யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-09-10

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 33: 7-9,திபா 95: 1-2. 6-7. 8-9,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 8-10 ,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20)




குற்றம் செய்தவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது: உங்கள் உறவு தொடரும். குற்றம் செய்தவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது: உங்கள் உறவு தொடரும். குற்றம் செய்தவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது: உங்கள் உறவு தொடரும். குற்றம் செய்தவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது: உங்கள் உறவு தொடரும். குற்றம் செய்தவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது: உங்கள் உறவு தொடரும்.


திருப்பலி முன்னுரை

நன்மைக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் இருபத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். பிறரது குற்றங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களை நல்வழிப்படுத்த இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமக்கு எதிராக ஒருவர் குற்றம் செய்தால், அவருடன் தனியாக இருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுமாறு இயேசு கூறுகிறார். கிறிஸ்தவர்கள் இடையே எழும் பிரச்சனைகளை திருச்சபைக்குள்ளே தீர்த்துக்கொள்ள வேண்டுமென நமக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மேலும் ஒரு நற்காரியத்துக்காக இருவர் மனமொத்து வேண்டினால், கடவுள் நமக்கு தருவார் என்ற உறுதியை இன்றைய நற்செய்தி தருகிறது. கிறிஸ்து இயேசுவின் பெயரால் ஒன்றிணைந்து ஆண்டவரின் மாட்சியைக் காண வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அவர்களது இரத்தப்பழியை உன் மேல் சுமத்துவேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 33: 7-9

ஆண்டவர் கூறியது: மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன். என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும் போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்க வேண்டும். தீயோரிடம் நான், ` ஓ தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள்' என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவர்; ஆனால், அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன். ஆனால் தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப வேண்டுமென்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து திரும்பாவிட்டால், அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர். நீயோ, உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
திபா 95: 1-2. 6-7. 8-9

வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி

வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! பல்லவி

அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். பல்லவி

இரண்டாம் வாசகம்

அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 8-10

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார். ஏனெனில், ``விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே'' என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், ``உன்மீது அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக'' என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன. அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் உலகினரைக் கிறிஸ்துவின் வாயிலாகத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20

அக்காலத்தில் இயேசு சீடர்களிடம் கூறியது: ``உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் `இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும். மண்ணுலகில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. நல்லாயராம் இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தீய வழியில் செல்லும் மக்களை எச்சரித்து நல்வழியில் நடத்துவர்களாய் திகழ வரம் அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

2. நன்மருத்துவராம் இறைவா,

உலகெங்கும் நிகழும் போர்கள், வன்முறைகள், அடக்குமுறைகள் போன்ற தீமைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் உமது பாதுகாப்பினை வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

3. உலகினரைக் கிறிஸ்துவின் வாயிலாத் உம்மோடு ஒப்புரவாக்கிய தந்தையே!

பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், வாழும் அனைவரும் ஒருவரோடொருவர் ஒப்புரவாகி, ஒருவரையொரவர் அன்பு செய்து வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. துன்பங்களை வென்ற நாயகனே, எம் இறைவா!

துன்பங்களை நாம் கண்டு துவண்டுவிடாமல் அதளை மேற்கொள்ளத் தனிமனித முயற்சியோடு உம் இறைநம்பிக்கை அதிக முக்கியம் என்பதனை உணர்ந்து நாங்கள் துன்பப்படுவோர்க்கு, எப்போதும் உதவிகரம் கொடுக்கக் கூடிய நல்மனதையும் கடவுளுக்க ஏற்புடைய நற்காரியங்களை மேற்கொள்ளத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

5.அருள்கொடையின் நாயகனே எம் இறைவா!

இக்காலத்தில் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் அறிவியலின் வளர்ச்சித் தான் மிகச் சிறந்தது என்று நினைக்காமல் இறைஞானமே எல்லாவற்றிலும் தலைசிறந்தது என்ற புரிந்துகொள்ளவும், காலங்களையும், யுகங்களையும் கடந்த கடவுள் நம்மோடு நம்மில் செயலாற்றுகிறார் என்பதைப் புரிந்து, இறைவார்த்தையின் ஆழத்தை அதிகமாக அறிந்துச் சொல்லாலும் செயலாலும் சான்றுபகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.

6. நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா!

எங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரும் தங்கள் உள்ளத்தில் இயேசுவே ஆண்டவர் என்று சான்றுப் பகிரவும், குடும்பம் என்ற கூடாரம் சுயநலத்தால் சிதறிபோகாமல் இருக்க உறுதியான பாசப்பிணைப்பைத் தந்து எங்களுக்குத் தந்து இவ்வுலகை வென்று நிலைவாழ்வுப் பெற்றுக் கொள்ளத் தேவையான வரங்கள் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.

7. ஆதரித்தாளும் எம் இறைவா,

எம் இளையோர் அனைவரையும் பாகுபாடுயின்றித் திரு அவையில் பல்வேறு மேய்ப்புப் பணியில் ஈடுபடுத்தி, அதனால் அவர்களின் ஆன்மீக வாழ்வில் வளம் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் சான்றுப் பகரும் வாழ்வை வாழ்ந்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள்'' (மத்தேயு 18:15)

கிறிஸ்து வழங்கிய அன்புக் கட்டளைக்கு இரு பக்கங்கள் உண்டு. ஒன்று, நாம் கடவுளை அன்புசெய்வது, மற்றொன்று நாம் பிறர் மட்டில் அன்புகாட்டுவது. இந்த இரு பக்கங்களும் ஒரே அன்புக் கட்டளையின் இணைபிரியா அம்சங்கள். ஆனால், பிறரை அன்புசெய்ய வேண்டும் என்னும் கட்டளையை நடைமுறையில் கடைப்பிடிப்பது எப்படி? அன்பின் வடிவங்கள் பல. அவற்றுள் ஒன்றுதான் பிறர் குற்றம் செய்யும்போது அவர்களைத் திருத்துவதற்காக நாம் எடுக்கும் முயற்சி. பிறரிடம் குற்றம் காண்பதையே தங்கள் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொள்வோர் சிலர் உண்டு. இவர்கள் தங்களுடைய குறைகளைப் பற்றிக் கவலைப்படாமல் பிறரைத் திருத்துவதிலேயே கருத்தாயிருப்பார்கள். இது இயேசுவின் அணுகுமுறை அல்ல. நம்மிடம் காணப்படுகின்ற குறைகளை நாம் களைந்துவிட்டு, அதன் பின்னர் பிறரிடம் உள்ள குற்றங்களைச் சுட்டிக்காட்டுவதே முறை. ஆனால், குற்றம் காண்பதிலும் பல வகைகள் உண்டு. பிறரைக் குறைகூறுவதற்கென்றே குற்றம் காண்பது உண்மையான அன்பு அல்ல. மாறாக, பிறர் நல்வழிக்குத் திரும்ப வேண்டும் என்னும் நல்லெண்ணத்தோடு பிறருடைய குற்றங்களைத் திருத்துவதற்கு நாம் முயன்றால் அதுவே பிறரன்பின் சிறந்த வெளிப்பாடாக அமையும்.

பிறரைத் திருத்த நாம் முனையும்போது முதல்முதலில் அவர்களோடு தனித்துப் பேசி அக்குறையைச் சரிப்படுத்த வேண்டும் என்பது இயேசு வழங்குகின்ற வழிமுறை. இயேசு இவ்வாறு ஏன் கூறுகிறார் என்றொரு கேள்வியை நாம் கேட்கலாம். இயேசுவின் பார்வையில் எந்த ஒரு மனிதரும் தம்மைக் குற்றமற்றவர் எனக் கூறிட இயலாது. கடவுளின் முன்னிலையில் நாம் அனைவருமே குறையுள்ளவர்கள்தாம். கடவுளின் இரக்கமும் மன்னிப்பும் நம் அனைவருக்கும் தேவையானதே. அப்படியிருக்க, நம் சகோதரர் சகோதரிகளிடம் மட்டும் குற்றம் இருப்பதாக எண்ணி நாம் செயல்படுவதற்கு மாறாக, நமக்குக் கடவுளின் மன்னிப்பு அருளப்படுவதுபோல பிறரும் அதே அன்பு அனுபவத்தை நம் செயல்கள் வழியாகப் பெற்றிட நாம் வழிவகுக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம்மிடமிருந்து நாங்கள் பெறுகின்ற மன்னிப்பு அனுபவத்தால் ஊக்கம் பெற்று எங்களை அடுத்திருப்போரையும் அன்போடு நெறிப்படுத்த எங்களுக்கு அருள்தாரும்.