இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germany



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலம் 21 ஆம் ஞாயிறு

எண்ணிக்கை அல்ல! எண்ணமே!

எசா 22:19-23 உரோ 11:33-36 மத் 16:13-20

‘எண்ணிக்கை முக்கியமா? எண்ணம் முக்கியமா? என்கிற கேள்வி வெகுநாட்களாக நம்மிடம் இருந்து வருகிறது. எண்ணிக்கையே முக்கியம் என்றால் காகம்தான் நம்முடைய தேசிய பறவையாக இருக்க வேண்டும்’

என்று அறிஞர் அண்ணா ஒருமுறை குறிப்பிட்டார்.

‘கூட்டங்களால் என்ன சாதித்து விட முடியும்? உலக வரலாற்றைப் படைத்தவர்கள் மிகச் சிலரே. அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மற்றவர்கள் வெறும் சந்தைக்கூட்டமே’ என்று விவேகானந்தர் ஒரு முறை குறிப்பிட்டார்.

மேற்கூறிய இந்த இரண்டு மேற்கோள்களுமே ஆழ்ந்த சிந்தனைக்குரியவை.

ஒரு துளி தயிர் ஓரு பானை பாலை தயிராக்கு முடியுமெனில்...
ஒரு சொட்டு நறுமண திரவியம் ஒர் அறையைச் சுகந்தமாக்கிவிட முடியும்மெனில்..
ஒரு நறுமலர் நமது தோட்டத்தை அழகாக்கி விடும் எனில்..
ஏன் ஒரு தலைவனால் உலகையே மாற்ற முடியாது? .

ஒர்லேண்டோ மசோட்டா!

இது புகழ்பெற்ற ஒருவரின் புனைப் பெயர்.
இந்தியா சுதந்திரம் அடைந்தே தீர வேண்டும் என்ற சுதந்திர வேட்கையோடும்,என் தாய்நாட்டிற்காக எதையாவது நான் செய்தே ஆக வேண்டும் கடமை உணர்வோடும், 1941 ஆம் ஆண்டு வீட்டுச்; சிறையிலிருந்து அவர் வினோதமாக தப்பித்தார். பாதசாரியாகவே நடந்துச் சென்று ஆப்கான் எல்லையை அடைந்து, அங்கேயிருந்த இத்தாலியர்களின் உதவியோடு ஒரு புனைப்பெயரில் பாஸ்போர்ட் எடுத்துக் கொண்டு காபூலிலிருந்து, கார் மூலமாக ரஷ்ய எல்லைக்குச் சென்றார். அங்கிருந்து, சாமர்கண்ட்க்கு பயணித்து, பின்னர் ரயில் மூலம் மாஸ்கோ சென்றார். பிறகு அங்கிருந்து ஜெர்மன் தூதுரகத்தின் உதவியோடு பெர்லினை அடைந்தார். கிட்டதட்ட இரண்டே மாதங்களில் இவை அனைத்தும் சாத்தியமானது. ‘ஐஎன்ஏ’ என்று சொல்லப்பட்ட இந்திய தேசியப் படையை உருவாக்க இந்த பயணமே படிக்கல்லாக அமைந்தது. ஜெர்மனியில் இந்தியன் லீஜன் (Indian Legion) வட ஆப்பிரிக்காவில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்தியர்களைக் கொண்டு உருவானது. ‘சீரும் புலியே’ அதன் சின்னமானது. ‘விடுதலை இந்தியா’ என்பதே அதன் விருதுவாக்கானது.

ஜெர்மனியிலிருந்து அவர் ஜப்பானுக்கு நீர் மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தார். பிறகு அதிலிருந்து ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பலுக்கு தாவி ஜப்பானை அடைந்தார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சூழலில் அவர் தலைக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் வைத்த விலை 1000 பவுண்டுகள். உயிரை துச்சமென பணயம்வைத்து, தாய்நாட்டின் விடுதலைக்காக கஷ்டப்பட்ட அவர் வேறு யாருமல்ல. நீங்கள் நினைத்த மாதிரியே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான். அவர் சூடிக்கொண்ட புனை பெயர்தான் ‘ஒர்லேண்டோ மசோட்டா’. இந்த பெயர்மாற்றம்தான் இவரை எல்லைத் தாண்ட வைத்தது: இந்தியா சுதந்திரம் அடைய தளபதியாக்கியது. இங்கே கவனிக்கத்தக்கது ஒரு தனிமனிதனின் எண்ணமே!

எண்ணிக்கை அல்ல .. எண்ணமே மிகவும் முக்கியம்!
புனித பேதுரு .. எண்ணத்தின் வலிமை! உண்மையைச் சொன்னால் அவர் ‘பாறை’!
இவருடைய தலைமைத்துவ பயணம் தனித்துவம் வாய்ந்தது: நிறைய படிப்பினைகளை உள்ளடக்கியது. மேலோட்டமாக பார்த்தால் புனித பேதுருவைப் பற்றிய தவறான எண்ணமே தலை தூக்கும். ஆனாலும், அவருடைய ஆளுமை எல்லோருமே கற்க வேண்டிய பாடமாக அமைகிறது.

புனித பேதுருவின் பணித்துவம்

‘ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்’ என்று காலில் விழுந்து கெஞ்சியவர்தான் இந்த சீமோன்! இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனாலும் ஆண்டவர் இயேசு ‘அஞ்சாதே: இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்’ என்று சொல்லி ஆண்டவர் இயேசு அழைத்தார். இங்கே ‘அஞ்சாதே’ அவர் அளிக்கிற தைரியம் இவருடைய தலைத்துவத்திற்கு முகத்துவாரமாக அமைகிறது. ‘மனிதரைப் பற்றி..உலகைப்பற்றி.. ஏன் எதையும் யாரையும்பற்றி கவலைப்படாதே! இந்த சமுதாய படிநிலைகளைப் பற்றி கவலைப்படாதே! என்று சொல்லி; மனித உள்ளத்தில் இருப்பதை அறிந்தவராக (யோவான் 2:25) இயேசுகிறிஸ்து செயல்படுகிறார். திருச்சபையின் தலைவராக.. தன் வாரிசாக இவரை நியமிக்கிறார்.

இது பதவிக்கான நியமனம் அல்ல: மாறாக பணிக்கான நியமனம். அதிகாரத்திற்கான நியமனம் அல்ல: மாறாக, அரணைவதப்பதற்கான நியமனம். இது ஆட்சிக்கான நியமனம் அல்ல: மாறாக (இயேசுவுக்கு) சாட்சிக்கான நியமனம். ‘பதவி’ என்பது ‘பணி’புரிவதற்காக என்பதை ஒருவரும் ஒருபோதும் மறத்தலாகாது.

தன்னுடைய பணியிடையே, தன்னுடைய பாதையைப் பற்றி தெளிவையும், நோக்கத்தையும் தன்னுடைய சீடர்களும் புரிந்து கொண்டு தன்னுடன் இணைந்து எருசலேமை நோக்கி பயணிக்க வேண்டும் என்று ஆசித்தவராக, ஆண்டவர் இயேசு, இன்றைய நற்செய்தியில் செயல்படுகிறார். இதனைப் புரிந்துகொள்ள இன்றைய முதல்வாசகம் உதவுகிறது.

கிமு 715-687 ஆண்டு காலகட்டத்தில் பாலஸ்தீனம் கடுமையான அரசியியல் நெருக்கடிக்கு ஆளானது. அண்டை நாடான அசீரியா வலிமையான நாடாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. பயந்துபோன அரசன் அதிலிருந்து தப்பிக்க பாலஸ்தீனத்தை எகிப்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள முயன்றார். இதற்கு தலைமை அமைச்சர் ஷெப்னா மூலக்காரணமானார். ஆனால் இறைவாக்கினர் எசாயோவா, வேண்டவே வேண்டாம்: கடவுளிடம் சரணடையுங்கள் என்று இறைவன் சார்பாக எச்சரித்தார். இந்த பின்னனியில்தான் இன்றைய முதல்வாசகம் அமைகிறது. ஷெப்னாவிற்குப் பதிலாக, எலியாக்கீம் தலைமை அமைச்சர் பதவியில் அமர்த்தப்படுவார் என்று விளக்கி, அவரது பணியின் மேன்மையையும், அதிகாரத்தையும் விளக்குகிறார். இந்த பின்னனியில்தான் இன்றைய நற்செய்தியைப் புரிந்துகொள்வது நலம் பயக்கும். ஆண்டவரோடு இணைந்து செல்லாத பதவி (பணி) இருந்தும் பயனொன்றுமில்லை: அழிவே அதன் முடிவு.

பதவி என்பது கடமையுணர்வின் முகவரி: அதிகாரமில்லாத செயல்பாட்டிற்கான ஆணிவேர். அடுத்தவர் நலனுக்காக உழைக்க இறைவன் கொடுத்த ஒப்பற்ற வரம். ஆனால் ‘பதவி’ என்பது ‘பணிவு’இன் இன்னொரு முகமாக அமையாத பட்சத்தில் பிரச்சனைகள் நிச்சயம் தலைதூக்கும். இங்கே சுயநலம் வேர்விடும்போது, ‘பாறை’யும்கூட சுக்குநூறாகிபோகலாம்: ஷெப்னா இதற்கு நல்ல உதாரணம். தன் கோட்டை, கொத்தளத்தை மட்டுமே சொந்தத்தை மட்டுமே மையப்படுத்தி, செல்வத்தைச் சேகரித்தான்: தனக்கென்று வலிமையான கோட்டையைக் எருசலேமுக்கு எதிராக கட்டியெழுப்ப முயன்றான்: பதவியைக் கொண்டு பணி புரியாமல், ஆணவத்தின் முகவரியாக விளங்கினான் தண்டனைக்குள்ளானான்.

இயேசுவின் அணுகுமுறை

வடக்கு கலிலேயா பகுதியில் உள்ள பிலிப்பு செசாரியா என்னுமிடத்தில்,, அதுவும் இரண்டாண்டு சீடத்துவ பயிற்சி முடிந்த நிலையில், விசுவாச அறிக்கை வெளியிடும்படி கேட்கிறார். இது விசுவாச சோதனை. இரண்டு விதத்தில் -ஐனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டும், பாராளுமன்ற முறையிலும் - சோதனைச் செய்கிறார்.

முதலாவதாக, ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு, ‘மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?’ என்று பெருவாரியான மக்களின் கருத்தைக் கேட்டறிய முற்படுகிறார். கடவுள் உயிர்பெற்று எழச் செய்த திருமுழுக்கு யோவான் என்று அரசன் ஏரோது தவறாக நம்புவதையும் (மத் 14:2) இயேசு அறிவார்.பெரும்பாலான மக்கள் தன்னை ‘இறைவாக்கினர் எலியா’ என்று தவறாக புரிந்துகொண்டதையும்; இயேசு அறிவார் (மத்17:10-11). இருப்பினும், மக்களின் கருத்தை அறிவது: பெரும்பாலானவரின் கருத்தை அறிவது ஜனநாயகப்பாதை. அதனை அறிந்து கொள்கிறார். இங்கும் திருப்தி இல்லை.

அடுத்த கட்டம் நம்முடைய பாராளுமன்ற அணுகுமுறையில், மக்களின் பிரதிநிதிகளைக் கலந்தாலோசிப்பது. ஆகையால் தான், ‘நீங்கள், நான் யார் என்று சொல்கிறீர்கள்?’ என்று கேட்கிறார். இது அனுபவத்தின் அடிப்படையில் பதில் சொல்ல நல்ல வாய்ப்பு. அவருடன் உண்டு உறங்கி, உறவாடி, மகிழ்ந்து, போதனைகளை, அவர் கற்பித்தவற்றையெல்லாம் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு சீடரும் அறிந்திருக்கிறார்கள். ஆனாலும்கூட எவருமே பதில் தர முன்வரவில்லை. பொருளாளரான யூதாசுக்கு பணத்தாசை, வலப்புறம், இடப்புறம் என்று போட்டிப்போட்ட யோவானுக்கு, யாக்கோபுக்கு பதவி ஆசை.. என. ஒவ்வொருவருமே, இவ்வுலக அடிமைத்தனத்திலிருந்து மட்டும் விடுதலை தரக்கூடிய மெசியாவை எதிர்பார்த்திருந்த நிலையில்,மெசியாவை பாடுகள் படும் மனுமகனாக என்பது ஏற்றுகொள்ள இயலாமல் போகிறது. அனைவரும் ஊமையாகிப் போகிறார்கள். அங்கேதான் சீமோன் மௌனம் கலைகிறார்.

அனைவரும் அறிய ‘நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்’ என்று வாயார சான்று பகர்கிறார். சொன்னவுடனே, ‘நீர் பேறு பெற்றவன்’ என்று பாராட்டிய இயேசு, உன் பெயர் பேதுரு-பாறை: இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் என்று உறுதியளிக்கிறார். Pநவசய என்ற கீரேக்க சொல்லடலும் Pநவசரள என்ற லத்தின் சொல்லும் உயர்திணைக்கு முன்பாக, நபர்களின் பெயர்களுக்கு முன்பாக எப்போதுமே பயன்படுத்தப்பட்டதில்லை. ஆனால் இயேசு அந்த ‘கேபா’ என்ற அரேமேய சொல்லை சீமோனுக்கு தருகிறார் என்று சொன்னால் அதில் அர்த்தம் ஆயிரமுண்டு, அறிவாளியாக பாறை மீது வீடு கட்டியவராக அவர் செயல்படுவார் என்று நம்பினார்.

புனித பேதுரு- மாபெரும் தலைவர்

மனித பலவீனத்தால் பல முறை தடுமாறினாலும் தடுத்தாட்கொண்டு () பேதுரு நம்பிக்கை தளராதிருக்க உருக்கமாக இயேசுவே மன்றாடுகிறார் என்றால் இவர் மீது அவர் கொண்டிருக்கிற நம்பிக்கை அபாரமானது. எனவே தான் மீண்டும் மீண்டும் ‘நீ என்னை அன்புச் செய்கிறாயா? என்று கேட்டு, கேட்டு, மந்தையை முழுமையாக ஒப்படைக்கிறார். பாறை என்று இயேசு நம்பிய அவர் வீண் போகவில்லை. ஆண்டவர் உயிர்த்தார் என்பதை அறிய கல்லறைக்கு விரைந்து செல்லும்போது அவருடைய தலைமைத்துவம் வளர ஆரம்பிக்கிறது: எருசலேமில் பெந்தகோஸ்தே பெருவிழாவில் தைரியமாக சுட்டு விரல் நீட்டி உரையாடி மூவாரயிரம் பேருக்கு திருமுழுக்கு கொடுத்த போது, அவரது தலைமைத்துவம் குடத்தில் மேலிட்ட விளக்கானது: என்னிடம் வெள்ளியும் பொன்னும் இல்லை: என்னிடம் உள்ளதைக் கொடுக்கிறேன்: நாசரேத்துவின் பெயரால் எழுந்த நட என்று எருசலேம் ஆலயத்தில் கால் ஊனமுற்றிருந்தவரைப் பார்த்து சொன்னபோது குன்றின் மேலிட்ட விளக்கானது: எருசலேம் திருச்சங்கத்தில், திருமுழுக்கே போதும் என்று புறவினத்தாரை ஏற்றுக்கொள்ள முன்வந்தபோது தான் ‘பாறை’ என்பதை எல்லோருக்கும் எண்பித்தார். ஆகையால்தான், இயேசுவை அன்புச் செய்ததன் அடையாளமாக தலைகீழாக சிலுவை மரணத்தை தழுவினார்.

எண்ணிக்கை எண்ணமே முக்கியம். குடும்பத்தில், அன்பியத்தில், பங்கில், சமுதாயத்தில், அரசியலில், பஞ்சாயத்தில், நகராட்சியில்.. நல்ல தலைவர்களாக தலைவிகளாக விளங்க எண்ணிக்கை அல்ல: எண்ணமே மிக முக்கியம்.