இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germany



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








தூய ஆவி பெருவிழா

‘ வாழ்வின் ஆதாரம் தூய ஆவி’

திப 2:1-11
1கொரி 12:3-7,12.13
யோவா 20:19-23

அமெரிக்காவில் புகழ்பெற்ற ஏரி மிக்ஸிகன் ஏரி. அந்த ஏரியில் ஜனவரி மாதத்தில் தண்ணீரெல்லாம் உறைந்துபோய், பனிக்கட்டி படர்ந்திருக்கும். அந்நேரத்தில் சிறியோரும் பெரியோரும் பனிச் சறுக்கு விளையாட்டு விளையாடுவது வழக்கம். 1984 ஆம் ஆண்டு ஜனவரி 15ந்தேதி 4 வயது பையன் ஜிம்மி தன் தந்தையுடன் விளையாட ஏரிக்குப் போனான். விளையாடிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று காணவில்லை. பிளந்து போன பனிக்கட்டிகளுக்கிடையே ஆழத்தில் மாட்டிக்கொண்டான். அவனைக் கண்டு பிடிப்பதற்கே 20 நிமிடங்கள் ஆயிற்று. பின்னர் இழுத்து வெளியே போட்டால் சிறுவன் விரைத்துப்போய் உறைந்து கிடந்தான். மூச்சும் இல்லை: இதயத்துடிப்பும் நின்று போயிருந்தது. இருந்தாலும் அங்கே இருந்தவங்க முடிஞ்ச வரைக்கும் என்னென்னவோ பண்ணிப் பார்த்தாங்க. பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரியிலேர்ந்து டாக்டர்கள் மின்னல் வேகத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கினார்கள். ஹார்ட் மஸாஜ் செஞ்சாங்க. ரத்தகுழாய் வழியா மருந்தெல்லாம் கொடுத்து பார்த்தாங்க. நுரையீரலுக்குள்ளே காற்றெல்லாம் பம்ப் செஞ்சு போராடிப்பார்த்தாங்க. ஜிம்மி உடம்பெல்லாம் ஹீட் லேம்ப்களை பரப்பி, உடம்பை சூடாக்கினாங்க. ஆனாலும் இதயத்தை ஓட வைக்கனுமே. அதுக்காக ஐந்து முறை எலக்ட்ரிக் ஷாக் கொடுத்துப் பார்த்தாங்க. எந்த முன்னேற்றமும் இல்லை
இருந்தாலும்... இருந்தாலும் ... கொஞ்ச நேரத்தில ஒரு நம்பிக்கை வந்துச்சு. என்ன நடந்ததுனா ... இறந்து போன நிலைமையிலிருந்த அந்த பையன் கோமா நிலைக்கு வந்தான். மூச்சு மட்டும் லேசா ஓடிக்கிட்டிகருக்கு. அப்படியே பையனை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போனாங்க. மிக்ஸிகனில் உள்ள குழந்தைகளுக்கான மெமாரியல் மருத்துவமனையில் சேர்த்தாங்க. இந்த கோமா ஸ்டேஜ்லேர்ந்து திடீரென்று மீண்டு வந்தாலும் அது ஆபத்தில முடியும். அதனால மருந்தெல்லாம் கொடுத்து மயக்க நிலையிலேயே வச்சிருந்தாங்க. சுமார் 80 நாட்களுக்கு பிறகு, மாற்றம். பையன் கண்ணைத் திறந்தான். அப்புறம் ஒரு வாரம் கழிச்சு, சிரிச்சான்.நான்கு மாதங்களுக்குப் பிறகு கை - காலை அசைச்சிருக்கான். ஆறு மாதத்திற்குப் பிறகு வீடு திரும்பினான். 20 நிமிசம் ஐஸ் தண்ணியில மூழ்கியிருந்தால் அதுவும் ஆக்ஸிஜன் இல்லாத நிலைமையில மூளை கெட்டுப் போயிடும். பிழைக்கவே முடியாது. இது மருத்துவ உலகில் இன்றும் பேசப்படுகிற ஒரு சாதனை , மைல்கல் , அதிசயம்.

மரணத்தின் நிழலில் ஒரு வாழ்வு.

இயேசுவின் மரணத்தோடு எல்லாம் முடிந்தது என்றிருந்தது. உயிர்ப்பு ஒரு நம்பிக்கை விதைத்தது. ஆனாலும் பயம், சிலுவை-மரண பயம் திருத்தூதர்களைவிட்டு அகன்றபாடில்லை. நாற்பது நாளும் விசுவாசத்தில் திடப்படுத்தி, எருசலேமைவிட்டு நீங்காமல் ஒரு தாய்ப்பறவை தன் முட்டைகளை ஒன்று சேர்த்து அடைக்காப்பது போல இயேசு அனைவரையும் ஒன்று சேர்த்து விண்ணேற்றம் அடைந்த பத்தாம் நாள், அதாவது உயிர்ப்பிற்குப் பிறகு ஐம்பதாம் நாள் அதாவது பெந்தகோஸ்தே இன்னும் இந்நன்னாளில் தூய ஆவி; இறங்கி வந்து கன்னிமரியின் வயிற்றில் இயேசுவைக் கருத்தரிக்க செய்ததுபோல இவ்வுலகின் கருவறையில் திருச்சபையை கருத்தரிக்க செய்தருளினார். மரணத்தின் விளிம்பில் வாழ்வு பிறந்தது. அவநம்பிக்கையின் விளிம்பில் தைரியம் பிறந்தது. மூடிய கதவுகள் திறக்கப்பட்டன: அடங்கிய கைகள் ஆட்களைக் காட்டின: முனகின குரல்கள் முழங்கின: சிலுவையின் நிழலில் சிறகுகள் முளைத்தன. திருச்சபை பிறந்தது
. இந்த பெந்தகோஸ்தே பெருவிழாவில் சிந்தனைப் பொருளாக அமைவது ஆவியின் வருகையால் மலர்ந்து புதுவாழ்வு தான். ஆவியின் செயல்பாடு உயிருள்ளது: ஆற்றல்மிக்கது: வலிமையானது: வாழ்விக்க கூடியது. தூய ஆவியின் ஆற்றலினால்தான் எல்லாமே இயங்கிக்கொண்டிருக்கிறது.
நம்மை என்றும் இடைவிடாமல் தொடர்ந்து வழிநடத்தவே தூய ஆவி அருளப்பட்டிருக்கிறார். ‘உங்களோடு என்றும் இருக்கும்படி’ என்றே தூய ஆவியை ஆண்டவர் இயேசு வாக்களித்திருக்கிறார் (யோவா 14:16). கடவுளின் அன்பு, நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாhய் நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்ந்துவாழ கடமைப்பட்டிருக்கிறோம்.(உரோ5:5). தூய ஆவியின் வருகையால்தான் படைப்பு சிறந்தது: அரசர்கள், நீதிபதிகள், இறைவாக்கினர்கள் மக்களை வழிநடத்தினர்: எல்லாவற்றிற்கும் மேலாக, திரித்துவத்தின் இரண்டாம் நபராகிய கிறிஸ்து கன்னியின் திருவயிற்றில் கருத்தரித்தார்: இருளில் பயத்தில் உறைந்திருந்த திருச்சபை எழுச்சிப் பெற்றது.

படைப்பின் போது.

உருவமற்று வெறுமையாக இருந்த மண்ணுலகில் உயிரினங்கள் தோன்றவும் இயங்கவும் தூய ஆவி துணை புரிகிறார். உருவமற்று அனைத்துமே அசைவற்று கிடக்கிற நிலையில் தூய ஆவி மட்டுமே அங்கு அசைவாடிக் கொண்டிருக்கிறார்: இயங்கிக் கொண்டிருக்கிறார்.(தொநூ1:2). இயல்பிலேயே அவருடைய இயங்குத்தன்மை -உயிராற்றல்- காணக்கிடக்கிறது. பிறகுதான் படைப்பே பரிணமிக்கிறது. மனிதனைப் படைத்தபோதும் களிமண்ணின்மீது ‘ருவா’ எனப்படும் உயிர்மூச்சை ஊதும் போதும் அவன் ‘உயிர்உள்ளவன் ஆனான்’ என்று விவிலியம் விளம்புகிறது (தொநூ2:7). இப்படி உண்டாக்கும் ஆற்றலை, உய்விக்கும் சக்தியை இயல்பாகவே தூய ஆவி கொண்டிருக்கிறார். அனைத்தையும் உருவாக்குகிறார்: உய்விக்கிறார்.
படைப்பின் போது உயிரோட்டத்துடன் செயல்பட்ட அதே தூய ஆவி , பராமரிப்பின் போதும் அதே உத்வேகத்துடன் செயல்பட்டார். மோசேவுடன் தூய ஆவி தங்கி ஆற்றல் அளித்து ஆண்டவரின் அளப்பரிய கருவியாக செயல்பட துணைப்புரிந்தார் (எண் 11:25). யோசுவாவை ஆட்கொண்டு வழிநடத்தினார் (எண்27:18 இச34:9) . நீதிபதிகளை வழிநடத்திய அதே ஆவி அடுத்த தலைமுறையினரையும் அரசர்கள் தேர்ந்து கொள்ளும்போது கைவிடாமல் ஆற்றல் அளித்து வழிநடத்துகிறார். சவுலை, தாவீதை, சாலமோனை(1சாமு16:3) ஆசிர்வதித்து திறம்பட வழிநடத்தினார். இறைவாக்கினரையும் ஆண்டவரின் சார்பாக இறைவாக்குரைக்கவும் மக்களை நெறிப்படுத்தவும் உதவுகிறார் (யோபு 33:4 எசா. 61:1.)

உலர்ந்துபோன எலும்புகள் ..உயிர்பெற

எசேக்கியேல் இறைவாக்கினருக்கு கொடுத்த காட்சி விளக்கத்தில்கூட உலர்ந்து போன எலும்புகள், ஆவியின் ஆற்றலால் செயல்பாட்டால் உயிர் பெறுகின்றன. நான் உங்களுக்குள் உயிர் மூச்சு புகச் செய்வேன். நீங்கள் உயி;ர் பெறுவீர்கள்: நான் உங்களை நரம்புகளால் தொடுப்பேன்: உங்கள்மேல் சதையைப் பரப்புவேன்: உங்களைத் தோலால் மூடுவேன். (எசே 37:5-6) என்று ஆவியின் செயல்பாட்டால் விளையும் உயிராற்றலை வெளிப்படுத்துகிறார். உயிர்மூச்Nசு வா! நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர். .. உடனே அவர்களுக்குள் உயிர் மூச்சு புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று காலூன்றி, மாபெரும் படைத்திரள்போல் நின்றனர் (எசே 37:9-10). ஆவியின் வருகையால் அனைத்தும் உயிரோட்டம் பெறுவதையும் ஆற்றல்பெற்று புதிய படைப்பாவதையும் காண்கிறோம். ஆவியின் வருகை ஆற்றலின் ஊற்றாகும். இறைவனின் ஆவி என்னைப் படைத்தது: எல்லாம் வல்லவரின் மூச்சு என்னை வாழ்விக்கின்றது. (யோபு. 33:4 ) என்ற யோபுவின் அனுபவம் நமதாக வேண்டும்.

திக்குமுக்காடிப் போன திருச்சபை:

ஆண்டவரின் உயிர்ப்பு ஆறுதலைத் தந்தாலும் திருத்தூதர்களின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இன்னும் பயம் அகலவில்லை: கதவுகளை மூடி உயிருக்குப் பயந்து போராடிய கோழைத்தனம் குறையவில்லை. ‘இனி அவ்வளவுதான்’ என்ற நிலையில் .. விளிம்பில் ஆதித்திருச்சபை, திருத்தூதர்கள் தத்தளிக்கின்றனர்: தடுமாறுகின்றனர். ஆனால் ஆண்டவர் இயேசுவின் வாக்குறுதி நம்மை ஆறுதல்படுத்தி ஆற்றல்படுத்துகிறது. ‘நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்’ என்று தூய ஆவியை வாக்குறுதியாக தரும்போது சொல்லுகிறார். (யோவா 14:18) திக்குத்தெரியாமல் எருசலேமா, கலிலிலேயாவா , எம்மாவுவா என்ற தெரியமால் தடுமாறுகிறவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து யெருசலேமிலேயே தங்கும்படி செய்கிறார். குறைபாடு உள்ள அவர்களை அழைத்த ஆண்டவர் படைப்பின் போது குறிப்பிடப்பட்டது போல ‘ஊதி’ தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்கிறார். ஆதாமைப் படைத்த போது உயிர்மூச்சை ஊதியதைப் போன்று அவருடைய அப்போஸ்தலர்கள் மீதும் புதிய படைப்பாகிட ஊதுகிறார். எப்படி ஆதாம் ஆண்டவரின் ஆவியால் இறைவனின் சாயலனானோ அப்படியே இந்த அப்போஸ்தலர்களும் கிறிஸ்துவின் சாயலாக மாறுகின்றனர். இந்த ‘ஊதுதல்’ என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் வேறு எங்கும் காணப்படவில்லை. புதிய படைப்பு அரும்புகிறது: புனிதமான புரிதல் மலர்கிறது.

பெந்தகோஸ்தே அனுபவம்

ஆண்டவருடைய விண்ணேற்றத்திற்குப் பின்பு பத்து நாட்களுக்கு ஆதியிலே மண்ணுலக வெறுமையாக உருவற்று இருந்ததுபோல தற்போது திருச்சபையும் திக்குமுக்காடி திசைத்தெரியாமல் என்ன செய்வதென்று அறியாமல் முடங்கிக் கிடந்தது. ஆனால் பெந்தகோஸ்தே பெருவிழாவிலே கூடியிருந்தவர்களெல்லாம் கருத்தரித்தார்கள். கன்னியின் கருவயிற்றில் உருவிலான் கருவாக உருவாக உதவிய அதே ஆவியானவர் கூடியிருந்தவர்கள் எல்லோரும் மீதும் இறங்கி வந்து திருச்சபையைக் கருத்தரிக்க செய்கிறார்: கூடியிருந்தவர்களெல்லாம் திருச்சபையை தங்கள் வாழ்வில் கருத்தரிக்கிறார்கள். நம்முடைய தாய்மொழியில் உறவாடுவதைக்கண்டு ஒருவர் ஒருவரை முழுமையாகப் புரிந்துக்கொள்கின்றனர்: ஒரே இனம் என்ற ஒருமைத்துவத்தை அடைகின்றனர்: வேற்றுமை கலைகின்றனர். திருச்சபை மலர்கின்றது. ‘இயேசுவே ஆண்டவர்’ என்ற விசுவாச கீதம்; விண்ணை அடைகிறது. கிரேக்கராயினும் அடிமைகளாயினும் உரிமைக் குடிமக்களானாலும் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் உயிர்பெறுகின்றனர்: திருச்சபை பிறக்கிறது.(இரண்டாம் வாசகம்)

திருச்சபையின் பயணத்தில்..

விருத்தசேதனமா?(யூதரா) திருமுழுக்கா? (புறவினத்தானரா) எது கிறிஸ்தவனைத் தீர்மானிப்பது என்ற இக்கட்டான நிலை வரும்போது கொர்னேலியுவின் இல்லத்தில் ஏற்பட்ட பேதுருவின் அனுபவமும் (திப 10:44, 11:15) புனித பவுல்-பர்னபாவின் அனுபவமும் ஒருமித்துப் போன காரணத்தினால் திருமுழுக்கே கிறிஸ்வரை தீர்மானிக்கட்டும் என்ற வரையறை திருச்சபையின் திருப்புமுனையாக அமைந்தது. இதற்கெல்லாம் அடிப்படை தூய ஆவியே (திப15:15). இன்று நாம் பெரிதும் மதித்துப் போற்றுகின்ற 22ம் திருச்சங்கமான இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூட (11.10.1962-08.12.1965) தூய ஆவியின் ஆற்றலால் தான் . படைப்பின் தொடக்கம் முதல் இன்று வரை ஆவியின் ஆற்றலால்தான் அனைத்தும் இயங்குகிறது. உயிரோட்டமுள்ளதாக பரிணமிக்கிறது.
மாந்தர் யாவர்மேலும் பொழியப்பட்டுள்ள தூய ஆவி (யோவே2:28); உங்களோடு தங்கியிருக்கிறார். உங்களுக்குள்ளும் இருக்கிறார் (யோவா14:17): ஆகையால் உலகின் கடையெல்லைவரைக்கும் சாட்சிகளாய் இருந்து (திப. 1:8) ஆவியால் இயக்கப்பட்டு கடவுளின் மக்களாக இருப்போம் (உரோ8:14). தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி நம்மை நிறைப்பதாக (உரோ. 14:17).தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, ஆகிய தூயஆவியின் கொடைகளும், (2 கொரி. 6:6) அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை ஆகிய கனிகளும் நம்மை நெறிப்படுத்துவதாக (கலா. 5:22). ஆமென்!

என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்! புது வலுவூட்டி என்னைத் தேற்றும்! என் கடமை என்னவென்று காட்டும்! அதைக் கருத்தாய் புரிந்திடத் தூண்டும்! என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா! உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்! ( ஓ! பரிசுத்த ஆவியே!)