பொதுக்காலம் 16 ஆம் ஞாயிறுசற்றே இளைப்பாருங்கள்எரேமியா23:1-6
எபேசியர்2:13-18
மாற்கு6:30-34
இறைவன் இயேசு தம் சீடர்களிடம் கொண்ட அன்பையும், அவர்களின் மேல் கொண்ட அக்கரையையும் நம்மீதும் கொண்டுள்ளார் என்பதை நாம் கண்டுக்கொண்டு அவற்றை நம் வாழ்வில் உணர்ந்து பிரதிப்பலிக்க இன்றைய நற்செய்தி வாசகம் அழைக்கின்றது.
“நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்”
கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் ஓய்வு அவசியமானது. ஓய்வு என்பது உள்ளத்திற்கும், உடலுக்கும் தேவையானது. இதைனை பெறுவதற்கே அனைத்து மனிதர்களும் ஆசைப்படுகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்கு அருமருந்தாக கடவுள் திகழ்கிறார். அவர்தரும் இளைப்பாறுதல் அனைவருக்கும் உற்சாகம், ஊட்டம் கொடுக்கும் சக்தியாக நம்மில் இயங்குகிறது. ஆனால் இவ்வுலகில் நிழல்கள் என்ற பெயரில் பலவகை நிழல்கள் நம்மை சுற்றி சுழல்கின்றது. அவை மறைந்து போகும் நிழலாகவும், மறையாது வாழ்வு கொடுக்கும் நிழலாகவும் நம்மை தொடர்கின்றது. எந்த நிழலை நோக்கி நாம் சென்று சற்று இளைப்பாறுதல் பெற வேண்டும் என்றும், எது தேவையானது என்பதை அறிந்துக்கொள்ளவும் அழைக்கும் பரிசுத்த ஆவிக்கு நமது ஒத்துழைப்பை கொடுப்போம்.
மறைந்து போகும் நிழல் என்பது ஒரு குறிப்பிட்ட காலங்கள் மட்டும் தனது நிழலை கொடுக்கும். இதில் காலவரையறை காணப்படும். அவை பதவி, புகழ், பணம், சிற்றின்பம், ஆசைகள், என்று பலவகையான நிழல்களை நாம் சேர்த்து கொண்டே செல்லாம். இவ்வகையான நிழல்கள் முட்செடியின் நிழல் என பொருள் கொள்ளாலாம். முட்செடியின் நிழலை தேடி நாடி செல்பவரின் கூட்டம் அதிகம். இந்த சமுதாய முட்செடியின் நிழலின் மத்தியில் தான் நம் கடவுளின் அன்பு, பண்பு, பாசம், பாதுகாத்தல், அரவணைப்பு, கரிசனை, இது போன்ற இளைப்பாறுதல் அடங்கியுள்ளது. இளைப்பாறுதல் பெற்று பணிவிடை செய்ய அழைப்பது தான் மறையாத நிழல்.
“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” (மத்11:28-30) இது நீண்ட நிழலைத்தரக் கூடியது என மத்தேயு நற்செய்தியாளர் வலியுறுத்துகிறார். கடவுள் வல்லவராக நம் சார்பாக இருந்து இளைப்பாறுதல் கொடுக்கிறார். ஆம் இயேசு தம் அன்பு சீடர்களுடன் தன் உடனிறுப்பை கொடுத்து, இறையாட்சி பணிக்கு அவர்களை பக்குவப்படுத்தி, அவற்றை செய்து முடித்து வரும் போது ஓய்வு கொடுத்து காத்து வருகிறார். இறைவனின் பராமரிப்பு சான்றாக விளங்குகிறது. இறைவன் இயேசு தம் வாழ்விற்கு எவ்வாறு பொருள் கொடுத்தாரோ அதே போல் சீடர்களும் சரித்திரத்தில் சான்று பகர்ந்திட இளைப்பாறுதல் கொடுத்து தேற்றுகிறார். இயேசுவின் இளைப்பாற்றி நம்முடைய வேதனைகளைத் தணிக்கிறது, மனதிற்கு ஆறுதல் கொடுக்கிறது, மனநிம்மதி அளிக்கிறது. திக்கற்ற நிலையில், திசைகள் தெரியாமல் போகும் போது திடமான வழி காண்பிக்கிறது. அவ்வகையான அன்பின் இளைப்பாற்றியில் இளைப்பாறி செல்ல நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகளிலும், கடமைகளிலும் கண்ணும் கருத்துமாக கடைப்பிடிப்பது அவசியம். அவ்வாறு செய்து முடிக்கும் போது இறைவன் நாம் கேட்கும் முன்பே இளைப்பாற்றியை கொடுக்கும் தருணங்களை மகிழ்வுடன் கண்டு கொள்ளவும் அதில் ஆனந்தத்தையும் பெற முனைவோம்.
பிரியமானவர்களே, நாம் இளைப்பாறும்படியாக ஒரு மரத்தின் நிழல் ஆயத்தமாக உள்ளது. அதுதான் சிலுவையில் தொங்கும் இயேசுவின் நிழல். யேசுவின் நிழலில் கடவுள் நமக்கொரு மேன்மையான இளைப்பாறுதலை வைத்திருக்கின்றார். அங்கு சாய்ந்து கொள்ள அவரது தோள்கள் உண்டு. அவர் தரும் இளைப்பாறுதல் உலகத்தாலும், உலகத்தின் பணத்தாலும், பெயராலும், புகழாலும் தர முடியாத நிரந்தரமான இளைப்பாறுதல். அதை நாம் நாடுவோமானால், வேதனையில்லாத ஆசீர்வாத்த்தை பெற்று கொள்ள முடியும். முட்செடி நெருக்கி போடும் முன்பு சிலுவையின் நிழல் நம்மை பாதுகாக்கும். அவர் நம்மை காத்து கொள்வார். ஆமென்.
“ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்”
வாழ்க்கையில் வெற்றி பெற குறிக்கோள் மிகவும் முக்கியமானது, அதை அடைய நல்ல வழிகாட்டிகள் தேவை. இறைமகன் இயேசு நல்ல தலைவராக இருப்பதை இங்கு காண்கிறோம். ஒரு பார்வையில் மக்களை புரிந்துக்கொண்டார். அவர்கள் மீது மனம் இரங்குகிறார். மனுகுலத்தை மீட்பதற்கு மேலும் காத்துக்கொள்வதற்கு இரக்கத்தின் வழியாக நம்மில் இயங்குகிறார். இறைவன் கொடுக்கும் இரக்கம் என்னவென்று அறிவோம். இரக்கத்தை கண்டு கொண்டு மற்றவரின் மீதும் இரக்கம் உடையவர்களாக வாழ, நற்செயல்கள் வழி இறைவனின் மக்களாக வாழ வழி பெறுவோம். ஆமென்.
|