யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 27வது வாரம் புதன்கிழமை
2017-10-11




முதல் வாசகம்

ஆமணக்கு செடிக்காக நீ வருந்துகிறாய்; நினிவே மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?
இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 4: 1-11

அந்நாள்களில் யோனா கடுஞ்சினங் கொண்டு ஆண்டவரிடம் முறையிட்டார். ``ஆண்டவரே, நான் என் ஊரை விட்டுப் புறப்படுமுன்பே இதைத்தானே சொன்னேன்? இதை முன்னிட்டே நான் தர்சீசுக்கு ஓடிப்போக முயன்றேன். நீர் கனிவு மிக்கவர், இரக்கமுள்ளவர், மிகுந்த பொறுமையும் அளவிலா அன்பும் உள்ள கடவுள் என்பது எனக்குத் தெரியும். அழிக்க நினைப்பீர்; பிறகு உம் மனத்தை மாற்றிக்கொள்வீர் என்பதும் எனக்கு அப்போதே தெரியும். ஆகையால் ஆண்டவரே, என் உயிரை எடுத்துக் கொள்ளும். வாழ்வதை விடச் சாவதே எனக்கு நல்லது'' என்று வேண்டிக்கொண்டார்.

அதற்கு ஆண்டவர், ``நீ இவ்வாறு சினங்கொள்வது முறையா?'' என்று கேட்டார். யோனாவோ நகரை விட்டு வெளியேறினார்; நகருக்குக் கிழக்கே போய் உட்கார்ந்து கொண்டார். பிறகு அவர் தமக்கு ஒரு பந்தலை அங்கே அமைத்துக் கொண்டு, நகருக்கு நிகழப் போவதைப் பார்ப்பதற்காக அதன் நிழலில் அமர்ந்திருந்தார்.

கடவுளாகிய ஆண்டவரது ஏற்பாட்டின்படி ஆமணக்குச் செடி ஒன்று அங்கே முளைத்தது. அது வளர்ந்து யோனாவின் தலைக்கு நிழல் தந்து அவரது மனச்சோர்வை நீக்கியது. அந்த ஆமணக்குச் செடியைக் கண்டு யோனா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

ஆனால் ஆண்டவரது கட்டளைப்படி மறுநாள் பொழுது விடியும் நேரத்தில் ஒரு புழு வந்து அந்த ஆமணக்குச் செடியை அரிக்கவே, செடி உலர்ந்து போயிற்று. கதிரவன் எழுந்தபின் கடவுளின் கட்டளைப்படி, கிழக்கிலிருந்து அனற்காற்று வீசிற்று. கடும் வெயில் யோனாவின் தலையைத் தாக்கவே அவருக்கு மயக்கம் உண்டாயிற்று. ``வாழ்வதை விடச் சாவதே எனக்கு நல்லது'' என்று அவர் சொல்லி, தமக்குச் சாவு வரவேண்டுமென்று வேண்டிக் கொண்டார்.

அப்பொழுது கடவுள் யோனாவை நோக்கி, ``ஆமணக்குச் செடியைக் குறித்து நீ இவ்வாறு சினங்கொள்வது முறையா?'' என்று கேட்டார்.

அதற்கு யோனா, ``ஆம், முறைதான்; செத்துப்போகும் அளவுக்கு நான் சினங் கொள்வது முறையே'' என்று சொன்னார்.

ஆண்டவர் அவரை நோக்கி, ``அந்தச் செடி ஓர் இரவில் முளைத்தெழுந்து, மறு இரவில் முற்றும் அழிந்தது. நீ அதற்காக உழைக்கவும் இல்லை. அதை வளர்க்கவும் இல்லை. அதற்கு இவ்வளவு இரக்கம் காட்டுகிறாயே! இந்த நினிவே மாநகரில் இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். வலக்கை எது, இடக்கை எது என்று கூடச் சொல்லத் தெரியாத இத்தனை மக்களும், அவர்களோடு எண்ணிறந்த கால்நடை களும் உள்ள இந்த மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் தலைவரே! நீரே பேரன்பும் உண்மையும் கொண்டவர்.
திபா 86: 3-4. 5-6. 9-10

3 என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். 4 உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். பல்லவி

5 என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். 6 ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். பல்லவி

9 என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். 10 ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், ``அப்பா, தந்தையே'' என அழைக்கிறோம். அல்லேலூயா. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-4

அக்காலத்தில் இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, ``ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொடும்'' என்றார்.

அவர் அவர்களிடம், ``நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்'' என்று கற்பித்தார்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

வாழ்வின் உயிரோட்டம் செபம்

செபமும் நற்செயலும் நிறை வாழ்வுக்கு அவசியமான இரு இணைபிரியா வழிமுறைகளாக இருந்த போதிலும், செப வாழ்வு சற்று கடினமான ஒன்று. இதை உணர்ந்த இயேசு தன் சீடர்களுக்கு அதைக் கற்றுக் கொடுக்கிறார். இறைமகனாக இருந்தும் தானே தினமும் செபித்தார். இக்கட்டான வேளைகளில், முக்கியமான முடிவுகளின்போது இறை உதவியைநாடி செபித்தார்.(லூக்3:21,5:16,6:12,9:18,9:28,22:41-42,23:34) செபத்தின் பல்வேறு முறைகளையும் ( நன்றி, புகழ்ச்சி , விண்ணப்பம், மன்னிப்பு) கையாளுவதையும் காண்கிறோம். நீ செபிக்கிறாயா? பலருக்கு பணம் பாக்கெட்டில் இருந்தால் செபம் செய்ய நேரம் இருக்காது. பதவியும் புகழும் சேர்ந்தால் கடவுளையே மறந்துவிடுவர். கடவுள், செபம் எல்லாம் ஏழைகளுக்கு என்ற எண்ணம் சிலருக்கு. அடுத்தவர் செபத்தில் வாழலாம் என்று நினைத்தலாகாது. மனைவி தினமும் கோவிலுக்குப் போவாள். தினமும் செபம் செய்வாள். பிள்ளைகள் தினமும் அருட்சாதனங்களில் பங்குபெருவார்கள். அதில் எனக்குப் பங்கு கிடைக்கும் என்ற ஒட்டுண்ணி வாழ்வு விசுவாச வாழ்வுக்குப் பொருந்தாது. இது இயேசுவிடம் கற்ற பாடமும் அல்ல. ஆகவே இயேசு செபித்ததுபோல நாமும் செபிப்போம். வாழ்வில் மகிழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் வார்த்தையை எப்போதும் கேட்டு அதை வாழ்வில் செயல்படுத்த எங்களுக்கு அருள்தாரும்.