இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிறு


எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! (தி.பா 90,17)

முதல் வாசகம்
சபை உரையாளர் 1,2:2,21-23

2வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். 21ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே. 22இது பெரிய அநீதி. உலகில் அவர் செய்த எல்லா முயற்சிக்காகவும் வகுத்த செயல் திட்டங்களுக்காகவும் அவருக்குக் கிடைக்கும் பயனென்ன? 23வாழ்நாளெல்லாம் அவருக்குத் துன்பம்; வேலையில் தொந்தரவு; இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே.

விவிலியத்தின் மெய்யறிவு நூல்களில் ஒன்றான இந்த சபை உரையாளர் புத்தகம், தன்னுடைய வித்தியாசமான பார்வையாலும், குறுகிய வரிகளாலும், பல நித்திய கேள்விகளுக்கு விடையளிக்க முயல்வது மிகவும் ஆச்சரியமானது. கீழைத்தேய சமூகங்களில் காணப்பட்ட பல 'அவநம்பிக்கைவாத இலக்கியங்கள்' முக்கியமான இடத்தை அன்று பெற்றன. மனித அறிவுகளுக்கு அப்பாற்பட்ட கேள்விகளை எதிர்மறையாக விடையளிக்க தொடங்கி நேர்முகமாக முடிவடைவது இப்படியான எபிரேய இலக்கியங்களின் தனித்துவம். எகிப்திய மற்றும் பபிலோனிய அவநம்பிக்கைகள் கி.மு. 2000 ஆண்டுகள் பழமையானவை என வல்லுனர்கள் கருதுகின்றனர். இவைகள் நேர்முறையான (நம்பிக்கைதரக் கூடிய) முடிவுரைகளில் முடிவடைவது அரிது. எமது சபை உரையாளர் புத்தகம், ஒரு தொகுப்பு நூல் என்பது பலரது கருத்து. இங்கே 'சபை உரையாளர்;' என தன்னை அறிமுகப்படுத்தும் ஆசிரியரை எபிரேயம் קֹהֶלֶת கொஹேலெத் என அழைக்கிறது. இது ஒருவரின் தனிப்பட்ட சுட்டுப்பெயராக இருக்கலாம் (உ-ம்: திரு. சபை உரையாளர்), அல்லது வினைச் சொல்லில் இருந்து வந்த ஒரு காரணப்-பெயராகவும் இருக்கலாம் (உ-ம்: சபையில் உரைத்தல்). தன்னை தாவீதின் மகனும் எருசலேமின் அரசரும் என அறிமுகப்படுத்துகிறவர், சாலமோன் என்று சொல்லவில்லை. யார் இந்த சபை உரையாளர் என்ற கேள்விக்கு அவ்வளவு இலகுவில் விடைகாண முடியாது. சாலமோனின் பாரம்பரியத்திலும் அத்தோடு அவர் இலக்கிய முறைகளில் தோன்றிய பிற்கால ஆசிரியர் ஒருவரின் புத்தகமே இது என்பது பலரின் வாதம். இந்த புத்தகத்திலே உடைய கிரேக்க சிந்தனைகள், பாரசீக வார்த்தைகள், யூத அரசர்கள் கால வரலாற்று துளிகள் போன்ற தொடற்பற்ற வரலாற்று பதிவுகள், இதன் காலத்தை கணிப்பதை கடினமாக்குகின்றன. பலர் இதனை கி.மு 5 நூற்றாண்டுக்கு உரியது எனக் காண்கின்றனர்.
சபை உரையாளர் பல படிப்பினைகளை நமக்கு முன்வைக்கிறது. முக்கியமாக:
அ) இரண்டு விதமான வசிப்பிடங்களை அறிமுகப்படுத்துகிறது (பரலோகம்-பூலோகம்).
ஆ) அவதானித்தலுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான வித்தியாசத்தை ஆராய்கிறது.
இ) வாழ்க்கையின் கடினத்தை முன்வைத்தாலும், வாழ்வின் நம்பிக்கையும் மற்றும் மகிழ்வையும் அதற்க்கு விடையாக முன்வைக்கிறது.
வ.2: எபிரேய நேரடி மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கும்: 'பயனற்றதின் பயனற்றதுகள், சொல்கிறார் சபை உரையாளர், பயனற்றதின் பயனற்றதுகள், அனைத்துமே பயனற்றது.' எபிரேய மொழியில் இரண்டு பெயர் சொற்கள், முதலாவது பெயர்ச்சொல் ஆறாம் வேற்றுமையாகவும், இரண்டாவது பெயர்ச்சொல் முதலாவது வேற்றுமையாகவும் வரும் பொழுது அது அச் சொல்லின் உச்ச நிலையை காட்டுகிறது. உதராணமாக, இனிமைமிகு பாடல், அரசர்க்கெல்லாம் அரசர், தெய்வங்களின் தெய்வம் எனபவற்றை விவிலியத்தில் உதாரணமாக எடுக்கலாம். பயனற்றது என்பதை குறிக்க הֶבֶל ஹெவெல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல் இந்த எட்டு சொற்கள் உள்ள வரியில் ஐந்து தடவைகளாக பாவிக்கப்பட்டுள்ளது, இது இதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. உண்மையில் இந்தச் சொல், மூச்சு, காற்று, மற்றும் அநித்தியமான நீராவி போன்ற அர்த்தங்களைக் கொடுக்கிறது. ஆனால் இங்கே இந்தச் சொல்லை ஆசிரியர் உருவக அணியாகவே பயன்படுத்துகிறார் என எடுக்கலாம். காற்று, நீராவி, மூச்சின் பார்க்கமுடியாத தன்மையை இங்கே அவர் உருவகப் படுத்துகிறார். விவிலியத்தில் இந்த சொல்லின் எதிர் பதமாக טוֹב தோவ் (நன்மை, நல்லது), என்பதனை எடுக்கலாம். சபை உரையாளர் அதிகமாக பயன்படுத்தும் இந்த ஹெவெல் எனும் பதத்தை அதன் உண்மை அர்த்தத்தில் பார்ப்பது சரியாக அமையாது என்பது பல ஆய்வாளர்களின் கருதுகோள்.

வ.21: உழைப்பு அக்காலத்தில் அதிகமாக மரியாதை கொடுக்கப்பட்ட விழுமியம், இதனை ஆசிரியர் வீண் என சொல்லி மனித வாழ்வின் பலவீனத்தை தியானிக்க தூண்டுகிறார் (עָמַל அமால், உழைப்பு, கடின வேலை). மூன்று முக்கியமான பெயர் உரிச்சொற்கள் உழைப்பை அழகு படுத்துகின்றன, அவை: ஞானம், அறிவு மற்றும் திறமை என்பனவாகும். இங்கே சமூக நீதி மறுப்பு ஒருவரின் இயலாமையை காட்ட பயன்படுகிறது.

வ.22: இஸ்ராயேலின் தொழில் ஒழக்கத்தின் படி, உழைப்பவர்க்கு அதற்கேற்ப ஊதியம் கிடைக்கவேண்டும். இதுவும் மோசேயின் சட்டங்களில் ஒன்று. இந்த நீதி மறுப்பு அநீதியாகும். சபையுரையாளரின் காலத்தில் இந்த அநீதி பல கேள்விகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கலாம்.

வ.23: கடின உழைப்பு, உடல் ரீதியான துன்பத்தைக் பகலில் கொடுக்கிறது, உழைப்பிற்கான ஊதியமறுப்பு இரவில்; உள ரீதியான துன்பத்தை கொடுக்கிறது. இளமை காலத்தில் ஓடி ஓடி உழைத்தால், பிற்காலத்தில் நிம்மதியாக வாழலாம் என்ற இன்றைய உலகியல் சிந்தனையை இந்த ஆசிரியர் அன்றே விளக்கியிருப்பது நிச்சயமாக வியப்புக்குரியதே.

அனைத்தையும் மாயை மற்றும் வீண் என்று சொல்கின்ற இந்த ஆசிரியர் மறைமுகமாக இறைவன் ஒருவரே நிச்சயமானவர், நிரந்தரமானவர் என்ற ஒரே வாதத்தை மறைமுகமாக முன்வைப்பார். இதனை இந்த புத்தகத்தை முழுமையாகவும் அவதானமாகவும் வாசித்தால் கண்டுகொள்ளலாம்.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 90

1என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடமாய் உள்ளீர்.
2மலைகள் தோன்றுமுன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்குமுன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே!
3மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; 'மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர்.
4ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.
5வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
6அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்து போகும்.
7உமது சினத்தால் நாங்கள் அழிந்து போகின்றோம்; உமது சீற்றத்தால் நாங்கள் திகைப்படைகின்றோம்.
8எம் குற்றங்களை உம் கண்முன் நிறுத்தினீர்; மறைவான எம் பாவங்களை உம் திருமுக ஒளிமுன் வைத்தீர்.
9எங்கள் அனைத்து வாழ்நாள்களும் உமது சினத்தால் முடிவுக்கு வந்துவிட்டன் எங்கள் ஆண்டுகள் பெருமூச்செனக் கழிந்துவிட்டன.
10எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே வலிமை மிகுந்தோர்க்கு எண்பது அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன. நாங்களும் பறந்துவிடுகின்றோம்.
11உமது சினத்தின் வலிமையை உணர்பவர் எவர்? உமது கடுஞ்சீற்றத்துக்கு அஞ்சுபவர் எவர்?
12எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.
14காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
15எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச் செய்யும்.
16உம் அடியார் மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.
17எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்!


படைப்புக்களில் உயர்ந்த படைப்பாகவும், படைப்பனைத்தையும் பாதுகாக்கும் காவாலாலியாகவும் மனிதனை கடவுள் படைத்தார் என விவிலிய பாரம்பரியம் கூறுகிறது. ஆனால் மனிதன் தன்னுடைய சிறு சிறு தேடல்களினாலும், கண்டுபிடிப்புக்களாலும் மனிதர், தாம் கடவுள் மற்றும் இயற்கையை விட உயர்ந்தவர் என்ற மாயைக்குள் வந்துவிட்டனர். இதன் விளைவுதான் அனைத்து சுய நல செய்ற்பாடுகளும். இந்த திருப்பாடல் ஆசிரியர் இஸ்ராயேல் பிள்ளைகளுக்கு மனிதரின் பலவீனத்தையும், கடவுளின் மகத்துவத்தையும் சில வரிகளில் பாட விளைகிறார்.

எபிரேய மூலமொழியின் படி இந்த திருப்பாடல் மோசேயின் செபம் என அறியப்படுகிறது (תְּפִלָּה לְמֹשֶׁה திபில்லாஹ் லெமோஷே). திருப்பாடல்கள் தாவீது பாரம்பரியத்தையும் தாண்டி அனைத்து இஸ்ராயேல் வரலாற்றையும் உள்ளடக்கியது என்பதற்கு இந்த திருப்பாடல் நல்லதொரு உதாரணம். இந்தப் பாடலின் வரலாற்று பிண்னனியை அறிவது கடினமாக உள்ளது. சிலர் இதனை எண்ணிக்கை 14,34ல் வரும் நிகழ்வின் பிண்னனியோடு ஒப்பிடுகின்றனர்❖.
(❖நீங்கள் நாட்டை உளவு பார்த்த நாள்களின் எண்ணிக்கைப்படி ஒரு நாளைக்கு ஒரு ஆண்டாக நாற்பது நாள்களுக்கும் நாற்பது ஆண்டுகள் நீங்கள் குற்றப்பழியைச் சுமப்பீர்கள்; என் வெறுப்பையும் அறிந்துகொள்வீர்கள்.)

வவ.1-2: இந்த வரிகள் நித்திய கால கேள்விகளை ஆராய்கிறது. மனித குலத்தின் படைப்பிற்கும் மற்றைய பிரபஞ்சத்தின் படைப்பிற்குமான கால இடைவெளியையும் இவை நோட்டமிடுகின்றன. இந்த வரிகளின் சாரம்சமாக, கடவுளின் புகலிடம் காலத்திற்கு உட்பட்டது அல்ல மாறாக அது கால அட்டவணையை தாண்டியது என எடுக்கலாம். கடவுள் இஸ்ராயேலரை கால அடிப்படையில் தண்டிக்க முயல, மோசே ஆண்டவரை கெஞ்சி அவர் காலத்தை கடந்த இறைவன் என்று பாடி புகழ்ந்து, தன் மக்களுக்காக வேண்டுகிறார் என சிலர் வாதிடுகின்றனர்.

வவ.3-6: மனிதரின் பலவீனங்களை ஒப்பிடுகிறார் ஆசிரியர்
அ. புழுதிக்கு சமமான மனிதர்கள் - புழுதி செமித்தியர்களுக்கு மிகவும் பரிட்சாத்தியமானது, இதிலிருந்தே மனித குலம் தோன்றியது என்ற ஒரு கொள்கையும் அவர்கள் மத்தியில் இருந்தது.

ஆ. காலத்திற்கு உட்பட்டவர்கள் மனிதர்கள் - ஒரு இரவோ அல்லது ஆயிரம் நாட்களோ கடவுளுக்கு சமமானதே என்பது ஆழமான உண்மை.

இ. புல்லைப்போன்றவர்கள் மனிதர்கள் - இந்த புற்கள் காலையில் பனித்துளியின் ஈரத்தினால் பூத்தது போல் தோன்றி மாலையில் வாடி வதங்கிவிடுவதை இங்கே உருவகிக்கிறார்.

வவ.7-9: தாங்கள் பெற்ற தண்டனைக்கு கடவுளின் நியாயத்தை காட்டுகிறார் ஆசிரியர். கடவுளின் சினம் என்பது இங்கே அவர் மூக்கின் வெப்பத்தைக் காட்டுகிறது. கடவுளின் திருமுகம் வெளிச்சமாக இருப்பதால் பாவங்கள் என்ற இருள் அவர் முன்னால் நிற்க முடியாது என்கிறார் ஆசிரியர். இஸ்ராயேலர் உயிரையும் மூச்சையும் ஒன்றாக கருதினர், அத்தோடு உயிரின் இறுதி மூச்;சு ஒரு பெரிய முனகலுடன் வெளியேறுகிறது என்ற நம்பிக்கையை இங்கே காணலாம்.

வ.10: நீடிய ஆயுள் கடவுளின் ஆசீர்வாதம் என்பதும் இஸ்ராயேல் நம்பிக்கை. 70-80 ஆயுள் ஆண்டுகள் விவிலிய மனித ஆயுட் காலம் என்ற நம்பிக்கை இன்று பலரிடம் காணப்படுகிறது. இந்த நம்பிக்கை இந்த திருப்பாடலில் இருந்தே வருகிறது எனலாம்.

வவ.11-12: ஆண்டவரின் சினம், ஆண்டவரின் கோபம் போன்றவை மனித குணத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறன. ஆண்டவரின் மேல் உள்ள பயத்தை அக்கால மக்கள் மெய்யறிவின் தொடக்கமாக கருதினர் என்பதை நோக்க வேண்டும். பன்னிரண்டாவது வரி, தற்கால மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான வரி. மனிதர்கள் காலத்தை கணிக்க தங்களது அறிவையே நம்புகின்றனர், ஆனால் ஒவ்வொரு தடவையும் தவறாகவே கணிக்கின்றனர். காலங்களை கணிப்பவர் உண்மையில் கடவுள் ஒருவரே என்பது இந்த திருப்பாடல் ஆசிரியரின் கருத்து.

வவ.13-15: ஆசிரியர் அக்கால பிரச்சினைகளையும் சிக்கல்களையும் ஆண்டவரிடம் முறையிடுகிறார் என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன.

வ.16-17: திருப்பாடல்களில் வேண்டுதல்கள் முக்கியமான இடத்தை பெறுகின்றன. இந்த வேண்டுதல்களை இந்த வரிகளில் காணலாம். மாட்சி, கடவுளின் அருள் மற்றும் வெற்றி போன்றவற்றை ஆசிரியர் தமக்கும் தம் மக்களுக்கும் கேட்கிறார்.



இரண்டாம் வாசகம்
கொலோசேயர் 3,1-5.9-11

1நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். 2இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். 3ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. 4கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள். 5ஆகவே உலகப்போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள். 9ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, 10புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும். 11புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடில்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார்.

இன்றைய இரண்டாம் வாசகம், இரண்டு சிந்தனைகளை முன்வைக்கிறது.
அ. மேலுகு சார்ந்தவற்றை தேடுதல்
ஆ. பழைய பாவ வாழ்க்கையை கைவிடுதல்.
மேலுலகு கீழுலகு போன்றவை முற்றிலுமாக கிரேக்க சிந்தனைகள் என எடுக்கலாம். எபிரேய சிந்தனையில் இவைகள் இருந்தாலும், எல்லாவற்றையும் இரட்டைத் தன்மையில் விவாதிக்கும் மெய்யியல் கிரேக்கருடையது என சொல்லலாம். கொலோசேயர்களை குழப்பிய மெய்யில் வாதத்தை இந்த அதிகாரத்தில் பவுல் கடுமையாக சாடுவதை காணலாம்.
வவ.1-2: கொலோசேயர்கள் ஏற்கனவே கிறிஸ்துவோடு இணைந்துவிட்டார்கள் என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன. ஆசிரியர் இங்கே கிறிஸ்துவோடு உயிர் பெற்றவர்கள் என காட்டுவது வாழுகின்ற கொலோசேயர்களையே என்பதை நோக்க வேண்டும். உயிர்ப்பு இறப்பின் பின்னர் வருவது என்பது நமது நம்பிக்கை ஆனால் உயிர்த்த ஆண்டவரின் அருள்களை இந்த உலகில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் வாழ முடியும் என பவுல் காட்டுவது மிகவும் ஆழமான இறையியல் வாதம். ஆண்டவரின் வலக்கை, இங்கே கிறிஸ்துவின் அதிகாரத்தை காட்டுகிறது. விவிலியத்தில் வலது கரம், ஆட்சி அதிகாரத்தை அல்லது வல்லமையை குறிக்கிறது. இவ்வுலகு என்பது கிறிஸ்தவத்திற்கு எதிரான அல்லது கிறிஸ்தவ மதிப்பீடுகளை கொச்சைப்படுத்துகிற பிற சமய அல்லது மெய்யியல் சிந்தனைகள் என எடுக்கலாம். மேலுலகு என்பதை கிறிஸ்தவ மதிப்பீடுகள் என எடுக்கலாம்.

வவ.3-4: கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள் என்பது, மக்களின் தூய்மையைக் குறிக்கிறது. அதாவது மக்கள் தங்கள் பழைய பாவ நிலையைக் கண்டு பயம்கொள்ள தேவையில்லை என்பதை பவுல் விளக்குகிறார். மறைந்திருக்கிறது என்பது (κέκρυπται) இங்கே பாதுகாப்பாக இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. நான்காவது வரியில் பவுல் முக்கியமான வாதத்தை முன்வைக்கிறார். அதாவது கொலோசேயருக்கு வாழ்வு தருபவர் கிறிஸ்து இயேசு மட்டுமே. தோன்றுதல் என்பது முதல் ஏற்பாட்டில் கடவுள் மக்களுக்கு தோன்றிய நிகழ்வுகளை ஒத்தது. இதனை கிரேக்க விவிலியம் φανερόω பாநேரோஓ என்று விழிக்கிறது. இது முழுக்க முழுக்க இறை தன்மை வாய்ந்தது. இந்த தன்மை கொலேசேயருக்கு இயேசுவின் வாயிலாக கிடைக்கிறது என்கிறார் பவுல்.

வ.5: இது மிக முக்கியமான வசனம். இந்த வசனத்தின் ஊடாக அக்கால தீய பழக்கவழக்கங்களைக் கண்டு கொள்ளலாம். உலகபோக்கு என்று தமிழில் மொழி பெயர்கப்பட்டுள்ளது, உலகியல் தன்மைகளை குறிக்கிறது. இது உலகம் தீமையானது என்பதை குறிக்கவில்லை என்பதை நோக்க வேண்டும். பவுல் இங்கே வரிசைப் படுத்துகின்ற உலகியல் இச்சைகளான, பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், மற்றும் சிலை வழிபாடான பேராசை போன்றவை இன்று சுதந்திரம், தனி மனித விடுதலை என்ற பெயரில் ஏற்றுக்கொள்ளப்படுவதை என்னவென்று சொல்வது?

வ.9-10: பழைய இயல்பை கழைந்துவிட்டவர்கள் அந்த பழைய இயல்பை பற்றிக்கொண்டிருக்க முடியாது என்பது பவுலுடைய வாதம். பொய் சொல்வது பாவம் அத்தோடு அது கிறிஸ்தவம் அல்ல என பவுல் சொல்கிறார் அதனைத்தான் நம் பாரம்பரியமும் சொல்கிறது. இன்று பொய்யையும் விவேகத்தையும் பலர் ஒப்பிட்டு விழுமியங்களை அமைப்பது ஆரோக்கியமானதல்ல. புதிய மனிதன் மற்றும் பழைய மனிதன் என்பது பவுலுடைய முக்கியமான இறையியல் வாதங்கள். 'அணிதல்' என்பது இங்கே புதிய ஆடையணிதலைப் போல ஒரு புதிய பிறப்பபைக் குறிக்கிறது. கிறிஸ்தவர்கள் என்பவர்கள் கிறிஸ்துவை அணிந்தவர்கள் அல்லது கிறிஸ்துவில் புதிதாய் பிறந்தவர்கள் என வாதாடுகிறார் பவுல்.

வ.11: கிறிஸ்துவுக்குள் பிரிவினைகள் இல்லை கிறிஸ்தவர்களுக்குள்ளும் பிரிவினைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த வரியில் உள்ள 'நாகரீகமற்றோர்' என்பதை கிரேக்க விவிலியம் βάρβαρος பார்பரொஸ் என்று காட்டுகிறது. தாடி வைத்திருந்த அக்கால வட ஐரோப்பிய மக்களை மற்றவர்கள் பார்பேரியர் அதாவது நாகரீகம் அடையாதவர்கள் என்று கருதினர். இவர்களின் வாழ்கைமுறை மற்றும் உணவு பழக்கங்கள் வித்தியாசமானவையாக இருந்ததால் இவ்வாறு கருதப்பட்டனர். இன்று இதனைத்தான் நாகரீக மனிதர்கள் என தம்மைதாமே அழைப்போர் நாகரீகம் என்ற பெயரில் அதிகமாக செய்கின்றனர். (ஈழத்திருச்சபையின் 'உங்கட ஆக்கள், எங்கட ஆக்கள்' என்றபவற்றை நல்லவேளை பவுல் அறிந்திருக்கவில்லை)


நற்செய்தி வாசகம்
லூக்கா 12,13-21

13கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், 'போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்' என்றார். 14அவர் அந்த ஆளை நோக்கி, 'என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?' என்று கேட்டார். 15பின்பு அவர் அவர்களை நோக்கி, 'எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது' என்றார். 16அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: 'செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. 17அவன், 'நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!' என்று எண்ணினான். 18'ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்'. 19பின்பு, 'என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன் நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு' எனச் சொல்வேன்' என்று தனக்குள் கூறிக்கொண்டான். 20ஆனால் கடவுள் அவனிடம், 'அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?' என்று கேட்டார். 21கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.'

இந்த உலகில் சொத்து என்பது என்ன? சொத்துக்கள் யாருடையவை? இந்த கேள்விகள்தான் அதிகமாக கேள்விகளாகவே இருப்பவை. லூக்காவின் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானதும் அவதானத்துக்குரியதுமாகும். பல விவிலியங்கள் இந்த உவமையை அறிவற்ற செல்வனின் உவமை என வர்ணிக்கின்றன. செல்வர்களையும், செல்வத்தையும் இயேசு என்றும் வெறுத்ததும் இல்லை, தரக்குறைவாக பேசியதும் இல்லை. பல செல்வர்கள் இயேசுவின் சீடர்களாக இருந்திருக்கிறார்கள். செல்வம் கடவுளிடம் இருந்து வருகிற படியால் செல்வர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என முதல் ஏற்பாடு நம்பியது. வறுமையையும், வறுமையின் துன்பங்களையும் கடவுள் ஏற்படுத்துகிறார் என சொல்ல முடியாது. எளிமை மற்றும் ஏள்மை வேறு, வறுமை என்பது வேறு. இந்த உலகில் வறுமை நீக்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சனையாகும். விவிலிய ஏள்மை என்பது ஒருவர் எளிமையாக கடவுளோடு இருக்க தன்னை தானாக தியாகப்படுத்துவதாகும். வறுமை என்பது பணக்காரர்களின் சுயநலத்தாலும், சோம்பேறிகளின் தூரநோக்கில்லா வாழ்க்கை முறையாலும், மனிதர்கள் தங்கள் மேல் தாங்களே ஏற்படுத்துகிறது. இயேசு வறுமையைப் போதிக்க வரவில்லை, மாறாக வறுமையில் வாடிய உரிமையிழந்த உதவியற்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவே வந்தார். அனைத்து செல்வங்களும் தங்களுக்கே உரியது என நினைப்பவர்கள்தான் இந்த உவமையின் பின்புலமானவர்கள் மாறாக நல்ல செல்வர்கள் அல்ல.

வ.13: யார் இந்த ஒருவர் என்று லூக்கா விளக்கவில்லை. ஒருவேளை இந்த பாத்திரத்தை லூக்கா உருவாக்கியிருக்கலாம் அல்லது இந்த பாத்திரத்திற்குள் நம் ஒவ்வொருவரையும் அவர் உள்வாங்கியிருக்கலாம். இந்த கூட்டதிலிருந்த ஒருவர், இயேசுவை போதகர் என ஏற்றுக்கொள்கிறார் இதனால் இவர் இயேசுவின் சீடாக்ளில் ஒருவராகவும் இருக்கலாம். இவருடைய வேண்டுதலில் இருந்து ஒருவேளை இவர் தன்னுடைய சகோதரனால் வஞ்சிக்கப்பட்டவர் எனவும் எடுக்கலாம். இந்த உவமை நமக்கு ஊதாரி மகனின் உவமையை நினைவூட்டுகிறது (ஒப்பிடுக லூக்கா 15, 11-32). சகோதரின் உடமைகளை களவாடாதே என முதல் ஏற்பாடு கூறுகிறது (காண்க இணை 5,21). முறையிடுகிற இந்த சகோதரன் ஒருவேளை பேராசை பிடித்தவர் இவர் இயேசுவின் பிரபலத்தைக் கொண்டு தன் வேலையை செய்ய பார்கிறார் எனவும் எடுக்கலாம்.

வ.14: இயேசுவின் இந்த கேள்வியிலிருந்து அவர் இப்படியான முறையிடல்களை விரும்பவில்லை அல்லது அன்றைய நடுவத்துவம் நேர்மையற்றிருந்ததை அவர் சாடுகிறார் எனவும் எடுக்கலாம். நடுவர்கள் κριτής கிறிடேஸ், இயேசுவின் காலத்திலும் முக்கியமானவர்களாக இருந்தார்கள். யூத மக்களில் சிலரும் நடுவர்களாக இருந்தனர். சென்ஹட்ரின், யூத தலைமைச் சங்கம் முக்கியமான நடுவமாக இருந்தது. சில நடுவர்கள் தங்கள் செல்வங்களை பெறுக்க இந்த தூய்மையான தொழிலை பாவித்து வாழ்ந்தனர். பல காரணங்களுக்காக இயேசு தீர்பிடுவது கடவுளுக்கே உரியது என போதிக்கிறார் (காண்க லூக் 6,37❖).
(❖ பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.)
வ.15: பேரசைதான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என பௌத்த மெய்யறிவு போதிக்கிறது. பேராசைதான் அனைத்து போர்களுக்கும் காரணம் என இந்து மதம் விளக்குகிறது. கிரேக்க விவிலியம், பேராசையை πλεονεξία பிலெயோநெட்சியா என வார்த்தையிடுகிறது. இதன் அர்தமாக, அதிகமானவற்றை கொண்டிருக்க ஒருவர் கொள்ளும் அவா, பேராசை, மோகம் என வரைவிலக்கணப்படுத்தலாம். வாழ்விற்கும் மிகுதியான பொருளுக்கும் தொடர்பில்லை என்னும் உண்மையை ஆண்டவர் இங்கே நினைவூட்டுகிறார்.

உவமை: வவ. 16-19:
இந்த உவமையில் இயேசு, இந்த செல்வனின், தான் என்ற மமதையை மையப்பொருளாக எடுக்கிறார். 'நான்-செய்வேன்' என்ற வார்த்தைகளே இங்கே அதிகமாக ஆட்சி செய்கின்றன. இவருடைய சில முக்கியமான தவறுகள் இங்கே கோடிடப்படுகின்றன.

அ. இவர் நல் விளைச்சலில் கடவுளைக் காணவில்லை, அதனை பகிரவும் விளையவில்லை.
ஆ. தேவைக்கு அதிகமானவற்றை சேமித்து மற்றவரை வறுமையில் வாடவைக்க விரும்புகிறார்.
இ. தன் தேவைகளை இன்னும் அதிகமாக்க, களஞ்சிய சாலையை பெரிதாக்க விரும்புகிறார்.
ஈ. தன்னைத் தானே திருப்திப்படுத்த முனைகிறார்.
வவ. 20-21: இப்படியானவர்கள் கடவுள் முன்னால் அறிவிலிகள் என்கிறார் லூக்காவின் இயேசு. உலகியல் செல்வங்களை சேர்த்தாலும் அழியா செல்வமாகிய ஆன்மாவையோ அல்லது உயிரையோ காப்பது கடவுளிடம் மட்டும்தான் தங்கியுள்ளது என்கிறார் லூக்கா. கடவுளே அதாவது இயேசுவே உண்மையான செல்வம் என்பதுதான் இந்த உவமையின் விளக்கம். இந்த உவமையின் தொடக்கத்தில் வரும் நபர், இயேசுவை தன் செல்வமாக உணராததன் காரணமாகவே, அழியக்கூடிய செல்வத்திற்காக தன் சகோதரனை தீர்ப்பிற்கு உள்ளாகுகிறார் என அழகாக காட்டுகிறார் லூக்கா.

இந்த உலகின் செல்வங்கள் அனைவருக்கும் போதுமானவை.
பேராசையும், சோம்பேறித்தனமும் தான் இவ்வுலகின் வறுமையின் காரணங்கள்.
எளிமை ஒரு விழுமியம், வறுமையல்ல.
நம் தேவைக்கு மேலதிகமாக உள்ளவை அனைத்தும் மற்றவருடையவையே.
தேவைகள் அதிகமாக இருப்பதும் ஒருவகை வறுமையே.
அன்பான ஆண்டவர் இயேசுவே!
நீரே எங்கள் சொத்தும் நிறைவும்.
உம்மை மட்டுமே சேர்கவும் அதனை மற்றவருடன் பகிரம் கற்றுத்தாரும், அமென்.