யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் வெள்ளிக்கிழமை
2017-09-22




முதல் வாசகம்

விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக்கொள்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 2-12

அன்பிற்குரியவரே, இவற்றை நீ கற்பித்து ஊக்குவி. மாற்றுக் கொள்கைகளைக் கற்பித்து, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நலம் தரும் வார்த்தைகளுக்கும், இறைப் பற்றுக்குரிய போதனைகளுக்கும் ஒத்துப்போகாதவர்கள், தற்பெருமை கொண்டவர்கள்; ஒன்றும் தெரியாதவர்கள்; விவாதங்களிலும் சொற்போர்களிலும் பைத்தியம் கொண்டவர்கள். பொறாமை, போட்டி மனப்பான்மை, பழிச்சொல், பொல்லாத ஊகங்கள், ஓயாத மோதல்கள் முதலியன இவற்றிலிருந்தே உண்டாகின்றன. உண்மையை இழந்தவர்களிடமும் சீரழிந்த மனத்தைக் கொண்டவரிடமும் இவை காணப்படுகின்றன. இறைப் பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்; ஆனால் மனநிறைவுள்ளவர்களுக்கே தரும். உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம். செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக்கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக் கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக்கொள்கிறார்கள். கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப் பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு. விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். அதனை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்டாய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

துன்பக் காலத்தில் நான் அஞ்சுவானேன்? என்னை வளைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்?
திருப்பாடல்கள் 49: 5-6. 7-9. 16-17. 18-19

5 துன்பக் காலத்தில் நான் அஞ்சுவானேன்? என்னை வளைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்? 6 தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ தம் செல்வப் பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர். பல்லவி

7 உண்மையில், தம்மைத் தாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது; தம் உயிரை மீட்க எதையும் கடவுளுக்குத் தர இயலாது. 8 மனித உயிரின் ஈட்டுத் தொகை மிகப் பெரிது; எவராலும் அதனைச் செலுத்த இயலாது. 9 ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திட முடியுமா? படுகுழியைக் காணாமல் இருந்திட முடியுமா? பல்லவி

16 சிலர் செல்வர் ஆனாலோ, அவர்களின் குடும்பச் செல்வம் பெருகினாலோ, அவர்களைக் கண்டு நிலைகுலையாதே! 17 ஏனெனில் சாகும்போது அவர்கள் எதையும் எடுத்துப் போவதில்லை; அவர்களது செல்வமும் அவர்கள்பின் செல்வதில்லை. பல்லவி

18 உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை ஆசிபெற்றோர் என்று கருதினாலும், `நீங்கள் நன்மையையே நாடினீர்கள்' என மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும், 19 அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வர்; ஒருபோதும் பகலொளியைக் காணப் போவதில்லை. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-3

அக்காலத்தில் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பன்னிருவரும் இயேசுவுடன் இருந்தனர்... பெண்கள் சிலரும் அவரோடு இருந்தார்கள்'' (லூக்கா 8:2-3)

கடவுள் மனிதரோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்ற ''நற்செய்தி'' கடவுளிடமிருந்தே வருகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்த நற்செய்தியைப் பிறருக்கு எடுத்துச் சொல்ல கடவுள் மனிதரையே கருவிகளாகப் பயன்படுத்துகின்றார். கடவுள் தேர்ந்துகொண்ட தனிச்சிறப்பான நற்செய்தித் தூதுவர் இயேசுவே. இவர் பாலஸ்தீன நாட்டில் ஒரு நாடோடி போதகராகச் செயல்பட்டார். அக்கால மறைநூல் அறிஞரைப் போல உயர்பதவி இயேசுவுக்கு இருக்கவில்லை. அவர் ஒரு சாதாரண கலிலேய மனிதர்; சமுதாயத்தில் உயரிடம் அவருக்கு ஒதுக்கப்படவில்லை; அதிகாரமும் ஆட்சிப் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்படவில்லை. அவருக்குத் துணையாகச் சென்றவர்கள் தலைசிறந்த படிப்பாளிகள் அல்ல; மீன்பிடித்தல், வரிதண்டுதல் போன்ற தொழில்களே அவர்களது பிழைப்புக்கு வழியாயிருந்தன. மேலும், இயேசுவோடு சில பெண்களும் துணையாகச் சென்றார்கள். இவர்களில் சிலர் பேய்பிடியால் துன்புற்றவர்கள். அவர்கள் இயேசுவை அணுகிச் சென்று அவர் வழியாக நலம் பெற்றதால் கடவுளின் இரக்கத்தையும் அன்பையும் நேரடியாக அனுபவித்திருந்தார்கள். பெண்கள் என்றாலே சமுதாயத்தில் தாழ்நிலையைச் சார்ந்தவர்கள் என்று கருதப்பட்ட அக்காலத்தில் இயேசுவோடு கூட வழிநடந்தவர்களுள் நோய்நொடிகளால் அவதிப்பட்ட (குணமான) பெண்களும் இடம்பெற்றனர் என்பது வியப்புக்குரியதே.

தம் நற்செய்தியைப் பரப்புவதற்குக் கடவுள் தேர்ந்துகொள்கின்ற மனிதர் சாதாரணமானவர்கள். நம் ஒவ்வொருவரையும் கடவுள் தம் நற்செய்தியின் தூதுவராகத் தெரிந்துகொள்ள முடியும் என்றால் கடவுளின் வியத்தகு அன்புதான் என்னே! இத்தொழிலில் ஈடுபடுவதற்குத் தனிப் படிப்போ தகுதியோ தேவையில்லை. கிறிஸ்துவை நாம் அன்புசெய்ய வேண்டும்; அவரை நம் உள்ளத்திலும் இதயத்திலும் ஏற்கவேண்டும்; அவரோடு வழிநடக்க நாம் தயாராக இருக்க வேண்டும். இத்தகைய மனநிலை நம்மிடம் இருந்தால் போதும், நாம் நற்செய்தி அறிவிக்கத் தகுதியுடையவர்கள் ஆகிவிடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பை இவ்வுலக மக்களோடு பகிர்ந்துகொள்ள நீர் எங்களை அழைக்கின்றீர் என உணர்ந்து வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.