யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் வியாழக்கிழமை
2017-08-10

புனித லோறன்ஸ்




முதல் வாசகம்

ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்"
2கொரிந்தியர் 9;6-10

6 குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். 7 ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்கவேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். 8 கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானதெல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார். 9 "ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! 10 விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவர், விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச் செய்து அறச் செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்;
திருப்பாடல்கள் 112;1- 2 5-9

ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும்.-பல்லவி

மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.-பல்லவி

தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி.-பல்லவி

அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும்.-பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்"என்கிறார் ஆண்டவர் - அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12;24-26

24 கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 25 தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். 26 எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்'' (யோவான் 12:24)

மண்ணில் விழுந்து மடிந்து அதன் வழியாக மிகுந்த பலன் தருகின்ற கோதுமை பற்றிய குறிப்பு கிரேக்க சமய சிந்தனையிலும் காணக்கிடக்கிறது. தூய பவுல் பயன்படுத்துகின்ற ஓர் உவமையும் இவண் கருதத் தக்கது. ''நீ விதைக்கும் விதை மடிந்தாலொழிய உயிர் பெறாது...அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர்பெற்றெழுகிறது'' (1 கொரி 15:36,42) என்னும் பவுலின் கூற்றில் இவ்வுலகு சார்ந்தது மறைந்து, மறுவுலகு சார்ந்தது தோன்றும் என்னும் உண்மை வெளிப்படுகிறது. இம்மண்ணுலகு சார்ந்த நம் உயிர் ஒருநாள் மறைந்துபோகும்; ஆனால் ஒருநாளும் அழியாத வாழ்வு நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் உலகு சார்ந்த உயிரை விடாது பிடித்துக்கொள்ள நினைக்காமல், நிலைவாழ்வின் பொருட்டு அதை விட்டுவிடத் தயங்கலாகாது என இயேசு கற்பிக்கிறார் (யோவா 12:25).

கிறிஸ்தவ மரபில் ஆழ வேரூயஅp;ன்றிய உண்மை இது: ''தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்'' (மாற் 8:35). இவ்வாறு இயேசு கற்பித்த உண்மையை மத்தேயு, லூக்கா ஆகிய நற்செய்தியாளர்களும் குறித்துள்ளனர் (காண்க: மத் 16:25; லூக் 9: 24; மேலும், மத் 10:39; லூக் 17:33). இயேசு வழங்குகின்ற இப்போதனை நமக்கு ஒரு முரண்பாடாகப் படலாம். ஆனால் அவர் இரண்டு வேறுபட்ட நிலைகள் பற்றிப் பேசுகிறார். முதல் நிலை உலகு சார்ந்தது; இரண்டாம் நிலை விண்ணகம் சார்ந்தது. கடவுள் நமக்கு வழங்கியுள்ள உயிரைப் பேணி, பாதுகாப்பது நம் பொறுப்பு; இயல்பாகவே நாம் நம் உயிரைக் காத்திட முனைகிறோம். இவ்வாறு செய்யும்போது அதற்கு நேர் எதிரான விளைவுதான் ஏற்படுகிறது என இயேசு கூறுகிறார். இதற்கு மாறாக, யார் தம் உயிரை ஒரு பொருட்டாக எண்ணாமல் அதை ''இழப்பதற்கும்'' தயங்காதிருக்கிறார்களோ அவர்கள் உண்மையிலேயே வாழ்வின் பொருளைக் கண்டுகொள்கிறார்கள். இது நம் அறிவுக்கு முற்றிலும் எட்டாத ஓர் உண்மையாகவே இருக்கிறது. ஆனால் இயேசுவின் சீடராக வாழ விரும்புவோர் இயேசுவின் வாழ்விலிருந்து இந்த உண்மையின் பொருளைக் கற்றுக் கொள்கிறார்கள். இயேசு எருசலேமை நோக்கிச் செல்கிறார். அங்கே அவர் தம் உயிரைக் கையளிப்பார். அவ்வாறு அவர் தம் உயிரை ''இழக்கும்'' போது நமக்கு அவர் ''வாழ்வு தருகிறார்''. இயேசுவின் சீடரும் அவர் காட்டிய வழியில் நடந்து நிலைவாழ்வைப் பெற்றிட அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு:

இறைவா, நிலை வாழ்வைப் பெற்றிட அனைத்தையும் இழக்கவும் நாங்கள் முன்வர அருள்தாரும்.