யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-08-13

(இன்றைய வாசகங்கள்: அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம். 19:9, 11-13,திருப்பாடல்: 85: 8-13,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 9: 1-5,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 22-33)




நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும். நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும். நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும். நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும். நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்.


திருப்பலி முன்னுரை

ஆண்டவரே, உம் பேரன்பையும், மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.

கிறிஸ்து இயேசுவில் அன்புமிக்க சகோதர சகோதரிகளே, நல்லதையே அனைவருக்கும் அருள்பவராகிய நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம். இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் பத்தொன்பதாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம். கடவுளின் வார்த்தையைக் கேட்டு நம்பிக்கையோடு செயல்படுகின்றவரைக் கடவுள் கரம் நீட்டிக் காத்துக்கொள்வார் என்னும் நம்பிக்கையோடு வாழ்கின்ற மனிதர்களிடம், புயல்போன்ற துன்பங்களும், துயரங்களும், வருத்தங்களும், வியாதிகளும் வந்தாலும் கடவுள் கைவிடமாட்டார் என்னும் உறுதியான செய்தி இன்றைய இறைவார்த்தைகள் வழியாக தெளிவாக உணர்த்தப்படுகின்றது.

இச் செய்திகளை நம் உள்ளத்தில் ஆழப் பதித்தவர்களாக, கடவுளின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு செயல்படுகின்ற மக்களாக வாழ இத் திருப்பலியில் வரம் கேட் டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

மலை மேல் என் திருமுன் வந்து நில்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம். 19:9, 11-13

எலியா ஒரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தபின் அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவர், "வெளியே வா: மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கிறேன் " என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை. நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது. அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பையும் மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
திருப்பாடல்: 85: 8-13

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன். தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி. நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி:

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும். நீதியும் நிறைவாழ்வும் ஒன்றை யொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும். விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி:

நல்லதையே ஆண்டவர் அருள்வார். நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும். அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி:

இரண்டாம் வாசகம்

என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 9: 1-5

சகோதரர் சகோதரிகளே! கிறிஸ்துவைச் சார்ந்த நான் சொல்வது உண்மை, பொய்யல்ல. தூய ஆவியால் தூண்டப்படும் என் மனச்சான்றே நான் சொல்வதற்குச் சாட்சி. உள்ளத்தில் உனக்குப் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு. என் சொந்த இனத்தைச் சேர்ந்த என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன். அவர்கள்தாம் இஸ்ரயேல் மக்கள்: அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக் கொண்டார். அவர்கள் நடுவில்தான் கடவுள் தம் மாட்சியை விளங்கச் செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. குலமுதல்வர்களின் வழிவந்தவர்கள் அவர்கள்: மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார். இவரே எல்லாவற்றுக்கும் மேலான கடவுள்: என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக் கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 22-33

அக்காலத்தில் இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார். மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக் கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.இரவின் நான்காம் காவல்வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, " ஐயோ, பேய் " என அச்சத்தினால் அலறினர்.உடனே இயேசு அவர்களிடம் பேசினார். " துணிவோடிருங்கள் : நான்தான், அஞ்சாதீர்கள் " என்றார். பேதுரு அவருக்கு மறுமொழியாக, " ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் " என்றார். அவர், "வா " என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, " ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும் " என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, " நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்? " என்றார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, " உண்மையாகவே நீர் இறைமகன் " என்றனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. நிறைவாழ்வை வாக்களிக்கும் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் ஆகியோர், இன்றைய நாட்களில் நடைபெறும் நிகழ்வுகளின் வழியாக ஆண்டவராம் இறைவனாகிய நீர் உரைக்கும் செய்தியை சரியான விதத்தில் புரிந்து கொண்டு பணியாற்றிட வேண்டிய ஞானத்தை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நல்லதையே அருள்கின்ற தந்தையே இறைவா!

இறையரசின் மக்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும்: நல்லதையே நினைக்கவும், நல்லதையே செய்யவும், அதன் மூலமாக இறையரசைப் பரப்பும் சீடர்களாக மாறவும் வேண்டிய அருள்வரத்தை எமக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அருளிரக்கம் உடையவரான தந்தையே இறைவா!

வறுமையில் வாடுவோர், பட்டினியால் துன்பப்படுவோர், உண்மை அன்பின்றிப் பரிதவிப்போர் ஆகியோரைத் தேற்றி, தூய்மையான உம் பேரன்பையும் மீட்பையும் அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. விசுவசிப்போருக்கு வாழ்வாகிய எம் இறைவா!

பூமியில் நிலவும் மிக உயர்ந்த அழுத்தம், மிக அதிகமான வெப்பநிலை ஆகியவற்றைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, வைரமாக மாறிடும் நிலக்கரிபோல் எம் இளையோர்கள் இவ்வுலகம் தரும் அழுத்ததாலும், வெப்பத்தாலும் திட்டப்பட்டு உம் மணிமுடியில் மின்னிடும் வைரமாய்த் திகழ்ந்திட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. படைப்பின் நாயகனே எம் இறைவா!

இவ்வுலகம் உம் இறைவெளிப்பாடு என்பதனை நாங்கள் அனைவரும் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவிப் புரியவும், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழவும், அன்பு, மகிழ்ச்சி. பரிவு இவை இன்று மனிதசமுதாயத்தில் நலிவடையாமல் பிறருக்கு உதவிபுரியவும் எடுத்துக்காட்டான வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

6. குழந்தைகள் விண்ணரசின் சொந்தங்கள் என்று மொழிந்த எம் இறைவா,

எம் குழந்தைகள், இளமையில் அதிகமாக உம்மைத் தேடவும்., உம் வர்த்தைகளை வாழ்வாக்கி, தம் சொல்லாலும் திருஅவைக்கும், மனிதகுலச் சமுதாயத்திற்கும். சான்றுப் பகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்..

7. இளைஞனே எழுந்திரு, எழுந்து ஒளி வீசு என்றவரே! எம் இறைவா!

இவ்வலகத் தலைவர்கள் தங்கள் வாழ்வால் எடுத்துக்காட்டான வாழ்வை, பெரும்பாலும் அவர்களால் கொடுக்க முடிவதில்லை. நீரோ, உம் சொல்லும், செயலும் விண்ணகத் தந்தையோடு இணைந்திருந்தது போல, எம் இளையோர் அனைவரும் உம் வார்த்தையை வாழ்வாக்கி, உப்பாக உலகிற்கு ஒளியாகத் திகழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

8. குடும்பங்களின் தலைவரே எம் இறைவா!

இன்றைய நவீன வாழ்விலொன்றுக் கூடிச் செபிக்கவும், உரையாடவும், உறவுகளை மேம்படுத்தவும், மதிக்கவும் நாங்கள் மறந்திருக்கின்றோம். நீர் கொடுத்த இந்த உறவுகள் உண்மையான, மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை வழங்கிடவும், குடும்பங்களில் கூடிச் செபிக்கவும், இறை அழைத்தலை அதிகமாக ஊக்குவிக்கவும், எம் குடும்பங்கள் திருக்குடும்பங்களாக மாறிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, 'ஐயோ, பேய்' என அச்சத்தினால் அலறினர்'' (மத்தேயு 14:26)

இயேசு கடல்மீது நடந்த நிகழ்ச்சியை மத்தேயு, மாற்கு, யோவான் ஆகிய நற்செய்தியாளர் குறித்துள்ளனர். மத்தேயு இந்நிகழ்ச்சியை விவரிக்கும்போது இயேசுவிடம் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்னும் பாடத்தைப் புகட்டுகிறார். கடல்மீது நடப்பது இயற்பு விதிகளின்படி இயலாத காரியம். ஆனால் இயேசுவின் வல்லமைக்கு முன்னால் இயற்பு விதிகள் கூட பணிந்துவிடும் என்பது மத்தேயு தரும் கருத்து. என்றாலும், சீடர்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை. இயேசு உண்மையிலேயே யார் என்பதை அவர்கள் படிப்படியாகத்தான் உணர்ந்துகொண்டார்கள். அதுவும், இயேசு சிலுவையில் தொங்கி உயிர்விட்டு, கல்லறையிலிருந்து உயிர்பெற்றெழுந்து அவர்களுக்குத் தோன்றி அவர்களைத் திடப்படுத்திய பிறகே அவர்கள் இயேசுவிடத்தில் கொண்ட ''நம்பிக்கை'' முழுமையானதாக மாறிற்று. நம்மை அச்சுறுத்துகின்ற சக்திகள் பல இவ்வுலகில் உள்ளன. பசி, பிணி, நோய், சாவு ஆகிய இன்னல்கள் ஒரு புறம், மனித உறவுகளில் ஏற்படுகின்ற விரிசல்கள் மறுபுறம் என்று மனித வாழ்க்கையில் ஏற்படுகின்ற சிக்கல்களுக்கும் அழுத்தங்களுக்கும் எல்லையில்லை. அவ்வேளைகளில் நாம் கடவுளின் உடனிருப்பை உணரத் தவறிவிடுவதுண்டு. ஏன், கடவுளையும் அவர் நமது மீட்பராக அனுப்பிய இயேசுவையும் அடையாளம் காணாமல் பேயோ பூதமோ நம்மை நெருங்கி வருகிறதோ என்று தப்புக் கணக்குப் போட்டு, நாம் தத்தளிப்பதும் உண்டு.

நாம் அச்சத்தினால் அலறுகின்ற வேளைகளில் இயேசுவிடமிருந்து பிறக்கின்ற ஆறுதலான சொற்கள் நம் உள்ளத்தில் அமைதி கொணர வேண்டும். ''துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்'' என இயேசு சீடரைப் பார்த்துக் கூறியதுபோல இன்றைக்கும் நம்மைப் பார்த்துக் கூறுகிறார். புயல் மறைந்தது; காற்று அடங்கியது. சீடரின் அச்சமும் பறந்தோடியது. அந்த அமைதியான நேரத்தில் சீடர் இயேசுவிடம் தாம் கொண்ட நம்பிக்கையை அறிக்கையிடுகின்றனர்: ''உண்மையாகவே நீர் இறைமகன்''. இந்த நம்பிக்கை நமது நம்பிக்கையாக வெளிப்படும்போது இயேசு ஒருபோதும் நம்மைவிட்டு அகன்றிருக்கவில்லை என்னும் உண்மை நம் உள்ளத்தில் மிளிர்ந்து ஒளிவீசும்.

மன்றாட்டு:

இறைவா, கவலைகள் நடுவிலும் உம் உடனிருப்பு எங்களை விட்டு மறைவதில்லை என நாங்கள் உணர்ந்து வாழ அருள்தாரும்.