பொதுக்காலம் 4 ஆம் ஞாயிறு அன்பே தலைசிறந்ததுஎரேமியா 1:4-5.17-19
1கொரிந்தியர் 12:31-13, 13
லூக்காஸ் 4:21-30
அன்பினால் தூண்டப்படும் செயல்பாடுகள் அனைத்தும் உயர்ந்தவையே. இதில் தத்துவங்களும், கொள்கைகளும், மதங்களும் பேசுவது அன்பை பற்றியே. இந்த உலகத்தை வழிநடத்தும் சக்தி அன்பு மட்டும்தான். பலவிதமான மனித உறவுகளுடமும் நாம் எதிர்பார்ப்பது இந்த அன்பு மட்டும்தான். இன்பமும் துன்பமும் நிறைந்த நம் வாழ்க்கையில் நமக்கு ஒரே ஆறுதல் பிறர் நம் மீது செலுத்தும் அன்பு மட்டும்தான். இயேசு அதை நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார். ஒருவரது வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்ல உதவியாக இருக்கும் கருவி இந்த அன்பு மட்டும்தான். பிரச்சனைகள் உள்ள போதும் பிரச்சனைகளைப் பிறரிடம் சொல்லும் போதும், நமக்கு நாமே பாதுகாப்பாக உணர வைப்பதுதான் இந்த அன்பு என்ற ஆயுதம். அன்பு என்ற வார்த்தை ஆயிரம் அர்த்தங்களுடன் பொதிந்த வார்த்தை. கடவுள் நம் மீது கொண்டுள்ள அன்பின் பரிசு இயேசு. இயேசுவின் மதிப்பீடுகளில் மிக முக்கியமானது இந்த அன்பு. இதுதான் என்று யாராலும் வரையறுத்துச்சொல்ல இயலாது. அன்பின் சாயலாக இயேசு வாழ்ந்தார். அன்பு, பாசம், காதல், நட்பு என்று பல்வேறு பெயர்களில் நாம் பார்த்தாலும் எல்லாமே அன்பு என்பதைத்தான் மையப்படுத்துகிறது. ஒரு மனிதன் தன் தாயையோ அல்லது உறவினர்களையோ நேசித்தால் “அது பாசம்” என்கிறது. அதுவே தன்னைச்சுற்றி உள்ளவர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ அன்பாய் இருந்தால் “அது நட்பு” என்றாகி விடுகின்றது. தன் காதலியிடமோ அல்லது காதலனிடமோ அன்பாய் இருந்தால் “அதை காதல்” என்கிறது. ஆகவே அன்பு, பாசம், நட்பு, உறவு, காதல் என்று பல்வேறு பெயர்களில் பார்த்தாலும் அது அன்பு என்ற ஒற்றைச்சொல்லில்தான் உருவாகிறது என்பதை மனிதர்களாகிய நாம் மறந்து விடக்கூடாது. அன்பு என்ற உணர்வு, நம் மனதில் இருந்து எழ வேண்டும். கடவுளிடம் அன்பாக இருப்பதும், தாயை நேசிப்பதும், சந்தோசத்தை விரும்புவதும், உணர்வு பூர்வமாக செயல்படுத்த வேண்டும். மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய ஒரே மருந்து அன்பு. ஆனால் இதில் என்ன பிரச்சனை என்றால் அன்பாக இருப்பது எப்படி என்பதை உணர்ந்து கொள்ள முடியாமல் நமது நம்பிக்கை ஆழமானதாக இல்லாமல் இருக்கின்றன.
இதற்கு புனித பவுல் அடியார் கூறுவது, நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை.என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது.அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது.அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும்.அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது.ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம்.நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம்.நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப்போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன்.ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது. ஆகவே தலைசிறந்த பண்புகளை நமதாக்கவும், மனம் நிறைந்த அன்பு மட்டுமே நல்ல பலனைத் தரும். உள்ளன்போடு செய்யும் எந்த செயலும் மனமகிழ்வைத் தரும் என்ற உண்மையை அறிந்திட வரம்கேட்போம். ஆமென்.
|