இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

தி.பணி 14,21-27; திருப்பாடல் 145; தி.வெளி 21,1-5; யோவான் 13,31-35;


முதல் வாசகம்
தி.பணி 14,21-27;

21அந்த நகரில் அவர்கள் நற்செய்தி அறிவித்துப் பலரைச் சீடராக்கிய பின் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். 22அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, 'நாம் பலவேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்' என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். 23அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; 24பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். 25பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; 26அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள். 27அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள். 28அங்கே அவர்கள் சீடர்களுடன் பல நாள்கள் தங்கினார்கள். இந்த பகுதி பவுலடிகளாரின் முதலாவது மறையுறை பயணத்தின் முடிவுரையாக வருகிறது. பவுல் எவ்வளவு ஆர்வமாக திருச்சபைகளை நிறுவுவதில் கவனம் செலுத்தினாரோ அதனையே அவர் அவற்றை சந்தித்து திடப்படுத்துவதிலும் கவனமாக இருந்தார் என்பதனை இந்த பகுதிகளில் காணலாம். ஆரம்ப கால திருச்சபை பலவீனமானதாகவும், அதனை சுற்றியிருந்த கேளிக்கைகளும் சவால்களும் பலமானதாக இருந்ததையும் பவுல் நன்கு அறிந்திருந்தார். இதனால்தான் ஒரு தகப்பனைப்போல இந்த இளம் திருச்சபைகளை திடப்படுத்துவதில் ஆர்வமாய் இருக்கிறார்.

வவ. 21-22: இங்கே பவுல் நிறைவான எண்ணிக்கையில் பலரை சீடராக்கியது, அதாவது அவர்களை கிறிஸ்துவிற்கு சீடராக்கியதனையே குறிக்கிறது. சீடர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்த உண்மையை நேரடியாகவே உரைக்கிறார். துன்பங்களின் வழியாகவே இறையரசை அடையமுடியும் என்பதனை பவுல் தன்னுடைய வாழ்வினாலும் உணர்ந்திருந்தார். பல விதமான துன்பங்கள் என்பது இங்கே பல ஆரம்ப கால சமய-அரசியல் கலாபனைகளைக் குறிக்கலாம்.

வவ. 23: இந்த வரி, ஆரம்பகால திருச்சபையின் தலைமைத்துவ ஒருங்கிணைப்பினை படம்பிடிக்கிறது. மூப்பர்களைத் தேர்ந்தெடுக்க இரண்டு விதமான செபமுறைகள் பின்பற்றப்படுகிறன்றன. அ). நோன்பிருத்தல், ஆ). இறைவனிடம் வேண்டுதல். மூப்பர்களை தெரிவுசெய்ததன் பின்னரே இவற்றை செய்கின்றனர். பவுலும் பர்னாபாவும் இப்படித்தான் தெரிவுசெய்யப்பட்டனர். இறுதியாக தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் ஆண்டவரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். இக்கால ஆயர்கள் தெரிவும் அத்தோடு அவர்களுடைய திருப்பொழிவு நிகழ்வுகளும் இந்த சிந்தனைகளை காட்டுவதாக வழிபாடுகளில் அமைகின்றன. மூப்பர்கள் என்பவர்களைக் குறிக்க πρεσβύτερος பிரஸ்புடெரொஸ் என்ற கிரேக்க மூலச்சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் வயதிலும் அனுபவத்திலும் முதிந்தவர்களைக் குறிக்கும், பின்நாளில் இது திருச்சபையின் தலைமைத்துவத்தில் இருந்தவர்களை குறிக்க பயன்பட்டது. திருத்தூதர்களான பேதுரு, பவுல், யாக்கோபு போன்றோரும் தங்களை இந்த பதத்துடன் அழைத்திருக்கின்றனர். திருச்சபையின் வருகைக்கு முன்பே இப்படியான பலர் யூத மற்றும் கிரேக்க உயர்சபைகளில் இருந்ததாக காணக்கூடியதாக உள்ளது. எவ்வாறெனினும், ஆரம்பகால திருச்சபை மூப்பர்களை யூத பாரம்பரியத்தில் அதாவது அவர்களின் நம்பிக்கை மற்றும் நன்நடத்தை முதிர்சியிலே தெரிவுசெய்தது.

வ.24-28: அதிகமாக தான் நிறுவிய திருச்சபைகளை தரிசித்துவிட்டு பம்பிலியாவிலிருந்த பெருகையிலிருந்து நேரடியாக அந்தியோக்கியாவிற்கு வருகிறார் பவுல். அந்தியோக்கியாவில் தன்னுடைய உடன் சகோதரர்களிடம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதன் மூலமாக பவுல் மறைபரப்பு பணி திருச்சபையினுடைய பணி, தன்னுடைய தனிப்பட்ட பணியல்ல என்பதைக் காட்டுகிறார். பவுல் கடவுள் செய்த அதிசயங்களையும், பிற இனத்தவரின் நம்பிக்கையையும் தனது செய்தியின் பொருளாக காட்டுகிறார், அவர்களுடைய திறமைகளையோ அல்லது அவர்கள் செய்த அதிசியங்களையோ பவுல் கூறவில்லை என்பதை லூக்கா அழகாக காட்டுகிறார். கடினமான பணிக்குப் பின்னர், மறைபணியாளர்கள் தேவையான ஓய்வு எடுப்பதனைக் காணலாம்.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 145

1என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன். 2நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். 3ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. 4ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும். 5உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். 6அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப்பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன், 7அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்துக் கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். 8ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். 10ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். 12மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. 14தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். 15எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன் தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். 16நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். 17ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 18தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். 19அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார். 20ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார். 21என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல்கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!

திருப்பாடல்களில் உள்ள அகரவரிசை பாடல்களில் 145வது பாடலும் அடங்கும். அகர வரிசை பாடல்கள் என்பது எபிரேய அகரவரிசையை ஒத்து 22 எழுத்துக்களுடன் ஒவ்வொன்றாகத் தொடங்கி 22 வரிகளைக் கொண்டிருக்கும். தமிழிலக்கியங்களில் ஓளவையார் இப்படியான பல பாடல்களை அமைத்துள்ளார். ஆனால் எபிரேய அகரவரிசையில் உள்ள நுன் (נ) என்ற எழுத்தில்லாமல் 21 வரிகளைக் இப் பாடல் கொண்டமைந்துள்ளது. இந்த எழுத்து இல்லாமைக்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. சிலர் அது தவறிவிட்டது என்கின்றனர், சிலர் கடவுளுடைய அதிசயங்களை மனிதவரிகளில் விவரிகக் முடியாது என்பதனைக் காட்ட ஆசிரியர் காரணத்தோடே இந்த எழுத்தை விட்டு விட்டார் என்கின்றனர். புகழ்சிப்பாடல்களில் மிகவும் அழகான பாடல் என்றே இதனை அதிகமானவர்கள் கருதுகின்றனர் அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

வவ. 1-6: இந்த வரிகளில் புகழ்ச்சி என்ற கருப்பொருள் மீண்டும் மீண்டும் வருவதைக் காணலாம். இந்த புகழ்சியைக் குறிக்க பல ஒத்தகருத்துச் சொற்கள் எதுகை மோனை என்ற வகையிலும் சமாந்தர வரிகள் அமைப்பிலும் எழுதப்பட்டுள்ளது. நான்காவது வரி சிந்தனையைத் தூண்டுகின்ற வரி. (ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்)

வவ. 7-9: ஆண்டவரின் பண்புகள் கூறப்படுகின்றன. நீதி, இரக்கம், கனிவு, பொறுமை, பேரன்பு, மற்றும் நன்மைத்தனம் போன்றவை எபிரேய ஆன்மீகத்தின் ஆழத்தை காட்டுபவை. இவற்றிற்கு கடவுள்தான் உறைவிடம் என்று காட்டுகிறார் ஆசிரியர்.

வவ. 10-13: இந்த வரிகள் ஆண்டவரின் படைப்புக்கள் என்று முழு உலகத்தையும் ஒன்றாக்குகின்றன. கடவுளுடைய இறைமைக்கு அடையாளங்கள் அவர் உருவாக்கிய படைப்புக்களே என்பது ஆசிரியருடைய நம்பிக்கை.

வவ. 14-20: இந்த வரிகள், கடவுளுடைய தெய்வீக செயற்பாடுகள் உண்மையில் அவரது அன்பையும், அருளையும், மற்றும் பரிவையும் காட்டுகின்றன என்பதை விவரிக்கிறது. தடுக்கி விழுபவர், தாழ்த்தப்பட்டவர் என சமுதாயத்தில் நலிந்தவர்களை கடவுள் என்றுமே பார்கிறார் என்கிறார் ஆசிரியர். 16-19 வரையான வரிகள் கடவுளின் இரக்க பண்பையும், 20வது வசனம் கடவுளுடைய நீதிப் பண்பையும் விவரிக்கின்றன.

வ.21: உடல் கொண்ட அனைத்தும் என்பது எபிரேய மொழியில் அனைத்து சதைகளையும் அதாவது அனைத்து உயிரினங்களையும் குறிக்கின்றன. (כָּל־בָּשָׂר அனைத்து சதைகள்-உயிர்கள்). அனைத்து உயிரினங்களும் கடவுளை புகழ்வது நீதியானது என்பது ஆசிரியரின் நம்பிக்கை.



இரண்டாம் வாசகம்
தி.வெளி 21,1-5

1பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற் போயிற்று. 2அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்து கொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது. 3பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, 'இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். 4அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன' என்றது. 5அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், 'இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்' என்று கூறினார். மேலும், ''இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை' என எழுது' என்றார்.

யோவானுடைய திருவெளிப்பாட்டின் 21வது அதிகாரம் புதிய விண்ணகத்தையும் புதிய மண்ணகத்தையும் காட்சிப்படுத்துகிறது. இதற்கு முன்னுள்ள அதிகாரங்களில், ஏழு திருச்சபைகள், வானுலக காட்சி, ஏழு முத்திரைகள், ஏழு எக்காளங்கள், திருச்சபைக்கும், சாத்தானுக்குமான போராட்டம், ஏழு வாதைக் கிண்ணங்கள், மற்றும் அந்திக் கிறிஸ்துவின் தோற்றமும் அழிவும் என்று திருவெளிப்பாட்டை யோவான் காட்சிப்படுத்தினார். இந்த இறுதி அதிகாரங்களில் (19-22), கிறிஸ்துவின் வருகையையும், கடவுளின் நகரத்தையும் காட்சிப் படுத்துகிறார். இந்த அதிகாரம் துன்பப்பட்ட ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் செய்திகளைக் கொண்டமைந்துள்ளன.

வ.1: அ). புதிய விண்ணகமும், மண்ணகமும் ஏற்கனவே விவிலியத்திலே அறியப்பட்டிருக்கின்றன. எசாயா இதனை புதுப்படைப்பாக காண்பார் (65,17). நற்செய்தியாளர்களும் இந்த சிந்தனையை பலமாக முன்வைத்தனர். யூத இராபிக்கள் இதனை கடவுள் இஸ்ராயேலை பெரிய வல்லரசாக மாற்றுவார் என்று விளக்கம் கொடுத்தனர், இன்னும் சிலர், கடவுள் பழையதை புதியதால் மீள்நிரப்புவார் என்றும் விளக்கம் கொடுத்தனர். யோவானுடைய காட்சியில் இந்த விளக்கங்கள் அனைத்தும் அடங்கியிருப்பதைக் காணலாம்.

ஆ). கடல் மறைவு என்பது தீமையின் மறைவைக் குறிக்கும். விவிலியத்தில் கடல் தீய சக்திகளின் உறைவிடமாக பார்கப்பட்டது. ஆண்டவர் இயேசு கடலின் மேல் நடந்தது, பேதுரு கடலில் மூழ்கச் சென்றது, பன்றிகளை கடலினுள் அமிழ்தியது போன்றவை இதனையே குறிக்கின்றன. அத்தோடு கடல் தீமையின் அடையாளம் என்று மட்டுமே கருத முடியாது. கடளுக்கு வேறு அர்தங்களும் உள்ளன. யோவானின் திருவெளிப்பாட்டில், அந்திக்கிறிஸ்து, அந்திக் கிறிஸ்தவர், கடளில் வாழ்ந்த அசுரர்களாக உருவகப்படுத்ப்பட்டனர். (ἀντίχριστος அன்டிகிரிஸ்டொஸ், எதிர் கிறிஸ்து - இது கிறிஸ்துவிற்கு எதிரானவர்களைக் குறிக்கும், அன்றைய உரோமை கொடிய ஆட்சியாளர்களையும் குறித்தது).

வ. 2: தூய நகர் என்பது இங்கே புதிய எருசலேமைக் குறிக்கிறது. எருசலேமும் பபிலோனும் ஒப்பிடப்படுவதை அவதானிக்க வேண்டும். பபிலோன் என்பது திருவெளிப்பாட்டில் உரோமையை குறிக்கலாம். (உரோமை, உரோமையர்களின் தலை நகராக இருந்து சீடர்களை துன்புறுத்தியமையே இதற்கு காரணம்). இந்த புதிய எருசலேம் வானுலக காட்சியின் முன்சுவையை தருகிறது. முதல் ஏற்பாட்டில் எருசலேம் மணமகளாகவும் கடவுள் மணமகனாகவும் காண்பிக்கப்படுவது, இங்கே வேறுவிதமாக சொல்லப்படுகிறது. இங்கே வருவது புதிய எருசலேம். இங்கே மணமகள், புதிய எருசலேம் அதாவது திருச்சபை. மணமகன் கிறிஸ்து ஆண்டவர்.

வ. 3: மிகவும் ஆழமானதும் அழகானதுமாக வரி. இந்தக் குரல் அறிவிப்புக் குரலாக இருக்கலாம். கடவுளின் உறைவிடம் என்பது, கிரேக்க மூல மொழியில் கடவுளின் 'கூடாரம்' என்றே இருக்கிறது. இந்தக் கூடாரம் பற்றிய சிந்தனையை யோவான் தன்னுடைய நற்செய்தியில் ஏற்கனவே வார்த்தையைப் (λόγος லோகோஸ்) பற்றிக் கூறும் போது அலசியிருப்பார் (காண்க யோவான் 1,14). ஆண்டவரின் கூடாரம் என்பது இஸ்ராயேல் மக்கள் மத்தியில் ஆண்டவர் குடியிருந்த சந்திப்புக் கூடாரத்தையும் ஆண்டவரின் திரு இல்லமான எருசலேம் தேவாலயத்தையும் பற்றிய சிந்தனைகளை உள்ளடக்கியருக்கிறது. இந்த வரியில் கடவுளின் உடனிருப்பு சுட்டிக்காட்டப்படுகிறது. மூன்று தடவை 'உடன்' என்ற முன்னிடைச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது, இது பலைவன கூடாரத்தைப்போலவோ அல்லது அழிந்துபோன எருசலோம் தேவாலயத்தைப் போலவோ அன்றி கடவுளின் உடனிருப்பு அசைக்க முடியாதது என்பதனைக் குறிக்கிறது (μετά மெதா, உடன், ஓடு, நடுவில்). கடவுள் மற்றும் மக்களின் இந்த புதிய உறவைப் பற்றி இறைவாக்கினர்களும் வாக்குரைத்திருக்கிறார்கள். யோவானின் திருவெளிப்பாட்டிலும் இந்த செய்தி முக்கியமானதொன்றாகும்.

வ. 4: கிறிஸ்தவர்களுடைய துன்பங்களான சாவு, துயரம், அழுகை போன்றவை இனி இருக்காது என்று யோவான் அன்பு மொழி கூறுகிறார். இவை மனித குலத்தின் தவிர்க்க முடியாத துன்பியல் காரணிகள், இதற்கு மருந்து கடவுளிடம் இருந்தே வருகிறது என்பது யோவானின் செய்தி.

வ. 5: இப்பொழுது கடவுள் பேசுகிறார். இவ்வளவு நேரமும் முழங்கிய அறிவிப்புக் குரலை அரியணையில் இருந்தவர் ஏற்றுக்கொள்கிறார். அரசவையில் பரிந்துரைகள் வாசிக்கப்பட்டதன் பின் அரசர் அதனை ஏற்றுக்கொள்கின்ற போது அது சட்டமாகிறது. இங்கேயும் கடவுள் புதிய சட்டங்களைக் கொடுக்கிறார். யோவானுடைய காட்சி வெறும் காட்சியல்ல அது உண்மை என்று காட்டப்படுகிறது. அனைத்தையும் புதியனவாக்குதல் என்ற செய்தி யோவானின் படிப்பினைகளில் மிக முக்கியமானது. இது வாழ்க்கையை இயேசுவில் நிலை நிறுத்தி அனைத்தையும் அவரில் உறுதிப்படுத்துவததைக் குறிக்கும்.


நற்செய்தி வாசகம்
யோவான் 13,31-35

31அவன் வெளியே போனபின் இயேசு, 'இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார். 32கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். 33பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன். 34'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். 35நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்' என்றார்.

இந்த பகுதி ஆண்டவர் தன் சீடர்களோடு அமர்ந்து, தன்னுடைய மரணத்தின் முன் சில முக்கிய படிப்பினைகளை கற்பித்த நிகழ்விலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இநத் காட்சிக்கு முன் ஆண்டவர் சீடர்களுடைய பாதங்களை கழுவினார், அத்தோடு தன்னை காட்டிக்கொடுப்பவரைப் பற்றியும் சுட்;டிக்காட்டியிருந்தார். சீடர்கள் ஆண்டவரின் மரணத்தைப் பற்றியும், அவரது பாடுகளைப் பற்றியும் அத்தோடு ஆண்டவர் தங்களின் அருகில் இல்லாத நிலையை பற்றியும் நினைத்து துன்பப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், இந்த வரிகள் ஆண்டவரின் வாயிலிருந்து வருகின்றன. இங்கே, மாட்சி மற்றும் அன்பு என்ற இரண்டு முக்கியமான யோவான் நற்செய்தியின் படிப்பினைகள், உரையாடல்களில் மையம் பெறுகின்றன.

வவ. 31-32: அ). இவ்வளவு நேரமும் பல முக்கிய படிப்பினைகளை பற்றி கூறிக்கொண்டிருந்த ஆண்டவர், இந்த வரிகளுடன் ஒரு புதிய பகுதிக்குள் நுளைகிறார். யூதாசு வெளியே சென்றவுடன் இந்த நேரம் ஆரம்பமாவது ஒரு அடையாளம் போல காட்சி தருகிறது. யோவான் அடிக்கடி கூறும், நேரம் என்ற குறிப்பிட்ட காலம் இங்கே வந்திருக்கிறது. அந்த தக்க நேரத்திற்குள் ஆண்டவர் சீடர்களையும் உள்வாங்குகின்றார். இந்த நேரத்தை யோவான் மாட்சிக்குரிய நேரமாக காட்டுகிறார். இங்கே பல இறுதிக்கால வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளன.

ஆ). மாட்சி என்பது யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவிற்கும் கடவுளுக்கும் மட்டுமே உரிய பண்பாக காட்டப்படுகிறது. மாட்சி என்பதற்கு, δόξα தொக்சா என்ற கிரேக்கச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது ஒருவரின் பார்வை, தீர்ப்பு, நோக்கு, மரியாதை, கௌரவம் போன்ற அர்தங்களைக் கொடுக்கும். எபிரேய மொழியில் மாட்சியை குறிக்க כָּבוֹד கவோட் என்ற சொல் பாவிக்கப்படுகிறது, இதுவும் கடவுளின் மாட்சியையை குறிக்கிறது. யோவான் இந்த சொல்லை அவதானமாக பாவித்து, ஆண்டவர் இயேசுவினுடைய வருகை கடவுளை மாட்சிப்படுத்துவதாகும் என்கிறார். அத்தோடு, ஆண்டவர் இயேசுவும், தன்னுடைய உயிர்பினால் கடவுள் மானிட மகனை மாட்சிப்படுத்துவார் என்ற இன்னொரு கட்டத்தை காட்டுகிறார். இங்கே மாட்சிப் படுத்துதல் ஒரு உறவாக நடைபெறுகிறது. கடவுள் ஆரம்பத்தில் உலகத்தையும் மனிதர்களையும் படைத்தது, இந்த மாட்சிமை என்ற பணிக்காகவே என்று தொடக்க நூல் அழகாக படைப்புக் கதைகளில் உருவகப்படுத்துகின்றது. கடவுள் மானிட மகனை உடனே மாட்சிப்படுத்துவார் என்பதில் ஒரு அவசரத்தை யோவான் காட்டுகிறார். இது ஆண்டவர் இயேசுவின் கடவுள் தன்மையை குறிக்கலாம், அதாவது இயேசு உண்மையான கடவுள், மாட்சிமை இல்லாத நிலை அவருக்கு கிடையாது என்பதை குறிக்கிறது.

வவ. 32-33: அன்பொழுக பிள்ளைகளே என்ற இதய வார்த்தை மூலம் தன் சீடர்களை விழிக்கிறார் இயேசு. சாதாரணமாக பிரியாவிடையின் போது இப்படியான வார்த்தைகள் பாவிக்கப்படுவது வழக்கம். இந்த பிள்ளைகளே என்ற விழிப்புச் சொல் யோவான் குழுமங்களிடையே பாவனையில் இருந்த சொல் என்று சில யோவான் நற்செய்தி அறிஞர்கள் வாதிடுகின்றனர். ஆண்டவர் எவ்வளவு சொல்லியும் சீடர்கள் அவரின் மரணத்தின் பின் கலங்கி அவரைத் தேடுவர், அல்லது அவரில்லாமல் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்குள் வருவர் என்பதை இயேசு நன்கு அறிந்துள்ளார். அதனால்தான் இங்கே ஒரு தகப்பனைப் போல் பேசுகிறார். இயேசு யூதர்களையும் உள்வாங்கி தன்னுடைய போதனைகளில் மாற்றமோ பிரிவினையோ இல்லை என்பதைக் குறிப்பிடுகிறார். ஆண்டவருடைய இடத்திற்கு சீடர்களால் வரமுடியாது என்பது இறைவன் என்றும் இறைவன் என்பதைக் காட்டலாம், சீடர்கள் சீடர்களாய் இருக்கவே அழைக்கப்படுகின்றனர், கடவுளாக மாற அல்ல.

வ. 34: இந்த வரிதான் முழு யோவான் நற்செய்தியின் மையச் செய்தி போல. ஆண்டவர் இயேசு தான் எப்படி சீடர்களை அன்பு செய்தாரோ அதே அன்பை ஒருவர் மற்றவரிடம் வாழக் கேட்கிறார். இதை ஏன் இயேசு புதிய கட்டளை என்று சொல்வதைப் பார்க்க வேண்டும். ஏற்கனவே முதல் ஏற்பாடு அன்பைப் பற்றி பல கட்டளைகளை கொடுத்திருக்கிறது. ἀγαπάω அகபாவோ என்ற கிரேக்க சொல்லை இயேசுவின் உதடுகளில் வைக்கிறார் யோவான், நிச்சயமாக ஆண்டவர் அரேமேயத்தில்தான் இந்த செய்தியை சொல்லியிருக்க வேண்டும். இந்த ἀγαπάω அன்பு செய், நல் எண்ணம் கொண்டிரு, நன்மையை நினை, நன்மையை நிறைவாகச் செய், போன்ற ஆழமான அர்தங்களைக் கொண்டுள்ளது. கிரேக்க இலக்கியங்களில் இந்தச் சொல் தோன்றினாலும், உண்மையில் இது ஒரு விவிலிய அல்லது கிறிஸ்தவ சொல் என்றே பலர் கருதுகின்றனர். தமிழில் அன்பு என்கின்ற சொல், இதன் ஆழத்தை கச்சிதமாக உணர்த்துகிறது. (ஒப்பிடுக: அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு, குறள் 80). தமிழில் ஆசை, காதல், பிரியம், சிநேகம், விரும்பம், இஸ்டம் போன்ற சில சகோதர வார்த்தைகள் இருப்பது போல, கிரேக்கத்திலும் பல வார்த்தைகள் பல விதமான அன்பைக் குறிக்கிறது. ἀγαπάω என்பது உண்மையில் தியாக-தாய்மை அன்பைக் குறிக்கும், அதற்கு வரைவிலக்கணமாக இயேசுவின் அன்பை மட்டுமே எடுக்கலாம். இதற்கு உதாரணமாகத்தான் பாதம் கழுவுதலையும் தன்னுடைய உயிரைக் கொடுத்தலையும் ஆண்டவர் செய்தார்.

வ. 35: இஸ்ராயேலருக்கு அடையாளமாக விருத்தசேதனம் இருக்கின்ற போது இப்போது தன்னுடைய சீடர்களுக்கு அடையாளமாகவும், புதிய கட்டளையாகவும் ஆண்டவர் இந்த அன்பை கொடுக்கிறார். இந்த அன்பு சிந்தனையிலும் படிப்பினைகளிலும் இருக்கிற அன்பாக மட்டுமிருக்காமல், செயற்பாட்டிலும் இருக்கிற அன்பாக வேண்டும் என்பது இயேசுவின் கட்டளை. இந்த அன்புக் கட்டளை பல இடங்களில் ஆண்டவரின் முக்கியமான செய்தியாக யோவான் நற்செய்தியில் ஆழ ஊடுருவி இருப்பதனைக் காணலாம் (காண்க யோவான் 14, 15. 21. 23: 15, 12).

இன்றைய உலகில் அதிகமாக துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வார்த்தைகளில் அன்பு என்ற இந்த அழகிய சொல்லும் அடங்கும். காதல், வீரம், தியாகம், பொறுமை, அமைதி, இரக்கம், சகிப்புத்தன்மை, கல்வி, தெய்வீகம் போன்ற அடக்க முடியாத அர்தங்களைக் கொண்டுள்ள இந்தச் சொல், இன்று, சிற்றின்பக் காமம், கோழைத்தனம், தந்திரம், சுயநலம், வரட்டு-சுதந்திரம், வன்முறை, பிடிவாதம், அறியாமை போன்ற தற்கால மதிப்புக்கால் மழுங்கடிக்கப்படுகிறது. அன்பை உணராதவர்களும், வாழதாவர்களும் அதற்க்கு அர்த்தம் கொடுக்க விளைவது மிக ஆபத்தானது.

அன்பான ஆண்டவர் இயேசுவே! உமது அன்பை வாழ கற்றுத்தாரும், உமது அன்பால் எம்மை நிறைவாக்கி உமது சீடராக்கும். ஆமென்.