இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவரின் இறுதி இராவுணவுத் திருப்பலி

பாதங்கள் நனைந்து

விப 12:1-8,11-14
1 கொரி 11:23-26
யோவா 13:1-15

கடந்த ஆண்டு சென்னைக்கு வெள்ளம் வந்தபோது, சேதமுற்ற பகுதிகளைப் பார்வையிட நம் பாரத பிரதமர் ஹெலிகாப்டரில் வந்திருந்தார். நம் முதல்வர் அம்மா வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. அவர் வெளியே வராததை கேலி செய்யும் விதமாக அப்போதைய ஆனந்த விகடன் சித்திரம் ஒன்று வெளியிட்டது: அதில் முதல்வர் அவர்கள் காரில் இருப்பது போலவும், அவருடன் உடனிருப்பவர்கள், 'அம்மா, இப்போது வெளியே போக வேண்டாம். போனால், கார் டயர் எல்லாம் நனைஞ்சிடும்' என்று சொல்வது போலவும் இருந்தது.

தங்களின் பாதம் நனையாமல் நமக்குப் பணிவிடை செய்ய நினைக்கின்றனர் நம் இக்கால தலைவர்கள்.

ஆனால், இன்று நம் தனிப்பெரும் தலைவர் இயேசு, 'பாதம் நனைந்தால்தான் பணி செய்ய முடியும்!' என்பதைத் தன் செயலால் சொல்கின்றார்.

பாதம் நனைதல்தான் குருத்துவம்.

பாதம் நனைதல்தான் நற்கருணை.

பாதம் நனைதல்தான் அன்பு.

கடைசியா உங்க பாதம் எப்போ நனைஞ்சது?

நம்ம ஊர்ல மழை பெய்து நிறைய நாள்கள் ஆகிவிட்டன. தெருக்களில் நடந்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தால் காலெல்லாம் தூசியாக இருக்கிறதே தவிர நனைந்திருப்பது இல்லை. நம் பாதம் நனையும் இடத்திற்கு நாம் போவதில்லை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். விப 12:1-8, 11-14) இஸ்ரயேல் மக்கள் கொண்டாடிய முதல் பாஸ்கா நிகழ்வை வாசிக்கக் கேட்டோம். முதல் பாஸ்கா முடிந்து அவர்கள் பாதம் நனையாமல் எகிப்து நாட்டின் செங்கடலைக் கடக்கின்றனர். இது அவர்களின் முதல் கடத்தலாக இருந்தாலும், இதே போன்ற மற்றொரு கடத்தலை யோசுவா நூல் 3ஆம் பிரிவில் வாசிக்கின்றோம்:

'மக்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து யோர்தானைக் கடக்கப் புறப்படும்போது குருக்கள் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள் முன்னே சென்றனர். உடன்படிக்கை பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர். அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன், மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர் வெகுதொலைவில் நின்றது ... ... இஸ்ரயேலர் அனைவரும் கடந்து முடிக்கும்வரை, ஆண்டவரது உடன்படிக்கை பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர். எல்லா இஸ்ரயேல் மக்களும் அவ்வறண்ட தரை வழியாக நடந்தனர்.'

குருக்களின் பாதங்கள் நனைகின்றன. மக்கள் பாதங்கள் நனையாமல் கடக்கின்றனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 13:1-15) தன் சீடர்களின் பாதங்களை நனைக்கும் இயேசு அவர்களை குருக்கள் ஆக்குகின்றார்:

'நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் (அதாவது, உன் பாதங்களில் தண்ணீர் ஒட்டாவிட்டால்) என்னோடு உனக்குப் பங்கில்லை.'

'ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவ கடைமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.'

குருவாக இருக்கும் இயேசு, தன் குருத்துவத்தில் தன் சீடர்களுக்குப் பங்குகொடுக்கும் அடையாளமாக அவர்களின் பாதங்களில் தண்ணீர் ஊற்றித் துடைக்கின்றார். யூத மரபில் பாதம் கழுவுதலுக்கு மூன்று அர்த்தங்கள் இருந்தன: 1) தனிநபர் தூய்மை, 2) விருந்தோம்பலின் அடையாளம், 3) எருசலேம் ஆலயச் சடங்கு முறை. இயேசு தம் சீடர்களின் பாதம் கழுவிய நிகழ்வு இந்த மூன்றையும் தாண்டுகின்றது. விருந்து பின்புலமாக இருந்தாலும் இயேசு இதன் வழியாக ஒரு புதிய சீடத்துவத்தை, புதிய குருத்துவத்தை தன் சீடர்களுக்குக் கற்பிக்கின்றார்.

ஆக, பணிக்குருத்துவத்தில் பங்கேற்கும் அருள்நிலை இனியவரின் முதல் பண்பே தம் பாதங்களை நனைத்துக் கொள்ளுதலே. இஸ்ரயேல் மக்கள் யோர்தானைக் கடந்தபோது லேவியர் குருக்கள் தங்கள் பாதங்களை நனைத்துக்கொண்டது எதற்காக? அடுத்தவர் பாதம் நனையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக. ஏறக்குறைய மூன்று இலட்சம் மக்கள் பேழைக்கு அடியில் கடந்து செல்லும் நேரம் வரை கால்கடுக்க, தண்ணீருக்குள் நிற்கின்றனர் குருக்கள். அவர்கள் தங்கள் பாதங்களை நனைத்துக்கொள்ள துணிந்ததால் மற்றவர்கள் யோர்தானின் அக்கரைக்குக் கடந்து செல்கின்றனர்.

இயேசு தன் சீடர்களின் பாதங்களைக் கழுவுதல் ஆறு நிலைகளாக நடக்கிறது:

1. பந்தியிலிருந்து எழுதல்

2. மேலாடையைக் கழற்றி வைத்தல்

3. இடுப்பில் துண்டைக் கட்டுதல்

4. குவளையில் தண்ணீர் எடுத்தல்

5. பாதங்களில் ஊற்றுதல்

6. துண்டால் துடைத்தல்

1. பந்தியிலிருந்து எழுதல்

அதாவது, தான் செய்து கொண்டிருக்கும் ஒரு செயலை நிறுத்திவிட்டு, இன்னொரு செயல் செய்யப் புறப்படுதல். நமக்கு இதுதான் கடினமான ஒன்று: ஸ்டார்ட்டிங் ட்ரபுள். நாம் எல்லாரும் நல்லவர்கள்தாம். நல்லவற்றைச் செய்ய நினைப்பவர்கள்தாம். ஆனால், நாமாக அப்படி இருக்க முன்வருவதில்லை. யாராவது நம்மை பிடித்து நிறுத்த வேண்டும். அல்லது யாராவது நமக்கு முன் செய்துகாட்ட வேண்டும். நாம் வண்டியில் செல்லும்போது வழியில் ஒருவர் உதவி கேட்டு மறிக்கின்றார் என்றால், அல்லது எதிரே நின்று பிச்சை கேட்டால் நாம் உடனே கோபப்படுகின்றோம். ஏன்? நாம் செய்யும் செயலுக்கு அவர் இடையூறாக இருப்பதால். நாம் செய்துகொண்டிருக்கின்ற ஒன்றை மற்றவர்களுக்காக நிறுத்த நம்மால் முடிவதில்லை.

2. மேலாடையைக் கழற்றுதலும், 3. துண்டைக் கட்டுதலும்

இந்த இரண்டு செயல்களும் இணைந்து செல்கின்றன. யூதர்களில் உயர்குடியினர் இரண்டு வகை ஆடைகளை அணிவர். ஒன்று, நீண்ட அங்கி. இரண்டு அதன் மேல் மேலாடை. ஆக, மேலாடை உயர்குடிப்பிறப்பின் அல்லது செல்வத்தின் அல்லது மாட்சியின் அடையாளம். அதைக் களைந்துவிட்டு அடிமையின் ஆடையான துண்டை இடுப்பில் கட்டிக்கொள்கின்றார் இயேசு.

நாம் நமக்கென வைத்திருக்கும் வெளிப்புற ஆடம்பர அடையாளங்களைக் களைந்துவிட்டு, நம் இல்லாமையைக் கட்டிக்கொள்வது இரண்டு மற்றும் மூன்றாம் நிலைகள்.

4. குவளையில் தண்ணீர் எடுத்தல்

தண்ணீர் என்பது தூய்மையின் அடையாளம் மட்டுமல்ல. மாறாக, அது தூய்மையாக ஆக்கும் தகுதி கொண்டது. ஆக, இந்த நிகழ்வை வெறும் அடையாளமாக செய்யாமல், பயன்படு நிகழ்வாகவே செய்கின்றார்.

5. பாதங்களில் தண்ணீர் ஊற்றி

பாதங்களை நனைத்தல் அடிமைகளின் வேலை. மேலிருப்பவருக்கு கீழிருப்பவர் செய்யும் வேலை. இவ்வளவு நாள் இவர்களுக்கு ஆண்டவராகவும், போதகராகவும் மேலிருந்த இயேசு இன்று மேல்-கீழ் நிலையை கீழ்-மேல் நிலை என்று புரட்டிப் போடுகின்றார்.

6. துண்டால் துடைத்தல்

துடைத்தல் சீடர்களின் தயார்நிலையைக் குறிக்கின்றது.

இந்த நிகழ்வு குருத்துவம் பற்றி என்ன சொல்கிறது?

அ. அருள்பணியாளர் என்பவர் முதலில் தன் பாதங்களைக் கழுவுமாறு இயேசுவிடம் நீட்டுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். 'ஆண்டவரே, நீரோ என் பாதங்களைக் கழுவுவது' என தன் பாதங்களை உள் இழுக்கின்றார் பேதுரு. இயேசு தன்னை முதன்முதலாக அழைத்தபோது, மிகுதியான மீன்பாட்டைக் கண்டவுடன் பேதுரு, 'ஆண்டவரே, நான் பாவி. என்னை விட்டு நீங்கும்' என்கிறார். அதே, குற்றவுணர்வும், சுயபச்சாதாபமும்தான் பேதுரு இயேசுவிடம், 'வேண்டாம் ஆண்டவரே' என்று சொல்லக் காரணமாகிறது.

ஒவ்வொரு அருள்பணியாளருக்கும் இந்த டார்க் ஸ்பாட் உண்டு. 'ஆண்டவரே நான் பாவி' என்ற தயக்கம் உண்டு. 'என்னிடம் பொருள் இல்லை. சொத்து இல்லை. பதவி இல்லை. நான் ஒன்றும் இல்லாதவன்' என்று சொல்லும் குணம் உண்டு. இப்படிப்பட்ட நிலையில் தன் பாதங்களை; தனக்குள்ளே இழுத்துக்கொள்கின்றார் அருள்பணியாளர். ஒவ்வொரு பெரிய கூட்டத்தின் முன் நான் நிற்கும்போதும் எனக்கு இந்த உணர்வு வந்ததுண்டு. எனக்கு முன்னால் இருப்பவர்களின் படிப்பு, பதவி, பணம், அழகு ஆகியவற்றைக் கண்டு எனக்கு நானே குற்றவுணர்வு அடைந்தது உண்டு.

எனக்கு முன் இருப்பவர் மாதம் 2 அல்லது 3 லட்சம் சம்பளம் வாங்குகிறார். நானோ என் வாழ்வாதாரத்திற்கு அடுத்தவரை நம்பியிருக்கின்றேன். எனக்கென என்ன இருக்கிறது? - இப்படி எல்லாம் நான் என்னை நானே கேட்டதுண்டு. அந்த நேரங்களில் எல்லாம் நானும் என்னை எனக்குள்ளே இழுத்திருக்கிறேன்.

இந்த உணர்வு என்னுள்ளே தாழ்வு மனப்பான்மை, விரக்தி, தன்னலம் போன்றவற்றை உருவாக்கிவிடுகிறது.

ஒவ்வொரு அருள்பணியாளரும் தான் எதற்காக தன் பணியை செய்ய தயக்கம் கொள்கிறார் என்பதை கண்டுணர வேண்டும். நாம் கண்டுணர்ந்தாலே போதும். அங்கே இயேசு வந்துவிடுவார். 'நான் உன் பாதங்களைக் கழுவ நீ உன் கால்களை நீட்ட வேண்டும்' என கட்டளை இடுகிறார்.

பேருந்தில் அல்லது பொது இடங்களில் நிற்கும்போது நான் அடுத்தவரின் பாதங்களைக் கவனிப்பதுண்டு:

செருப்பு அணிந்த பாதங்கள்.
செருப்பு அணியாத பாதங்கள்.
அழுக்கான பாதங்கள்.
அழகான பாதங்கள்.
நெய்ல் பாலிஷ் போட்ட பாதம்.
சர்க்கரையில் ஒரு விரல் இழந்த பாதம்.
எதிரியின் பாதம்.
நண்பனின் பாதம்.
பிஞ்சுக் குழந்தையின் பாதம்.
முதியவரின் பாதம்.
அடிபட்டு கட்டுப்போட்ட பாதம்.
ஒரு பாதத்தில் மேல் இன்னொரு பாதம் பதித்திருக்கும் பாதம்.
ஒற்றை விரலில் உயர்ந்த நிற்கும் பாதம்.
பறவைகளைப் போலவே பாதங்களும் பலவிதம்.

'இதுதான் ஆண்டவரே நான்!' 'இதுதான் நான்!' என எந்த அருள்பணியாளர் ஆண்டவரிடம் விரித்துக் கொடுக்கிறாரோ, அந்த அருள்பணியாளரே சிறந்தவர்.

ஆ. அருள்பணியாளர் தன் பாதங்கள் கழுவப்பட்டவுடன் தனக்கு அருகிருப்பவரின் பாதங்களைக் கழுவ வேண்டும். அதை எப்படிச் செய்ய வேண்டுமென்றால், மேற்காணும் ஆறு நிலைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

1. பந்தியில் இருந்து எழுந்து - தன் அருள்பணி வாழ்வில் இருந்து, தன் பழைய வாழ்விலிருந்து எழுந்து
2. மேலாடையை கழற்றிவிட்டு - தன் ஆணவம், உயர்நிலை, ஆடம்பரம் ஆகியவற்றை களைந்துவிட்டு
3. துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு - அடுத்தவருக்கு பணி செய்யும் உருவை ஏற்று
4. குவளையில் தண்ணீரை எடுத்து - அடுத்தவரின் வாழ்வாதாரத்தை கண்டுணர்ந்து
5. பாதங்களில் ஊற்றி - எனக்கு முன் இருப்பவருக்கு பணி செய்து
6. துடைக்க வேண்டும் - அடுத்தவருக்கு நலம்தர வேண்டும்.

இந்த இரண்டு குணங்களும் இயேசு என்னும் தலைமைக்குருவிடம் விளங்கியதை எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல் அழகாக பதிவு செய்கிறது:

'ஆதலின், கடவுள் பணியில் அவர் நம்பிக்கையும், இரக்கமும் உள்ள தலைமைக்குருவாயிருந்து.'

கடவுள் மேல் உள்ள நம்பிக்கை என்பது இயேசுவை நோக்கி என் பாதத்தை நீட்டுவது
இரக்கம் என்பது மற்றவரின் பாதங்களை நோக்கி என் கைகளை நீட்டிக் கழுவுவது.
இவை இரண்டையும் அருள்பணியாளரின் 'வேர் ஊன்றுதல்,' 'விழுது பரப்புதல்' என்று சொல்லலாம்.

இப்படியாக, வேர் ஊன்றி, விழுது பரப்பும் அருள்பணியாளர் நற்கருணையை பொருள் உணர்ந்து கொண்டாட முடியும். எப்படி?

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரிந்தியர் 11:23-26) இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதை நினைவுகூர்ந்து கொண்டாடும் தூய பவுல், அந்த நிகழ்வை மூன்று வினைச்சொற்களாகப் பதிவு செய்கின்றார்:

1. அப்பத்தை எடுத்து
2. கடவுளுக்கு நன்றி செலுத்தி
3. அதைப் பிட்டு
இங்கே அப்பம் என்பது இயேசுவின், அருள்பணியாளரின் உடல். அவர் அதை எடுத்து மற்றவர்களுக்காக பிட்க வேண்டும். அதாவது, பிட்கப்பட்ட அப்பத்தை நம்மால் ஒன்று சேர்க்க முடியாது. மேலும் அப்பத்தை பிட்டால்தான் உண்ண முடியும். ஆக, அருள்பணி நிலையில் தன்னை முழுவதுமாக அப்படியே வைத்துக்கொண்டு ஒருவர் பணி செய்ய முடியாது. தன்னைப் பிடுதலே முதல் பணி. இங்கே மையமாக இருப்பது, 'நன்றி செலுத்துதல்.' தான் இறக்கப்போவது திண்ணம், நெருக்கம் எனத் தெரிந்தாலும் இயேசுவால் எப்படி நன்றி சொல்ல முடிந்தது? நன்றி என்பது நமக்கு என்ன நடக்கிறது என்பதை பொறுத்து அல்ல. மாறாக, எனக்கு நடப்பவற்றை நான் எப்படி எடுத்து செயலாற்றுகிறேன் என்பதை பொறுத்தே இருக்கிறது.

இந்த மூன்று வினைச்சொற்களையும் வாழ்வாக்கும் அருள்பணியாளர் நற்கருணை கொண்டாட்டத்தின் வழியாக மற்றவர்களும் இதுபோல இருக்க ஊக்கம் தர முடியும்.

இறுதியாக, இயேசு தரும் அன்புக்கட்டளை.

'நான் உங்களுக்கு அன்பு செய்ததுபோல நீங்கள் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்.'

அன்பு செய்வதற்கும்,

பாதம் கழுவுதலுக்கும்,

நற்கருணை ஏற்படுத்தியதற்கும்

தன்னை மட்டுமே முன்மாதிரியாக வைக்கின்றார் இயேசு.

'நான் உங்களை அன்பு செய்ததுபோல'

அதாவது, உங்கள் பாதங்கள் அழுக்காக இருந்தாலும் அன்பு செய்ததுபோல,
நீங்கள் என்னை விட்டு ஓடிவிடுவீர்கள், காட்டிக்கொடுப்பீர்கள், மறுதலிப்பீர்கள் என்று தெரிந்தாலும் அன்பு செய்தது போல,
என்னை இறுதிவரை புரிந்துகொள்ளமாட்டீர்கள் என்று தெரிந்தாலும் அன்பு செய்ததுபோல,
நீங்களும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள் என்கிறார் இயேசு.

ஆக, அன்பின் பரவலாக்கம் சமநிலையில் இருக்க வேண்டும்.

அருள்பணியாளர் தன் மக்களை இப்படித்தான் அன்பு செய்ய வேண்டும். நாம் ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவரை இப்படித்தான் அன்பு செய்ய வேண்டும்.

இவ்வாறாக, என் பாதம் நனையும்போதும், நான் எனக்கு அருகிருப்பவரின் பாதங்களை நனைக்கும்போதும் அன்பு செய்கிறேன். நற்கருணை கொண்டாடுகிறேன். அருள்பணியாளராக மாறுகிறேன்.