ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா

ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக

எசாயா 40:1-5, 9-11
தீத்து 2:11-14; 3:4-7
லூக்கா 3:15-16, 21-22

இன்றைய முதல் வாசகம் ஆறுதல் கூறுங்கள்: என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள் என்கிறார் உங்கள் கடவுள் என ஆரம்பம் ஆகிறது. மேலும் அவள் போராட்டம் நின்றுவிட்டது: அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது: அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள் என்ற வரிகள் சிந்தனைக்கு உரியவை. வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்:தொடர்ந்து ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார்: ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்: அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார் என்பது நம்பிக்கை நிறைந்த எதிர்பார்ப்பை தருகிறது.

இரண்டாம் வாசகம் நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார். நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார் எனச் சொல்கிறது. இறை அருளால் காலம் மாறும் கவலைகள் தீரும் என்ற மன உறுதி மகிழ்ச்சியை கனியச் செய்யும்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வு சொல்லப்படுகிறது. இயேசுவின் தாழ்ச்சி, பொறுமை, இறைசித்தம் ஏற்றல் போன்ற அரும் குணங்கள் இங்கே வெளிப்படுகிறன. இயேசுவின் தன்னடக்கம் மகத்தானது. ஒருசிலர் தங்களுக்கே எல்லாம் தெரியும், தாங்களே பெரியவர், தாம் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டும் என்று எண்ணுவது திருத்தப் பட வேண்டியது. சமுக ஏற்றத் தாழ்வுகளை மனதில் இருத்தி அதற்கு அடிமைப்பட்டு இருப்போரை புதிய விடியலுக்கு அழைத்து வர திருமுழுக்குப் பெற்ற அனைவரும் முயற்சிக்க வேண்டும். நமது பணியை ஆற்றுவதற்குத் தூய ஆவியின் துணை வேண்டும். அவரது அருள்கர ஆற்றலின்றி நமது பணி வெற்றியடைய முடியாது. அதற்கு முதல்கட்டமாக, தந்தை இறைவனோடு நாம் நெருங்கிய உறவு கொண்டிருக்க வேண்டும். அதற்கான ஆற்றலைத் தூய ஆவி வழியாக எங்களுக்கும் பொழிந்தருள வரம்கேட்டு சிரம் பணிவோம்.