இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






குருத்தோலை ஞாயிறு: 20, பங்குனி 2016.

லூக்கா 22, 14 - 23, 56



நற்செய்தி வாசகம்
லூக்கா 22, 14 - 23, 56

ஆண்டவரின் திருவிருந்து (மத் 26:26 - 30; மாற் 14:22 - 26; 1கொரி 11:23 - 25)

14நேரம் ஆனதும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார். 15அப்போது அவர் அவர்களை நோக்கி, “நான் துன்பங்கள் படுமுன் உங்களோடு இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலாய் இருந்தேன். 16ஏனெனில் இறையாட்சியில் இது நிறைவேறும்வரை இதை நான் உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். 17பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களிடம், “இதைப் பெற்று உங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்ளுங்கள். 18ஏனெனில், இது முதல் இறையாட்சி வரும்வரை, திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பதில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
19பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். 20அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, “இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. 21என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ, என்னோடு பந்தியில் அமர்ந்திருக்கிறான். 22மானிடமகன் தமக்கென்று குறிக்கப்பட்டபடியே போகிறார், ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு” என்றார்.
23அப்பொழுது அவர்கள், “நம்மில் இச்செயலைச் செய்யப் போகிறவர் யார்” என்று தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள். யார் பெரியவர்?
24மேலும் தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது. 25இயேசு அவர்களிடம், “பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். 26ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும். 27யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன். 28நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே. 29என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன். 30ஆகவே என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்.
பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல் (மத் 26:31 - 35; மாற் 14:27 - 31; யோவா 13:36 - 38)
31“சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். 32ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து” என்றார்.
33அதற்கு பேதுரு, “ஆண்டவரே, உம்மோடு சிறையிடப்படுவதற்கும் ஏன், சாவதற்கும் நான் ஆயத்தமாய் உள்ளேன்” என்றார். 34இயேசு அவரிடம், “பேதுருவே, இன்றிரவு, ‘என்னைத் தெரியாது’ என மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன்” என்றார்.
பணப்பையும் வாளும்
35இயேசு சீடர்களிடம், “நான் உங்களைப் பணப்பையோ வேறுபையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?” என்று கேட்டார். அவர்கள், “ஒரு குறையும் இருந்ததில்லை” என்றார்கள். 36அவர் அவர்களிடம், “ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும். 37ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ‘கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்’ என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற வேண்டும். என்னைப் பற்றியவை எல்லாம் நிறைவேறி வருகின்றன” என்றார். 38அவர்கள் “ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன” என்றார்கள். இயேசு அவர்களிடம், “போதும்” என்றார். ஒலிவ மலையில் இயேசு
(மத் 26:36 - 46; மாற் 14:32 - 42)
39இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். 40அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்களிடம், “சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்,” என்றார். 41பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார்: 42“தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று கூறினார். 43[அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார். 44அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.]⁕ 45அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். 46அவர்களிடம், “என்ன, உறங்கிக் கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” என்றார்.
இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும் கைதுசெய்தலும் (மத் 26:47 - 56; மாற் 14:43 - 50; யோவா 18:3 - 11)
47இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான். 48இயேசு அவனிடம், “யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?” என்றார். 49அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, “ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?” என்று கேட்டார்கள். 50அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார். 51இயேசு அவர்களைப் பார்த்து, “விடுங்கள், போதும்” என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார். 52அவர் தம்மிடம் வந்த தலைமைக் குருக்களையும் கோவில் காவல் தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து, “ஒரு கள்வனைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாள்களோடும், தடிகளோடும் வந்தது ஏன்? 53நான் நாள்தோறும் கோவிலில் உங்களோடு இருந்தும் நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனால் இது உங்களுடைய நேரம்; இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது” என்றார்.
பேதுரு மறுதலித்தல் (மத் 26:57 - 58, 69 - 75; மாற் 14:53 - 54, 66 - 72; யோவா 18:12 - 18, 25 - 27)
54பின்னர் அவர்கள் இயேசுவைக் கைதுசெய்து இழுத்துச் சென்று தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டு போனார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். 55வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார். 56அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து, “இவனும் அவனோடு இருந்தவன்” என்றார். 57அவரோ, “அம்மா, அவரை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்தார். 58சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், “நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்” என்றார். பேதுரு, “இல்லையப்பா” என்றார். 59ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப்பின்பு மற்றொருவர், “உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான்” என்று வலியுறுத்திக் கூறினார். 60பேதுருவோ, “நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது” என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று. 61ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்: “இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, 62வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.
இயேசுவை ஏளனம் செய்தல் (மத் 26:67 - 68; மாற் 14:65)
63இயேசுவைப் பிடித்துவைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள். 64அவரது முகத்தை மூடி, “உன்னை அடித்தவர் யார்? இறைவாக்கினனே, சொல்” என்று கேட்டார்கள். 65இன்னும் பலவாறு அவரைப் பழித்துரைத்தார்கள். தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு (மத் 26:59 - 66; மாற் 14:55 - 64; யோவா 18:19 - 24)
66பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடிவந்தார்கள்; இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். 67அவர்கள், “நீ மெசியா தானா? எங்களிடம் சொல்” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்; 68நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள். 69இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்” என்றார். 70அதற்கு அவர்கள் அனைவரும், “அப்படியானால் நீ இறைமகனா?” என்று கேட்டனர். அவரோ, “நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள்” என்று அவர்களுக்குச் சொன்னார். 71அதற்கு அவர்கள், “இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் வாயிலிருந்து நாமே கேட்டோமே” என்றார்கள்.
22:44 அடைப்புக் குறிக்குள் உள்ள இவ்வசனங்கள் பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை.

இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல் (மத் 27:1 - 2, 11 - 14; மாற் 15:1 - 5; யோவா 18:28 - 38)
1திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர். 2“இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம்” என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள். 3பிலாத்து அவரை நோக்கி, “நீ யூதரின் அரசனா?” என்று கேட்க, அவர், “அவ்வாறு நீர் சொல்கிறீர்” என்று பதில் கூறினார். 4பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து, “இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை” என்று கூறினான். 5ஆனால் அவர்கள், “இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான்” என்று வலியுறுத்திக் கூறினார்கள்.
ஏரோது முன்னிலையில் இயேசு 6இதைக் கேட்ட பிலாத்து, “இவன் கலிலேயனா?” என்று கேட்டான்; 7அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான். 8இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான். 9அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை. 10அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள். 11ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான். 12அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்.
இயேசுவுக்கு மரணதண்டனை விதித்தல் (மத் 27:15 - 26; மாற் 15:6 - 15; யோவா 18:39 - 19:16)
13பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக வரவழைத்தான். 14அவர்களை நோக்கி, “மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை. 15ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு. 16எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்” என்றான். 17[விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.]⁕ 18திரண்டிருந்த மக்கள் அனைவரும், “இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும்” என்று கத்தினர். 19பரபா நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடுபட்டுக் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டவன். 20பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப் பேசினான். 21ஆனால் அவர்கள், “அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என்று கத்தினார்கள். 22மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி, “இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்” என்றான். 23அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது. 24அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான். 25கலகத்தில் ஈடுபட்டு, கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக் கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டான். இயேசுவைச் சிலுவையில் அறைதல்
(மத் 27:32 - 44; மாற் 15:21 - 32; யோவா 19:17 - 27)
26அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச் செய்தார்கள். 27பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள். 28இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, “எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள். 29ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது ‘மலடிகள் பேறுபெற்றோர்’ என்றும் ‘பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர்’ என்றும் சொல்வார்கள். 30அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, ‘எங்கள் மேல் விழுங்கள்’ எனவும் குன்றுகளைப் பார்த்து, ‘எங்களை மூடிக்கொள்ளுங்கள்’ எனவும் சொல்வார்கள். 31பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!” என்றார். 32வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டுசென்றார்கள். 33மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள். 34அப்போது [இயேசு, “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று சொன்னார்.]⁕ அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள். 35மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், “பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும்” என்று கேலிசெய்தார்கள். 36-37படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, “நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள்” என்று எள்ளி நகையாடினர். 38“இவன் யூதரின் அரசன்” என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது. 39சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று “என்று அவரைப் பழித்துரைத்தான். 40ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். 41நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்று பதிலுரைத்தான். 42பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான். 43அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார். 44ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. 45கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது. 46“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். 47இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், “இவர் உண்மையாகவே நேர்மையாளர்” என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். 48இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். 49அவருக்கு அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்த பெண்களும் தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசுவின் அடக்கம் (மத் 27:57 - 61; மாற் 15:42 - 47; யோவா 19:38 - 42) 50யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர். 51தலைமைச் சங்கத்தாரின் திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காத அவர் யூதேயாவிலுள்ள அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர்; இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். 52அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். 53அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை. 54அன்று ஆயத்த நாள்;⁕ ஓய்வுநாளின் தொடக்கம். 55கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்; அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்து விட்டு, 56திரும்பிப் போய் நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.


23:17 அடைப்புக் குறிக்குள் உள்ள இவ்வசனம் பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை. 23:34 அடைப்புக் குறிக்குள் உள்ள சொற்றொடர் பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை. 23:54 ‘ஆயத்த நாள்’ என்பது ஓய்வுநாளுக்கு முந்திய நாளைக் குறிக்கிறது.


லூக்கா எழுதிய படி, பாடுகளின் வரலாறை இவ்வாறு பிரிப்போம்

அ. பாஸ்கு உணவு ஆ. மேசையில் கலவரம் இ. துயரமும் கைதும் ஈ. பேதுருவின் மறுதலிப்பு உ. யூத சபையின் (சென்ஹட்ரின்) முடிவு ஊ. பிலாத்துவினதும் எரோதினதும் அரசியல் எ. மரண தண்டனை ஏ. சிலுவைப் பாதை ஒ. சிலுவையில் அறைதலும் மரணமும் ஓ. நல்லடக்கம்

அ. பாஸ்கு உணவு (22,7-20), இயேசு புதிய பாஸ்கா உணவாகிறார்.

1. லூக்கா மாற்கு மற்றும் மத்தேயுவைப்போல ஆண்டவரின் இராவுணவை பாஸ்காவுணவாகவே காட்டுகிறார். இயேசு பேதுருவிடமும் யோவானிடமும் அடையாளங்கள் வாயிலாக பாஸ்கா கொண்டாடும் இடத்தைப்பற்றி சொல்லுவது, ஒருவேளை தான் முன்கூட்டியே கைதாகமல் இருப்பதற்கு என கருதலாம். வழமையாக பெண்கள் தண்ணீர் குவளைகளை சுமந்து கொண்டு வருகின்ற காலங்களில், ஆண்கள் அதனை சுமப்பது சீடர்களுக்கு நல்ல அடையாளமாக அமைகிறது.

2. லூக்கா இயேசுவை உண்மையான பாஸ்கா உணவாக காட்டுகிறார். நான் ஆவலாக இருந்தேன் என்று இயேசு சொல்லுவதன் மூலம், இந்த பாஸ்காவுணவு இயேசுவிற்கு முக்கியம் வாய்ந்ததாக அமைகிறது. இறையாட்சி நிறைவேறும் மட்டும் இனி இந்ந பாஸ்கா உணவை உண்ணமாட்டேன் என்று இயேசு சொல்வது, இறையாட்சி என்பது ஒரு தொடர் பணி அது சாதாரண பாஸ்காiவிட முக்கியமானது, இறையாட்சின் முன் இப்படியான கொண்டாட்டங்கள் இரண்டாம் தரமானவை எனக் காட்டுகிறது.

3. வவ 19-20: இந்த வசனங்கள்தான் திருச்சபை ஒவ்வொரு நாளும் திருப்பலியில் பயன்படுத்துகின்ற வசீகர செபங்கள். இந்த செபங்கள் வருடாந்த பாஸ்கா விழாவையும் தாண்டி இப்போது அவை இயேசுவை மையப்படுத்துகின்றன. கடவுளே வரும் போது பூசாரிக்கு என்ன வேலை எனக் கேட்கலாம். பாஸ்கா விழா பல வகையான செபங்கள், ஆசீர்கள், உணவு வகை பரிமாற்றங்களைச் சார்ந்தது, இங்கே இயேசு தன்னை மையப்படுத்தி, அப்பத்திலும் இரசத்திலும் தனது செய்தியை கொடுக்கிறார். இது ஒரு புதிய நித்திய உடன்படிக்கையை குறிக்கலாம். நினைவாக செய்யச்சொல்லுவது, இதே போன்ற பலியை மக்கள் தங்கள் வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்பதைக் காட்டுகிறது. நினைவுகள் வாழ்வதற்கே என்ற தத்துவம் இங்கே திருவருட்சாதனமாக்கப்படுகிறது. நற்கருனை ஏற்படுத்தப்பட்ட கதாம்சம் இரண்டு பாரம்பரியங்களில் நமக்கு வருகின்றன, அ). மாற்கு-மத்தேயு பாரம்பரியம், ஆ). பவுல் பாரம்பரியம். சாதாரணமாக நான்கு கிண்ண இரசங்கள் பாஸ்காவிழாவிற்கு பயன்பட்டன, இயேசு இரண்டை பாவித்தார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆ. மேசையில் கலவரம்: (22,21-38), பதவி மோகம். 1. ஆசை யாரையும் விடாது! கடவுள் பக்கத்தில் இருந்தும் கூட, பதவிகளை நாடச்செய்கிறது. லூக்கா இந்த காட்சியை சற்று வித்தியாசமாக பதிவு செய்கிறார். லூக்கா யூதாசின் காட்டிக்கொடுப்பை உதாரணமாக்கி ஒருவரின் பாவ வாழ்க்கைக்கு அவரே பொறுப்பு என்றி சொல்லி, விதி என்று ஏமாற்று வித்தை காட்டவேண்டாம் என்கிறார். யூதாசிற்கும் இந்த பன்னிருவருக்கும் இந்த மேசையில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. அவன் பணத்தை விரும்பினான், இவர்கள் பதவிகளை விரும்புகின்றனர். யார் பெரியவர் என்ற வாதம் இதனையே குறிக்கிறது.

2. யார் பெரியவர் என்ற கேள்வியும் அதற்கான கதையிடங்களும் மாற்குவிலும் மத்தேயுவிலுமு; (மாற் 10,42-45: மத் 20,25-28) வேறு இடங்களில் அமைகின்றன. இயேசு இறையாட்சிக்கும் அரசியல் ஆட்சிக்கும் வித்தியாசம் காட்டுகிறார். அரசியல் ஆட்சியில் அடிமைத்தனங்களே நன்கொடை என்பதை அழகாக சித்தரிக்கிறார். இயேசு உரோமையரின் ஆட்சியை நன்கு வறுத்தெடுக்கிறார். இறையாட்சியில் அதிகாரம் கிடையாது, தன்னையொட்டி சேவை மட்டுமே உள்ளது என்கிறார். (διακονία தியாகோனியா-சேவை).

3. சேவையின் தன்மைகளைப பற்றி பன்னிருவருக்கு அறிவுறுத்திய பின் இயேசு சீடர்களை இஸ்ராயேலரின் குலமுதுவர்களாக நியமிக்கிறார். இப்போது இந்த புதிய இஸ்ராயேலின் முதல் குலமுதுவரை அவருடைய எபிரேய பெயரில் அழைக்கிறார் (சீமோன் - Σίμων). சாத்தான் அனுமதி கேட்கிறான் என்பதன் மூலம், பன்னிருவரை சோதிக்க விசேட அனுமதி தேவை என்கிறார், ஆனால் தனது உடனிருப்பு எப்போதும் உள்ளது என்பதையும் நினைவூட்டுகிறார். பேதுருவின் பலவீனத்தை ஆண்டவர் சொன்ன வேளை பேதுரு தனது பலததை நிரூபிக்கப் பார்கிறார். சேவல் கூவாது என்பது, இங்கே பேதுரு தனது பலவீனத்தை ஏற்றுக்கொள்ளும் வரை அவருக்கு விடியல் இல்லை என்பது போல உள்ளது.

4. சீடர்கள் பணிக்கு அனுப்பப்பட்ட நிகழ்வை மீளாய்வு செய்கிறார் இயேசு (9,3). சில மாற்றங்களையும் உண்டு பண்ணுகிறார். அப்போது கடவுளின் தயவை நாடச்சொன்னவர், இப்போது பணப் பையையும், பயணப் பையையும் எடுக்கச் சொல்கிறார். இது ஆரம்ப கால திருச்சபையின் அங்கலாய்பு நிறைந்த நாட்களை படம் பிடிக்கிறது. ஆயுதங்களை எடுக்கச் சொன்னது போருக்கு தயாராக இருக்கச் சொல்லுவது போல உள்ளது. சீடர்கள் அதனை மிக ஆழாக எடுத்து எத்தனை கத்திகள் வேண்டும் என கேட்கின்றனர், இயேசு சொன்னது ஆயத்தங்களை, ஆயுதங்களை அல்ல. இங்கே வாள் என்று லூக்கா எழுதுவது ஒரு வகை பட்டாக்கத்தி (μάχαιρα மகாய்ரா, பட்டாக் கத்தி), அக்காலத்து கைத்துப்பாக்கி எனச் சொல்லலாம், இது தற்பாதுகாப்பிற்கே, போருக்கு உதவாது.

இ. துயரமும் கைதும் (22,39-53), அழுக்காகிப்போன அன்பு முத்தம். 1. மாற்குவின் கெத்சமெனி காட்சியை லூக்கா சிறியதாக்கியுள்ளார். ஒலிவ மலை லூக்காவிற்கு மிக முக்கியமான இடம். இங்கு இயேசு பல முக்கியமான முடிவுகளை எடுக்கிறார் இதனால்தான் கெஸ்தமெனியை ஒலிவ மலையாக மாற்றுகிறார் லூக்கா, அல்லது ஒலிவ மலையில் கெஸ்தமெனி இருந்ததை உறுதிப்படுத்துகிறார். மாற்குவிலும் மத்தேயுவிலும் இயேசுவை மூவர் பின்தொடர்ந்தனர், இங்கு சீடர் என்று பலரை உள்வாங்குகின்றார் லூக்கா. ஆக செபமும், திருவிழி;ப்பும் அனைத்து சீடர்களின் கடமையாகிறது. செபித்தலும் விழித்தலும் அனைவருக்கும் உரியது என்கிறார் போல. சோதனை இயேசுவையும் விடவில்லை ஆனால் அவர் அதனை மேற்கொண்டதை கோடிடுகிறார். கிண்ணம், (ποτήριον-பொடெரியோன்) சாதரணமாக கடவுளுடைய நீதியையும் கோபத்தையும் வெளிப்படுத்தலாம், இங்கு தீர்ப்பை வெளிப்;படுத்துகிறது. வானதூதரின் பங்களிப்பு இயேசு தனியாக இல்லை எனக் காட்டுகிறது. இரத்த வியர்வை இயேசுவின் முழு மனித இயல்பை காட்டும் உருவகம். மறு புறத்தில் சீடர்களின் உறக்கம் மனித பலவீனத்தை காட்ட, அதனை மேற்கொள்ள விழித்திருந்து செபிக்க வேண்டும் என்கிறார் இயேசு. துயரத்தால் அவர்கள் தூங்கினார்கள் என்று இவர்களின் தவறை சிறியவர்களின் தவறாக்குகிறார் லூக்கா.

2. யூதாசை பன்னிருவருள் ஒருவன் என்பதன் மூலம் திருத்தூதர்களின் முரண்பாட்டை விளக்குகிறார், இங்கே மாற்கு-மத்தேயுவுடன் சேர்ந்து போகிறார் லூக்கா. காதல், அன்பு, நம்பிக்கை, உறவு, நட்பு போன்றவற்றின் அழகிய அடையாளமான முத்தம் காட்டிக்கொடுக்கும் அசிங்கமான அடையாளமாக மாறுகிறது. பாவியென்று ஆண்களால் அடையாளமிடப்பட்ட பெண்ணொருவர் ஆண்டவரின் பாதங்களை கண்ணீரால் முத்தமிட்டு கழுவினார், இங்கே திருத்தூதரிலே ஒருவர் கன்னத்தை முத்தமிட்டு தீயவர்களிடம் தன் ஆண்டவரையே கையளிக்கிறான். (ஒப்பிடுக 7,38: 22,47). யோவான் நற்செய்திப்படி இயேசுவிற்காக படைவீரரின் காதை துண்டித்தவர் பேதுரு. லூக்கா நற்செய்தியில் மட்டுமே இயேசு காது துண்டிக்கப்பட்டவரை குணப்படுத்துகிறார். லூக்காவிற்கு இயேசு எப்போதுமே குணப்படுத்தும் ஆண்டவர். இருளில் நடக்கும் கைது மனிதர்களின் இருண்ட யுகத்தையும் இருண்ட குணங்களையும் காண்பிக்கிறது. நேரம் என்பது அதிகமாக யோவானில் நேர் பதமாகும், லூக்கா இங்கே இதனை எதிர் மறையாக பாவிக்கின்றார். இருட்டில் இவர்கள் செய்யும் செயல், கள்வர்கள் செய்யும் கொள்ளை செயலாகும் என்று சொல்கிறார் போலும்.

ஈ. பேதுருவின் மறுதலிப்பு (22,54-65), அபாயமாகிப்பபோன ஆண்டவர். 1. தலைமைக்குருவின் வீட்டிற்கு இயேசுவை இழுத்துச் செல்வது, ஏற்கனவே இவர்கள் அதனை திட்டமிட்டிருந்தார்கள் என்பதனைக் காட்டுகிறது. மற்றைய நற்செய்திகளைப் போலல்லாது பேதுருவை மையப்படுத்துகிறார் லூக்கா. ஒரு மணித்தியாலத்தில் ஒரு பெண்ணும் இரு ஆண்களுமாக மூன்று பேர் பேதுருவை சோதிக்கின்றனர். ஒரு வேளை பேதுரு சோதனைகளின் போதும் இந்த இடத்தைவிட்டு வெளியேறாமல் இருப்பதனைக் காட்டலாம். ஆண்டவர் பேதுருவை கூர்ந்து நோக்கினார் என்று, எமது காட்டிக்கொடுப்புக்களில் கடவுள் கூர்ந்து நோக்குகிறார் என்கிறார் லூக்கா. மனம்நொந்து அழுதது, இயேசுவிடம் இருந்து ஓடிச்செல்ல அல்ல, மாறாக ஊதாரி மகனைப்போல தந்தையிடம் திரும்பிவரவே என்கிறார் லூக்கா. பேதுரு பாவியானலும் துரோகியல்ல என்பது போல உள்ளது.

2. இயேசுவை பரிகாசம் செய்தவர்கள் ஆலய காவலர்கள் என்பது லூக்காவின் எழுத்து. இங்கே மெசியா அல்லது மனுமகன் என்பதைவிட, கடவுளின் உண்மையான இறைவாக்கினர் ஏளனம் செய்யப்படுகிறார் எனக் காட்டுகிறார். இறைவாக்கினரை பழிந்துரைப்பதன் மூலம் ஆலயத்தை காக்கிற இவர்கள், ஆலயத்தின் கடவுளையே பழிந்துரைக்கின்றனர் என்கிறார் லூக்கா. உ. யூத சபையின் (சென்ஹட்ரின்) முடிவு (22,66-71): கடவுள் நிந்தனை சட்டம், கடவுளை நிந்திக்கிறது.

1. இயேசுவை இழுத்து வந்தவர்கள் மூப்பர்கள், தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள் என்பதன் மூலம் அனைத்து தலைமைத்துவமும் இயேசுவை முடிவுகட்ட ஒன்றாக வருவதை அழகாக காட்டுகிறார். லூக்கா, இங்கே உரையாடல்களை பதிவு செய்வதன் மூலம், இயேசு சுயநினைவில் இருந்தார் என்பதனை காட்டுகிறார், எனவே இவர்கள் இயேசுவை கொலை செய்ய திட்டமிடுகின்றனர், இயேசு தற்கொலை செய்ய முயற்சிக்கவில்லை என்பதில் மற்றைய நற்செய்தியாளருடன் ஒத்துபோகிறார். மத்தேயு-மாற்குவில் இரவில் நடக்கும் சங்கக் கூட்டம் இங்கே விடியலில் நடக்கிறது. இயேசு இத்தலைவர்களுக்கு பதில் சொல்ல மறுக்கிறார் அத்தோடு தனக்கு கேள்வி கேட்கும் அதிகாரம் இருக்கிறது என்கிறார். தன்னை இங்கே மானிட மகனாக உருவகித்து கடவுளின் வலப்புறம் தன்னுடையது என்கிறார் (காண் தானி.7,13-14). தேவ நிந்தனைச் சட்டம், தேவனையே நிந்திப்பதாக மனிதர்களின் நகைச்சுவையை விவரிக்கிறார் லூக்கா.

2. சங்கத்திற்கு மரண தண்டனை கொடுக்கும் அதிகாரம் இல்லாமையால் அதனை தேட வழிதேடுகின்றனர். இயேசுவின் வாயிலிருந்து கேட்டோமே என்று இவர்கள் சொல்வதன் மூலம், கேட்டும் புரிந்து கொள்ளவில்லை என ஊகிக்க வைக்கிறார்.

ஊ. பிலாத்துவினதும் எரோதினதும் அரசியல் (23,1-12) நரியும் கழுதைப்புலியும் 1. பிலாத்து அன்றைய நாளில் இருந்து உரோமைய பேரரசின் மாகாண பதிலாளி. ஐந்து வருடங்களாக இந்த வேலையை செய்து வந்தான், தன்னுடைய அலுவலகம் செசாரியாவில் இருந்தாலும், பாஸ்கா விழாவில் கலவரம் நடப்பதை எதிர்பார்த்து எருசலேமில் இருந்தான். அரசியல் ரீதியான காரணங்களை தங்களுடைய சகோதரனுக்கு எதிராக ஒர் அன்னிய ஆட்சியாளரிடம் முன்வைக்கின்றனர், இந்த மூத்த சகோதரர்கள். மத ரீதயான காரணங்களை, பல கடவுள் கொள்கைக்காரர்களான உரோமையர் செவிசாயார் என்பதனை உணர்ந்து: புரட்சி, கப்பம், அரச துரோகம் என்ற குற்றங்களை சுமத்துகின்றனர். மாற்குவைப் போல லூக்காவும், பிலாத்துவை அவ்வளவு கெட்டவனாக காட்டாமல், ஆண்டவரை குற்றம் சுமத்தியவர்கள்மேல் வாசகர்களின் பார்வையை இழுக்கிறார். பிலாத்துவுக்கு இயேசு கொடுக்கும் பதில், புதிர் போல உள்ளது.

2. ஏரோது முன்னிலையில் இயேசுவின் காட்சி லூக்காவில் உள்ள சிறப்பம்சம். இந்த இதுமேயனான ஏரோது, ஒரு யூதன் அல்ல, மக்கபேயருடைய காலத்தில் கிரேக்கருடனும், உரோமருடனும் சேர்ந்து, ஹஸ்மோனிய ஆட்சியாளர்களை வஞ்சித்து ஆட்சியை பிடித்தவன்தான் இவன் பாட்டன், பெரிய ஏரோது. வரலாற்றில் பெரியவர்கள் இப்படியானவர்கள்தான். இவனைத்தான் ஆண்டவர் நரி என்று வர்ணிப்பார். பிலாத்துவும் ஏரோதும் ஒருவருக்கொருவர் குறைவில்லாத அரசியல் செய்கின்றார்கள். ஏரோது திருமுழுக்கு யோவானைப் பொருட்டு இயேசுவைக் காணவிரும்பினான். இயேசு இவனுக்கு எந்த பதிலும் சொல்லாது, அவனுக்கு கிடைக்கும் உச்ச கட்ட தண்டனை. அவர் வார்ததைகளைக் கேட்க இவனின் காதுகளுக்கு தகுதியில்லை எனச் சொல்லாம். அமைதி எவ்வளவு பலமான ஆயூதம் என்பதை இங்கு காணலாம். ஆலய படைவீரர்களைப் போல ஏரோதின் கூலிப்படைகளும் ஆண்டவரை ஏளனம் செய்கிறது. தீயவர்கள் நன்பர்கள் ஆகிறார்கள். இயேசுவின் உயிர்பின் பின்னர் இந்த நரியும், பிலாத்துவும் தங்களது தலைவர்களாலேயே தூக்கி வீசப்படுவார்கள். பிலாத்து ஏரோதுவை வைத்து அரசியல் லாபம்செய்யப் பார்கிறான். உரோமையர்கள் தங்களை கழுகு என்பார்கள், இவனுக்கு எந்த கழுகுக் குணமும் இல்லை.

எ. மரண தண்டனை (23,13-25), உயிருக்கு மரணதன்டனை. 1. இந்த காட்சி மூன்று செய்திகளை அழகாக வர்ணிக்கிறது. அ. இயேசுவின் குற்றமின்மை, ஆ. கலகக்கும்பலின் தீமைக்கான கொந்தளிப்பு, இ. பிலாத்துவின் பலவீனம். பிலாத்து மூன்று முறை அதாவது நிறைவாக, இயேசுவை விடுதலை செய்ய விரும்பியும் அவனால் முடியவில்லை என்று காட்டுவதன் மூலம் இந்த பாவத்திற்கு முழுகாரணமும் இந்த மக்கட் தலைவர்களே என்கின்றார் லூக்கா. பரபாவை இவர்கள் விடுதலை செய்யக் கேட்பதன் ஊடாக எப்படியாவது அல்லது எவரையாவது கொண்டு இயேசுவை முடிக்கவேண்டும் என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பது புலனாகிறது. வ.17 லூக்காவின் மூல பிரதியில் இல்லை, மாற்குவிலிருந்து உள்புகுத்தப்பட்டுள்ளது (மாற் 15,6). பிலாத்து இவர்களை கூப்பிட்டு பேச நினைக்கையில் கலகக் கும்பல் திடீரென சிலுவை மரணத்தைக் கேட்டு கத்துகிறது. லூக்கா கிரேக்கத்தில், ஒன்றாக சேர்ந்து கூச்சலிட்டார்கள் (ἀνακράζω அனாகிராட்ஸோ) என்று எழுதுகிறார்.

2. ஆட்சியாளின் பலவீனமும், கலகக்காரர்களின் பலமும் எவ்வளவு ஆபத்தானது. அவை இயேசுவிற்கு மரசண தண்டனையை கொண்டுவருகின்றன. சிலுவை மரணம் உரோமையருடைய ஆட்சியில், பேரரசிற்கு எதிராக கலகம் அல்லது பாரிய குற்றம் என உரோமையர்கள் நினைத்ததை-செய்தவர்களுக்கு வழங்கப்பட்டது. இது உரோமையர் அல்லாதவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. யூதர்க்ள் இந்த தண்டனையை கடவுளுடைய சாபமாக கண்டனர் (காண் இனை 21,23: காலா 3,13). இங்கே கடவுளுடைய சாபத்தை கடவுளுக்கு கொடுக்க இவர்கள் முயலுகிறார்கள். பிலாத்துவின் முயற்சி தோற்க்க, கலகக் கும்பலின் கூச்சல் வெற்றியளிக்கிறது. இயேசு இவர்களின் ஆசைக்கு கையளிக்கப்படுகிறார் என்று உணர்வு பூர்வமாக பதிகிறார் லூக்கா.

ஏ. சிலுவைப் பாதை (23,26-31), பாதையான முதல் பயனம்.

1. இந்த பகுதியில் எமது பாரம்பரிய சிலுவைப்பாதையின் சில நிலைகள் வருவதைக் காணலாம். (சீரேனூர் சீமோனும், எருசலேம் மகளீரும்). இந்த சீரேன் ஊர் சீமோன், பின்னாலில் வந்த சீரேனிய கிறிஸ்தவர்களை நினைவூட்கிறார் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சீமோன் இயேசுவின் சிலுவையை சுமந்ததை மூன்று நற்செய்தியாளர்களும் பதிவுசெய்கின்றனர். சீமோன் நல்ல சீடன் போல இயேசுவிற்கு பின்னால் நடக்கிறார். (காண் 14,27: சிலுவையை சுமந்துகொண்டு என்னை பின்பற்றாதவர் என் சீடராய் இருக்க முடியாது.)

2. பலமில்லாமல் சிலுவையைச் சுமந்தாலும், ஆண்டவராக இருக்கிறார் என்பதை எருசலேம் மகளீருக்கு சொன்ன வார்த்தைகளிலிருந்து எண்பிக்கிறார் லூக்கா. இங்கே ஆழமான பல கருத்துக்களை பதிகிறார் லூக்கா. எருசலேம் மகளீர் என இஸ்ராயேல் இனத்தையே குறிப்பிடுகிறார் லூக்கா. இயேசு ஒசேயா 10,8ஆ வரிகளையே நினைவூட்டுகிறார். லூக்கா 11,27ல் ஒரு பெண் மரியாவுக்கு குழந்தை பிறந்ததை நினைத்து மகிழ்ந்ததற்கு மாறாக இப்போது இவர்கள் பிள்ளைப்பேற்றை நினைந்து அழுவார்கள் என்பது, லூக்கா வாசகர்களுக்கு தரும் கடவுளின் இறுதி நாள் பற்றிய பயங்கர காட்சிகளாகும். பாவம் செய்யாத ஆண்டவருக்கு இந்த தண்டனை கிடைத்தால், பாவத்திறகுரிய எருசலேமின் நிலை என்ன என்று கேட்கிறர் லூக்கா. இந்த கேள்விற்கு விடை கி.பி 70இலும், 150 இலும் கிடைத்தது. ஒசேயா 10,8ஆ நிறைவேறியது, உரோமையரின் இரக்கமற்ற இராணுவ கைகளால்.

ஒ. சிலுவையில் அறைதலும் மரணமும் (23,32-49). உயிர்த் தூக்கம். 1. லூக்கா, கொல்கொதா என்ற அரமேயிக்க சொல்லை பாவிக்கமால் மண்டையோடு என்று கல்வாரி மலையின் உச்சியை குறிக்கும் ஒரு பொதுப் பெயரை பாவிக்கிறார். இயேசு இரண்டு குற்றவாளிகளின் நடுவில் சிலுவையில் அறையப்படுகிறார், இதனை மூன்று நற்செய்தியாளர்களும் பதிவு செய்கின்றனர் (காண் எசா 53,12).

2. இயேசுவின் மன்னிப்பு வார்த்தைகள் பின்னாலில் கிறிஸ்தவ மறைசாட்சிகளின் மன்னிப்பு வார்த்தைகளானது, ஸ்தேவானும் இதனையே சொன்னார் (காண். தி.பணி 7,60).

3. இயேசுவின் ஆடைகளை பகிர்ந்து தி.பாடல் 22,19ஐ நிறைவுசெய்கிறார்கள். லூக்கா முழு யூத இனத்தையும் குற்றம் சொல்லாமல், அவர்களின் தலைவர்களையே கடுமையாக சாடுகிறார். லூக்கா, வழிப்போக்கர்கள் இயேசுவை கடவுளின் மெசியா என்று சொல்லி கிண்டல் செய்வாதாக குறிப்பிடுகிறார், இது ஆண்டவரின் திருஉரு மாற்றக் காட்சியை நினைவு படுத்துகிறது (காண் 9,35). மற்றைய நற்செய்தியாளர்கள் இந்த இடத்தில் இயேசுவை, யூதர்களின் அரசர் என்று சொல்லி ஏளனம் செய்ததாக எழுதியுள்ளார்கள். படைவீரர்கள் தங்களது இரண்டாம் தர இரசத்தை அரசரான இயேசுவுக்கு கொடுப்பதன் மூலம், தங்களது பகிடிவதையை காண்பிக்கின்றனர்.

4. திருந்திய குற்றவாளியின் விசுவாச பிரமாணம், லூக்காவிற்கே உரிய பாணி. அவரின் நற்செய்தியின் மையப் பொருளும் இதுதான். பாவிகளையே தேடி மீட்கிற கடவுள், இங்கேயும் அதனையே செய்கிறார். இவரின் மூலம், ஆண்டவரின் அரசு வருகிறது என்பதையும், அதிலே அரசர், இயேசு என்பதையும், மனந்திருப்பியவர்கள் இன்றே அதை அடைவார்கள் என்பதையும், இயேசுவின் மரணம்தான் புதிய விடுதலைப் பயணம் என்பதையும் அழகாக காட்டுகிறார். இன்று (σήμερον செமெரொன் - இன்று) என்பதன் மூலம், இயேசு காலங்களை நிர்ணயிக்கும் கடவுள் என்று காட்டுகிறார். பேரின்ப வீடு என்பது கிரேக்கத்தில் பரதெய்சொஸ் (παράδεισος) எனப் பொருள் படும். இது ஏதோன் தோட்டத்தை நினைவுபடுத்துகிறது.

5. இயேசுவின் மரணத்தில் பல காட்சிகள் நடைபெறுகின்றன. இருள்: தீமையின் நேரம் என உருவகிக்கலாம். திரை கிழிதல்: இயேசுவின் மரணம், கடவுளுக்கும் மனிதருக்கும் இடையிலான திரையை கிழக்கிறது என நினைவூட்டுகிறது. இயேசு, யாராலும் கொலை செய்யப்பட முடியாதவர், அவர் கடவுள், தன் ஆவியை தன்னால் தான் கொடுக்க முடியும் என்று காட்டுகிறார் லூக்கா. சொந்த மக்கள் தம் மெசியாவை புறக்கணிக்க இங்கே ஒரு அன்னியன் அவரை இறைமகனாக அடையாளம் காண்கிறார். மாரடித்து புலம்புவதன் மூலமாக பெண்கள் எப்போதும் லூக்காவில் முக்கியமான இடத்தை பிடிப்பதைக் காணலாம். லூக்கா, கெஸ்தனமெனியில் சீடர்க்ள் இயேசுவை விட்டு ஓடினார்கள் என்று குறிப்பிடவில்லை, ஆகவே அவர்கள் இங்கே தெலைவில் நின்று அனைத்தையும் பார்திருக்கலாம்.

ஓ. நல்லடக்கம் (23,50-56) 1. அரிமத்தேயா எருசலேமிற்கு வடக்கிலிருந்த ஒரு சிற்றூர். யோசேப்பு இங்கே சக்கரியா, எலிசெபேத்து, சிமியோன், அன்னா போன்ற நீதிமான்களின் வரிசையில் இடம்பெறுகிறார். இவரும் இறையாட்சிக்கு காத்திருக்கிறார். புதுக் கல்லறை என்கிற இடத்தில் ஆச்சரியாமாக ஒத்தமை நற்செய்தியாளர்களும் யோவானும் ஒத்துப்போகிறார்கள். தெய்வீக மக்கள் அல்லது அரசர்கள் புதிய கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதை பல வரலாற்று கதைகளில் காணலாம்.

2. பெண்கள் கல்லறையில் இயேசுவை தரிசித்தார்கள் என்று சொல்லி இது வதந்தியல்ல என்கிறார் லூக்கா. ஓய்வு நாளுக்கு எதிராக எவரும் எதனையும் செய்யவில்லை என்பதை அவதானமாக சொல்கிறார் லூக்கா. இது கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் சட்டங்களுக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டை மறுக்கும் வாதத்தை தருகிறது. நறுமண தைலங்களையும் எண்ணைகளையும் ஆயத்தம் செய்கிறார்களே தவிர, அவற்றைக் கொணர்ந்து இயேசுவிற்கு ஓய்வு நாளில் பூசவில்லை என்கிறார்.

ஆண்டவரின் பாடுகளின் வரலாறு கல்லறையில் முடிவடையவில்லை, அது அவரின் உயிர்பிலே நிறைவடைந்து தொடர்கிறது. எருசலேமிலே அவர் நடந்த பாதைகளில் இன்றும் பல ஆயிரம் மக்கள் தினம் தினம் நடக்கிறார்கள், ஆனால் அழுகையும் ஒப்பாரியும் இன்றும் நின்றபாடில்லை.

இந்த குருத்து ஞாயிறிலே, கழுதைக் குட்டியில் வருகின்ற ஆண்டவர், எங்களை எமது பாவங்கள், பலவீனங்களில் இருந்து மீட்பாராக. ஆமென்.