இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாத் திருப்பலி விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே தொடக்க நூல் 14:18-20 1கொரிந்தியர் 11: 23-26 லூக்கா 9:11-17 இயேசுவின் திரு உடல், திரு இரத்தம் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இறைமகன் இயேசு தன்னையே உணவாக வார்த்தையாக அவரே நம்மில் வாழ்வதற்கு நன்றி கூறுவோம். இறைமகன் இயேசு நமக்காக நற்கருணையில் நாள்முழுவதும் பிரசன்னமாகி நிலைவாழ்வை அளிக்கும் இரக்கத்தின், மன்னிப்பின் இறைவனாக வாழ்கின்றார். இறைமகன் இயேசு வார்த்தையான வடிவில், அப்பத்தின் இரத்தின் வழியாக உணவாக தம்மையே கொடையாக அளிக்கின்றார். திருத்தூதர் யோவான் நற்செய்தி 6 ஆம் அதிகாரத்தில் காணப்படும் இறைவார்த்தைகளை மொளனமாக ஒவ்வொரு வரிகளையும் தியான சிந்தனையுடன் வாசித்தால் இறைமகன் இயேசு கூறும் உண்மையை நம்மால் உணரமுடியும். "கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது. வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது " 33. 35 ஆம் இறைவசனங்களில் காண்கின்றோம். எனது சதையை உணவாக உலகு வாழ்வதற்காகவே கொடுக்கின்றேன். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழவைக் கொண்டுள்ளார். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர் என்று இறைமகன் இயேசுவே தனது சீடர்களிடமும், யூதர்களிடமும் தன்னை வாழ்வளிக்கும் உணவாக உருவகப்படுத்துகின்றார்.
ஒவ்வொருமுறையும் திருப்பலியில் பங்கேற்கும் போது இறைமகன் இயேசு நமக்காக சிறு துண்டு அப்பத்தின் வழியாக வாசம் செய்தவரை நம் உள்ளத்தில் ஏற்கின்றோம். அவரை உயிருடன் ஏற்கும் முன்பு நமது மனநிலையை ஆய்வு செய்ய வேண்டும். கிறிஸ்துவர்களாகிய நாம் ஒப்புரவு என்னும் அருட்சாதனத்தை மறந்து தகுதியில்லாமல் பல முறை அவரை உள்ளத்தில் ஏற்றிருக்கின்றோம். உயிருள்ள இறைவன், உலகத்தையே தனது கையில் தாங்குகின்ற இறைவன், உனக்காகவும் எனக்காகவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிலுவையில் தியாகம் செய்த இறைவன். இறைதந்தையையும் தூய ஆவியானவரையும் வெளிப்படுத்திய இறைவன். அவருக்கு கொடுக்கும் மறியாதை என்ன? தகுந்த முறையில் நம்மை தயார் செய்கின்றோமா? நமது வழிபாடுகளில் பக்தியில்லை. இறைஅனுபவம் இல்லாமலே திரும்பிச் செல்கின்றோம்? ஞாயிறு திருப்பலியில் பங்குபெறகூடக் நேரம் இல்லை. வேலை வேலை..... என்று ஓடிக் கொண்டே இருக்கின்றோம்.
இன்று மேலைநாட்டில் தேவலாயத்தில் காண்பது குறைவான விசுவாசம், சிறிய அப்பத்தில் இறைமகனின் பிரசன்னம் இல்லை என்று நம்பமுடியாத உள்ளங்கள். இறைபிரசன்னம் நிறைந்த அப்பமானது சிலருக்கு சக்கலாட்டு மிட்டாய்கள் போல் காணுகின்ற அவலநிலை. இரண்டு வாரத்திற்குமுன்பு நற்கருணை பவனியில் பங்கேற்ற போது கண்ட உண்மை, மக்கள் தங்கள் கைகளை கட்டிக் கொண்டும், தங்களது கைகளை பாக்கெட்டுகளில் வைத்துக் கெண்டும் வீதி ஓரங்களில் நின்று வேடிக்கைப் பார்க்கின்ற கூட்டம். தன் உருவிலும் சாயலிலும் படைத்த மனித உள்ளங்கள் இறைமகன் அந்த சிறிய அப்பத்துண்டில் வாழ்கின்றார் என்று அறிந்து கொள்ள முடியாத நிலை. வாக்கு மனிதனானார். நம்மிடையே குடிகொண்டுள்ளார் என்பதை அறியாத நிலை. திவ்ய நற்கருணையை பெற்றுக் கொண்ட சிறுவர் சிறுமிகளிடம் நற்ருணையைப்பற்றி கேட்டால் அவர்கள் அளிக்கும் பதில் சுவையில்லை என்று. நற்கருணையின் மறைபொருளை பெற்றோற்கள்தான் தங்களுடைய குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். உங்களால்தான் அவர்களுக்கு இறைஅனுபவத்தைக் கொடுக்கமுடியும். உலகம் இறைஅனுபத்தைக் ஒருபோதும் கொடுக்க முடியாது. உதாரணமாக இன்று எந்த ஒரு நாட்டின் அரசியல் தலைவர்கள் நகரத்தில் பயணம் வரும்போது அவருக்கு கொடுக்கும் மறியாதைகள் ஏற்பாடுகள் அனைத்தும் பிரமாண்டமாக இருக்கும் ஆனால் அவர்களுக்கும் மேலாக உன்னதமானவரும் உயர்ந்தவருமான இறைமகன் இயேசுவுக்கு கொடுக்கும் மறியாதை என்னெவென்று சற்று ஆய்வு செய்வோம். நமது தாயக நாட்டைவிட்டு மேலைநாடுகளில் இறைமகன் இயேசுவுக்கு சொந்தமான அன்பு மக்களாகிய தமிழ் சமுதாயம் அவருடைய அருளின் இரக்கத்தால் பெற்றுக் கொண்ட விசுவாசத்தையும் நம்பிக்கையும் கைவிடாமல் நற்கருணையில் நேற்றும் இன்றும் என்றும் மாறமல் வாசம் செய்யும் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவாகிய இயேசுவை நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் வணங்கி ஆராதித்து, நிலைவாழ்வை கொடுக்கும் இயேசுவை நற்கருணையில் உற்று நோக்கி அவருடைய அருள்கொடைகளுக்கு நன்றி கூறுவோம். ஆராதணையின் மத்தியிலும் துதியின் மத்தியிலும் செயலாற்றும் உன்னதமான இறைவனுக்கு நமது வாழ்நாள் முழுவதும் ஆராதணை செய்வோம்.
|