யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 14வது வாரம் வியாழக்கிழமை
2017-07-13




முதல் வாசகம்

மனம் கலங்க வேண்டாம். உங்கள்மீதே சினம் கொள்ளவேண்டாம். ஏனெனில், உயிர்களைக் காக்கும் பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்'
தொடக்க நூலிலிருந்து வாசகம் 44: 18-21,23-29; 45: 1-5

அந்நாள்களில் யூதா, யோசேப்பு அருகில் வந்து, ``என் தலைவரே! அடியேன் ஒரு வார்த்தை கூற அனுமதி தாரும். என் தலைவரே! செவிசாய்த்தருளும். உம் அடியான் மீது சினம் கொள்ள வேண்டாம். நீர் பார்வோனுக்கு இணையானவர். என் தலைவராகிய தாங்கள் உம் பணியாளர்களாகிய எங்களிடம், `உங்களுக்குத் தந்தையோ சகோதரனோ உண்டா?' என்று கேட்டீர்கள். அதற்கு நாங்கள், `எங்களுக்கு வயது முதிர்ந்த தந்தையும், முதிர்ந்த வயதில் அவருக்குப் பிறந்த ஓர் இளைய சகோதரனும் உள்ளனர். அவனுடைய சகோதரன் இறந்துவிட்டான். அவன் தாயின் பிள்ளைகளில் அவன் ஒருவனே இருப்பதால், தந்தை அவன் மேல் அதிக அன்புகொண்டிருக்கிறார்'' என்று தலைவராகிய தங்களுக்குச் சொன்னோம். அப்பொழுது தாங்கள், `அவனை என்னிடம் அழைத்து வாருங்கள். நான் அவனை நேரில் பார்க்க வேண்டும்' என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள். அதற்குத் தாங்கள் `உங்கள் இளைய சகோதரன் உங்களோடு வராவிட்டால் என் முகத்தில் விழிக்க வேண்டாம்' என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள். உம் பணியாளராகிய எங்கள் தந்தையிடம் திரும்பியவுடன் என் தலைவராகிய தாங்கள் சொல்லியவற்றை அவரிடம் எடுத்துரைத்தோம். பிறகு எங்கள் தந்தை, `நீங்கள் திரும்பிப்போய் நமக்குக் கொஞ்சம் உணவுப் பொருள் வாங்கி வாருங்கள்' என்றார். நாங்கள் `எங்களால், போக இயலாது, எங்கள் இளைய சகோதரன் எங்களோடு சேர்ந்து வந்தால் மட்டுமே புறப்படுவோம். வராவிட்டால், இவன் இல்லாமல் நாங்கள் அவர் முகத்தில் விழிக்க மாட்டோம்' என்றோம். உம் பணியாளராகிய எங்கள் தந்தை எங்களிடம் `என் மனைவி, எனக்கு இரு பிள்ளைகளையே பெற்றெடுத்தாள் என்று உங்களுக்குத் தெரியும். ஒருவன் என்னைப் பிரிந்து வெளியே சென்றான். அவன் ஒரு கொடிய விலங்கால் பீறிக் கிழிக்கப்பட்டான் என்று நினைத்துக்கொண்டேன். ஏனெனில், இதுவரை அவனைக் காணவில்லை. இப்பொழுது நீங்கள் இவனையும் என்னிடமிருந்து பிரிக்கிறீர்கள். இவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், நரைத்த முடியுள்ள என்னைத் துயருக்குள்ளாக்கிப் பாதாளத்திற்குள் இறங்கச் செய்வீர்கள்' என்றார். அப்பொழுது யோசேப்பு தம் பணியாளர் அனைவர் முன்னிலையிலும் இதற்குமேல் தம்மை அடக்கிக் கொள்ள முடியாமல், `எல்லாரும் என்னைவிட்டு வெளியே போங்கள்' என்று உரத்த குரலில் சொன்னார். யோசேப்பு தம் சகோதரருக்குத் தம்மைத் தெரியப்படுத்தும்பொழுது வேற்று மனிதர் எவரும் அவரோடு இல்லை. உடனே அவர் கூக்குரலிட்டு அழுதார். எகிப்தியர் அதைக் கேட்டனர். பார்வோன் வீட்டாரும் அதைப் பற்றிக் கேள்விப்பட்டனர். பின்பு, அவர் தம் சகோதரர்களை நோக்கி, ``நான்தான் யோசேப்பு! என் தந்தை இன்னும் உயிரோடு இருக்கிறாரா?'' என்று கேட்டார். ஆனால் அவரைப் பார்த்து அவர் சகோதரர்கள் திகில் அடைந்ததால், அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் யோசேப்பு தம் சகோதரர்களை நோக்கி, ``என் அருகில் வாருங்கள்'' என்றார். அவர்கள் அருகில் வந்தவுடன் அவர், ``நீங்கள் எகிப்திற்குச் செல்லுமாறு விற்ற உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்! நான் இங்குச் செல்லுமாறு நீங்கள் என்னை விற்றுவிட்டது குறித்து மனம் கலங்க வேண்டாம். உங்கள்மீதே சினம் கொள்ளவேண்டாம். ஏனெனில், உயிர்களைக் காக்கும் பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!
திருப்பாடல்கள் 105: 16-17. 18-19. 20-21

16 நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்; உணவெனும் ஊன்றுகோலை முறித்துவிட்டார். 17 அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பி வைத்தார்; யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார். -பல்லவி

18 அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர். அவர்தம் கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர். 19 காலம் வந்தது; அவர் உரைத்தது நிறைவேறிற்று; ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவர் என மெய்ப்பித்தது. - பல்லவி

20 மன்னர் ஆள் அனுப்பி அவரை விடுதலை செய்தார்; மக்களினங்களின் தலைவர் அவருக்கு விடுதலை அளித்தார்; 21 அவர் அவரைத் தம் அரண்மனைக்குத் தலைவர் ஆக்கினார்; தம் உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாளராக ஏற்படுத்தினார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 7-15

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: நீங்கள் சென்று `விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். பொன், வெள்ளி, செப்புக்காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக்கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே. நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள். அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள் மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாய் இருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும். உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரை விட்டு வெளியேறும் பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப் பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு பன்னிருவரையும் அனுப்பியபோது கூறியது: '... விண்ணரசு நெருங்கிவிட்டது எனப் பறைசாற்றுங்கள்...கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்...' என்றார்'' (மத்தேயு 10:5,7,8)

இயேசு எப்பணியை ஆற்றவந்தாரோ அதே பணியைத் தொடர்ந்து ஆற்றுவதே திருத்தூதரின் பொறுப்பு. இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, ''மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'' என்னும் அறிவிப்போடு அதைத் தொடங்கினார் (மத் 4:17). ''விண்ணரசு'' என மத்தேயு குறிப்பிடுவதையே மாற்கு, லூக்கா ஆகியோர் ''இறையாட்சி'' எனக் குறித்தனர் (காண்க: மாற் 1:14-15; லூக் 4:14-15). கடவுள் விரும்புகின்ற சமுதாயம், கடவுளின் மதிப்பீடுகளை அடித்தளமாகக் கொண்டு உருவாகின்ற மக்கள் குடும்பம் என்பதே இறையாட்சி. இத்தகைய புதிய சமுதாயத்தில் மனிதர் ஒருவர் ஒருவரை எதிரிகளாகக் கருதாமல் ஒரே குடும்பத்தின் உறுப்பினராக ஏற்பர். மனிதர் அனைவருக்கும் தந்தையும் தாயுமாகக் கடவுளை ஏற்று, அவருக்கே பணிந்து, அவரிடத்திலும் அவர் அனுப்பிய நம் மீட்பர் இயேசுவிடத்திலும் நம்பிக்கை கொள்வர். கடவுளிடமிருந்து வருகின்ற தூய ஆவியால் வழிநடத்தப்படுவர். இந்தப் புதியதோர் உலகம் மனிதர் நடுவே உருவாக வேண்டும் என்பதற்காக உழைப்பது இயேசுவின் சீடர்களின் பொறுப்பாகும். இப்புதிய உலகத்தின் நிறைவு மனித வரலாற்றில் நிகழாது என்றாலும் அதை இவ்வுலகில் இயேசு தம் சாவு, உயிர்த்தெழுதல் வழியாக ஏற்கெனவே தொடங்கிவிட்டார்.

இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிந்து ஏற்றுக்கொள்கின்ற நாம் கடவுளிடமிருந்து ஒரு பெரிய ''கொடை''யைப் பெற்றுள்ளோம் என்பதை மறக்கலாகாது. ஒருவிதத்தில் கிறிஸ்தவ வாழ்வு முழுவதுமே கடவுள் நமக்குத் தருகின்ற கொடைக்கு நாம் நன்றிசெலுத்துகின்ற செயல் என்றே கூறிடலாம். கொடை என்பது உரிமையின் அடிப்படையில் கோருகின்ற ஒரு பரிசல்ல; மாறாக, அக்கொடையைத் தருபவர் தாமே மனமுவந்து நமக்கு அளிக்கின்ற ஒன்று. நம்மை இவ்வுலகில் மனிதராகப் படைத்து, பராமரித்துக் காக்கின்ற கடவுள் நமக்குக் கிறிஸ்தவ நம்பிக்கை என்னும் அரும் கொடையையும் அளித்துள்ளார். அதை நாம் நன்றியோடு ஏற்கிறோம். நன்றியின் வெளிப்பாடு இறைபுகழாக வெளிப்படும்; அதே நேரத்தில் நாம் பெற்ற கொடையை நமக்கென்றே பூட்டி வைத்துக்கொள்ளாமல் அதைத் தாராள உள்ளத்தோடு நம் சகோதர சகோதரிகளாகிய பிற மனிதரோடு பகிர்ந்திட வேண்டும். எனவேதான் இயேசு சீடரை நோக்கி, ''கொடையாகப் பெற்றுக் கொண்டீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்'' என்றார் (மத் 10:8).

மன்றாட்டு:

இறைவா, நன்றியுள்ள மக்களாக நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.