிர்ஷ்டத்திற்கேற்ற ஒரு தெனாரியத்தைப் பெறுகின்றனர்.

விண்ணரசு என்பதை காமன் மேன் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். கொட்டாவி விட்டவன் வாயில் திருப்பதி லட்டு விழுந்தது மாதிரி மாலை 5 மணி வரை வேலையில்லாமல் வாளாவிருந்தவர்கள் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்து 1 நாள் கூலியைப் பெறுகின்றனர்.

மத்தேயு 20:1-16. இது ஒரு உவமை. விண்ணரசு பற்றிய உவமை மத்தேயு நற்செய்தியில் மட்டுமே வரும் உவமை. இது ஒரு சிக்கலான உவமை. ஏனென்றால், மனித கணிதத்திற்கு எதிராகச் செல்லும் இதன் நிறைவு. 12 மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும், ஒரு மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும் ஒரே சம்பளம் வழங்கும் உவமை இது. வழக்கமாக இதை 'திராட்சைத் தோட்ட வேலையாட்கள் உவமை' என்று அழைக்கிறோம். ஆனால், நான் 'கணிதம் தெரியாத ஒரு ஆண்டவரின் கதை' என்று அழைக்கிறேன்.

மத்தேயு 20:1-16 உள்ள இறைவாக்கு பகுதியின் அமைப்பை முதலில் ஆராய்வோம். வழக்கமாக இந்த உவமையை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்:

20:1-7 வேலையாட்கள் பணியமர்த்தப்படுதல்

20:8-16 வேலையாட்களுக்கு ஊதியம் தரப்படுதல்

இப்படிப் பிரிக்கத் தூண்டுவது 1 மற்றும் 8 வசனங்களில் இருக்கும் 'காலை' மற்றும் 'மாலை' என்ற நேரக்குறிப்புகள். இந்த நேரக்குறிப்புகள் மிக முக்கியமானவைதான். ஆனால், இந்த வகை பிரித்தலில் வேலையாட்கள்தான் முதன்மைப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், வேலையாட்கள் சும்மா வந்து போகக்கூடியவர்கள்தாம். ஆனால், இந்த உவமையின் கதாநாயகன் தோட்ட உரிமையாளர்தான். ஆக, அவரையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த உவமையில் ஐந்து பிரிவுகள் உள்ளன:

20:1அ முன்னுரை

20:1ஆ-7 வெளியே

20:8 உள்ளே-வெளியே

20:9-15 உள்ளே

20:16 முடிவுரை

20:1அ வில் இந்த நிகழ்ச்சி இறையாட்சிக்கு ஒப்பிடப்படுவதாகச் சொல்லப்படுவதுதான் முன்னுரை. இத்தோடு இணைந்து செல்வது 20:16ல் இருக்கும் முடிவுரை. இறையாட்சியில் முதன்மையானவர்கள் கடைசியாவார்கள், கடைசியானவர்கள் முதன்மையாவார்கள். 'வெளியே', 'உள்ளே' என்று சொல்வது தோட்டத்தைப் பொறுத்தது. உவமையின் முதல் பகுதியில் தோட்ட உரிமையாளரும், வேலையாட்களும் தோட்டத்திற்கு வெளியில் இருக்கிறார்கள். இரண்டாம் பகுதியில் இந்த இரண்டு பேரும் தோட்டத்திற்கு உள்ளே இருக்கிறார்கள். மேலும், தோட்டத்திற்கு வெளியே, வேலைக்காரர்கள் ஓரிடத்தில் நிற்கின்றார்கள். உரிமையாளர் முன்னும் பின்னும் செல்கின்றார். ஆனால், தோட்டத்திற்கு உள்ளே உரிமையாளர் ஓரிடத்தில் நிற்கின்றார். வேலைக்காரர்கள் முன்னும், பின்னும் செல்கின்றனர். 20:8ல் உரிமையாளர் தன் கணக்கரிடம் அல்லது மேற்பார்வையாளரிடம், 'வேலையாள்களை அழைத்து கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை கூலி கொடும்!' என்கிறார். இதுதான் கதையின் மையம் அல்லது உச்சம். 'கடைசியிலிருந்து தொடங்கி முதலில் வந்தவர் வரை செல்ல வேண்டும்!' - இதே வார்த்தைகள்தாம் 'கடைசியானவர் முதலாவர்' என்று 20:16ல் தீர்வாக அல்லது முடிவுரையாக அமைகிறது.'உள்ளே-வெளியே' என்பது ஸ்டீபன் கோவே அவர்கள் தன் 'தெ செவன் ஹேபிட்ஸ் ஃபார் ஹைலி இஃபக்டிவ் பீப்பிள்' நூலில் உருவாக்கிய ஒரு சொல்லாடல். அதாவது, கான்செப்ட் சிம்பிள்தான். பேண்ட்ல உள்ள பாக்கெட்ல பென்-டிரைவ் போட்டு அது காணாம போயிடுச்சுனு வச்சிக்கிவோம். அதைத் தேடும் முயற்சியில் பேண்டின் பாக்கெட்டை அப்படியே வெளிப்புறமாக எடுத்து தேடுவோம். இதுதான் .... இதற்கு மேல் தேட ஒன்றுமில்லை. ஆக, ஒருவரின் உள்ளக்கிடக்கையை முழுவதுமாகத் தெரிவிப்பதுதான் 'உள்ளே-வெளியே'. 20:8ல்தான் உரிமையாளரின் உள்ளக்கிடக்கை அப்படியே வெளிப்படுகிறது. மேலும் இந்த ஐந்து வகை பிரிவில் நேரக்குறிப்புகள், வேலையாட்கள்-உரிமையாளர், காலை-மாலை, உள்ளே-வெளியே, என எல்லா இருமைநிலைகளும் எளிதில் துலங்குகின்றன.

இயேசு சொல்லும் உவமைகளில் பல கேள்விகளை எழுப்பும் உவமை இது. எட்டு மணி நேரம் வேலை பார்த்தவர்களும், ஒரு மணி நேரம் வேலை பார்த்தவர்களும் ஒரே கூலியைப் பெறுகின்றனர். எட்டு மணி நேரம் வேலை பார்த்தவர்களால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 'இது அநீதி!' என்று கொடிபிடிக்கின்றனர். 'ஆனா தம்பி! நீ ஒத்துக்கிட்டதைத் தான் நான் கொடுத்துவிட்டேனே!' என்கிறார் தோட்ட உரிமையாளர். 

வாழ்க்கையின் அளவு கோல் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு சிலரை வாழ்க்கை கழுத்தை நெரிக்கிறது. ஒரு சிலரை மடியில் போட்டு வீசி விடுகிறது. ஏனென்று கேட்க முடிகிறதா நம்மால்?

இந்த உவமையைக் கொஞ்சம் கோணல், மாணலாக யோசித்துப் பார்த்தால் எப்படி இருக்கும்?

அ. நிதி நிர்வாகம். 

இந்த உவமையில் ஐந்து குழுக்கள் ஐந்து மணிப்பொழுதுகளில் வேலைக்கு வருகின்றனர். முதல் குழுவினர் விடியற்காலையில் வருகின்றனர். காலை 6 மணி என வைத்துக்கொள்வோம். ஏனெனில் இயேசுவின் காலத்தில் நிலவிய கால அளவைப்படி விடியற்காலை என்பது நம் 6 மணி. இரண்டாம் குழுவினர் 9 மணிக்கு வருகின்றனர். மூன்றாம் குழுவினர் மதியம் 12 மணிக்கும், நான்காம் குழுவினர் பிற்பகல் 3 மணிக்கும், ஐந்தாம் குழுவினர் மாலை 5 மணிக்கும் வருகின்றனர். மாலை 6 மணிக்கு வேலை நிறைவு பெறுகிறது. முதல் குழுவினர் 12 மணி நேரம் தலைவனின் திராட்சைத் தோட்டத்தில் இருந்திருக்கின்றனர். 12 மணி நேரமும் வேலை செய்திருக்க வாய்ப்பில்லை. இப்போதுள்ள எட்டு மணி நேர வேலை நிர்ணயமும் அப்போது கிடையாது. அவர்கள் தோட்டத்தில் இருந்த நேரத்தை அப்படியே எடுத்துக்கொள்வோம். இரண்டாம் குழுவினர் 9 மணி நேரமும், மூன்றாம் குழுவினர் 6 மணி நேரமும், நான்காம் குழுவினர் 3 மணி நேரமும், ஐந்தாம் குழுவினர் 1 மணி நேரமும் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதும், திராட்சைத் தோட்டத்தில் என்ன மாதிரியான வேலை என்பதும், திராட்சைத் தோட்டம் எவ்வளவு பெரியதும், எவ்வளவு வெயில் அடித்தது என்றும் உவமையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. முதல் குழுவினரோடு பேசப்பட்ட சம்பளம் 'ஒரு தெனாரியம்'. ஒரு தெனாரியத்தின் மதிப்பு 120 ரூபாய் என வைத்துக்கொண்டால் முதல் குழுவினர் பெற வேண்டிய சம்பளம் 120. இரண்டாம் குழுவினர் 90, மூன்றாம் குழுவினர் 60, நான்காம் குழுவினர் 30 மற்றும் ஐந்தாம் குழுவினர் 10 ரூபாய் பெற வேண்டும். 10 ரூபாய்க்கான வேலையைத் தான் இறுதியாக வந்தவர் செய்கின்றார். ஆனால் அவரே முதலில் ஊதியம் பெறுகிறார். அவரே முழுமையாகவும் பெறுகிறார். இது ஒரு தவறான நிதி நிர்வாகம். இப்படிச் செய்வதால் அவருக்கு எவ்வளவு வருவாய் இழப்பு நேரிடும்? 

ஆ. உறவு நிர்வாகம். 

நம் வாழ்க்கையில் உள்ள உறவுகளுக்கும் இது பொருந்தும் என நினைக்கிறேன். திராட்சைத் தோட்டம் என்பது நம் வாழ்க்கை. இதில் விடியற்காலையில் வேலைக்கு வருபவர்கள் நம் பெற்றோர். நம்மோடு நம் வாழ்வில் அதிக ஆண்டுகள் இருப்பவர்கள் இவர்கள் தாம். இரண்டாம் குழுவைப் போல 9 மணிக்கு வருபவர்கள் நம் உடன்பிறந்தவர்கள். நமக்கு அடுத்தடுத்து வந்தவர்கள் இவர்கள். மூன்றாம் குழுவைப் போல 12 மணிக்கு வந்தவர்கள் நம் மாமா, மச்சான், சித்தப்பா, சித்தி போன்ற உறவினர்கள். நான்காம் குழுவைப் போல 3 மணிக்கு வருபவர்கள் நம் நண்பர்கள். இவர்கள் நம்மோடு கொஞ்ச காலம் தான் இருப்பார்கள். மேலும் இந்தக் குழுவில் உள்ளவர்கள் மாறிக்கொண்டும் இருப்பார்கள் - பள்ளியில், கல்லூரியில், பணியிடத்தில், கிளப்பில், சர்ச்சில் என மாறி மாறி வருவார்கள். இறுதியாக ஐந்து மணிக்கு வருபவர்கள் போல வருபவர்கள் தாம் 'மனைவி' அல்லது 'கணவன்'. இவர்கள் இறுதியில் வந்தார்கள் என்பதற்காக இவர்களை ஒரு மணி நேரம் மட்டும், கூடவே இருக்கிறார்கள் என்பதற்காக பெற்றோர்களை 12 மணிநேரமும் அன்பு செய்ய முடியுமா? அது நீதியாகுமா? மேலும் சில குடும்பங்களில் மாமியார்-மருமகள் பிரச்சனை வருவதற்குக் காரணம்; இதுதான். மாப்பிள்ளையின் தாயார் தன் மகனைப் பார்த்து, 'நேற்று வந்த ஒருத்திக்காக கூடவே இருக்கும் என்னை உதாசீனப்படுத்துகிறாயா?' என்று கேட்கும் போது அங்கே அந்த மகன் என்ன சொல்ல வேண்டும் தெரியுமா? 'அம்மா! உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?' நீங்க இப்படிச் சொல்லி உங்க அம்மாகிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டா அதற்கு கம்பெனி பொறுப்பாகாது! ஆனால் இதுவும் உண்மை!

இ. ஆன்மீக நிர்வாகம்

மோட்சம் இருக்கோ. இல்லையோ, ஆனா நம்ம எல்லாருக்குமே மோட்சத்துக்குப் போகனும்னு ஆசை இருக்கு! மோட்சத்துக்குப் போக எப்பவுமே நல்லவங்களா இருக்கனுமா அல்லது எப்பவாச்சும் நல்லவங்களா இருக்கனுமா? 12 மணி நேரம் நல்லவரா இருந்தாலும், 1 மணி நேரம் நல்லவரா இருந்தாலும் ஒன்னுதானேன்னு தோனுது இந்த உவமையைப் பார்த்தா. இதற்கு உதாரணம் இயேசுவோட வாழ்க்கையிலே இருக்கு தெரியுமா? இயேசு இறக்கும் தருவாயில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது, நல்ல கள்வன் சொன்னது நினைவிருக்கிறதா, 'நீர் அரசுரிமை பெற்று வரும் போது என்னை நினைவுகூறும்!' அதற்கு இயேசுவின் பதில் என்ன? 'நீர் இன்றே என்னோடு வான்வீட்டில் இருப்பீர்!' தன் வாழ்நாள் முழுவதும் தீமையே செய்துவிட்டு, கடைசி ஒரு நிமிடம் இயேசுவிடம் செபிக்கிறான். மோட்சத்துக்குச் சென்றுவிடுகிறான். இறைவனின் தோட்டத்தில் இவன் ஒரு நிமிடம் தானே வேலை செய்கிறான். இயேசு இப்படிச் சொல்லியிருக்கலாமே! 'அப்படியாப்பா! உன்னை நினைவுகூறனுமா? நீ நல்லவன் இல்லையே பா! இங்க கீழ பாரு! எங்கம்மா! என் அன்புச் சீடர்! எனக்குப் பணிவிடை செய்தவர்கள்! இவங்கள்லாம் முதலில் வான்வீட்டிற்கு வரட்டும்;. ஏன்னா அவங்க வாழ்க்கை பூரா நல்லவங்களாவே இருந்துட்டாங்க! நீ கொஞ்சம் வெயிட் பண்ணு!' ஆனால் இயேசுவின் சீனியாரிட்டி லிஸ்ட் வித்தியாசமா இருக்கிறது. ஆகையினால் நாம சாகும்போது நல்லவங்களா இருந்தாலே போதும்! நாம எப்போ இறப்போம்னு தெரியாது! ஆகையினால எப்பவுமே நல்லவங்களா இருப்போம்! சரியா?

ஈ. உளவியல் நிர்வாகம்

இன்றைய நற்செய்தியில் மனிதர்களின் உள் மன உணர்வுகள் மிகத் தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சோர்வு, திருப்தி, கோபம், பொறாமை, முணுமுணுப்பு இவையெல்லாம் இங்கே சொல்லப்பட்டுள்ள உணர்வுகள். ஒரு தெனாரியத்திற்கு ஒத்துக் கொண்டாலும் இன்னும் அதிகம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உணர்வும் இருந்தது. எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தில் ஏமாற்றமும் பாய் விரித்துப்படுத்துக்கொள்கிறது. தாங்கள் பேசிய கூலியை வாங்குவதில் ஏன் முதல் குழுவினருக்கு மகிழ்ச்சி இல்லை. தங்கள் கையிலிருப்பதை மட்டும் பார்த்திருந்தால் அவர்களின் மகிழ்ச்சி பறிபோயிருக்காது. ஆனால் அடுத்தவரின் கையையும் பார்க்கின்றனர். நமக்கு வெளியே மகிழ்ச்சியின் அளவுகோலைத் தேடினால் நாம் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்கவே போவதில்லை. வெளியே பார்க்கும் போது ஒப்பீடும், கோபமும், பொறாமையுமே வருகின்றது.

உ. சமூக நிர்வாகம்

ஒருவேளை வேலை பார்த்த ஐந்து குழுவினரும் பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என வைத்துக் கொள்வோம். சாயங்காலம் வீடு திரும்பியவுடன் சண்டைதான் வரும். சண்டைக்குக் காரணம் பொறாமை. ஒருவர் மற்றவரை முதலில் கேலி பேசுவார்கள்! 'அம்மா! இவன் காலையில இருந்து வேலை பார்த்தான்! ஆனா நான் ஒரு மணி நேரம் தான் வேலை பார்த்தேன். ஆனா எனக்கும் ஒரு தெனாரியம்! அவனுக்கும் ஒரு தெனாரியம்!' என்பான் கடைசியில் வந்தவன். முதலில் வந்தவன் கோபப்படுவான். வலிமையுள்ளவனாயிருந்தால் மற்றவனை அடிப்பான். ஒரு தலைவனின் தாராள குணத்தால் ஒரு குடும்பம் சின்னாபின்னமாகிறது. என்னைப் பொறுத்தவரையில் காயின்கள் உருவாகக் கடவுள்தான் காரணம். தன் பலிபொருள் ஏற்றுக்கொள்ளப்படாததால் காயினுக்கு பொறாமை வருகின்றது. காயின் பதரைக் கொடுத்தான் என்றும் ஆபேல் கொழுத்த ஆட்டைக் கொடுத்தான் என்றும் சொல்லாதீர்கள். பைபிளில் அப்படி ஒன்றும் இல்லை. அப்படிச் சொல்லி நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள்?

மேலும் இந்த ஒரு நாள் நடந்தது போலவே எல்லா நாளும் நடக்குது என வைத்துக் கொள்வோம். அங்கே ஒட்டு மொத்த சமூகத்திலும் சிக்கல் உருவாகும். காலையில் ஒருவன் வேலைக்குப் புறப்பட்டால் பக்கத்து வீட்டுக்காரன் என்ன சொல்வான்? 'டேய்! எங்கடா கிளம்பிட்ட! நீ காலையில வேலை பார்த்தாலும் ஒரே சம்பளம் தான்! சாயங்காலம் வேலை பார்த்தாலும் அதே சம்பளம் தான்! நம்ம சாயங்காலமே போவோம்!' இதனால் நன்றாக வேலை பார்ப்பவர்களின் 'மோட்டிவேஷனும்' கெடுகிறது அல்லவா?

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு கற்பிப்பது என்ன?

1. இன்றைய முதல் வாசகத்தில் தன்னுடைய வழிகள் மனிதர்களின் வழிகளை விட மிக உயர்ந்து நிற்பதாகச் சொல்கிறார் ஆண்டவராகிய கடவுள். பறக்கின்ற விமானத்திலிருந்து பார்த்தால் வானவில் முழுமையான வட்டமாகத் தெரியும் என்கிறார்கள். கீழிருந்து பார்ப்பவர்களுக்கு வானவில் பாதியாக அல்லது கால்வாசியாகத்தான் தெரிகின்றது. ஆக, மேலிருந்து பார்க்கும் போது பார்வை முழுமை அடைகிறது. திராட்சை தோட்ட உரிமையாளரைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவரின் தோட்டத்திற்குள் சென்று, அவரின் காலணிகளுக்குள் நம் கால்களை நுழைத்துக்கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் தங்களின் உழைப்பையும், நேரத்தையும் கணக்கிட்டனர். ஆனால் உரிமையாளரோ ஒவ்வொருவர் வீட்டில் எரிய வேண்டிய அடுப்பைக் கணக்கிட்டார். அனைவருக்கும் வயிறு ஒன்றுதான் என்றும், அந்த வயிற்றை நிரப்ப என்ன தேவையோ அதை அனைவருக்கும் கொடுக்க முற்படுகின்றார் உரிமையாளர். ஆக, இறைவனைப் போல பார்க்க முடியாத அனைவரும் அவரைப் பார்த்து முணுமுணுக்கவே செய்கின்றோம்.

2. இன்றைய இரண்டாம் வாசகத்தில் இழுபறி நிலை பற்றிப் பேசுகின்றார் பவுல். ஒரு பக்கம் தான் இறந்து கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் எனவும், மறுபக்கம் தான் இவ்வுலகில் இருந்து பணி செய்ய வெண்டும் எனவும் விரும்புகின்றார் பவுல். அதாவது, வாழ்வில் நாம் சில நேரங்களில் இரண்டு நல்லவைகளுக்கு நடுவில் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. இதுதான் மிகவும் கடினமான ஒன்று. இறுதியில், கிறிஸ்துவே உங்களை ஆளட்டும் என நிறைவு செய்கின்றார் பவுல். இதுதான் அனைத்தையும் கிறிஸ்துவில் காண்பது. வாழ்வையும், இறப்பையும் அவரில் கண்டுகொண்டால் நமக்கு இரண்டும் ஒன்றே. ஏனெனில் இரண்டும் அவரில்தான் உள்ளன.

3. வாழ்க்கை என்ற திராட்சைத் தோட்டத்தில் நாம் இன்று எத்தனை மணிநேரத்தில் உள்ளே வந்திருக்கிறோம் என எண்ணிப் பார்ப்போம். அடுத்தவரின் உழைப்பையும், இருப்பையும் கணக்கிட்டுக்கொண்டே இருக்கும் நாம் பல நேரங்களில் நம் உழைப்பையும், இருப்பையும் கணக்கிட மறந்துவிடுகின்றோம். 

அவர் தான் விரும்பியதைச் செய்கிறார். ஏனெனில் அவர் கடவுள்.

அவரின் விருப்பத்தின் முன் அறிவும், அதிர்ஷ்டமும் ஒன்றே.

அவரின் பார்வை அவர்களின் பார்வையாக இருந்தது என்றால் அவர்களை அவர் கண்டித்திருக்க மாட்டார்.

நம் பார்வை இன்று அவரின் பார்வையா?