இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germany



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலம் 22 ஆம் ஞாயிறு

புதிய சீடத்துவம்

எரே 20:7-9
உரோ 12:1,2
மத் 16: 21-27

உலகத்தை ஆக்கிரமிப்பதில் நமக்கு ஒரே ஒரு போட்டி வைரஸ்தான் ‘- நோபல் பரிசு பெற்ற ஜோஷவா லெடர்பெர்க்

வைரஸ்க்கு எதிராக..

பிறந்த குழந்தைக்கு15 வது நாள்... BCG.... 45 வதுநாள் DPT + Polio drops…. 75வதுநாள்;...DPT + Polio drops… 105வது நாள் DPT + Polio drops..150வது நாள்;.. DT பத்தாவது மாசம் தட்டம்மை… MMR இவையெல்லாம் வைரஸ்க்கான தடுப்பூசிகள்!!!

பொதுவாகவே நாம் எல்லோரும் வைரஸ் என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ‘வைரஸ்’ என்றால் என்ன என்பது எப்படி இருக்கும்? எப்படி செயல்படும் என்று எவருக்கும் அவ்வளவாக தெரியாது. இன்றைய நற்செய்திக்கும் வைரஸ்க்கும் தொடர்பு இருப்பதால் வைரஸ் பற்றி அறிந்துகொள்வோம்! வைரஸ் என்னும் நுண் கிருமி, பாக்டீரியாவைவிட உருவத்தில் சிறியது. அதற்கு உயிர் இருக்கிறதா என்பது உயிர் என்றால் ‘என்ன’ என்பதைப் பொறுத்தது.

பாக்டீரியா போல வைரஸ்க்குத் தன்னைத்தானே இரட்டிப்பாக்கிக் கொள்ளும் தன்மை கிடையாது. ஆனால் அதற்கு, ‘ஆர்என்ஏ, டிஎன்ஏ’ உண்டு. தன்னைச் சுற்றிலும் கொஞ்சம் ‘புரோட்டின்’ வைத்திருக்கிறது. இந்தப் புரதங்களைப் பார்த்து மனித செல்கள் ஏமாந்து போகின்றன. என்னடா.. நம்மிடம் உள்ளதுபோலவே இருக்கிறதே... நம் ஆள்தான் என்று வைரஸ்கிருமியை உள்ளே அழைத்துக்கொள்கிறது. உள்ளே நுழைந்ததுதான் தாமதம், இந்த சதிகார வைரஸ்க்கு உயிர் வந்துவிடுகிறது. செல்லின் ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்தித் தன் இஷ்டத்திற்கு இரட்டிப்பாகி, செல்லை மெல்ல அழித்து தன் ராஜ்யத்தை நிறுவுகிறது.

இப்படி வைரஸ்-ஆல் வரும் வியாதிகளுக்கு நிவாரணமருந்து எதுவும் கிடையாது. பெரும்பாலும் தடுப்பு ஊசி, தடுப்பு மருந்துதான் சாத்தியம். பாக்டீரியாவால் வரும் வியாதிகளுக்கு ‘ஆன்டிபயாடிக்ஸ்’ கொடுத்தால் அந்த மருந்து கிருமியை மேலே வளர விடாமல் தடுக்கிறது. பாக்டீரியா என்பது தனி அடையாளம் கொண்டது. வைரஸ் அப்படியல்ல: செல்லுக்கு உள்ளே புகுந்து உள்ளே நுழைந்து அட்டகாசம் செய்யும் அரக்கன். அதைக் கொல்ல செல்லையே கொல்லவேண்டும். இதனால் நம்முடைய வைரஸ் தடுப்பு சக்திகளை அதிகரிப்பதைத் தவிர, வேறுவழியில்லை: எய்ட்ஸ்க்கு மருந்து ‘தடுப்பு மருந்து’ இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வைரஸால் வரும் வியாதி மிக வேகமாகப் பரவக்கூடியது. இன்னொன்றையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்: அதாவத, ஒரு செல் இரட்டிப்பாகும்; போது படியெடுப்பதில் நூறு கோடி முறைக்கு ஒரு தடவைதான் பிழை ஏற்படும்: வைரஸ் கிருமியின் இரட்டிப்பில் அப்படியில்லை: மிக அதிகமான பிழைகள்! இரண்டாயிரத்திற்கு ஒருமுறை பிழை ஏற்பட்டு, ஒரு ‘புதிய வைரஸ்’ உற்பத்தியாகிவிடும். இதனால் மனித இனம் புதுப்புது வைரஸ்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, இன்ஃப்புளுவென்ஸாக்காக வைரஸ் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வேஷம் போடுகிறது. ஆகையால் புதுப்புது தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுகிறது. இப்படி வைரஸ் நன்மை தருவது போல தோன்றி ஆனால், தீமை தருவதாக.. கொஞ்சம் இடம் கொடுத்தால் மடத்தையே பிடுங்குவதாக.. புதிதுபுதிதாக வடிவம் எடுத்து அழிக்க முடியாததாக.. மாறிவிடுகிறது.

பேதுருவின் தடுமாற்றம்

‘புனித பேதுரு’ ...இப்படிதான் சென்ற வார நற்செய்தியில் ‘ஹீரோ’வாக.. ‘பாறை’யாக இருந்தார்: ஆனால் இன்றைய நற்செய்தியில் ‘தடைக்கல்லாக’ தடுமாறிப்போகிறார். தலைவராக அறியப்பட்டவர் ‘சாத்தானாக’ மாறிப்போகிறார். கடவுளுடைய எண்ணங்களைப் பற்றி நினைத்தவர் ‘மனிதருடைய எண்ணங்களைப் பற்றி சிந்திக்கிறார். ஒரு வைரஸ் போன்று செயல்படுகிறார். ஆகையால் ‘என் கண் முன் நில்லாதே சாத்தானே!’ என்று எச்சரிக்கப்பட்டு, ‘புதிய சீடத்துவம்’ என்ற தடுப்பூசி போடப்படுகிறது.

கிராமங்களில் விவசாயிகள் விவசாயம் செய்கிற போது ‘பாய்ச்சலும் காய்ச்சலுமா இருந்தாதான் பயிர் ஒழுங்கா வளரும்’ என்பார்கள். பாய்ச்சல் என்பது போதுமான தண்ணீர் பாய்ச்சி பயிரை வளர்ப்பது, அப்படியே கொஞ்சம் காய்ச்சல் போட்டு சேற்றினை இறுகச் செய்து, பயிரை வளர்ப்பது. இப்படி செய்யும் போதுதான் பயிரின் வளர்ச்சி பக்குவப்படும். போன வார நற்செய்தி ‘ பாய்ச்சல்’ என்றால் இந்தவார நற்செய்தி ‘காய்ச்சல்’. இது இரண்டுமே சீடத்துவத்திற்கு அடிப்படை. குட்டும் பாராட்டும் ஒரு சீடனை பக்குவப்படுத்தும்.

புரோட்டின் கொண்டிருக்கிற வைரஸைப் போல ஆண்டவர் இயேசுவை தனியே அக்கறையோடு அழைத்து, பாசத்தோடு கடிந்து, ‘ ஆண்டவரே! வேண்டாம்! இப்படி உமக்கு நடக்கவே கூடாது’ என்று எருசலேமில் பாடுகள் பட்டு;, சிலுவை மரணத்தை தழுவப்போவதை தடுப்பது போல தோன்றும். ஆனால் இதனை அனுமதித்தால் மீட்பு என்பது சாத்தியப்படாமல்போகலாம். இப்படியே இந்த வைரஸை வளரவிட்டால் திருச்சபையை இது அழித்து சின்னபின்னமாக்கும் என்பதை அறிந்து, முளையிலேயே கிள்ளி எறிய முற்படுகிறார். பேதுருவைப் பார்த்து, ‘என் கண்முன் நில்லாதே! சாத்தானே! என்று கடுமையாக கடிந்துகொள்கிறார். இந்த வைரஸை அழிக்க சிறந்த தடுப்பூசி கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணுவதுதான். மனிதருக்கு ஏற்றவைப் பற்றி எண்ணும் போது நாம் பலமுறை சோடைப் போகிறோம்.

ஆதிப்பெற்றோர் ஆதாமும் ஏவாளும் கடவுளுக்கு ஏற்றவைப்பற்றி எண்ணவில்லை: மனிதனுக்கு ஏற்றவைப் பற்றியே எண்ணினார்கள்: ஆகையால் தான் சாத்தானுக்கு அடிமையானார்கள். கடவுளுடைய எண்ணம் தோட்டத்தில் எந்த மரத்திலிருந்தும் விருப்பம் போல உண்ணலாம்: ஆனால் நன்மை தீமை அறியும் மரத்தை மட்டும் தவிர்த்திடு என்பதுதான். தடுப்பூசி- நீ உண்ணும் நாளில் சாவாய். ஆனாலும்கூட சாத்தான் ‘நீ கடவுளைப்போல ஆவாய்’ என்ற வைரஸைக் கொடுத்தது: பறித்தார்கள்: உண்டார்கள்: தண்டணைத்தீர்ப்பைப் பெற்றுக்கொடுத்தார்கள்.(தொநூ 2:16,17, 3:6).

கடவுளின் நாசீராக அறியப்பட்ட சிம்சோன், கடவுளுக்கு ஏற்றவைப் பற்றி எண்ணாமல், தான் காதலிக்கும் தெலீலாவுக்கு ஏற்றவைப் பற்றி எண்ணி, தன் வலிமையின் ரகசியத்தை படுக்கையில் அவளோடு பகிர்ந்துகொண்டதால், பெலிஸ்தியரின் கையில் அகப்பட்டு அகால மரணமடைந்தார்.

இஸ்ராயேலின் பேரரசனாக புகழப்பட்ட தாவீதுகூட, ஆண்டவருக்கு ஏற்றவைப் பற்றி எண்ணாமல், அதாவது ஆண்டவருடைய வலிமையின் மேல் நம்பிக்கைக்கொள்ளாமல், மனிதருக்கு ஏற்றவைப் பற்றி சிந்தித்து தன் மக்களை மட்டும் நம்பினார்: மக்கள் தொகை கணக்கெடுக்க ஆணையிட்டார். ஆண்டவரின் சினத்திற்கு ஆளானார். இதனால், கொள்ளை நோய்க்கு பல்லாயிரம்பேர் மாண்டனர் (1குறி21).

கடவுளுக்கு ஏற்றதைப் பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவைப் பற்றி எண்ணுகிறபோதெல்லாம் இப்படிதான் அழிவின் விளிம்பில் நாம் தத்தளிக்கிறோம்.

யோனா நல்ல உதாரணம். கடவுளின் எண்ணத்திற்கேற்ப செயல்படாமல் இருக்க கடலில் தப்பிக்க முயன்றார்: ஆனால் ஒரு பெரிய மீனின் வாயிலாக அவருடைய எண்ணத்தை நிறைவேற்ற நிர்பந்திக்கப்பட்டார். கடைசியில், நினிவே மக்களுக்கு கடவுளின் செய்தியை அறிவித்து மனந்திரும்ப அழைக்கப்பட்டவர், அந்தப் பணியைச் செவ்வனே செய்தார்: மக்கள் மனந்திரும்பினர்: கடவுள் தன் விருப்பப்படி அவர்களைத் தண்டிக்க வில்லை: பொணங்கிக் கொண்டு போய் ஆமணக்குச் செடியின் கீழ் அமர்ந்துகொண்டார். பாடம் கற்பிக்கப்பட்டது: (யோனா 4:5-11). மனிதருடைய எண்ணப்படி செயல்படாமல் கடவுளின் எண்ணப்படி செயல்பட பாடம் கற்றுக்கொள்கிறார்.

ஆபிரகாம் தனக்கு உண்டான சோதனையில் கடவுளுக்கு ஏற்றவைப்பற்றி எண்ணி சிந்தித்து அதற்கேற்ப செயல்பட்டார். ஈசாக்கை பலி கொடு என்ற கடவுளின் எண்ணத்த அறிந்து, தன் ஒரே மகனையும் பலி கொடுக்க துணிந்தார்: மனிதருக்கு ஏற்றவைப் பற்றி எண்ணாமல், கடவுளுக்கு ஏற்றவைப் பற்றி எண்ணியமையால் கடவுளால் பாராட்டப்பட்டு, வானத்து விண்மீண்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் வழிமரவைக்கொடுத்து ஆசிர்வதிக்கப்பட்டார்.

பேதுரு, ‘நீரே மெசியா வாழும் கடவுளின் மகன்’ என்று சான்று பகர்ந்த போது, ‘விண்ணகத்தில் உள்ள தந்தையே இதனை வெளிப்படுத்தினார்’ என்று உச்சி முகர்ந்து பாராட்டுகிறார். கடவுளின் எண்ணத்தோடு பேதுரு ஒத்துப்போகிறார் என்று அனைவருக்கு சுட்டிக்காட்டுகிறார். பாடுகள் படவேண்டும்: கொல்லப்படவேண்டும் என்று தன் எருசலேம் பயணத்தைப் பற்றி பேசுகிறபோது, பேதுரு, ‘வேண்;டவே வேண்டாம்’ என்று தடையாக நிற்கிறார். பாலைவனச் சோதனையில் சாத்தான் ஆண்டவருக்கு அறிவுறுத்தியது போல (மத் 4:3, 4:6) பேதுருவும் ‘நீர் இறைமகன் என்றால்’ .. இது வேண்டாம்: இப்படி உமக்கு நடக்கவே கூடாது அறிவுறுத்துகிறார்: ஆகையால் தான், ‘என் கண் முன் நில்லாதே சாத்தானே’ என்று (மத் 4~10) என்று பாலைவனச் சோதனையில் சாத்தான் கண்டனத்திற்கு ஆளானதுபோல் ஆளாகிறார்.

இயேசுவின் காலத்தில் மெசியாவைப் பற்றிய எதிர்நோக்கு கனலாய் கனன்று கொண்டிருந்தது: தாவீதின் குடும்பத்தில் தோன்றுவார் என்று (1சாமு7:16, எசா11:1-10) மக்கள் நம்பினர். இயேசுவின் காலத்தில் இரண்டு விதமான மரபுகள் வழக்கில் இருந்தன: ஒரு பிரிவனர்,உலகில் பாவம் பெருகிவிட்ட காரணத்தினால், மெசியாவரமாட்டார்: ஆனால் மக்களெல்லாம், மனந்திரும்பி, திருச்சட்டத்தை முறையாக கடைப்பிடித்தாலும், ஓய்வு நாளை அனுசரித்தாலும் மெசியா வருவார் எனவும், இன்னொரு பிரிவினர், மெசியா பெத்லேகேமில் ஏற்கனவே பிறந்துவிட்டார்: ஆனால் எங்கிருக்கிறார்: எப்படி வளர்கிறார் என்று ஒருவரும் அறியார்: இருப்பினும் திடீரென்று தன் படைகளோடு தன் படைகளோடு தோன்றி அரசைக் கைப்பற்றுவார். தன் ஆட்சியுரிமை நிலைநாட்டுவார் எனவும் நம்பினர்.

இதே பாணியில், தீவிரவாதிகளில் சிலர் தங்களைத் தாங்களே அரசு மெசியாவாக அறிவித்துக் கொண்டு, வலம் நிகழ்வுகளும் உண்டு: இவர்கள் உரோமை படையின் தண்டனைக்கு ஆளாயினர். ஒர்; உதாரணம்: கிபி 6 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக்கு எதிராக மெசியாவாக புரட்சி செய்து உரோமைப் படைகளால் கொல்லப்பட்ட கலிலியேனான யூதா.

இப்படி அரசியல் அடிமைத்தனத்திற்கு எதிராக செயல்படும் அரசியல் மெசியாவைத்தான் சீடர்கள் எதிர்பார்த்தார்கள்! பேதுரு மட்டுமல்ல: செபதேயுவின் மகன்களான யோவானும், யாக்கோபும் கூட இப்படிப்பட்டவர்களாகத்தான் இருந்தார்கள் (மத்20:20). ஆகையால் ‘என் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? என்ற கேள்வியைக் கேட்கிறார் (மத்20:22).

எனவே, ஆண்டவர் இயேசுவே ‘அரசியல் மெசியா’ என்பதை தகர்த்தெறிந்து, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும் ‘துன்புறும் ஊழியனாகிட ஆசிக்கிறார்: ஆகையால்தான் தன் பாடுகளை மூன்றுமுறை முன்னறிவிக்கிறார். பேதுருவுக்கு இன்றைய நற்செய்தி முதல் தடுப்பூசியாகும். இரண்டாவது தடுப்பூசி பாடுகளின் பாதையில் அவரது கனிவான பார்வை (லூக்22:63) மூன்றாவது தடுப்பூசி ;என்னை அன்புச் செய்கிறாயா?;’ (யோவா21:15-19).இவை இறுதி வரை வேலைச் செய்கிறது. ஆகையால் இயேசுவைப்போல மரணமடையதகுதியில்லை என்று சொல்லி, கூடுதலாகவே,தலைகீழாக சிலுவை மரணத்தை தழுவுகிறார். ஆண்டவர் போட்ட இந்த தடுப்பூசி திருச்சபைக்கு நல்ல தலைமையை கொடுத்தது: சிறந்த சீடத்துவத்தை அளித்தது.

இன்றைய நற்செய்தி புதிய சீடத்துவத்திற்கான அழைப்பு . என் கண்முன் நில்லாதே என்பதை ஆங்கிலத்தில் புநவ டிநாiனெ அந என்று சொல்வார்கள். எனக்குப் பின்னே என்று பொருள். மன்னிப்பு நிறைந்த மனதுடன் ‘என் பின்னே வா’ என்று அழைப்பதுன் மூலம் புதிய சீடத்துவத்தில் பேதுரு அடியெடுத்து வைக்கிறார். கடவுளின் திருவுளம் எது என்று அறிந்து எது நல்லது எது உகந்தது எது நிறைவானது என்பதை தெளிந்து நடக்க முற்படுகிறார் (இரண்டாம் வாசகம்). ஆகையால் நாமும் பேதுருவைப் பின்பற்றி, புதிய சீடத்துவத்தில் அடியெடுத்து வைக்க முற்படுவோம்.