யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 19வது வாரம் திங்கட்கிழமை
2017-08-14

புனித மாக்ஸ்மிலன் மேரி கோல்பே




முதல் வாசகம்

. அன்னியர்மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர் அவரே.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 10;. 12-22

12 எனவே இஸ்ரயேலரே, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவர்தம் அனைத்து வழிகளிலும் நடந்து, அவர் மீது அன்புகூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்குப் பணிபுரிந்து, 13 உங்களுக்கு எல்லாம் நலமாகும் பொருட்டு நான் இன்று கற்பிக்கின்ற அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதன்றி, அவர் உங்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கின்றார்? 14 விண்ணும் விண்ணின் வானங்களும், மண்ணும் அதில் உள்ள அனைத்தும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியன. 15 இருப்பினும், உங்கள் மூதாதையரின்மீது பற்றுவைத்து அன்பு கூர்ந்தார். அவர்களுக்குப்பின் அவர்களுடைய வழிமரபினராகிய உங்களை எல்லா மக்களினங்களினின்றும், இந்நாளில் இருப்பதுபோலத் தெரிந்துகொண்டார். 16 ஆகவே, உங்கள் உள்ளத்தை விருத்த சேதனம் செய்யுங்கள். வணங்காக் கழுத்தினராய் இராதீர்கள். 17 ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவாக்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுததற்குரிய கடவுள் அவரே. அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை; கையூட்டு வாங்குவதும் இல்லை. 18 அனாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. அன்னியர்மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர் அவரே. 19 அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள். 20 உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சுங்கள்; அவருக்கே பணிபுரிந்து அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். அவர் பெயராலே ஆணையிடுங்கள். 21 அவரே உங்கள் புகழ்ச்சி! அவரே உங்கள் கடவுள்! உங்கள் கண்கள் கண்ட ஆற்றல்மிகு அச்செயல்களை உங்களுக்காகச் செய்தவர் அவரே. 22 உங்கள் மூதாதையர் எழுபது ஆள்களாய் எகிப்துக்குப் போனார்கள். இப்பொழுதோ உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வானத்து விண்மீன்கள் போல் பெருகச் செய்துள்ளா

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
திருப்பாடல்கள் 147;12-15 19-20

12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!பல்லவி

13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார்.பல்லவி

14 அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.பல்லவி

15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றதுபல்லவி .

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்பல்லவி.

20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது; அல்லேலூயா !பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு அவர்களிடம், ' மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17;22-27

கலிலேயாவில் சீடர்கள் ஒன்று திரண்டிருக்கும்போது இயேசு அவர்களிடம், ' மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்.23 அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்; ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார் ' என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துயரடைந்தார்கள். இயேசு வரி செலுத்துதல் 24 அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்த போது கோவில் வரியாக இரண்டு திராக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து, 'உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா?' என்று கேட்டனர்.25 அவர், ' ஆம், செலுத்துகிறார் ' என்றார். பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு, ' சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா? ' என்று கேட்டார்.26 ' மற்றவரிடமிருந்துதான் ' என்று பேதுரு பதிலளித்தார். இயேசு அவரிடம், ' அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல.27 ஆயினும் நாம் அவர்களுக்கு தடையாய் இருக்கக் கூடாது. எனவே நீ போய்க் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்'' (மத்தேயு 17:22)

இயேசு தம்மைக் குறிக்கப் பயன்படுத்திய பெயர்களில் முக்கியமான ஒன்று ''மானிட மகன்'' என்பதாகும். யார் இந்த மானிட மகன்? இதற்கு விவிலிய அடிப்படை என்ன? மானிட மகன் என்னும்போது ''மனிதர்'' எனப் பொதுவாகப் பொருள்கொள்ளலாம். இயேசு எல்லா மனிதருக்கும் பிரதிநிதிபோல இவ்வுலகில் வந்ததால் அவர் அனைவருக்கும் மேலான ''மானிட மகன்''. பழைய ஏற்பாட்டில் மானிட மகன் பற்றிய குறிப்புகள் யோபு (16:21; 25:6), திருப்பாடல்கள் (8:4; 80:17; 114:3), எசேக்கியேல் (2:1-8), தானியேல் (17:13) போன்ற நூல்களிலும், புதிய ஏற்பாட்டில் மத்தேயு (8:20; 12:38-42) முதலிய நற்செய்தி நூல்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. கிறிஸ்தவ விளக்கத்தின்படி, இயேசு தம்மை ''மானிட மகன்'' எனக் குறிப்பிட்டது பெரும்பாலும் தாம் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் இறந்து, புத்துயிர் பெற்று எழுவதை விளக்கவே. மானிட மகன் என்பவர் துன்புறும் மெசியா. அவரே இயேசு.

அதே நேரத்தில், இயேசு மனிதரோடு தம்மை முழுமையாக ஒன்றித்துக் கொண்டதால் அவருடைய வாழ்வில் நிகழ்ந்தவை மனிதரின் வாழ்விலும் நிகழ்கின்றன. குறிப்பாக, மானிட வாழ்க்கையில் சிலுவைக்கு இடம் உண்டு; உயிர்த்தெழலுக்கும் இடம் உண்டு. இவ்வாறு நம்மைத் தம்மோடு ஒன்றித்துக்கொள்கின்ற இயேசு நம் துன்ப வேளைகளில் நமக்குத் துணையாக வருகிறார். நாம் அவருடைய துன்பங்களில் பங்கேற்கும்போது அவரும் நம் துன்பங்களில் பங்கேற்கிறார் என்பது ஓர் முரணான உண்மை. எனவே இயேசுவின் சீடர் துயரமடையத் தேவையில்லை. சிலுவை வழியாக நமக்குப் புது வாழ்வு பிறந்தது என்பது குறித்து நாம் மகிழ வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவோடு நாங்கள் துன்ப வேளையிலும் இணைந்திருக்க அருள்தாரும்.