யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் புதன்கிழமை
2017-09-27




முதல் வாசகம்

`கடவுளே! உம்மை நோக்கி என் முகத்தைத் திருப்ப வெட்கி நாணுகிறேன். ஏனெனில், எங்கள் பாவங்கள் எங்கள் தலைக்குமேல் பெருகிவிட்டன.
எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 9: 5-9

மாலைப் பலி நேரத்தில் நோன்பை முடித்துக் கிழிந்த ஆடையோடும் மேலுடையோடும் முழந்தாளிட்டு என் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி கைகளை விரித்து, எஸ்ராவாகிய நான் கூறியது: ``கடவுளே! உம்மை நோக்கி என் முகத்தைத் திருப்ப வெட்கி நாணுகிறேன். ஏனெனில், எங்கள் பாவங்கள் எங்கள் தலைக்குமேல் பெருகிவிட்டன. எங்கள் குற்றங்கள் விண்ணைத் தொட்டுவிட்டன. எம் முன்னோர் காலமுதல் இதுவரை நாங்கள் பெரும் பாவம் செய்துள்ளோம். எங்கள் பாவங்களினால், நாங்களும் எங்கள் அரசர்களும், குருக்களும் வேற்று நாட்டு மன்னர்களின் கைக்கும், வாளுக்கும், அடிமைத்தனத்திற்கும், கொள்ளைக்கும், வெட்கக் கேட்டுக்கும் இதுவரை ஒப்புவிக்கப்பட்டோம். ஆனால், தற்பொழுது சிறிது காலமாய் எம் கடவுளும் ஆண்டவருமாகிய உமது கருணை துலங்கியுள்ளது; எங்களுள் சிலரை எஞ்சியோராக விட்டுவைத்தீர்; உமது புனித இடத்தில் எங்களுக்குச் சிறிது இடம் தந்தீர்; எம் கடவுளாகிய நீர் எம் கண்களுக்கு ஒளி தந்தீர்; எமது அடிமைத்தனத்திலிருந்து சற்று விடுதலை அளித்தீர். நாங்கள் அடிமைகளாக இருந்தும், எம் கடவுளாகிய நீர் எங்களை அடிமைத்தனத்திற்குக் கையளிக்கவில்லை. மாறாக நாங்கள் உயிர் பிழைக்கவும், எங்கள் கடவுளின் கோவிலை எழுப்பவும், பாழடைந்ததைப் பழுது பார்க்கவும் யூதேயாவிலும் எருசலேமிலும் பாதுகாப்பு அளிக்கவும் பாரசீக மன்னர்களின் முன் எமக்கு உமது தயை கிடைக்கவும் செய்தருளினீர்!''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்;
தோபி 13: 2,3. 6,7. 8.

2 அவர் தண்டிக்கிறார்; இரக்கமும் காட்டுகிறார். பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்; பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார். அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. பல்லவி

3 இஸ்ரயேல் மக்களே, வேற்றினத்தார்முன் அவரது புகழை அறிக்கையிடுங்கள். ஏனெனில் அவர் அவர்களிடையே உங்களைச் சிதறடித்துள்ளார். பல்லவி

6 நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அவர்பால் திரும்பி அவர் திருமுன் உண்மையுடன் ஒழுகினால் அவர் உங்கள்பால் திரும்புவார்; பல்லவி

தமது முகத்தை உங்களிடமிருந்து என்றுமே திருப்பிக் கொள்ளார். 7 உங்களுக்கு அவர் செய்துள்ளவற்றை இப்பொழுது எண்ணிப் பாருங்கள்; பல்லவி நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்; வாயார அவரை அறிக்கையிடுங்கள். என்றுமுள மன்னரை ஏத்திப் போற்றுங்கள். பல்லவி

8 நான் அடிமையாய் வாழும் நாட்டில் அவரைப் போற்றுவேன்; அவருடைய ஆற்றலையும் மேன்மையையும் பாவ நாட்டமுள்ள இனத்தார்முன் அறிக்கையிடுவேன் பல்லவி

. பாவிகளே மனந்திரும்புங்கள்; அவர் திருமுன் நேர்மையுடன் ஒழுகுங்கள். ஒருவேளை அவர் உங்கள்மீது அருள்கூர்வார்; உங்களுக்கு இரக்கங்காட்டுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6

அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார். இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார். அப்போது அவர்களை நோக்கி, ``பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரை விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'' என்றார். அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

ஒன்றாக வாருங்கள்

நாம் நமது கத்தோலிக்க திருச்சபையில் இருப்பதை நினைத்து பெருமைப்பட வேண்டும். மகிழ்ந்து கொண்டாட வேண்டும். இன்று இயேசுவின் பெயரால் எத்தனை பரிவினை. என்னைன்ன விதவிமான கொள்கைகள். அறநெறிக்கும், இயேசுவின் போதனைக்கும் மாறுபட்ட போதனைகள். ஒரே சபைக்குள் ஒன்றுபட்ட இறையியல் கோட்பாடு, செயல்பாடு இல்லாததால் மக்களிடையே குழப்பங்களையும் மன நிம்மதியற்ற நிலையையும் காண்கிறோம். ஒரு தலைமையின் கீழ் ஒற்றுமையோடு செயல்பட்டு மக்களுக்கு நற்பணியாற்ற இயேசு விரும்பினார். ஆகவே பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்தார் (லூக் 9'1). அதன் பின்னரே பணியை ஒப்படைத்தார் ( லூக்9' 2-5).நம் கத்தோலிக்க திருச்சபையில் நம் திருத்தந்தையின் தலைமையோடு ஆயர்களும் ஆயர்களோடு குருக்களும் இறைமக்களும் ஒன்றாக ஒன்றிணைந்து செயல்படுவதே இயேசுவின் திருச்சபைக்குச் சான்று.

போதிக்கும் பணி, பனிதப்படுத்தும் பணி, வழிநடத்தும்பணி என்னும் முப்பெரும் பணிகளை தூய ஆவியின் துணையோடு ஒன்றாக, ஒரே ஆயரின் தலைமையில் ஒரே மந்தையை உருவாக்கி அனைவரும் ஒரே தந்தையின் மக்களாக வாழும்பொருட்டே தம் சீடர்களை அனுப்புகிறார். இயேசுவின் விருப்பம் நிறைவேற செபிப்போம், உழைப்போம்.

மன்றாட்டு:

இறைவா, உலகம் வழங்குகின்ற செல்வத்தில் நம்பிக்கை கொள்ளாமல் உம் நிறைவிலிருந்து நாங்கள் நிறைவுபெற எங்களுக்கு அருள்தாரும்.