பொதுக்காலம் நான்காம் ஞாயிறு என் விண்ணப்பத்திற்கு கடவுளே பதில் மொழி தாரும் எரேமியா: 1:4-5,17-19, 1 கொரி 12:31-13:13 லூக்கா 4:21-30திருத்தந்தை அறிவித்த இறை இரக்க ஆண்டிலே அயலவர் பால் எம் அக்கறையை மேம்படுத்துவோம். செபத்தின் வழியாக இறைவனை நெருங்கி மன அமைதியை உருவாக்குவோம். அண்மையில் ஒரு வகுப்பில் ஒரு மாணவன் புற்று நோய் சிகிச்சை காரணமாக தலை முடியை இழந்தான். அதன் காரணமாக பாடசாலை செல்ல விரும்பவில்லை. அதை அறிந்த மற்ற மாணவர் அனைவரும் தலையை மொட்டை அடித்து அவனை பாடசாலை வரச் செய்தனர். எம்முடைய சிறிய தியாகத்தின் வழியாக அயலவருக்கு நன்மை செய்யும் போது இறைவனின் அன்பைப் பெறுகிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன் என்கிறார் ஆண்டவர். நீதி வேண்டி குரல் கொடுப்பவருக்கு பல வழிகளில் தடைகள் தொல்லைகள் வரும். அந்த வேளைகளில் இறை நம்பிக்கை ஒன்றே பக்க பலமாக நின்று உதவும். மன அழுத்தங்களில் இருந்து விடுதலை ஆக்கும்.
இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகள் அன்பு பற்றி, என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது.அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும் என சொல்கிறார். எம்மால் முடிந்த அளவு நோயாளர் முதியோர் அகதிகள் பால் அன்பைப் பகிர்வோம். அவர்களில் இறைவனைக் காண முயல்வோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சொந்த மக்களால் நிராகரிக்கப் படுவதை காண்கிறோம். வெளி இடத்தில் இருந்து வருபவரை ஏற்றுக் கொள்ளும் மக்கள் சொந்த மண்ணில் பிறந்தவரை ஏற்றுக் கொள்வது இல்லை. அவரில் ஆயிரம் குறை சொல்வார்கள். யோசேப்பின் மகன் அல்லவா தச்சன் அல்லவா என எளிமைப் படுத்துகின்றனர். அவரின் திறமைகளை இறைவன் கொடை என எண்ணாது பொறாமைப் படுகின்றனர். பாராட்ட வேண்டிய நேரத்தில் கோபப்படுகின்றனர். நல்லவற்றை யார் செய்தாலும் ஒத்துழைப்பு தந்து பாராட்டி பங்கு பற்றி மகிழ்வோம். இறைவனை அருளை அதனில் காண விழைவோம்.
|