இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

அடிமையின் வடிவை ஏற்றுக் கொண்டார்

எசாயா 50: 4-7
பிலிப்பியர் 2: 6-11
மத்தேயு 26:14-27:66

ஆண்டவருடைய திருப்பாடுகளின் ஞாயிறு. நமது தாய் திருச்சபை வார்த்தை வழிபாடு வழியாக இறைமகன் இயேசுவின் பாடுகளைப் பற்றி தியானிக்க நம்மை அழைக்கின்றது. இறைவன் வார்த்தை வழிபாட்டின் வழியாக ஆழமான உயர்ந்த உண்மையையும், அறிவுரையையும் நம்முன் வைக்கின்றார். மனிதனாகப் பிறந்த நம் அனைவரின் நிலையற்ற குணங்களையும் , நிலையற்றத் தன்மையைப் பற்றியும், மனதின் தவறக்கூடியவன், நிழலைப்போல் மாறக்கூடியவன் என்பதை எடுத்துரைக்கின்றது. நற்செய்தியின் வழியாக மனிதன் தனது செற்களின் செயல்களின் வழியாக மாறக்கூடியவன் என்பதையும், மூவொரு இறைவனாகிய தந்தை, மகன், ஆவியானவர் என்றும் மாறாதவர் என்பதை நமக்கு இயேசுவின் துன்பப் பாடுகள் வெளிப்படுத்துகின்றது. ஓசான்னா ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக என்று ஆர்ப்பரித்துப் பாடியவர்கள், சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும், ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவயைில் அறையும் என்று கத்துகின்றார்கள். இயேசுவுடன் மூன்று ஆண்டுகளாக பயணித்த அவருடைய அன்பு சீடர்களின் நம்பமுடியாதச் செயல்கள். அவர்களில் ஒருவர் முப்பது வெள்ளிக் காசுக்கு ஆசைப்பட்டு காட்டிக் கொடுக்கின்றார். எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒருபோதும் ஓடிப்போகமாட்டேன் என்று சொல்லிய பேதுரு இம்மனிதனை எனக்குத் தெரியாது என்ற ஆணையிட்டும் சபிக்கவும் சொல்லி மூன்று முறை மறுதலிக்கின்றார். தாபோர் மலையில் இறைமகன் இயேசுவுடன் இறைவனுடைய பிரசன்னைத்தை அனுபவித்த மூன்று சீடர்கள், கெத்சமனித் தோட்டத்தில் துயரமும் மனக்கலக்கமும், எப்படிபட்ட சாவை எதிர்கொள்ளப்போகிறோம் என்று ஆழ்துயரம் கொண்டு தன்னுடன் விழித்திருந்து செபிக்கும்படி கேட்டுக் கெண்ட மூன்று சீடர்களும் உறங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். மூன்று வருடங்களாக அவருடன் வாழ்ந்தவர்கள் கோழையாக அவரை தனியாக துன்பத்தில் விட்டுவிட்டு ஓடிப்போடுகின்றார்கள். முப்பது வெள்ளிக் காசைப் பெற்றுக் கொண்டு, இறைமகன் இயேசுவை ராபி வாழ்க என்று முத்தமிட்டு, மக்களின் மூப்பர்களும், குருக்களும், பெருங்கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தவர்களிடம் காட்டிக் கொடுக்கின்றார். அப்படியிருந்தும் இயேசு யூதாசை தோழா என்று அன்புடன் அழைக்கின்றார். மூப்பர்களும் தலைமைக் குருக்களும் குற்றம் சுமத்தியபோது இறைமகன் இயேசு மறுமொழி எதுவும் கூறவில்லை. உண்மை எது என்பதை அறியாத பிலாத்துக்கு "உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன், இதற்காகவே உலகிற்கு வந்தேன். "உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றர் " என்று உண்மையின் ரகசியத்தை மறுமொழியாக விளக்குகின்றார். படைவீர்கள் இயேசுவின் ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அணிவித்து, முள்முடி தலையின்மேல் வைத்து, வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து முழந்தாள்படியிட்டு யூதரின் அரசே, வாழ்க! என்று சொல்லி ஏளனம் செய்தபின், துப்பி, தலையில் அடிக்கின்றனர். காவலருள் ஒருவர் தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய் என்று சொல்லி கன்னத்தில் அடிக்கின்றார். வழியே சென்றவர்கள் தங்களுடைய தலைகளை அசைத்து, கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள். நீ இறைவனின் மகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று பழித்துரைத்தார்கள். பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். நானே இறைமகன் என்றானே என்று கூறி ஏளனம் செய்கின்ற மறைநூல் அறிஞர்கள், தலைமை குருக்கள், மூப்பர்களின் கூட்டம். ஓர் அடிமையாகிய இறைவனுக்கு கிடைக்கின்ற மறியாதையும் மதிப்பும். அனைத்து ஏளனத்திற்கும், பழிச்சொல்லுக்கும் அவர் கொடுத்த பதில்தான் மௌனம். உண்மையை மட்டும் எடுத்துரைத்தார் கடவுள் வடிவில் விளங்கிய அன்பின் இரட்சகர். மனிதனைப் படைத்த இறைவன், மனிதனாக பிறந்து வாழ்வு வழங்க வந்தவரை மனிதக் கூட்டம் அவரை அடிமையின் இழிநிலைக்கு தள்ளுகின்றார்கள். இறைமகன் இயேசு நமக்கு கற்றுத் தரும் பாடம் அமைதி, மன்னிப்பு, துன்புறுத்துவோருக்காக செபிக்கும் வரம், தியாகம் என்ற நற்குணங்களைப் நமக்கு கொடையாக அளிக்கின்றார். நம்முடைய அனுதினவாழ்வில் செயல்வடிவம் கொடுக்க முயற்சிப்போம்.

இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் முன்கூட்டியே இறைவாக்கு உரைத்துள்ளதை இன்றைய முதல் வாசகத்தில் காண்கின்றோம். "ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார். நான் கிளர்ந்தௌவில்லை. விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என்தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமில்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை" என்று கூறுகின்றார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிலுவை அவமானம் பெற்ற இறைமகன் இயேசு ஒவ்வொரு நாளும் மனித உருவத்தில் உலகெங்கும் அவமானத்திற்கு தள்ளப்பட்டு இறந்து கொண்டுதான் இருக்கின்றார். யூதாசைப் போல் பணத்திற்கு ஆசைப்பட்டு பிறரைக் காட்டிக் கொடுக்கும் மனித யூதாசுக்கள் இன்றும் நம்மிடையே இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அரசியல்வாதிகள் பதவியைப் பெறுவதற்காக மறைமுகமாக பணத்தையும், பொருட்களையும் கொடுத்து பொது மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நிலை. உண்மை எது என்று தெரியாமல் பிறர்மீது பழிசுமத்துகின்ற சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை. இன்று சமயத்தின் பெயரில் இறைமகன் இயேசுவைப் போல் சிலுவையில் அறைந்து இறைவனுக்காக தங்களுடைய உயிரை தியாகம் செய்த உள்ளங்கள் அனுபவித்த வேதனைகள் பழிச்சொற்கள், ஏளனம் அவமானம் மற்றும் அவர்களுடைய தலையை வெட்டும்போது அனுபவித்த வேதனைகள் எவ்வளவு என்பதை நம்மால் உணரமுடியும். சமூக வளைதளங்கள் வழியாக காண்கின்ற கொடுமைகள் பழிவாங்குதல், கொலை வன்முறைகள், போன்ற தீயசக்திகளின் செயல்கள் அனைத்தும் நம்முடைய வார்த்தையால் சொல்ல முடியாதவை. சிரியாவில் ராணுவம் நடத்திய விஷ வாயு வான்வெளி தாக்குதலில் நடைபெற்ற தாக்குதலில் உயிர் துறந்த பிஞ்சுக் குழந்தைகள், பொது மக்களின் மரணம். அவர்களுடைய உறவினர்களின் துக்கம் கண்ணீர்த துளிகள். இவர்களுயைட மத்தியில் இறைமகன் இயேசு இன்றும் இறந்து கொண்டுதானே இருக்கின்றார். நீதிக்கும் நேர்மைக்கும் செவிகொடுக்காமல் அநீதியாக பழிசுமத்தப்பட்டு தண்டனையை அனுபவிக்கும் உள்ளங்கள். சுயநல்திற்காக பிறர்மீது இல்லாதது பொல்லாதது சொல்லித் தீர்ப்பிடும் போதும் இயேசு சிலுவை மரணத்தைக் ஏற்றுக் கொண்டுதான் இருக்கின்றார். இறைவன் உருவில் படைக்கப்பட்ட மனிதன் எங்கே செல்கின்றான். மனித உள்ளத்தில் இருக்கும் அனைத்துக் கொடூரங்கள் நீங்க வேண்டுமென்று அமைதியின் இறைவனிடம் மன்றாடுவோம்.

சில நேரங்களில் நீங்களும் நானும் வேறுபட்ட துன்பங்களைக் கடந்து செல்லும் போது இறைமகன் இயேசுவின் நிலையை கடந்து சென்றிருக்கலாம். இப்படிபட்ட நேரத்தில் இயேசுவைப் போல் அமைதி காத்து உண்மையை மட்டும் எடுத்துரைக்க நமது உள்ளத்தைப் பக்குவப்படுத்துவோம். இறைமகன் இயேசு சிலுவை மரணத்தை ஏற்கும் போது கேட்ட அனைத்து பழிச்சொல்லுக்கும் அவர் மொழிந்த அன்பின் செபம்தான் "தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை "என்று. ஆம் இறைமகன் இயேசுவின் மனநிலையை அடைவதற்கு நமது வாழ்வில் இனிமேல் கடந்து செல்ல இருக்கும் புனித நாட்களில் இறைவனிடம் மனம் திறந்து வேண்டுவோம். பிறர் நம்மேல் சுமத்திய காயங்களையும், பழிச்சொற்களையும், இகழ்ச்சிகளையும், ஏளனத்தையும் இறைவனுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து காணிக்கையாக ஒப்புக்கொடுப்போம். அதன் பயனாக மனம்மாற்றம் பெற்று புது மனநிலையைப் பெறுவோம். நமது குடும்ப உறவுகளும், சமுதாய உறவுகளும், உலகம் முழுவதும் வாழுகின்ற மனிதகுலம் இறைவனின் அன்பை ஆழமாக உணரவும், இறைமகன் இயேசுகிறிஸ்து ஆண்டவர் என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமேன்றும் தந்தையாம் இறைவனை நோக்கி மன்றாடுவோம். இறைவனின் மன்னிப்பின் அருளைப் பெறுவதற்கு மனம் மாறுவோம். அமைதியின் இறைவனின் குணங்களை பெற்று அவரைப்போல் வாழ வரம் கேட்போம். நாம் வெறும் புல் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார். நான் அவமானம் அடையேன், என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன். இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். எசாயா 50:7