இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
Mylapore, Chennai, India



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








விண்ணேற்ற ஞாயிறு

‘அண்ணாந்துப் பார்த்தது போதும்’

திப 1:1-11
எபே 1:17-23
மத் 28:16-20

ஆண்டவரின் விண்ணேற்றம்


br> இன்று ஆண்டருடைய விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இந்த விண்ணேற்றவிழா அவருடைய மாட்சிமையின் உச்சமாக அமைகிறது. அதாவது இந்த பாஸ்கா மறைபொருள் விண்ணேற்றத்தில்தான் உச்சத்தை அடைகிறது. அவர் உயிர்த்த உடலுடனும் ஆன்மாவுடனும் விண்ணேற்றமடைந்தார். உயிர்ப்பிற்கு முன்பு துன்புறும் ஊழியனாக அறியப்பட்ட இயேசு, தற்போது தந்தையின் மாட்சிமையில் பங்கேற்று ‘ஆண்டவராக’ தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறார் (பிலி 2:6-11). ஆகையால் ‘பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசரனின் வலதுபக்கத்தில் வீற்றிருக்கிறார்’ என்று நாம் விசுவாச அறிக்கையிடுகிறோம்
. திருவிவிலியத்தில் ‘ஆண்டவருடைய விண்ணேற்றம்’ மூன்று இடங்களில் மட்டுமே விளக்கப்படுகிறது. மத்தேயு நற்செய்தியாளரும், யோவான் நற்செய்தியாளரும் இதனை தங்கள் எழுத்துக்களில் குறிப்பிடவில்லை. மாற்கு 16:19-20, லூக் 24:50-53, திருத்தூதர்பணி 1:4 -14 என மூன்று இடங்களில் ஆண்டவருடைய விண்ணேற்றம் விளக்கப்படுகிறது. இம்மூன்று விளக்கங்களும் அடிக்கோடிட்டு காட்டுவது ‘ஆண்டவருடைய மாட்சிமையைத்தான்’. லூக்கா நற்செய்தியாளர் ஆண்டவருடைய விண்ணேற்றத்தை நற்செய்தியில் உயிர்ப்புடன் தொடர்புப்படுத்தியே குறிப்பிடுகிறார்: மேலும் ‘மகிழ்ச்சியுடன் திரும்பினர்’ என்று திருச்சபையின் புதிய எழுச்சியை பதிவு செய்துள்ளார். மேலும் திப2:33, 7:55, உரோ8:34, எபே 1:20, கொலோ3:1, எபி 8,12:10 1பேதுரு3:22) ஆகிய இடங்களில் இந்நிகழ்வு சுட்டிக்காட்டப்படுகிறது.

விண்ணேற்ற இறையியல்


இந்த விண்ணேற்றம் நிகழ்வு இரண்டு இறையியல் கருத்துக்களை முன்வைக்கிறது. முதலாவதாக, கிறிஸ்துவின் மாட்சிமையையும், இரண்டாவதாக அவர் மேற்கொண்ட திருப்பணி இத்துடன் முடிவுக்கு வருகிறது என்பதனை உணர்த்துகின்ற விதமாகவும் அமைகிறது.

கிறிஸ்துவின் மாட்சிமை


கிறிஸ்து, எல்;லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச்சென்றவர் (எபே 410) என்றும் விண்ணுலகில் வலப்பக்கத்தில் அமர்ந்தவர் (எபே 1~20) என்றும் நாம் அவரை அறிகிறோம். அந்த கிறிஸ்து விண்ணுலகில் நம் சார்பாக கடவுளின் திருமுன் நிற்கிறார் (எபி9:24) என்கிற போது நமக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பிறக்க வேண்டும். விண்ணேற்றம் அடைந்ததால் அவர் நம்மை கைவிடவில்லை: மாறாக என்றென்றும் நிலைத்திருக்க கூடிய தலைமைக் குருவாக, தம் வழியாக கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார்: அவர்களுக்காக பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர்வாழ்கிறார் (எபி7:25). ஆகையால்தான் காலங்காலமாக ஆண்டவருடைய விண்ணேற்ற நிகழ்வோடு தூய ஆவியின் வருகைiயும் (யோவா 16:7) திருச்சபையின் பணியையும் தொடர்புபடுத்தி பார்க்கிறோம். அவருடைய திருப்பிரசன்னமும் தேற்றரவும் (மத் 28:20) நம்மை நெறிப்படுத்தும்: வழிநடத்தும்.

திருத்தூதர்களின் பணி


தான் நிறுவிய திருச்சபையைக் கட்டமைக்க திருத்தூதர்களை ஆண்டவர் அல்லும் பகலும் தயாரித்தார். உயிர்ப்பிற்குப் பிறகு தடுமாற்றமும் பயமும் ஏற்பட்டபோது நாற்பது நாளும் திடப்படுத்தி, களம் காண ஊக்குவித்தார். இந்த நாற்பது நாள் என்று குறிப்பிடும் போது அது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. ஆண்டவர் தம்முடைய தந்தையின் திருவுளம் அடங்கிய இறையாட்சிப் பணியை நிறைவேற்ற தன்னையே பாலைவனத்தில் நாற்பது நாட்கள் தயாரித்தார்: தற்போது அப்பணி தொடர்ந்து செயலாக்கம் பெற்றிட திருத்தூதர்களை அதே நாற்பது நாட்கள் உயிர்ப்பிற்குப் பிறகு தயாரிக்கிறார். முன்னையது அவருடைய சுய தயாரிப்பு: பின்னையது அவர் நிறுவிய திருச்சபைக்கான தயாரிப்பு.

பாடுகளின் பாதையில் விண்ணேற்றம்


இங்கே ‘ஆண்டவர் இயேசு பெத்தானியா வரை திருத்தூதர்களை அழைத்துச் சென்று விண்ணேற்றமடைந்தார்’ என்று லூக்கா நற்செய்தி குறிப்பிடுகிறது. திருச்சபையும் காலங்காலமாக இந்த விண்ணேற்றம் பெத்தானியாவுக்கு அருகில் ஒலிவ மலையில் நடந்ததாக நம்புகிறது. இந்த பெத்தானியா கலிலேயாவில் அல்ல: எருசலேமிற்கு அருகில் இருக்கிறது. அவருடைய கொடூரமான பாடுகள் மரணம் நடைபெற்ற இடத்தருகே அவர் தன்னை அனுப்பிய தந்தையிடம் செல்கிறார்: நிச்சயம் ஆண்டவர் இயேசு தாம் இரத்;த வியர்வை சிந்திய கெத்சமனி தோட்டத்தின் ஊடாக கடந்து சென்று கண்ணீர் விட்டழுத எருசலேமைப் பார்த்துவிட்டு ஒலிவ மலையை அடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ‘தந்தையே! என் விருப்பமன்று உன் விருப்பப்படியே ஆகட்டும்’ என்று தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றிய இடத்தருகிலிருந்து விண்ணேற்படைந்தார். இது அவருடைய பாடுகளின் மரணத்தின் பாதையில் அவர் அடைந்த மாட்சிமையை உயிர்ப்பின் முழுமையை இந்நிகழ்வு சுட்டுகிறது. இது மீட்பின் திட்டத்தில் வரும் இடர்களையும் இறுதியில் கிடைக்கப் போகும் மாட்சிமையையும் சீடர்களுக்கு அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது. நம்மையும் இப்பாதை வழியாக நடக்க பணிக்கிறது.

எருசலேம் திரும்புங்கள்!


முதல் வாசகத்தில் ஆண்டவர் இயேசு வலியுறுத்துகிற ஒரு கட்டளை ‘ நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம்’ என்பதுதான். எம்மாவு வழியில் சந்தித்த அந்த சீடர்களையும் எருசலேமுக்கு திருப்பி விடுகிறார் (லூக் 24:33). இங்கேயும்கூட எருசலேமில் தங்கும்படி பணிக்கிறார். காரணம் எருசலேம்தான் திருச்சபையின் கருவறை! இயேசுவுக்கு சான்று பகர்வதற்கான போர்க்களம். இங்கேதான் திருச்சபை பிறப்பெடுத்தது. இக்கருவறைக்கு உரு கொடுக்க அவர் கொடுத்த கட்டளைதான் ‘நீங்காதிருங்கள்!’ என்பது. ஒரு பறவை தன் முட்டைகளை ஒன்று கூட்டி அடை காப்பது போல இறையாட்சியின் கருவை சுமந்து நிற்கும் இச்சீடர்களை எருசலேம் கூட்டில் ஒன்று சேர்க்கிறார். தூய ஆவியின் வருகைக்குப் பிறகு எட்டு திக்கும் இவர்கள் களம் காணுவார்கள்.

அண்ணாந்துப் பார்த்தது போதும்!


‘ஏன் வானத்தை அண்ணாந்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள்?’ என்று வானதூதர்கள் கேட்கிற கேள்வி (பெந்தகோஸ்தே) திருச்சபைக்கு வைக்கப்படுகிற சவால். இதே வானதூதர்கள் மூன்று முறை ‘ஏன்’ என்ற கேள்வியை அழுத்தம் திருத்தமாக கேட்கிறார்கள். முதலாவதாகவும் இரண்டாவதாகவும் மரிய மதலேனாளிடம் முறையே “உயிரோடு இருப்பவரை கல்லறையில் தேடுவது ஏன்? என்றும் (லூக் 24~5) என்றும் ‘அம்மா ஏன் அழுகிறீர்? என்றும் (யோவா 20:13) கேட்கிறார்கள். இன்றைய முதல் வாசகத்தில் அதே வானதூதர்கள் ‘ஏன் வானத்தை அண்ணாந்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்?’என்று மூன்றாவது முறையாக கேட்கிறார்கள்.
முதலாவதாக ‘ஏன்?’ என்ற கேள்வியால் உயி;ர்ப்பு செய்தியை அறிவிக்கிற நற்செய்தி தூதவராக மரிய மதலேனாள் மாறுகிறாள். தற்சமயம் அதே ‘ஏன்?’ என்று கேள்வியால் திருத்தூதர்கள் அனைவருமே நற்செய்தியின் தூதுவர்களாக மாறுகிறார்கள். ஆம்! வானை அண்ணாந்துப் பார்த்தது போதும்! மண்ணில் நற்செய்தி அறிவிக்கப் புறப்படுங்கள்!’ என்ற அறைகூவல் இங்கே எதிரொலிக்கிறது. இயேசுவின் விண்ணேற்றத்தையும் இரண்டாம் வருகையையும் இங்கே தொடர்புபடுத்தி ‘விண்ணேற்றம் அடைந்ததைக் கண்;டீர்களல்லவா? அவ்வாறே மீண்டும் வருவார்’ என்று அவருடைய அதிகாரம் ஆளுமை சுட்டிக்காட்டப்படுகிறது. அவருடைய பணி முடிந்து விட்டது: திருச்சபையின் பணி தொடங்கிவிட்டது (மத் 28~17) என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. ஆகையால்தான் இது விசுவாசத்தின் மறைபொருள் என்கிற போது ‘ ஆண்டவரே! தேவரீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுகிறோம்! உமது உயிர்ப்பையும் எடுத்துரைக்கிறோம்’ என்று நற்செய்தி அறிவிப்பதற்கான உறுதிமொழி ஒவ்வொரு திருவிருந்திலும் நம்மால் வழிமொழியப்படுகிறது. வானத்தை அண்ணாந்துப் பார்த்தது போதும்! புறப்படுவோம் புதிய களம் காண..

இரண்டு வாக்குறுதிகள்!


திருச்சபையும் திருத்தூதர்களும் புதிய களம் காண இரண்டுவிதாமான வாக்குறுதிகள் முன் மொழியப்படுகின்றன. இந்த இரண்டு வாக்குறுதிகளும் திருச்சபையின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை. முதலாவதாக இயேசுவின் உடனிருப்பு! இரண்;டாவதாக தூய ஆவியின் வருகை.
இம்மானுவேலாக இம்மண்ணில் பிறந்த மாபரன் இயேசு, என்றென்றும் இம்மானுவேலாக, உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருப்பேன் என்று சொல்லி தன் பிரச்சன்னத்தை உடனிருப்பை உறுதிப்படுத்துகிறார். அவருடைய உடனிருப்பு ஒன்றே வலிமையானது: ஆற்றல் மிக்கது. பிரச்சனைகளால் அலைகழிக்கப்படுகிறபோதும், ஆதரவின்மையால் சோர்ந்து போகிற போதும், மனக்குமுறலால் கொந்தளிக்கிறபோதும், சாவின் விளிம்பில் தத்தளிக்கிற போதும், ‘அஞ்சாதீர்! நான் உடனிருக்கிறேன்’ என்று நம்மைத் தேற்றி திடப்படுத்தி நெறிபடுத்துபவர் அவரே! (மத் 8:23-27). எனவேதான் சவுலிடம் ‘நீ துன்புறுத்தும் இயேசு நானே என்று திருச்சபையுடனான தன்னுடைய உடனிருப்பை வெளிப்படுத்துகிறார்(திப9:5). வெள்ளியும் பொன்னும் என்னிடம் இல்லை: என்னிடம் உள்ளதை உமக்கு கொடுக்கிறேன். நாசரேத்து இயேசுவின் பெயரால் எழுந்து நடந்திடும்’ என்று பேதுரு சொன்னவுடன் தன்னுடைய உடனிருப்பால் முடமானவனை எழுந்து நடக்க செய்தார். (திப 3:6). ஆகையால் அவர் நம்மைத் திக்கற்றவர்களாக விடவில்லை (யோவா14:18). நம்முடன் இருக்கிறார்: அண்ணாந்து பார்த்தது போதும்! புறப்படுவோம் புதிய களம் காண... அவர் வாழ்கிறார். நம்மையும் வாழ்விப்பார்(யோவா14:19).

தூய ஆவியின் வருகை திருச்சபையின் பிறப்பிற்கான அடித்தளம். ஆகையால்தான் ‘நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால்அவரை உங்களிடம் அனுப்புவேன் என்று சொன்ன ஆண்டவர் (யோவா16~7) விண்ணேற்றமடைகிறார். தூய ஆவியின் வருகையால் திருச்சபை எழுச்சிப்பெறும். தூய ஆவியைப்பற்றி ஆண்டவர் இயேசு போதுமான அளவுக்கு (யோவா14:17) சீடர்களுக்கு விளக்கியுள்ளார். ஆகையால்தான் அண்ணாந்துப்பார்த்தது போதும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆம்! அண்ணாந்துப் பார்த்ததுபோதும். புறப்படுவோம் புதிய களம் காண...