இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 3 ஆம் ஞாயிறு

அருள்பொழிவு பெற்றவர்கள்

நெகே 8:2-4a.5-6.8-10
1கொரி12:12-31a
லூக் 1:1-4 4:14-21

ஆண்டவரின் ஆவி என்மேலே
ஏனெனில் அவர் அபிஷேகம் செய்துள்ளார் (2)
1. எளியோருக்கு நற்செய்தி சொல்லவும்
சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என அறிவிக்கவும்
ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார் தேர்ந்தெடுத்தார்
உன்னை அன்று அழைத்ததும் நாமே -2
உரிய பெயரை வைத்ததும் நாமே -2
உன்னை அன்று மீட்டதும் நாமே
உனது துணையாய் இருப்பதும் நாமே
2. நிறை உண்மைக்கு சாட்சி சொல்லவும்
நோயுற்றோரைக் குணமாக்கவும்
ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்
தீ நடுவே நீ நடந்தாலும் - 2
ஆழ்கடலைத்தான் கடந்தாலும் -2
அருகிலேயே நாம் இருக்கின்றோம்
அழைத்து உன்னை வழிநடத்துகின்றோம்
மெசியா என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள். தந்தை கடவுள் இயேசுவை மெசியாவாக இங்கு நமக்கு அறிமுகப்படுத்துகிறார். நாசரேத்து இயேசு கடவுளிடமிருந்து திருப்பொழிவு பெற்று இவ்வுலகில் கடவுளால் அபிஷேகம் பெற்று கடவுளின் மகனாகப் பிறந்து, மனிதரைப் பாவத்திலிருந்து மீட்க தனது பணிவாழ்வை எவ்வாறு தொடங்கினார் என்பதை புனித லூக்காஸ் தனது அனுபத்தில் இருந்து விளக்குகிறார்.ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார். (எசா 61:1) என்கிற எசாயாவின் கூற்று மெசியாவைப்பற்றியதுதான் என்பதில் சந்தேகமில்லை. தம் பணிவாழ்வின் தொடக்கத்தில் சொந்த ஊரான நாசரேத்திலுள்ள தொழுகைக் கூடத்தில் போதிக்க வந்த இயேசு எசாயாவின் இந்த வாக்கியத்தை மக்களுக்கு வாசித்துக் காட்டி (லூக் 4:18-19) நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று என்று சொல்லும் போது தாம் மெசியா என்பதை மறைமுகமாக சொல்கிறார்.
இஸ்ரயேல் சமுதாயத்தில் தலைமைக் குருவும் அரசரும் அருள்பொழிவு செய்யப்படுவதுண்டு (எசா 61:1) இல் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அருள்பொழிவு செய்யப்படுவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இயேசுவை பொறுத்தவரை அவர் யூதர்களின் குருகுலத்தில் (லேவியர், ஆரோன்குலம்) தோன்றியவரல்ல அவர் தாவீதின் மகன் என்றுதான் அழைக்கப்படுகிறார். மேலும் தாவீதின் குலத்தைச் சேர்ந்த யோசேப்பு இயேசுவுக்குப் பெயரிடும் அதிகாரத்தைக் கடவுளிடமிருந்து பெறுகின்றார். அந்த அடிப்படையில் இயேசுவின் சட்டப்படியான தந்தையாக அவர் அறியப்படுகிறார். (லூக் 1:36) அந்த அடிப்படையில் குலத்தைச் சேர்ந்தவர் தான் என்று வாதிட வாய்ப்புள்ளது. ஆனால் திருச்சபையின் பாரம்பரியத்தில் அன்னை மரியா எப்பொழுதுமே தாவீதின் குலமலராகத்தான் கருதப்படுகிறார். ஆகவே இயேசு அருள்பொழிவு செய்யப்பபட்டுள்ள மெசியா என்றழைக்கப்படும் போது அவர் யூதர்களின் குலத்தைச்சாராத காரணத்தினால் அரசராகத்தான் அவரை நாம் ஏற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் இயேசு அருள்பொழிவு செய்யப்பட்ட அரசர் என்றாகிறது.
இதன் அடிப்படையில் இயேசுவை சார்ந்து வாழும் நாமும் அருள்பொழிவு பெற்றவர்கள். திருச்சபையில் நாம் நூழையும் போது ஞானஸ்தானத்தின் வழியாக அருள்பொழிவு பெறுகிறோம். அதனை தொடர்ந்து திருவருச்சாதனத்தின் மூலம் அது நம்மில் உறுதிசெய்யப்படுகிறது. மேலும் அவரவர் அழைப்பிற்கு ஏற்றார் போன்று அபிஷேகிக்கப்படுகிறோம்.
1. (குருத்துவம், திருமணம்) அவை எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதை பற்றி திருத்தந்தை அறிக்கையிட்ட மறையுரையில் இருந்து அறியலாம்.
மக்கள் எவ்விதம் அருள்பொழிவு பெற்றுள்ளனர் என்பதைக் கொண்டே ஒரு நல்ல அருள் பணியாளரை நாம் அடையாளம் காணமுடியும். மகிழ்வின் தைலத்தால் மக்கள் அருள்பொழிவு செய்யப்பட்டிருந்தால், அது வெளிப்படையாகத் தெரியும்: எடுத்துக்காட்டாக, திருப்பலியை விட்டு அவர்கள் வெளியேச் செல்லும்போது, அவர்கள் நல்ல செய்தியை கேட்டனரா என்பதை அவர்களைப் பார்த்தே தெரிந்துகொள்ளலாம். உத்வேகத்துடன் நற்செய்தி அறிவிக்கப்படுவதையே நம் மக்கள் விரும்புகின்றனர்; அவர்கள் அன்றாட வாழ்வைத் தொடும்படி நம் மறையுரைகள் அமைவதையே மக்கள் விரும்புகின்றனர். ஆரோனின் தலையில் ஊற்றப்பட்ட தைலம், அவரது அங்கியின் விளிம்பையும் நனைத்ததுபோல், நமது நற்செய்தி அறிவிப்பு, மக்களின் இருளான பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். பல்வேறு தீய சக்திகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி, தங்கள் விசுவாசத்தை இழக்கும் அளவு விளிம்புகளில் வாழ்பவர்களிடையே நமது நற்செய்தி சென்றடைய வேண்டும். மக்களின் அன்றாட வாழ்வில் நிகழும் எதார்த்தங்களுக்காகவும்,அவர்களது இன்ப, துன்பங்கள், நம்பிக்கைகள், பாரங்கள் அனைத்திற்காகவும் நாம் வேண்டிக்கொள்வதால், அவர்கள் நமக்கு நன்றி சொல்கின்றனர். அருள்பொழிவு செய்யப்பட்ட கிறிஸ்துவின் நறுமணம் நம் வழியாக அவர்களைச் சென்றடைவதை மக்கள் உணரும்போது, நம் மட்டில் அதிக நம்பிக்கை கொள்கின்றனர். அவர்களது தேவைகளை நம்மிடம் கூறி, "எனக்கு இந்தப் பிரச்சனை உள்ளது, எனக்காக இறைவனிடம் மன்றாடுங்கள்", "என்னை ஆசீர்வதியுங்கள்" என்று அவர்கள் சொல்லும்போது, அருள்பொழிவின் தைலம் அவர்களையும் சென்றடைந்துள்ளது என்பதை உணரலாம். இறைவனுக்கும், மக்களுக்கும் இடையே இத்தகைய உறவை நாம் கொண்டிருக்கும்போது, நம் வழியாக அருள் அவர்களைச் சென்றடையும்போது, இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே நாம் ஓர் இணைப்பாக அமைகிறோம்.
இத்தருணத்தில் ஒரு முக்கிய கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன். அதாவது, நம்மிடம் மக்கள் கேட்கும் செபங்கள், சில சமயங்களில் உலகு சார்ந்த விண்ணப்பங்களாய், நமக்குச் சங்கடமான விண்ணப்பங்களாய் இருந்தாலும், அவை, இறை அருளை நமக்குள் தூண்டியெழுப்ப வேண்டும். அருள்பொழிவு தைலத்தின் நறுமணம் நம்மிடையே உள்ளதென்பதை மக்கள் உணர்வதாலேயே அவர்கள் நம்மிடம் வருகின்றனர். இரத்தப் போக்கினால் துன்புற்ற பெண், இயேசுவின் ஆடை விளிம்பைத் தொட்டபோது, நம்பிக்கை நிறைந்த அவரது துயரத்தை இயேசு உணர்ந்தார். இந்த நிகழ்வில், நெருக்கிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்துடன் இயேசு சென்றதை, ஆரோனின் அங்கி என்ற அழகிய உருவகத்தின் ஓர் எடுத்துக்காட்டென நாம் உணரலாம். இந்த அங்கி என்ற உருவகம் அனைவருக்கும் புலனாவதில்லை. விசுவாசக் கண்கொண்டு நோக்குபவர்களுக்கே அது புலனாகும். அத்தகைய கண்ணோட்டம், இரத்தப் போக்குடைய அப்பெண்ணிடம் இருந்தது. மற்ற மக்களிடமோ,எதிர்காலத்தில் அருள் பணியாளர்களாக மாறிய சீடர்களிடமோ, அக்கண்ணோட்டம் இல்லை. அவர்கள் மேலோட்டமான பார்வையுடன் கூட்டத்தை மட்டுமே கண்டனர் (லூக்கா 8:42). இதற்கு மாறாக, இயேசுவோ, அருள்பொழிவு சக்தி தன் ஆடையின் விளிம்பிலிருந்து வெளிப்பட்டதை உணர்ந்தார். நமது அருள்பொழிவின் சக்தியையும் நாம் உணரவேண்டுமெனில், நாமும் 'வெளியே செல்ல' வேண்டும். விளிம்புகளுக்குச் செல்ல வேண்டும். துன்பம், இரத்தம் சிந்துதல், பார்வையற்ற நிலை, தீய சக்திகளால் சிறைப்பட்டிருக்கும் நிலை ஆகிய விளிம்புகளுக்குச் செல்லவேண்டும். அருள் பொழிவு செய்யப்பட்ட இயேசுவின் மகிழ்வுத் தைலத்தை நமது சொற்களாலும், செயல்களாலும் மக்கள் பெறுவார்களாக என்று அழைத்தல் வாழ்வில் ஈடுபட்டிருக்கும் அருட் பணியாளர்களுக்கு தனது அருள்பொழிவு எவ்வாறு செயல்பட வேண்டும் என அறிவித்தார். ஆமென். 28/03/2013
2. குடும்பவாழ்வில் இருந்து அருள்பொழிவு எவ்வாறு வெளியாகிறது என்பதற்கு இரண்டாம் ஜான் பவுல் 09.07.2006 அவர்களின் கூற்று:
`இறைத்தந்தையைப் பற்றிய நினைவு நம் மனித இயல்பின் ஆழத்தை அறிய ஒளிபாய்ச்சுகின்றது, நாம் எங்கிருந்து வருகின்றோம், நாம் யார், மற்றும் நம் மாண்பு எவ்வளவு உயர்வானது.`
இத்தகைய சிறு செயல்களை நாம் குடும்பங்களில் இருந்து கற்றுக்கொள்கிறோம். அன்னையர், பாட்டிகள், தந்தையர், தாத்தாக்கள் ஆகியோரால், நம் குடும்பங்களில் இருந்து தான் வீரியமிக்க செயல்பாடுகள் தொடங்கப்படுகிறது. ஆகவே பல்கலைகழகமாக திகழ சிறப்பான விதத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கவேண்டும். அமைதியாக பல சிறு சிறு செயல்கள் நடைபெறுகின்றன. இவற்றின் வழியே அன்பு வெளிப்படுகிறது. இந்த அன்பினால் நம் நம்பிக்கை உருபெறுகிறது. எனவேதான் நமது குடும்பங்களை திருஅவைகள் என்று கூறுகிறோம்.
இயேசு ஏழைகளோடும் பாவிகளோடும் உணவருந்தினார், தாழ்த்தப்பட்டவர்களோடு இயேசு நெருங்கிப்பழகினார், அதன் வழி ஏற்றத்தாழ்வை அகற்ற விடுதலை வீரராக அருள்பொழிவு செய்யப்பட்டார். குடும்ப வாழ்வின் உண்மை நிலைகளை இயேசுவின் கண்கொண்டு காணவும், இயேசுவின் கருணை நிறைந்த இதயத்தோடு நாம் அனைத்துக் குடும்பங்களையும் அணுகவும், இறைவனிடம் வரம் கேட்போம். ஆமென்.