ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாஅவரது விண்மீன்!எசாயா 60:1-6 எபேசியர் 3:2-3,5-6 மத்தேயு 2:1-12 கீழைத்திருச்சபையின் கிறிஸ்துமஸ் என்று அழைக்கப்படும் திருக்காட்சிப் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம். 'கிறிஸ்துவில்தான் எம் மீட்பு என்னும் மறைபொருளை புறவினத்தாருக்கு ஒளியாக இன்று வெளிப்படுத்தினீர்' என்று புகழாரம் சூட்டுகிறது இன்றைய நற்கருணை மன்றாட்டு தொடக்கவுரை. இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் மையமாக இருக்கின்ற வார்த்தை 'ஒளி.' 'எழு! ஒளிவீசு!' என்று எருசலேமை நோக்கி இறைவாக்கு உரைக்கின்ற எசாயா, அடிமைத்தனத்திற்குப் பின் இஸ்ரயேல் அடையும் மாட்சியை முன்னுரைக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் 'விண்மீன்' காட்டிய ஒளியில் இயேசுவைக் கண்டுபிடிக்கின்றனர் கீழ்த்திசை ஞானியர்.
நாம் வாழும் இன்றைய உலகம் ஃப்ளாஷ் லைட்களின் உலகம். எந்நேரமும் நாம் ஏதாவது வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். நம் அறையில் எரியும் மின்விளக்குகளின் வெளிச்சம், நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன்களின் வெளிச்சம், எல்.இ.டி டிவிக்கள் உமிழும் வெளிச்சம், நம் மடிக்கணிணியின் ரெட்டினா திரை வெளிச்சம், செல்ஃபி எடுக்கும்போது தானாகவே ஒளிரும் ஃப்ளாஷ் வெளிச்சம் என ஒளிசூழ் உலகில் இருக்கின்றோம்.
நாம் ஒரு பொருளை தெளிவாக பார்க்க ஒளி அவசியமாகிறது. அதாவது, ஒளி பட்டு எதிரொளித்தால்தான் பார்வையும் காட்சியும் சாத்தியமாகிறது. விண்மீன் காட்டிய வெளிச்சம் பெத்லகேம் குழந்தையை யூதர்களின் அரசராக ஞானியருக்குக் காட்டியது.
'அவரது விண்மீன்' எது? 'என் விண்மீன்' எது? 'நான் காணும் ஒளி என்ன?'
இவ்வளவு நாட்களாக குழந்தை இயேசுவை சந்தித்தவர்கள் எல்லாம் இடையர்கள் மட்டுமே. வானதூதர்கள் செய்தி சொன்னதால் இவர்கள் பெத்லகேம் சென்று மெசியாவை சந்திக்கின்றனர். ஆனால், எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் தாங்களே ஓர் அடையாளத்தைக் கண்டறிந்து, அதைப் பின்பற்றி மெசியாவைக் கண்டவர்கள் ஞானியர் மட்டுமே.
'இந்த உலகில் மரணமும், நான் நடக்க வேண்டும் என நினைப்பது நடக்காமல் போகும் வரையிலும், நடக்கக் கூடாது என நினைப்பது எனக்கு நடக்கும் வரையிலும் கடவுளுக்கான தேடல் இருக்கும்' என்கிறார் சுவாமி விவேகானந்தர். நாம் இயல்பாகவே கடவுளைத் தேடுகிறோம். நாம் காண்கின்ற எதுவும் நமக்கு பொருள் தராதபோது, அல்லது முடியக்கூடிய பொருளையே தரும்போது நம் மனம் இயல்பாகவே மேல்நோக்கி எழும்பிவிடுகின்றது.
கடவுளைப் பற்றிய தேடலைப் புரிந்து கொள்ள முதலில் நாம் மூன்று சொல்லாடல்களைப் புரிந்து கொள்ள வேண்டும்:
அ. டிஸ்கவரி. ஒன்று 'கவர்' செய்யப்பட்டிருக்கிறது. அதை ஒருவர் 'அன்கவர்' அல்லது 'டிஸ்கவர்' செய்கிறார். எடுத்துக்காட்டாக, 'அமெரிக்கா' நமக்குத் தெரியாமல் 'கவர்' செய்யப்பட்டிருக்கிறது. அதை கொலம்பஸ் 'டிஸ்கவர்' செய்கிறார். 'புவியீர்ப்பு விசை' நமக்குத் தெரியாமல் 'கவர்' செய்யப்பட்டிருக்கிறது. அதை நியூட்டன் 'டிஸ்கவர்' செய்கிறார். கண்ணுக்குத் தெரிகின்ற முடிவைப் பார்த்து கண்ணுக்குத் தெரியாத காரணத்தைக் கண்டுபிடிப்பது டிஸ்கவரி.
ஆ. இன்வென்ஷன். விரும்புகின்ற முடிவைப் பெறுவதற்காக அதற்காக காரணத்தை உருவாக்குவது. வெளிச்சம் இருக்க வேண்டும் என்பது எனது முடிவு. அதற்கான காரணமாக நான் மின்சாரத்தை உருவாக்குகிறேன் என உருவாக்குகிறார் எடிசன். ஆக, வேண்டுகின்ற ஒன்றை புதிய காரண உருவாக்கத்தில் பெற்றுக்கொள்வது இன்வென்ஷன்.
மேற்காணும் இரண்டு சொற்களால் கடவுளை அறிந்துவிட முடியாது.
கடவுளை நாம் டிஸ்கவரி செய்யவும் முடியாது. அவரை இன்வென்ட் செய்யவும் முடியாது. பின் அவரை எப்படிக் கண்டு கொள்வது?
இ. ரெவலேஷன். அதாவது, கடவுள் தாமே தன்னை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது. காட்சி, இறைவார்த்தை அறிவித்தல், உணர்தல் இவை அனைத்தும் வெளிப்பாடுகள். இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 3:2-3,5-6) தூய பவுலடியார், 'அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது' என்கிறார். ஆக, கடவுள் தாமே 'தூய ஆவி வழியாக திருத்தூதருக்கும், இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்துகின்றார்.'
எப்படி ஒவ்வொரு டிஸ்கவரி மற்றும் இன்வென்ஷனிலும் புதிய செயல் ஒன்று நடக்கிறதோ, அவ்வாறே ரெவலேஷனிலும் புதிய செயல்பாடு ஒன்று நடக்கிறது. பவுலைப் பொறுத்தவரையில், 'பிற இனத்தாரும் உடன் உரிமையாளர் மற்றும் உடன் பங்காளிகளாக மாறுகிறார்கள்' என்பதே கடவுளின் புதிய செயல்பாடு.
ஆக, இறைவன் இயேசு கிறிஸ்து வழியாக தன்னை வெளிப்படுத்தி மற்ற இனத்தாரையும் தன் கைகளுக்குள் கூட்டிச் சேர்க்கின்றார்.
இதே செய்தி இறைவாக்காக இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 60:1-16) முன்வைக்கப்படுகிறது. பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்ட மக்கள் தாங்கள் மட்டும் திரும்பி வரப்போவதில்லை. மாறாக, மற்ற இனத்தாரையும் தங்களிடம் கூட்டிக்கொண்டு வருவர் என்பதே புதிய செயல்பாடு. இந்தப் புதிய செயல்பாடு எப்படி நடக்கிறது? 'கடவுளின் மாட்சி வெளிப்படுத்துப்படுவதால்' நடக்கிறது. இங்கே புதிய பாரசீக அரசன் சைரசை இந்த ஒளி குறித்தாலும், மெசியா இறைவாக்கு அடிப்படையில் இது இயேசுவைக் குறிக்கிறது என்பது கிறிஸ்தவர்களின் புரிதல். கடவுளின் மாட்சி வெளிப்படுத்தப்பட்டவுடன் ஒரு புதிய புரட்டிப்போடுதல் நிகழ்வு நடைபெறுகின்றது. சிறைக்கைதிகளாக கால்கடுக்க நடந்து இழுத்துச் செல்லப்பட்ட புதல்வரும், புதல்வியரும் 'தோளில் தூக்கிவரப்படுகின்றனர்.' நகரமே வெறுமையாகிவிட்டது என்ற நிலை மாறி, 'ஒட்டகங்களின் பெருந்திரள்களும், பொன்னும், நறுமணப்பொருளும் ஏந்திவரப்படுகின்றது.'
இவ்வாறாக, கடவுள் தன்னை வெளிப்படுத்துகின்றார். அந்த வெளிப்பாடு புதிய செயலைக் கொண்டு வருகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கடவுளின் வெளிப்பாடு இரண்டு நிலைகளில் நடக்கிறது:
அ. விண்மீன்
ஞானியர் விண்மீன் எழுவதையும், நகர்வதையும் கண்டுகொள்கின்றனர். புறவினத்தாரின் நம்பிக்கையின்படி புதிய அரசரின் பிறப்பு விண்மீனால் அறிவிக்கப்படும். மேலும், யூதர்களின் நடுவில் விளங்கிய 'மெசியா எதிர்நோக்கு' 'யாக்கோபிலிருந்து தோன்றும் விண்மீன்' (காண். எண் 24:17, 1 கும்ரான்எம் 11:6) என்று அறியப்பட்டது. ஆக, விண்மீன் கீழ்த்திசை ஞானியரையும், எருசலேமின் யூதர்களையும் ஒருங்கே இணைக்கிறது. ஆனால், இந்த வெளிப்பாட்டை கீழ்த்திசை ஞானியர் கண்டுகொண்டனரே தவிர, எருசலேம்வாழ் யூதர்களும், குருக்களும், ஆட்சியாளர்களும் அதைக் கண்டுகொள்ளவில்லை. அல்லது பொருட்படுத்தவில்லை.
ஆ. கனவு
கனவுகள் வழியே கடவுளின் வெளிப்பாடு என்பது மத்தேயு நற்செய்தியாளர் பயன்படுத்தும் ஓர் இலக்கியக்கூறு. மத் 1:20, 2:12, 13, 19, 22, 27:19 என ஆறு இடங்களில் 'கனவு' என்ற வார்த்தை வருகின்றது. முதல் ஏற்பாட்டு யாக்கோபு மற்றும் யோசேப்பு கதையாடல்களின் பின்புலத்தில் இதைப் பார்க்கும்போது, கனவின் வழியாக கடவுள் தன்னை வெளிப்படுத்துகின்றார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாகிறது.
'விண்மீன்' என்ற வெளி அடையாளத்தின் வழியாகவும், 'கனவு' என்ற உள் அடையாளத்தின் வழியாகவும் கடவுள் தன்னை ஞானியருக்கு வெளிப்படுத்துகின்றார்.
மனிதச் செயல்பாட்டை விட இங்கே கடவுளின் வெளிப்பாடே முதன்மை பெறுகின்றது.
இந்த 'அவரது விண்மீன்' நமக்கு வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?
1. 'அவரது விண்மீன்' - 'அவனது-அவளது விண்மீன்'
'அவரது விண்மீன்' ஞானியருக்கு இரண்டு முறை தெரிகின்றது. முதலில் தங்கள் நாட்டில். இரண்டாவது ஏரோதிடம் இருந்து வெளியே வந்தபின். ஆக, அவரது விண்மீனை நாம் கண்டுகொள்வதற்கு எங்கே இருக்கிறோம் என்பது தேவையன்று. நாம் எங்கே இருந்தாலும் அவரது விண்மீன் நமக்குத் தெரியும். நாம் பாவத்தில் இருந்தாலும், புனிதராய் இருந்தாலும், அவருக்கு அருகில் இருந்தாலும், அவரை விட்டுத் தொலைவில் இருந்தாலும் அவரது விண்மீன் நமக்குத் தெரியும். ஏரோதின் அரண்மனைக்கு வெளியே வந்தாலும் அவர்களுக்கு விண்மீன் தெரிகிறது. அதாவது, இருள், இறப்பு ஆட்சி செய்யும் ஏரோதுவைச் சந்தித்துவிட்டு வந்தாலும் அவரது விண்மீன் என் கண்ணுக்குத் தெரியும். ஆக, கடவுளின் வெளிப்பாட்டிற்கு யாரும் திரையிட முடியாது.
ஆனால், என்ன பிரச்சினை என்னவென்றால், பல நேரங்களில் 'அவனது - அவளது விண்மீன்' என நானாகவே சில விண்மீன்களைக் கற்பனை செய்து கொள்வதுதான்.
எனது விண்மீன் எது? 'அவரது விண்மீனா?' அல்லது 'வேறு விண்மீனா?'
அவரது விண்மீன் மட்டுமே நின்று ஒளிரக் கூடியது. மற்ற விண்மீன்கள் எல்லாம் ஃப்ளாஷ் லைட்களே. அவைகளின் ஒளி சில நொடித்துளிகள் மட்டுமே.
2. 'பிறந்திருக்கிறவர் எங்கே?'
தேடுவதை சரியான இடத்தில் தேடுதல் வேண்டும். தன் வீட்டுச் சாவியை எங்கோ தொலைத்துவிட்டு, தொலைத்துவிட்ட இடத்தில் தேடாமல், தெருவிளக்கின்கீழ்தான் வெளிச்சம் இருக்கிறது என்று அங்கே தேடிய முல்லாவைப் போல இல்லாமல், தேட வேண்டிய இடத்தில் தேட வேண்டும் மெசியாவை.
மெசியாவைத் தேடுகின்ற தேடலில் தேடுபவரும் தன்னைக் கண்டுகொள்கின்றார். அதுதான் அதில் உள்ள அற்புதம்.
'அவர் எங்கே?' என்று கேட்கின்ற கேள்வி, என்னை அறியாமலேயே, 'நான் எங்கே?' என்ற கேள்வியை என்னுள் எழுப்பி விடுகிறது.
3. வந்த நோக்கம் நிறைவேறியது!
'வணங்க வந்தோம்' என வருகின்றனர். 'வணங்கிவிட்டு' செல்கின்றனர்.
தங்கள் பயணத்தின் நோக்கம் எது என்பது அவர்களுக்குத் தெளிவாக இருந்தது. மேலும், அந்தத் தெளிவை செயல்படுத்தும் துணிவும் இருந்தது.
ஏரோதின் ஏமாற்று வார்த்தைகளும், எருசலேம் மக்களின் கலக்கமும், அரண்மனையின் பளபளப்பும் அவர்களின் பயணத்தை திசைதிருப்பவில்லை.
இன்று நான் என் பயணங்களில் திசைதிரும்புகின்றேனா? அலைக்கழிக்கப்படுகின்றேனா? அல்லது என் பயணம் பாதியிலேயே முடிந்துவிடுகிறதா?
4. 'நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து'
வாழ்வின் மிகப்பெரிய அற்புதங்கள் நம் கண்களுக்குப் புலனாவதில்லை. கடற்கரையில் நின்றுகொண்டு கடலில் எவ்வளவு கண்ணீர்த் துளிகள் என்று எல்லாரும் எண்ணிக்கொண்டிருக்க, இந்த கடலே ஒற்றைத் தண்ணீர்த் துளி என்கிறார் கிப்ரான். ஒரு விதையைப் பார்க்கும்போதே அதில் ஒரு விருட்சத்தைப் பார்க்கவும், ஒரு கல்லைப் பார்க்கும்போதே அதில் ஒரு சிற்பத்தைப் பார்க்கவும், ஒரு குழந்தையைப் பார்க்கும்போதே அதில் ஒரு மெசியாவைப் பார்க்கவும் ஞானம் தேவை. அந்த ஞானம் இவர்களுக்கு இருந்தது. குழந்தையின் முன் ஞானியர் நெடுஞ்சாண்கிடையாய் விழுகின்றனர். மாட்டுத்தொழுவத்தில் ஞானம் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்துகிடக்கிறது.
'வலுவற்றிருப்பதன் மகிழ்ச்சி' என்ற சொல்லாடலை தன் 'அன்பின் மகிழ்ச்சி' என்னும் திருத்தூது மடலில் இயேசுவுக்குப் பயன்படுத்துகின்றார் திருத்தந்தை பிரான்சிஸ். கடவுள் தான் ஒரு குழந்தையாக, வலுவற்றுப் பிறப்பதில் மகிழ்கின்றார். நெடுஞ்சாண்கிடைதான் உச்சகட்ட வலுவற்ற நிலை. நான் ஒருவர் முன் நெடுஞ்சாண்கிடையாய் விழுகிறேன் என்றால் அவர்முன் நான் முழுமையாக வலுவற்றவன் ஆகிறேன். அவருக்கு என்னை மிதிக்கவும் உரிமை உண்டு. தூக்கி விடவும் உரிமை உண்டு. நெடுஞ்சாண்கிடையாய் விழும்போது என் முகம் மறைகிறது. என் அடையாளம் மறைகிறது. என் கைகளும், கால்களும் செயலற்றுப்போகின்றன.
இன்று பல நேரங்களில் நான் வலுவோடு இருப்பதையே மகிழ்ச்சி எனக் கருதுகிறேன். என் படிப்பு, பெயர், புகழ், பணி, உறவுநிலை என அனைத்திலும் என்னை வலுவாக்கிக்கொள்ள நினைக்கிறேன். என் வல்லமையின் முன் மற்றவர்கள் பயப்பட வேண்டும் எனவும், சரணடைய வேண்டும் எனவும் நான் விரும்புகிறேன். ஆனால், வல்லமை என்பது 'ரெலடிவ்'. எப்படி? நான் வலுவானவன் என நினைத்துக் கொண்டு சிலரை என் முன் கூனிக்குறுக வைக்கிறேன். ஆனால், எனக்கு வலுவானவர் முன் நான் கூனிக்குறுகி நிற்கின்றேன். ஆனால், நான் என்னையே வலுவற்றதோடு ஒன்றிணைத்துக்கொண்டால் இப்படிப்பட்ட இருதலை வாழ்வு தேவையில்லை.
மேலும், நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தவர்கள் தங்களை வெறுமையாக்கியது மட்டுமல்லாமல், தங்களிடமிருந்த பொருள்களையும் - பொன், தூபம், வெள்ளைப்போளம் - வெறுமையாக்குகின்றனர். வலுவின்மையை முழுமையாக அணிந்து கொள்கின்றனர்.
5. 'வேறு வழியாக நாடு திரும்பினார்கள்'
மெசியாவைச் சந்திப்பது இரண்டு வகைகளில் சவாலாக அமைகின்றது: (அ) மெசியாவின் முன் முழந்தாள்படியிட்ட கால்கள் மற்றவர் முன் முழந்தாள்படியிட தேவையில்லை. ஒளியின் முன், வாழ்வின் முன், குழந்தையின் முன் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தவர்கள், இருளின் முன், இறப்பின் முன், ஏரோதின் முன் நெடுஞ்சாண்கிடையாய் விழத் தேவையில்லை. அல்லது விழக்கூடாது. இரண்டும் வேண்டும் என்று இரண்டோடும் சமரசம் செய்துகொள்ள முயல்வது ஆபத்தில் போய் முடியும். (ஆ) மெசியாவை சந்திக்கும் நோக்கம் அங்கேயே அவரோடு ஒன்றித்துவிடுவதற்கு அல்ல. மாறாக, திரும்பி நம் ஊர் செல்வதற்கு. அவரைச் சந்தித்த ஒவ்வொருவரும் தங்கள் வீடு நோக்கியும், ஊர் நோக்கியும், உறவு நோக்கியும் செல்ல வேண்டும். குழந்தையோடு அமர்வதும், அதன் புன்சிரிப்பை பார்த்துக்கொண்டே இருப்பதும் மகிழ்ச்சி தரும். ஆனால், அந்த மகிழ்ச்சியை நான் என் வாழ்க்கை நிலைகளுக்குள், உறவு நிலைகளுக்குள் எடுத்துச் செல்தல் அவசியம்.
இறுதியாக,
'அவரது விண்மீன்' ஏதோ அன்று தோன்றிய ஒன்று மட்டும் அல்ல.
அது இன்றும் தோன்றுகிறது.
நான் வலுவற்று இருக்கும்போது,
நான் என் பாதுகாப்பான கூட்டை விட்டு வெளியேற தயாராகும்போது,
நான் இருளின் முன் சமரசம் செய்து கொள்ள முயலாதபோது,
நான் என்னையே வெறுமையாக்கும்போது,
நான் என் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொள்ளலாம் என நினைக்கும்போது,
இன்றும் தோன்றுகிறது.
அதை நான் தேடினால், கண்டுகொண்டால், பின்பற்றினால் எத்துணை நலம்!
|