இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






பெரிய சனி

தொடக்க நூல் 1,1-2,2
விடுதலைப் பயணம் 14,15-15,1
எசாயா 54,5-14
எசேக்கியேல் 36,16-17அ,18-28
உரோமையர் 6,3-11
லூக்கா 24,1-12


பெரிய சனி அல்லது பாஸ்கு சனி, அல்லது திருவிழிப்பு சனி என்று பலவாறு இந்த நன்நாள் அழைக்கப்படுகிறது. பண்டைய தமிழ் மக்கள் சனிக்கிழமையை சனி பகவானுடைய நாளாகவும், சனி கிரகத்தினுடைய நாளாகவும் கருதி வழிபட்டனர். யூத மக்கள் சனிக்கிழமையை கடவுளுடைய ஓய்வு நாளாக கடைப்பிடித்து வருகின்றனர். கிரேக்க-உரோமையர் சனிக்கிழமையை, சனி கோளுக்கு அல்லது அதன் தேவைதையோடு ஒப்பிட்டு விவாதித்தனர். நமக்கு, இயேசு ஆண்டவர் இந்த நாளில் ஓய்ந்திருந்தார் அல்லது துயில் கொண்டார் என்பதனால், இந்த நாள் எங்களுக்கு முக்கியமான நாட்களில் ஒன்றாகவும், புனிதமான நாளாகவும் மாறுகிறது. இந்த தூய்மையான நாளைப்பற்றி திருச்சபை பல படிப்பினைகளை முன்வைக்கிறாள் அவற்றைப் பார்ப்போம்:

! ஆண்டவர் இந்த நாளில் துயில் கொண்டார்
! ஆண்டவர் இறந்து பாதளங்களுக்குள் இறங்கி தொலைந்து போனவர்களை தரிசித்தார்
! செபத்தோடும் தபத்தோடும் இந்த நாள் செலவிடப்படுகிறது
! பிரதானமாக திருவருட்சாதனங்கள் இன்று நிறைவேற்றப்படாது
! திருச்சபை உயிர்ப்பு திருவிழிப்பிறக்காக காத்திருக்கிறது
! இரவு வேளையில் இத்திரு விழிப்பு தொடங்குகிறது
! இத்திருவிழிப்பில் கடவுளின் மாட்சிமிகு செய்ல்கள் நினைவூகூறப்பபடுகின்றன
! புது நெருப்பு ஏற்றபடுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்படுகிறது
! தியாக்கோன் (திருத்தொண்டர்) பாஸ்கா புகழுரை பாடி கிறிஸ்துவை மாட்சிப்படுத்துவார்
! இன்று இறைவார்த்தைகள் மூலமாக மக்கள் வரலாற்றில் கடவுள் செய்தவற்றை நினைவுகூருவர்
! புதியவர்களுக்கு திரு முழுக்கு தரப்படுகிறது, ஏற்கனவே அதனை பெற்றவர்கள் தங்களை புதுபிப்பர்
! இன்றைய நற்கருணை வழிபாடு ஆண்டின் முக்கிய வழிபாடாக உருப்பெருகிறது.

முதல் வாசகம்
தொடக்க நூல் 1,1-2,2



தொடக்க நூல் முதல் 11அதிகாரங்கள் இஸ்ராயேலின் தனி வரலாற்றைப் பற்றி விவரிக்காமையினால் அவை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என அழைக்கப்படுகிறது. இந்த படைப்பு காட்சியளினூடாக யாவே மரபு ஆசிரியரும், (மற்றயவர்களும்) இஸ்ராயேலை முழு வரலாற்றினுள் நிலைநிறுத்த முயற்சி செய்கின்றனர். இந்த முதல் அதிகாரங்களில் யாவே மரபிற்கு, குரு மரபு அசிரியர் தொகுப்புரை வழங்க முயற்சிப்பதனால் இந்த இரண்டு மரபுகளும் மாறி மாறி வருவதனைக் காணலாம், இருந்தபோதிலும் யாவே மரபு தனது தனித்துவத்தோடு வாசகர்களை கவர்கின்றது. படைப்புக்களைப் பற்றி பல கதைகள் மத்திய கிழக்கு மற்றும் எகிப்திய பிரதேசங்களில் இருந்தன, இவை மனிதனையும், உலகையும் மற்றும் கடவுளையும் பற்றி பல கேள்விகளை மேலதிமாக்கிச் சென்றன. விவிலிய படைப்புக் கதைகளில், ஆசிரியர்கள், படைப்புக்கள் கடவுளால் நடந்தப்பட்ட நல்ல திட்டங்கள் எனவும், மனிதர் தங்களது தீய எண்ணத்தாலும், கீழ்படியாமையினாலும், சுயநலத்தாலும் கடவுளைவிட்டு அகன்று சென்றனர் என விவரிக்கின்றார்.

அ. 1,1-2 : படைப்பின் தொடக்கம்
தொடக்க நூலின் முன்னுரை தனியாக தெரிவதன் மூலம், இது முழு முதல் ஏற்பாட்டிற்கும் தொடக்க உரை போல தோன்றுகிறது. முதல் இரண்டு சொற்கள் மட்டுமே பல விவிலிய வாதங்களையும் ஆய்வுகளையும் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கிறது. முதலாவது வசனத்தில், கடவுள் ஒன்றுமில்லாமையில் இருந்து அனைத்தையும் படைத்ததால் அவர் முழு வல்லமையுடையவர் என காட்டப்படுகிறார். ஆனால் உலகு உருவற்று சாயலற்று இருந்ததால், கடவுள் அதனை எவ்வாறு வடிவமைத்தார் என்று தொடர்கின்ற வசனங்கள் விவரிக்கின்றன. இரண்டாவது வசனத்தில் உலகம் இருளாகவும், கைவிடப்பட்டும், நீரால் மூடப்பட்டும், விசித்திரமான ஆவியால் ஆட்கொள்ளப்பட்டும் இருந்தது என விவரிக்கிறது. இவை உண்மையில் உலகம் எவ்வாறு தொடக்கத்தில் இருந்தது என்பதைவிட, கடவுள் உலகை எவ்வாறு படைத்தார் என்பதையே காட்ட முய்ற்சிக்கிறது.

ஆ. 1,3-23 : படைப்பு தொடர்கின்றது
வவ. 3-5: ஒளியின் படைப்பு: இருண்ட உலகிற்கு, ஒளி தோன்றுக என்று கடவுள் சொன்னவுடன் ஒளியேற்றப்பட்டது. ஒளி இங்கே ஒரு பெரிய சக்தியாக காட்டப்படுகிறது. நவீன அறிவியலாளரின் பெரு வெடிப்பு கொள்கையும் ஒளியோடே உலகம் தோன்றியது என்று வாதிடுகின்றனர். கடவுள் ஒளிதோன்றியதன் பின்னர் அதனை நல்லதென் கண்டதன் மூலம், படைப்பு நல்லதாகவே உருவெடுக்கிறது. இங்கே பாவிக்கப்படுகின்ற இரவு, பகல், மாலை, காலை போன்றவற்றை எபிரேய நாட்கணிப்பில் விளங்கிக்கொள்ள வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை இக்கால கணக்கின் படி வாசித்தால் சரியான விளக்கங்களை கண்டுகொள்ள முடியாது.

வவ. 6-8: நீர்த்திரள் பிரிக்கப்படுகிறது: இவ்வாறு கடவுளுக்கு நீர்திரளின் மீதுள்ள அதிகாரம் காட்டப்படுகிறது. இஸ்ராயேல் மக்கள் நீரை ஒரு வகை சக்தியாக கருதினர். உலகத்தின் கீழும் மேலுமாக நீர்திரள் இருப்பதாகவே கருதினர். கடவுள் ஒர் ஆகாய-விரிப்பினால் அதனை பிரித்துள்ளார் என சிந்தித்தனர்.

வவ. 9-13: நிலங்கள், தாவரங்களின் படைப்புக்கள்: உலர்ந்த தரை, விதவிதமான தவாரங்கள் கடவுளின் ஒழுங்கான படைப்புத்திறனுக்கு உதாரணங்கள்.

வவ. 14-19: சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், போன்றவற்றை அக்கால மக்கள் தெய்வீக சக்திகளாக கருதினர், இங்கே கடவுளே அவற்றை படைக்கின்ற போது, அவரின் பலம் தெரிகிறது.

வவ. 20-23: பறவைகளும், மீன்களும்: சில கடல் உயிரினங்கள், அக்காலத்தில் புராணக்கதை உருவக உயிரினங்களாக பார்க்கப்பட்டு, பயமுறுத்தும் விலங்கினங்களாக கருதப்பட்டன. இன்று நாம் அறிந்துள்ள டைனோசர்கள் போன்றவற்றை அவர்கள் கடல் உயிரினங்களாகவும், பெயரிடப்படாத உயிரினங்களாகவும் கண்டனர்.

இ. 1,24-31 : மிருகங்களினதும் மனிதரினதும் படைப்பு
வவ. 24-31: மனிதனின் படைப்பு: இதுதான் கடவுளின் உச்ச படைப்பு, பல புராணக் கதைகள், மனிதன் பாவி எனவும், தீயவர் எனவும், கலகக்காரர் எனவும் சொன்னவேளை, தொடக்கநூல் மனிதனை கடவுளின் சாயலும், பாவனையும் என்று சொல்வது, மிகவும் அற்புதமானது. மனிதனிடம் சகல படைப்புக்களும் ஒப்படைக்கப்படுகின்றன. படைப்புக்களை பாதுகாக்க கடவுள் மனிதனை ஏற்படுத்துகிறார். ஆணும் பெண்ணுமான படைத்தார் என்று, யாவே மரபில் கடவுள் மனிதனிடம் பிரிவினையை காணவில்லை எனலாம். கடவுள் அனைத்தையும் நல்லது எனவே கண்டார்.

ஈ. 1,1-3 : தூய ஏழாம் நாள்
கடவுள் எப்படி தான் படைத்தவற்றை விரும்பினாரோ, அவ்வாறே ஏழாவது நாளில் ஓய்வெடுத்தார். கடவுளுடைய நாளை புனிதப்படுத்த வேண்டிய தேவை ஆசிரியருக்கு இருந்தது. அதனை இங்கே அழகாக காட்டுகிறார். கடவுளே ஓய்ந்திருந்தார், எனவே கடவுளுடைய நாள் கடவுளுக்கு உரியது என்பதே இங்கே மையப்படுத்தப்படுகிறது. ஓய்வு நாள் புனிதமானது என்ற சிந்தனை இதிலிருந்தே வருகிறது.



இரண்டாம் வாசகம்
விடுதலைப் பயணம் 14,15-15,1



இந்த பகுதியிலே ஆசிரியர், எகிப்திய கடவுள் என பார்க்கப்பட்ட பாரவோனுக்கும், இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவருக்கும், இடையிலான ஓர் போராட்டத்தை காட்டுகிறார். மக்களின் பயம் அவர்களின் நம்பிக்கையின்மையை காட்டுகிறது. கடவுள் மோசேயின் கையைக் கொண்டு கடலை பிரித்தது, ஆண்டவரின் பணியாளர்களோடு அவர் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. கடல் தீய சக்தியாக இருந்தாலும் அது கடவுளுக்கு கட்டுப்பட்டது என்கிறார் ஆசிரியர். மேகத்தூணும் நெருப்புத்தூணும் கடவுளின் பிரசன்னத்தைக் காட்டுகிறது. இங்கே பார்க்கப்படவேண்டியது கடவுள் எப்படி எகிப்தியரை சாவடித்தார் என்பதைவிட, கடவுள் எப்படி இஸ்ராயேலரை பாதுகாத்தார் என்பதே. உண்மையில் செங்கடல் என்பது எங்கே இருக்கிறது என்பதிலும் இன்று வரை பல புதிர்கள் இருக்கின்றன. செங்கடலை கடந்து வந்த அனுபவம் இஸ்ராயேல் மக்கள் மட்டில் அசைக்க முடியாத நம்பிக்கையை உண்டுபண்ணியதை முழு விவிலியத்திலும் காணலாம். மக்கள் ஆண்டவரிலும் அவர் பணியாளன் மோசேயிலும் நம்பிக்கை கொண்டனர் என்பதே இந்த கதையின் செய்தி. யார் கடவுள் என்ற கேள்விக்கும் இந்த பகுதி விடையளிப்பதாக அமைகிறது, ஆண்டவரா அல்லது பாரவோனா? என்பதே அந்தக் கேள்வி. எகிப்தியர்கள் ஆண்டவரைக் கண்டார்கள் என்பதே அதன் விடை.


நற்செய்தி வாசகம்
லூக்கா 24,1-12



இன்றைய நற்செய்தி நாம் எற்கவே குருத்து ஞாயிறில் வாசிக்கப்பட்டதன் தொடர்ச்சி. இந்த பகுதியிலே மூன்று விதமான நபர்களை சந்திக்கின்றோம். அவர்கள், வானதூதர்கள், பெண்கள், திருத்தூதர்கள். நான்கு நற்செய்தியாளர்களும் இந்த நிகழ்வை வித்தியாசமாகவும் அடிப்படையில் ஒற்றுமையானதாகவும் காண்கின்றனர். (ஒப்பிடுக: மத் 28,1-10: மாற் 16, 1-8: யோவான் 20,1-10). லூக்காவின் நற்செய்தி மற்றைய நற்செய்திகளை வாசித்தவர்களுக்கு பல கேள்விகளை எழுப்பலாம் அவை:

அ. கல்லறையில் இருந்தது ஒரு மனிதரா, இரண்டு மனிதரா அல்லது வானதூதரா?
ஆ. பேதுரு கல்லறைக்கு தனியாக சென்றாறா அல்லது யோவானும் சென்றாறா?
இ. இயேசு சீடர்களுக்கு கலிலேயாவிலா அல்லது எருசலேமிலா தோன்றினார்?

உண்மையில் இவை மாறுதல்கள் அல்ல மாறாக பல தரவுகளின் தொகுப்புக்கள் என்ற நோக்கப்படவேண்டும். இப்பொழுது லூக்காவின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
வ.1: பெண்கள் வாரத்தின் முதல் நாள் சென்றதிலிருந்து அவர்கள் இந்த நாளுக்காக காத்திருந்தார்கள் என்பது புலப்படுகிறது. முதல் நாள் என்பது எமக்கு ஞாயிறு தினமாகும்.
வ.2: வழமையாக கல்லறையின் வாயிற் கதவுகள் பெரிய கற்களினால் மூடப்பட்டிருக்கும், பெண்களுக்கு அதனை திறப்பது சாதாரனமாக கடினமாக இருக்கும்.
வ.3: விலக்கப்பட்ட வாயிற் கல்லைப்போல, வெறுமையான கல்லறையும், சுற்றப்பட்ட துண்டுகளும் இயேசு ஏற்கனவே உயிர்த்துவிட்டார் என்பததை புலப்படுத்துகின்றன.
வ.4: வானதூதர்கள் லூக்கா நற்செய்தியில் மிகவும் முக்கியமனவர்கள். இங்கே லூக்கா இவர்களை வானதூதர் என்று சொல்லாமல், வெண்ணாடையணிந்தவர்கள் என்கிறார். (ἄνδρες δύο அந்திரஸ் துவோ - இரண்டு மனிதர்கள்). இவர்களுடைய திடீர் தோற்றமும், வெண்ணாடையும் இவர்கள் சாதாரன மனிதர்கள் இல்லையென்பதை காட்டுகிறது.
வ.5: இதுதான் லூக்கா வாசகர்களுக்கும் அவரது கிறிஸ்தவர்களுக்கும் சொல்லும் செய்தி: தலைகுனிந்து நிற்காதீர்க்ள், உயிர்த்தவரை கல்லறையில் தேடாதீர்கள்!!!
வ.6-7: ஆண்டவர் உயிரோடு எழுப்பப்பட்டார் என்று செயற்பாட்டு-வினை பாவிக்கப்பட்டுள்ளது (உயிருடன் எழுப்பப்பட்டார்). ஆக கடவுள் இயேசுவை உயிரோடு எழுப்பியுள்;ளார் என்கிறார். ஏற்கனவே கலிலேயாவில் இயேசு சீடர்களுக்கு சொன்ன வற்றை இம்மனிதர்கள் நினைவூட்டுகின்றனர். ஆனால் ஏன் லூக்கா இதனை பெண்களுக்கு மட்டும் நினைவூட்டுகிறார்? ஒருவேளை இந்த பெண்கள், ஆண் சீடர்களை விட இயேசுவை அதிகமான நம்பியிருக்கலாம், அல்லது இந்த பெண்கள் லூக்காவின் வாசகர்களை அடையாளப்படுத்தலாம். ஆண்டவர் மூன்றாம் நாள் உயிர்ப்பார் என்பது நினைவுபடுத்தப்படுகிறது. இங்கே செய்வினை (உயிர்ப்பார்) பாவிக்கப்பட்டுள்ளது, ஆக இயேசுவின் உயிர்ப்பிற்கு அவர்தான் காரணம்.
வவ.8-10: இந்த பெண்கள், மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் மரியா போன்றவர்கள் லூக்கா நற்செய்தியில் ஏற்கனவே பரீட்சயமானவர்கள். இவர்கள் இம்மனிதர்களின் செய்தியை நினைவுகூறுகிறார்கள், சென்று திருத்தூதர்களுக்கு அறிக்கையிடுகிறார்கள். லூக்கா மீண்டுமாக பெண்களின் முக்கியத்துவத்தை காட்டுகிறார்.
வவ.11-12: திருத்தூதர்கள் இவர்களின் செய்தியை வெற்று செய்தியாக பார்த்து நம்ப மறுக்கின்றனர். பேதுரு கல்லறைக்கு ஓடியது, நம்பாமையினால் என்பதை விட, பெண்கள் சொன்னதை உறுதிப்படுத்த இவ்வாறு செய்தார் என்றும் எண்ணலாம். பயந்து ஒளிந்திருந்தவர், ஆண்டவரை அன்புசெய்த படியால்தான் ஓடிச்செல்கிறார் என்றும் நம்பலாம். ஆனால் பேதுரு இன்னும் ஆண்டவரின் உயிர்பை நம்பவில்லை. வியப்புற்றவராகவே திரும்பிச் செல்கிறார். வியப்பு என்கிற இந்த வார்த்தை (θαυμάζω தௌமாட்சோ - வியப்பு, ஆச்சரியம், புதினம்), லூக்கா நற்செய்தியில் அவ்வளவு நல்ல வார்த்தை கிடையாது. பல வேளைகளில் ஆண்டவரை நம்பாதவர்களே இவ்வாறு வியக்கின்றனர். இஃது லூக்காவின் செய்தி: ஆண்டவர் உயிர்த்துவிட்டார், அவர் கல்லறையில் இல்லை, பெண்கள் நம்பினர் அத்தோடு திருத்தூதர் இன்னும் நம்பவில்லை, பின்னர் நம்புவர்.
படைப்புகள் அன்று தொடங்கி இன்று வரை இறைவனின் அன்பையும் பிரசன்னத்தையும் நமக்கு காட்டும் ஒரு முக்கியமான புத்தகம். படைப்புகள் வாயிலாக பேசிய இறைவன், வரலாற்றின் நிகழ்வுகள் வாயிலாகவும் மக்களோடு பேசியுள்ளார், இறுதியாக எல்லாவற்றிக்கும் மேலாக தனது மகன் வாயிலாக பேசியுள்ளார்.
ஆண்டவரே! அரச மற்றும் குழு பயங்கரவாதத்தால் அழிந்துகொண்டிருக்கும் இந்த உலகை கூட்டிச் சேர்த்து நல் உலகை அமைப்பீராக. ஆமென்



மூன்றாம் வாசகம்
எசாயா 54,5-14



கடவுள் இஸ்ராயேல் மக்கள்பால் கொண்ட அன்பு, என்று மையப் பொருளில் இந்த பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலே எசாயா, இஸ்ராயேலை ஒரு தாயாகவும், மனைவியாகவும், ஒப்பிட்டு அழகான வார்த்தைகளால் இந்த பகுதியை நெய்துள்ளார். கடவுளை கணவராக இஸ்ராயேலுக்கு ஒப்பிடுவது அழகான உருவகம், இது இங்கே அழகாக கையாளப்பட்டுளளது. இப்போது இஸ்ராயேலின் நிலை கைவிடப்பட்டவள் போல் இருந்தாலும், மீட்பராகிய கடவுள் அதனை மாற்றுவார் என்பது எசாயாவின் இறைவாக்கு. கடவுளின் மன்னிப்பை நோவாவோடு செய்துகொண்ட உடன்படிக்கையையோடு நினைவூட்டி உறுதிப்படுத்துகிறார். மலைகள் சாயினும் கடவுளின் நம்பிக்கை சாயாது என்பது அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுகிறது. அடித்தளங்கள், கால்மாடங்கள், வாயில்கள் போன்றவை ஒரு நகருக்கு மிக முக்கியமானவை. இஸ்ராயேலை ஒரு நகராக ஒப்பிட்டு கடவுள் இந்த நகரை இப்போது புதுப்பிக்க இருக்கிறார் என்று எசாயா இறைவாக்குரைக்கிறார். நேர்மையில் நிலைநாட்டப்படுதல் என்பது, நம்பிக்கையிழந்து போயிருந்த மக்களுக்கு மிகவும் நம்பிக்கை தரும் செய்தி.



நான்காம் வாசகம்
எசேக்கியேல் 36,16-17அ,18-28



கடவுள் தன்னுடைய பெயரின் பொருட்டு அதிசயங்கள் செய்வார், புது இதயத்தை தருவார் என்பது எசேக்கியல் இறைவாக்கினரின் தனித்துவமான செய்திகள். எசேக்கியலும் அகதியாக பபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டவர்களுள் ஒருவர் என்று சில விளக்கவுரையாளர்கள் கருதுகின்றனர். எவ்வாரெனினும், இவருடைய இறைவாக்குகளில் புது இதயம், புதிய உடன்படிக்கை, புதிய சட்டம், புதிய நீதி போன்றவை மிகவும் அழகானதும், மிகவும் ஆழமானவையுமாகும். இன்றைய பகுதி இஸ்ராயேலின் புதிய வாழ்வைப் பற்றி பேசுகிறது. பெண்களின் மாதவிடாய் இரத்தமாக வெளியேறிய படியால் பலர் அன்று அதனை தீட்டாக கருதினர், இந்த உதாரணத்தை ஆசிரியர் உவமையாக பாவிக்கிறார். ஆசிரியர் மாதவிடாயைப் பற்றி பேசவில்லை, மாறாக பாவத்தைப் பற்றியே பேசுகிறார். எசேக்கியேல், ஏன் மக்கள் கடவுளை வழிபட்டாலும் வேறு நாட்டுக்கு அகதிகளாக போகவேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை விவரிக்கின்றார். தீட்டானது இஸ்ராயேலருடைய நாடும் மக்களுமட்டுமல்ல, கடவுளுடைய பெயரும் என்பது எசேக்கியேலுடைய புதிய போதனை. எனவே மக்கள் மட்டில் இல்லாவிடினும், தனது பெயரின் பொருட்டு கடவுள் மக்களை மீட்க வேண்டும் என்பது இவரது வாதம். கடவுள் இரண்டு விதமான மீட்புச் செய்ற்பாடுகளை செய்ய இருக்கிறார், அ). கூட்டிச் சேர்த்தல். ஆ). சொந்த நாட்டிற்கு திரும்பி கொண்டுவருதல். இதனையே இஸ்ராயேல் மக்கள் விரும்பினர். (இதுவே ஈழத்தழிழர்கும் தேவையாக இருக்கிறது.) ஆண்டவரே இவர்கள் விரும்பியவற்றை செய்யப்போகிறார் என அழகாக சொல்கிறார் இந்த புலம்பெயர்ந்த இறைவாக்கினர் எசேக்கியல். 26-28 வரையான வசனங்கள் மிகவும் முக்கியமானவை. பல விசேட அம்சங்கள் இங்கே சொல்லப்படுகின்றன. அ). புதிய இதயம். ஆ). புதிய ஆவி. இ). கல்லுக்கு பதிலான சதையான இதயம். உ). ஆண்டவரின் ஆவி ஊ). ஆண்டவிரின் நியமங்களும் சட்டங்களும். இறுதியாக பழைய உடன்படிக்கை புதிய வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. அதாவது கடவுள் இவர்களின் ஆண்டவராகவும், மக்கள் ஆண்டவரின் மக்களாகவும் இருப்பார்கள், இதுதான் மோசேயுடன் செய்து கொண்ட உடன்படிக்கை, இங்கே வித்தியாசமாக சொல்லப்படுகிறது.



ஐந்தாம் வாசகம்
உரோமையர் 6,3-11



கிறிஸ்தவ வாழ்வின் மறையுண்மைகளை அழகாக விவரிக்கும் திருமுகங்களில் உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. இந்த பகுதியிலே திருமுழுக்கினால் கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கும் நன்மை எடுத்துரைக்கப்படுகிறது. திருமுழுக்கு ஒருவருக்கு புதுவாழ்வு அருளுகின்றதென்பது நமது நம்பிக்கை, இதனை மரணம் என்று வர்ணிக்கிறார் பவுல். திருமுழுக்கு இந்த நல்ல மரணத்தை கொண்டுவருகின்ற தென்றும், திருமுழுக்கு ஒருவகை அடக்கச் சடங்கு என்றும் வித்தியாசமான பாவனையில் விளங்கப்படுத்துகிறார். உரோமையர்கள் கிறிஸ்துவோடு உயிர்க்க வேண்டும் என்றால் அவரோடு இறக்க வேண்டும் என்பது கட்டாயம் என்கிறார் பவுல். பவுல் இங்கு உருவகங்களை கையாள்கின்றார் என்பதை அவதானமாக நோக்க வேண்டும். திருமுழுக்கை ஒரு வகையான மாய வித்தையாக தவறாக கண்ட உரோமையருக்கு திருமுழுக்கு ஒரு திருவருட்சாதனம், அது வாழப்படவேண்டும். மாற்றம் இல்லாமல் திருமுழுக்கினால் பயன் இல்லையென்று காட்டமாக சொல்கிறார். பாவ வாழ்கை சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது என்ற உருவகத்தின் வாயிலாக கிறிஸ்தவர்கள் பாவ வாழ்க்கையை வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற வாதத்தை முன்வைக்கிறார். இறந்தோர் பாவத்திலிருந்து விடுதலையடைந்துவிட்டனர் என்ற வரிகளின் ஊடாக, பவுல் சிலருக்கு உயிர்ப்பு எற்கனவே கிடைத்துவிட்டது என நம்பினாரா என எண்ணத்தோன்றுகிறது. இவரின் வாதங்களை ஒரு இறையியல் வளர்ச்சியாகவே காணவேண்டும். பாவம் என்பது மரணம், வாழ்வு என்பது உயிர்பு என்ற சிந்தனையே இங்கே நோக்கப்படவேண்டியது. பவுலுடைய உயிர்ப்பு மற்றும் திருமுழுக்கு போன்ற வாதங்களை விளங்கிக்கொள்ள திருமுகங்களை அவற்றின் பின்புலத்திலும், எழுதப்பட்ட காலநிலைகளுக்கும் ஏற்றபடி வாசிகக் வேண்டும்.