பொதுக்காலம் 13 ஆம் ஞாயிறு. குணமளிக்கும் ஆற்றல்சாலமோனின் ஞானம் 1: 13-15; 2: 23-24
2 கொரிந்தியர் 8: 7,9,13-15
மாற்கு 5: 21-43இறையேசுவில் அன்பின் பிரதிநிதிகளே ஞாயிறு மறையுரையை ஆவலோடு எதிர்ப்பார்க்கும் அன்னையர்களே, தந்தையர்களே, புதிய ஆற்றல் கொண்டுள்ள இளம் உள்ளங்களே, அன்பின் குரலுக்கு செவிகொடுக்க வந்திருக்கும் குழந்தைகளே இன்றைய திருப்பலியிக் கொண்டாட்டத்திற்கு மகிழ்ச்சியோடு உங்களை வரவேற்கிறேன். இயேசுவின் குணமளிக்கும் ஆற்றலைப்பற்றி அறிந்துக்கொள்ள இந்த பதிமூன்றாம் ஞாயிறு நம்மை அழைக்கின்றது. மேலும் அறிந்துக்கொள்வது, வாசிப்பது என்று நின்றுவிடாமல் அந்த நற்சுகத்தை நம் வாழ்க்கையில் அனுபவிக்க அழைக்கும் இன்றைய நற்செய்திக்கு நன்றி கூறி தியானிப்போம். ஆம் அன்புமிக்கவர்களே இயேசு பலத்தரப்பட்ட மக்களை குணப்படுத்துகிறார். உடல்நலமற்றவரை, பார்வையற்றோரை, பேச்சற்றோரை, கைசூம்பியவரை, தொழுநோயாளரை என அனைவருக்கும் மருத்துவராக திகழ்கிறார். உடல்நலம், மனநலம் என குணப்படுத்துகிறார். இதைத்தான் புனித மாற்கு நற்செய்தியாளர் இறைசெய்தியாக பகிர்ந்துக்கொள்ளும் இரண்டு கருத்துக்கள்:
• என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” --- மாற் 5:23 யாயிர்
• “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்”--- மாற் 5:36—இயேசு
• “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” மாற் 5:28 பெண்
• “என் மேலுடையைத் தொட்டவர் யார்?”--- மாற் 5:30— இயேசு
• நம்பிக்கை என்பது வாழ்வில் நமக்கு கிடைக்கும் அரிய விலைமதிக்க முடியாத பரிசு. எந்தவொரு செயலையும் செய்ய நமக்கு நம்பிக்கை தேவைப்படுகிறது. அது தனிப்பட்ட முறையில் நம்மை சார்ந்ததாக இருக்கலாம், அல்லது நம்மை சூழ்ந்திருப்பவர்களை சார்ந்திருக்கலாம். இவ்வாறு எந்த ஒரு நிகழ்வுக்கும் அடிப்படையாக இருப்பது நம்பிக்கை.
எப்படிப்பட்ட நம்பிக்கையை நம் முன்னோர்கள் கொண்டிருந்தார்கள் என திருவிவிலியத்தில் இருந்து பார்ப்போம்.
1. நம்பிக்கையினால்தான் ஆபேல் காயினுடைய பலியைவிட மேலான பலியைக் கடவுளுக்குச் செலுத்தினார். அதனால் அவர் நேர்மையானவர் எனக் கடவுளிடமிருந்து நற்சான்று பெற்றார். அவருடைய காணிக்கைகளைக் குறித்துக் கடவுளே சான்று பகர்ந்தார். இறந்துபோன போதிலும் இந்த ஆபேல் நம்பிக்கையின் மூலம் இன்னும் பேசிக் கொண்டேயிருக்கிறார். எபி 11:4
2. நம்பிக்யையாலேயே ஏனோக்கு சாவுக்குட்படாதபடி கடவுளால் எடுத்துக் கொள்ளப்பட்டார். கடவுள் அவரை எடுத்துக் கொண்டதால் அவர் காணாமற் போய் விட்டார். அவர் மேலே எடுத்துக் கொள்ளப்படும் முன்பே கடவுளுக்கு உகந்தவர் என்று நற்சான்று பெற்றவரானார். எபி 11:5
3. நோவா கண்ணுக்குப் புலப்படாதவை குறித்துக் கடவுளால் எச்சரிக்கப்பட்டபோது, தம் குடும்பத்தைக் காப்பாற்ற, கவனத்தோடு ஒரு பேழையை அமைத்தது நம்பிக்கையினால்தான். அதன் வழியாய் அவர் உலகைக் கண்டித்து இறைவனுக்கு ஏற்புடையவர் என்னும் உரிமைப் பேறு பெற்றதும் நம்பிக்கையினால்தான். எபி 11:7
4. ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். எபி 11:8
5. கானானியப் பெண்ணின் நம்பிக்கை. மத் 15:21-28
இயேசுவை அறிந்துக்கொள்ள, அவரது வல்ல செயலை புரிந்துக்கொள்ள நமக்கு நம்பிக்கை அவசியம். இயேசு நம்பிக்கையை நமக்கு கொடுக்கிறார் அதை ஏற்றுக்கொள்ள நம்மிடம் இருக்கும் அஞ்சம், பயம், தனிமை, விரக்தி, என்ற தீய காரணிகளை விட்டு நம்பிக்கை கொள்ள அழைப்பு விடுக்கிறார். நம்பிக்கையில் தூண்டப்படும் போது மற்றவரின் உதவியை நாட அழைக்கப்படுகிறோம். யாயீர் துணிவுடனும், வீரத்துடனும் இறைமகன் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு நலன்களை செய்ய வேண்டுகிறார்.
1. எனது இறைநம்பிக்கை, மனிதநம்பிக்கை எந்த விதத்தில் ஆழமாக இருக்கிறது?
2. நான் பிறருக்கு நம்பிக்கையின் நபராக இருக்கின்றேனா?
இறைமகன் இயேசு தம் கைகளால் தொட்டு குணப்படுத்தினார் என்னும் நற்செய்தி நாம் வாசிக்க கேட்கிறோம். இதன் வழியாக நமது விசுவாசத்தை விரிவாக்க மற்றும் ஆழப்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம். பல நேரங்களில் நோயுற்று இருப்போர் இயல்பாக கருதுபவை இவ்வாறு...... ஏக்கம் கொள்வது, எதிர்ப்பார்ப்பது, பார்க்க வேண்டும், நம்மோடு சிறிது நேரம் ஓதுக்குவது, ஆறுதல் வார்த்தையைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டும், தனது அன்பின் கரங்களால் தொட வேண்டும் என்று பலவாறு உணர்வு பூர்வமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் எண்ணங்கள் தோற்றுவது இயல்பானதே. அதே போன்று இன்றைய நற்செய்தியில் பன்னிரு ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண் ஆண்டவரின் மேலுடையைத் தொட்டார். மாற் 5:27 இயேசுவின் வல்லமை அப்பெண்மணியை குணமாக்கியது; இயேசுவை நாம் தொடவும், இயேசு நம்மைத் தொடவும், விரும்புவது இயல்பே. அதே நேரத்தில் அந்த இறை வல்லமையை பெற திருச்சபை வழிவகுக்கிறது என்றால் மிகையாகாது. நற்கருணை மூலமாக தினமும் நம்மைத் தொடுபவராக, குணமளிப்பவராக, தேற்றுப்பவராக, வருகிறார். விசுவாசத்தின் மறைபொருளாக விளங்கும் உயிருள்ள இறைவனை உட்கொள்வதன் வழியாக அவரில் நாம் இரண்டற இணையலாம். மறைபொருளாக விளங்கும் நற்கருணை நாதரை அன்பு, பொறுமை, பரிவு, இரக்கம், மற்றும் அனைத்துமாக நம் வாழ்வில் ஏற்றுக்கொள்ள அழைக்கும் அவரில் நாம் இரண்டற இணையலாம். அப்படிப்பட்ட திருவிருந்தில் பங்கெடுக்கும் நாம் வல்லமைமிக்க தேவனோடு இணைந்து கனிகளை கொடுக்கும் கருவிகளாக செயல்பட இத்திருப்பலியில் இணைவோம். ஆமென்.
|