இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவரின் உருமாற்ற விழா

இறை நல்லது!

தானியேல் 7:9-10,13-14
2 பேதுரு 1:16-19
மத்தேயு 17:1-9

'கறை நல்லது' - இதுதான் சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த சலவைத்தூள் விளம்பரம் சர்ஃப் எக்ஸலுக்கு பயன்படுத்தப்பட்ட கவர்ந்திழுப்புச் சொல்லாடல். விளையாட்டுத்திடல், வகுப்பறை, இல்லம், தோட்டம் என குழந்தைகள் விளையாடி அழுக்காக்கியதைக் காட்டிவிட்டு, 'கறை நல்லது' என நட்பையும் தங்கள் தயாரிப்பையும் ஒருசேர விளம்பரப்படுத்தியது இந்த நிறுவனம். என்னதான் விளம்பர அல்லது வியாபார உத்தி இருந்தாலும், 'கறை நல்லது' என்ற சொல்லாடல் நம் புரிதலிலும் ஒரு மாற்றத்தை உருவாக்குகிறது. இவ்வளவு காலமாக நாம் கறையைக் கெட்டது என்றும், கறை தேவையற்றது எனவும் எண்ணிக்கொண்டிருந்தோம். அந்த எண்ணத்தைச் சற்றே மாற்றியிருக்கிறது இந்த விளம்பரம்.

'இறை நல்லது' - இப்படி நாம் தலைப்பிட்டுக்கொள்வோம் இந்த வார மறையுரையை.

'கறை நல்லது' என்பதும், 'இறை நல்லது' என்பதும் வெறும் ரைமிங்கான பொருத்தம் அல்ல. மாறாக, தாபோர் மலையில் தோற்றம் மாறும் இயேசு தன் சீடர்களுக்கு, 'இறை நல்லது' என விளம்பரம் செய்கின்றார். இந்த விளம்பரம் மற்ற விளம்பரங்களைப் போன்ற பொய்கள் அல்ல. மாறாக, உண்மையாக அனுபவித்து உணரக்கூடிய ஓர் அனுபவம்.

இன்று நம் ஆண்டவரின் உருமாற்ற விழாவைக் கொண்டாடுகிறோம்.

உருமாற்ற நிகழ்வை மத்தேயு, மாற்கு, லூக்கா என்ற ஒத்தமைவு நற்செய்திகள் பதிவு செய்தாலும், அவைகளுக்கிடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த உருமாற்ற நிகழ்வை நேரில் கண்ட யோவான் அமைதியாயிருக்க, பேதுரு மட்டும் அதை தன் திருமடலில் பதிவு செய்கின்றார்.

பேதுருவின் உருமாற்றப் பதிவை இன்றைய இரண்டாம் வாசகத்தில் (2 பேதுரு 1:16-19) வாசிக்கின்றோம். தன் இறையனுபவம் தன் கனவில் நடந்த ஒரு நிகழ்வோ, அல்லது ஒரு புனைகதையோ இல்லை எனச் சொல்லும் பேதுரு, தன் இறையனுபவத்திற்குச் சான்றாக தான் தாபோர் அனுபவத்தைப் பதிவு செய்கின்றார்: 'நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள் ... தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இந்தக் குரலொலியை நாங்களே கேட்டோம்.' ஆக, பேதுருவின் இறையனுபவம் ஒரு காணல் அனுபவமாகவும், கேட்டல் அனுபவமாகவும் இருக்கிறது. இந்த அனுபவத்தைத் தன் திருச்சபையோடு பகிர்ந்துகொள்கின்ற பேதுரு, 'இருள்-ஒளி' என்ற உருவகத்தைக் கையாளுகின்றார். இருண்ட ஓர் இடத்தில் காணப்படும் ஒளி மிகவும் ஒளிமிகுந்ததாக இருக்கிறது. ஆக, இருள் ஒளியின் தன்மையைக் கூட்டிக் காட்டுகிறது. விடிவெள்ளி உதிக்கும்போது நாம் விடிந்துவிட்டது என்கிறோம். அப்படியே ஏதோ ஓரிடத்தில் இருளில் ஒளிந்துகொண்டிருக்கும் இறையனுபவம் என்ற ஒளி ஒவ்வொருவரின் மனதிலும் உதிக்கத் தொடங்கும்போது ஒவ்வொருவரின் உள்ளத்திலும் விடிவெள்ளி ஒளிர்கின்றது.

இந்த ஒளி உருவகத்தை இன்றைய முதல் வாசகத்தில் (காண். தானியேல் 7:9-10, 13-14) நெருப்பு, தீக்கொழுந்து, இரவு, மேகம் என்ற உருவகங்களால் பதிவு செய்கின்றார் இறைவாக்கினர் தானியேல்.

இவ்வாறாக, இரண்டாம் மற்றும் முதல் வாசகங்களில் இறை அனுபவம் அல்லது இறை பிரசன்னம் என்பது இருளில் ஒளிரும் ஒளிக்கும், இருளகற்றும் ஒளிக்கும், அளவிடமுடியாது மாட்சி என்னும் ஒளிக்கும் ஒப்பிடப்படுகிறது.

இயேசுவில் இந்த ஒளி வெறும் உருவகமாக இல்லாமல் அது உண்மையாகவே மாறுகிறது.

இயேசுவின் உருமாற்றத்தை 'மெட்டாமார்ஃபாசிஸ்' என்ற கிரேக்க வார்த்தையை செயப்பாட்டு வினைச்சொல்லாகப் பயன்படுத்திப் பதிவு செய்கின்றார். கூட்டுப்புழு பட்டுப்பூச்சியாக அல்லது வண்ணத்துப்பூச்சியாக மாற்றம் பெறுவதை நாம் 'மெட்டாமார்ஃபாசிஸ்' என அழைக்கின்றோம். இதன் தமிழ்பதம் 'தோற்ற மாற்றம்'. கூட்டுப்புழு வண்ணத்துப் பூச்சியாக தோற்றம் மாறுகிறது. ஆனால், தோற்றம் மாறினாலும் மாற்றம் பெற்ற உயிரினம் தன் முந்தைய உயிரினத்தில் இல்லாத சில குணங்களையும் பெறுகிறது. உதாரணத்திற்கு, கூட்டுப்புழுவால் பறக்க முடியாது. ஆனால் வண்ணத்துப் பூச்சியால் பறக்க முடியும். ஆக, தோற்றம் மற்றும் மாறவில்லை. குணத்திலும் மாற்றம் இருக்கிறது.

தான் மனித உருவில் தன் சீடர்கள் நடுவில் நடந்த இயேசு, தனக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்த மூன்று சீடர்களை (பேதுரு, யோவான், யாக்கோபு) மட்டும் அழைத்துக்கொண்டு சென்று அவர்கள்முன் தோற்றம் மாறுகின்றார். இந்த தோற்ற மாற்றம் சீடர்களுக்கு ஓர் அடித்தள அனுபவமாக இருந்தது. இந்த அடித்தள அனுபவமே இயேசுவைப் பற்றிய அவர்களின் பார்வையை மாற்றுகின்றது.

ஆறு நாள்கள், மலை, எலியா, மோசே, மூன்று பேர், கூடாரங்கள், மேகம் போன்ற சொல்லாடல்கள் முதல் ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் கொண்டிருந்த யாவே இறைவனின் சந்திப்புக்கூடார அனுபவத்தை நினைவுபடுத்துகின்றன. யாவே இறைவனின் இறைமை தங்களோடு உடனிருந்ததை இஸ்ரயேல் மக்கள் உணர்ந்ததுபோல இயேசுவின் சீடர்களும் இந்த அனுபவத்தை அனுபவிக்க அழைக்கப்படுகின்றார்கள்.

உருமாற்ற நிகழ்வுகளில் பரிமாறப்படும் உரையாடல்களோடு நம் வாழ்வை இணைத்துச் சிந்தித்து நம் வாழ்விற்கான பாடங்களை எடுத்துக்கொள்வோம்:

1. 'ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா?' (மத்17:4) இவ்வார்த்தைகள் பேதுருவின் வார்த்தைகள். இவர் இவற்றை இயேசுவை நோக்கிச் சொல்கின்றார்.

இறைவனின் பிரசன்னம் மட்டுமே தங்களுக்குப் போதுமானது என மனிதர்கள் நினைப்பது இங்கே ஒன்றும் புதிதல்ல. முதல் ஏற்பாட்டில் இதே எண்ணம் கொண்டிருந்தவர்கள் இருக்கிறார்கள்.

அ. மோசே. சீனாய் மலையில் ஆண்டவருக்கும் மோசேக்குமான உரையாடல் இப்படி நடக்கிறது: 'அதற்கு ஆண்டவர், 'எனது பிரசன்னம் உன்னோடு செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்' என்று கூற, மோசே அவரிடம், 'உமது பிரசன்னம் கூட வரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச் செய்யாதீர். நானும் உம் மக்களும் உம் பார்வையில் தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்? நீர் எங்களோடு வருவதாலும் நானும் உம் மக்களும் மண்ணுலகில் உள்ள அனைத்து மக்களினங்களினின்றும் வேறுபட்டு நிற்பதாலும் அன்றோ?' என்றார்' (காண். விப 33:14-16). மோசே இறைவனின் பிரசன்னம் தனக்கு அவசியம் என்றும், அதுவே தன் மக்களுக்கு அடையாளம் தருகின்றது என்றும் கூறுகின்றார்.

ஆ. தாவீது அல்லது சாலமோன். திபா 84ன் ஆசிரியர் தாவீதா அல்லது சாலமோனா? என்ற கேள்வி இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது. ஆனால் இத்திருப்பாடலின் தலைப்பில் பாடகர் தலைவர்க்கு என்று கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர்தான் இந்தப் பாடகர் தலைவர். இந்தப் பாடகர் தலைவர் இஸ்ரயேலின் அரசர். இஸ்ரயேலின் அரசருக்கு ஆசை எப்படி இருக்கிறது? 'வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களிலும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒருநாளே மேலானது. பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது' (திபா 84:10). நாட்டை ஆளும் அரசன் தான் கடவுளது இல்லத்தின் வாட்ச்மேனாக இருப்பதே இனிமையானது எனப் பாடுகின்றார். ஆக, தன் அரண்மனை தராத ஓர் அனுபவத்தை இறைவனின் பிரசன்னம் அவருக்குத் தருகின்றது.

இ. பேதுரு. பேதுருவை பல இடங்களில் இருப்பதாக நாம் பார்க்கிறோம். கடற்கரையில் மீன்பிடிக்கிறார். மாமியாரின் வீட்டில் இருக்கிறார். இயேசுவோடு யாயிரின் வீட்டில் இருக்கின்றார். செசரியா பிலிப்பி பகுதியில் இயேசுவைப் பற்றிய அறிக்கை செய்கின்றார். இறுதி இராவுணவில் இருக்கின்றார். கெத்சமேனித் தோட்டத்தில் தூங்குகின்றார். ஆளுநரின் மாளிகையில் மறுதலிக்கின்றார். சேவல் கூவக் கேட்டு கண்ணீர் விடுகின்றார். இயேசுவால் பாராட்டப்படுகின்றார். 'சாத்தானே' என கடிந்துகொள்ளப்படுகின்றார். 'அவர்தான் இயேசு' என்றவுடன் அப்படியே கடலுக்குள் குதிக்கின்றார். 'எனக்கு உன்மீது அன்பு உண்டு என்பது நீ அறியாத ஒன்றா!' என இயேசுவிடம் சரணாகதி அடைகின்றார். இப்படி பல இடங்களில் பல நிலைகளில் இருந்தாலும், அவர் விரும்பக்கூடிய அல்லது அவர் தங்கக்கூடியதாக நினைக்கும் இடமும், நிகழ்வும் இயேசுவின் உருமாற்றமே. 

மனிதமும், மனிதம் சார்ந்தவையும் தராத ஏதோ ஒன்றை இறைமை தருகின்றது. ஆகையால்தான் இறைமை நிறைந்திருக்கும் இடம் நமக்குப் பிடிக்கிறது. அல்லது இன்னும் அதிகமாக அது நம்மைப் பிடித்துக்கொள்கிறது. இன்று என்னை இறைமை பற்றிக்கொள்கிறதா? நான் இறைமையைப் பற்றிக்கொள்கிறேனா?

2. 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்' (மத் 17:5)

இவ்வார்த்தைகள் வானகத் தந்தையின் வார்த்தைகள். இவர் இவற்றை சீடர்களை நோக்கிச் சொல்கின்றார்.

மேகம் நிழலிடும்போதெல்லாம் இறைவனின் பிரசன்னம் நிரம்புகிறது என்பது இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கை அனுபவம் (காண். விப 40:16-21, 34-38). ஆகையால்தான் மேகம் நிழலிட்டபோது எழுகின்ற குரலை கடவுளின் குரல் எனக் கண்டுகொள்கின்றனர் சீடர்கள். கடவுளின் குரல் மூன்று நிலைகளில் உள்ளது: (அ) இயேசுவுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு பற்றிய அறிமுகம், (ஆ) இயேசுவின் பண்பு, (இ) சீடர்களுக்கான அழைப்பு. இயேசுவை தன் மகன் என அறிக்கையிடம் வானகத் தந்தை அவரில் தான் மகிழ்வதாக முன்மொழிகின்றார்.

எந்த மகன் தன் தந்தைக்கும் தாய்க்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறாரோ அந்த மகனே சிறந்தவர் என்கின்றன ஞானநூல்கள்: 'ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை மகிழ்விக்கின்றனர். அறிவற்ற மக்களோ தம் தாய்க்குத் துயரமளிப்பர்' (நீமொ 10:1). 'குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு. அவரது வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்திற்குத் துயரம் தராதே' (சீஞா 3:12). இயேசுவின் மனுவுருவேற்றல் தந்தையின் பூரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

சீடர்களுக்கு இங்கே ஒரு கட்டளையும் தரப்படுகிறது: 'செவி கொடுங்கள்' என்ற கட்டளை இஸ்ரயேலின் காதுகளுக்கு, 'ஷெமா இஸ்ரயேல்' என்ற தங்களின் மேன்மையான கட்டளையை (காண். இச 6:4) நினைவுபடுத்தும். 'கேள்' அல்லது 'செவி கொடு' என்ற எபிரேய வினைச்சொல்லுக்கு, 'கீழ்ப்படி' என்ற பொருளும் உண்டு. தமிழ்மொழியிலும் இந்த நிலை உண்டு. 'அவன் என் பேச்சைக் கேட்கவில்லை' என்ற வாக்கியத்தை, 'நான் பேசியது அவன் காதுகளில் விழவில்லை' என்றும், 'அவன் என் பேச்சிற்குக் கீழ்ப்படியவில்லை' என்றும் பொருள் கொள்ளலாம். இயேசு கடவுளின் மகன் என்றால், அவர் நம் சகோதரர் என்றால், நாமும் கடவுளின் பிள்ளைகளே. நம்மைக் குறித்தும் கடவுள் மகிழ்ச்சியாக இருக்கின்றார். இந்த மகிழ்வில் நாம் நம் மூத்த சகோதரர் இயேசுவுக்குச் செவிமடுத்தல் அவசியம்.

3. 'எழுந்திருங்கள். அஞ்சாதீர்கள்'

இவ்வார்த்தைகள் இயேசுவின் வார்த்தைகள். இவர் இவற்றைத் தம் சீடர்களிடம் கூறுகின்றார்.

மேகத்தைப் பார்த்தவுடன், குரலைக் கேட்டவுடன் சீடர்கள் முகங்குப்புற விழுகின்றனர். விவிலியத்தில் முகங்குப்புற விழுதல் என்பது கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்து கொள்ளுதல் அல்லது ஏற்றுக்கொள்ளுதல் என்று பொருள்படும். கடலின்மேல் நடந்து வந்த இயேசு படகில் ஏறியவுடன் சீடர்கள் முகங்குப்புற விழுகின்றனர் (காண். மத் 14:22-33). இயேசு விண்ணேற்றமடையுமுன் சீடர்கள் முகங்குப்புற விழுகின்றனர் (காண். மத் 28:17). இங்கே உருமாற்ற நிகழ்விலும் சீடர்கள் முகங்குப்புற விழுகின்றனர். அவர்களை ஒருவகையான அச்சம் ஆள்கொள்கிறது.

கடவுளின் அனுபவத்தை வரையறுக்கின்ற ருடால்ஃப் ஓட்டோ என்ற மெய்யியலாளர், 'மிஸ்தேரியும் திரமெந்தும் எத் ஃபாசினான்ஸ்' எனக் குறிப்பிடுகின்றார். அதாவது இறை என்னும் மறைபொருள் அச்சத்திற்குரியதாகவும், ஆச்சர்யத்திற்குரியதாகவும் இருக்கிறது. 

அச்சப்பட்டு முகங்குப்புற விழுந்தவர்களைத் தூக்கிவிடுகின்ற இயேசு, 'எழுந்திருங்கள். அஞ்சாதீர்கள்' என்கிறார். மிகுதியான மீன்பாட்டைக் கண்ட சீமோன் பேதுரு, 'ஆண்டவரே என்னைவிட்டு அகலும்' எனச் சொல்லி இயேசுவின் பாதங்களைப் பற்றிக்கொள்கின்றார் (காண். லூக் 5:8).

இயேசுவின் இந்த எழுப்புதல், 'போதும். வாங்க போவோம்' என சீடர்களை அழைப்பது போலவும் இருக்கிறது. ஆக, மலையனுபவம் என்பது நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அனுபவமாக இருக்க வேண்டுமே அன்றி, அங்கேயே நம்மைத் தேக்கிவிடக்கூடாது என்பதே பாடம்.

இறுதியாக,

'அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு யாரையும் காணவில்லை' (மத் 17:8) என நிகழ்விற்குத் திரையிடுகிறார் மத்தேயு.

இதுதான் மிக முக்கியமான நிகழ்வு.

இனி இவர்கள் கண்களுக்குத் தெரிவதெல்லாம் இயேசு மட்டும்தான்.

  வில்வித்தை கற்கின்ற அர்ச்சுனக்கு பறவையின் கண் மட்டுமே தெரிந்தது. பறவையின் உடலோ, இலைகளோ, கிளைகளோ, மரமோ தெரியவில்லை. இயேசுவின் மேல் மட்டுமே கண்களைப் பதிய வைக்கும்போது நம் வாழ்வின் இலக்கும், பயணமும் தெளிவாகிறது.

ஆக, இன்று நாம் கொண்டாடும் இயேசுவின் உருமாற்றப் பெருவிழா நம்மில் குடிகொண்டிருக்கும் இறையையும், நம் அடுத்தவரின் மேல் கொண்டிருக்கும் இறையையும் நமக்கு நினைவூட்டுவதாக. நான் எனக்கு அடுத்திருப்பவரில் இறையைக் கண்டேன் என்றால் அங்கே எதிர்மறை உணர்வுகளுக்கு இடமில்லாமல்போய்விடும். அங்தே இறைமை-மனிதம் சங்கமம் அறியப்பட்டால் மனித மாண்பு காக்கப்படும்.

நமக்கு இறைவனை அடையாளம் காட்டும் தாபோர் எது? அந்த மலையில் ஏறிச்செல்லும் நாம் அங்கே அவரைக் கண்டு மீண்டும் நம் வாழ்விற்கு இறங்கி வருவோம். அவரின் மேல் நம் கண்களைப் பதிய வைப்போம். அவரின் ஒளியில் நாம் ஒளி பெறுவோம்.

இறை நல்லது! இன்றும். என்றும்.