ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராகஎசாயா 40:1-5, 9-11 தீத்து 2:11-14; 3:4-7 லூக்கா 3:15-16, 21-22இன்றைய முதல் வாசகம் ஆறுதல் கூறுங்கள்: என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள் என்கிறார் உங்கள் கடவுள் என ஆரம்பம் ஆகிறது. மேலும் அவள் போராட்டம் நின்றுவிட்டது: அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது: அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள் என்ற வரிகள் சிந்தனைக்கு உரியவை. வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்:தொடர்ந்து ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார்: ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்: அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார் என்பது நம்பிக்கை நிறைந்த எதிர்பார்ப்பை தருகிறது.
இரண்டாம் வாசகம் நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார். நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார் எனச் சொல்கிறது. இறை அருளால் காலம் மாறும் கவலைகள் தீரும் என்ற மன உறுதி மகிழ்ச்சியை கனியச் செய்யும்.
இன்றைய நற்செய்தியில் இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வு சொல்லப்படுகிறது. இயேசுவின் தாழ்ச்சி, பொறுமை, இறைசித்தம் ஏற்றல் போன்ற அரும் குணங்கள் இங்கே வெளிப்படுகிறன. இயேசுவின் தன்னடக்கம் மகத்தானது. ஒருசிலர் தங்களுக்கே எல்லாம் தெரியும், தாங்களே பெரியவர், தாம் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டும் என்று எண்ணுவது திருத்தப் பட வேண்டியது. சமுக ஏற்றத் தாழ்வுகளை மனதில் இருத்தி அதற்கு அடிமைப்பட்டு இருப்போரை புதிய விடியலுக்கு அழைத்து வர திருமுழுக்குப் பெற்ற அனைவரும் முயற்சிக்க வேண்டும். நமது பணியை ஆற்றுவதற்குத் தூய ஆவியின் துணை வேண்டும். அவரது அருள்கர ஆற்றலின்றி நமது பணி வெற்றியடைய முடியாது. அதற்கு முதல்கட்டமாக, தந்தை இறைவனோடு நாம் நெருங்கிய உறவு கொண்டிருக்க வேண்டும். அதற்கான ஆற்றலைத் தூய ஆவி வழியாக எங்களுக்கும் பொழிந்தருள வரம்கேட்டு சிரம் பணிவோம்.
|