ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









இறைவனின் தாய் மானுடத்தின் தாய்



திருச்சபையானது இன்று அன்னை மரியாளை எடுத்துக்காட்டாக நமக்கு முன்வைக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் இருக்கும் நமக்கு அன்னையின் அரவணைப்பும், பாதுகாப்பும் நம்மை வழிநடத்த ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் நமக்கு நினைவுட்டுகிறது.

ஒவ்வொரு புத்தாண்டு கொண்டாட்டங்களும் ஊக்கமுட்டுபவைகளாகவும், உற்சாகம் கொடுப்பவைகளாகவும் அமைகிறது. நமக்கு மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கைளையும், பலவிதமான வண்ணக் கனவுகளையும் அள்ளித்தரும் ஆனந்த வாழ்க்கை நிலை. புதிய பாதையில் வாழ்கையை புதுபொலிவுடன் தொடர இது ஒரு தொடர் பயணம். தொடர் பயணத்தில் இறைவனின் ஆசீர்வாதம் நம்மோடு பயணிக்க உதவும் இறைவார்த்தைகள்..............

• ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! (எண்ணிக்கை:6:24–26)
• நீ செல்லும் வழியெல்லாம் வெற்றி பெறுவாய். (யோசுவா1:7)
• உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக! உன்னுள் சமாதானம் நிலவுவதாக!(திருப்பாடல்கள்122:7)
• உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன்.(எரேமியா1:8)
• என் அருள் உனக்குப் போதும். (2.கொரிந்தியர்12:9)

மானுடத்தின் தாய்

கடவுளாட்சி இம்மண்ணில் பரவிட தன்னையை முழுமையாக அர்ப்பணித்தவர். இறைமகன் இயேசுவின் காலடிச்சுவட்டை இம்மண்ணில் நிலைக்கச் செய்ய கல்வாரி மீட்புத் திட்டத்தில் தன் உடனிருப்பின் வழியாக இவ்வுலகத்திற்கு இலட்சியத்தாய் என்பதை எடுத்துரைத்தவள். இத்தாயிக்கு பல அடைமொழிகளை கொடுக்கலாம்.

அன்னைமரி விடுதலைத்தாய், புரட்சிப்பெண், புதுமையின் தலைவி, இரக்கத்தின் அன்னை, தாழ்ச்சியின் தாரகை, தூய்மையின் அரசி, துணிவின் வீரத்தாய், பரித்துரைக்கும் பரலோக இராக்கினி இன்னும் பல...........

இந்த தாய் அனைத்து சூழலிலும் நம்மோடு இருப்பதால் இறைவனின் தாய்யாக் கூறப்படும் இவள் மானுடத்தின் தாயாக உயர்த்தப்பட்டாள்.

கன்னிமரியை ஏன் முன்வைக்கிறது?

சமுதாயத்தில் கடைகோடியாக திகழும் ஏழை, எளிய மக்களின் வாழ்வு செழித்திட, தாழ்ந்த நிலையில் இருப்போரை உயர்த்திட, நீதியை நிலை நிறுத்திட தன்னையே முழுமையாக ஒப்புக் கொடுத்தவள். இதனை அவளது புரட்சிப் பாடலில் இருந்து நாம் காணலாம்.

மரியாவின் பாடல்

ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.

எத்தனை யுகங்கள் தோன்றினாலும் மனிதகுல வரலாற்றில் ஈடுகட்ட முடியாத அன்பு, தியாகம், அமைதி, கீழ்ப்படிதல் போன்ற நற்பண்புகளில் சிறந்தவர் நம் அன்னை மரி. நாமும் இந்த பண்புகளில் சிறந்திட இன்றைய நாள் அழைப்புவிடுக்கிறது. ஆசீர்வாதத்தோடு தொடங்குவோம், வெற்றிப்பெறுவோம்.
[2014-12-30 08:59:39]


எழுத்துருவாக்கம்:

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே
யேர்மனி