யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 14வது வாரம் செவ்வாய்க்கிழமை
2017-07-11

புனித பெனடிக்ற் 0




முதல் வாசகம்

"நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்"
தொடக்க நூலிலிருந்து வாசகம் 32;22-32

22 அந்த இரவிலேயே அவர் எழுந்து, தம் இரு மனைவியரையும் இரு வேலைக்காரிகளையும் புதல்வர் பதினொருவரையும் அழைத்துக் கொண்டு யாபோக்கு ஆற்றின் துறையைக் கடந்தார். 23 அப்படி அவர்களை ஆற்றைக் கடக்கச் செய்தபோது, தமக்கிருந்த அனைத்தையும் அனுப்பி வைத்தார் 24 யாக்கோபு மட்டும் இவ்வாறு தனித்திருக்க, ஓர் ஆடவர் பொழுது விடியுமட்டும் அவரோடு மற்போரிட்டார். 25 யாக்கோபை வெற்றி கொள்ள முடியாதென்று கண்ட அந்த ஆடவர் அவரது தொடைச்சந்தைத் தொட்டார். யாக்கோபு அவரோடு மற்போரிடுகையில் தொடைச் சந்து இடம் விலகியது. 26 அப்பொழுது ஆடவர் "என்னைப் போகவிடு; பொழுது புலரப்போகிறது" என, யாக்கோபு, "நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்" என்று மறுமொழி சொன்னார். 27 ஆடவர், "உன் பெயர் என்ன?" என, 28 அவர்; "நான் யாக்கோபு" என்றார். அப்பொழுது அவர், "உன்பெயர் இனி யாக்கோபு எனப்படாது, "இஸ்ரயேல்" எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்" என்றார். 29 யாக்கோபு அவரை நோக்கி "உம் பெயரைச் சொல்லும்" என்றார். அவர் "என் பெயரை நீ கேட்பதேன்?" என்று, அந்த இடத்திலேயே அவருக்கு ஆசி வழங்கினார். 30 அப்பொழுது யாக்கோபு, "நான் கடவுளின் முகத்தை நேரில் கண்டும் உயிர் தப்பிப் பிழைத்தேன்" என்று சொல்லி, அந்த இடத்திற்குப் "பெனியேல்" என்று பெயரிட்டார். 31 அவர் பெனியேலுக்கு அப்பால் சென்றவுடன் கதிரவன் தோன்றினான். தொடை விலகியதால் அவரும் நொண்டி நொண்டி நடந்தார். 32 அதன் பொருட்டு, இஸ்ரயேலர் இந்நாள்வரை தொடைச் சந்துச் சதைநாரை உண்பதில்லை. ஏனென்றால், அந்த ஆடவர் யாக்கோபின் தொடைச் சந்துச் சதைநாரைத் தொட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்
திருப்பாடல்கள் 17;1-3,6-8,14-15

1 ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். பல்லவி

2 உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்; உம் கண்கள் நேரியன காணட்டும்.பல்லவி

3 என் உள்ளத்தை ஆய்ந்தறியும்; இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்; என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்; தீமை எதையும் என்னிடம் காணமாட்டீர்; என் வாய் பிழை செய்யக்கூடாதென உறுதி கொண்டேன்.பல்லவி

6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்.பல்லவி

7 உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!பல்லவி

8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும் பல்லவி .

14 ஆண்டவரே, மாயும் மனிதரிடமிருந்து-இவ்வுலகமே தங்கள் கதியென வாழ்ந்து மாயும் மனிதரிடமிருந்து- உமது கைவலிமையினால் என்னைக் காப்பாற்றும். பல்லவி

அவர்களுக்கென நீர் ஒதுக்கி வைத்துள்ளவற்றால் அவர்கள் வயிற்றை நிரப்பும்;; அவர்களின் மைந்தர் வேண்டிய மட்டும் நிறைவு பெறட்டும்; எஞ்சியிருப்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச்செல்லட்டும்;

பல்லவி 15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9;32-38

32அக்கால்லத்தில்யேசு பேய் பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். 33 பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, "இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை" என்றனர். 34 ஆனால் பரிசேயர், "இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்" என்றனர். 35 இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். 36 திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள். 37 அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. 38 ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''திரண்டிருந்த மக்களை இயேசு கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகைளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்'' (மத்தேயு 9:36)

வாழ்க்கையில் சோர்வு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். செய்து முடிக்க நினைத்த காரியம் முறையாக முடிவுபெறாவிட்டால் நமக்குச் சோர்வு ஏற்படலாம். நம் எதிர்பார்ப்புகள் நிறைவேறா நிலையில் சோர்வு வரலாம். நமக்குச் சிக்கல்கள் ஏற்படுகின்ற போது அவற்றிற்குத் தீர்வுகாண நம்மால் இயலவில்லையே என்னும் எண்ணம் எழும்போது சோர்வு நம்மைப் பாதிப்பதுண்டு. பிறரிடமிருந்து எதிர்பார்த்த உதவி நமக்குக் கிடைக்காதபோது நமக்குச் சோர்வு வரலாம். இயேசு ஊர் ஊராகச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்து, புதுமைகள் பல புரிந்துவந்த அச்சமயத்தில் திரளான மக்கள் கூடியிருக்கின்றனர். அந்த மக்கள் ''சோர்ந்து காணப்பட்டார்கள்'' (மத் 9:36). சோர்ந்து போய் இருந்த அந்த மக்களைக்; கண்டபோது ''இயேசு அவர்கள் மேல் பரிவுகொண்டார்'' (மத் 9:36). பரிவு என்னும் சொல்லுக்கு இரக்கம், அருள், பாசம், அன்புணர்வு போன்ற பல பொருள்கள் உண்டு. மக்கள் சோர்ந்திருக்க முக்கிய காரணம் அவர்களை வழிநடத்திச் செல்ல திறமையான, தகுதிவாய்ந்த தலைவர்கள் (''ஆயர்கள்'') இல்லாமல் போனதுதான் (காண்க: மத் 9:36).

இயேசு நம்மை வழிநடத்துகின்ற ஆயராக வந்தார். தம்மை ''நல்ல ஆயருக்கு'' ஒப்பிட்ட இயேசு, பழைய ஏற்பாட்டில் கடவுள் ஒரு நல்ல ஆயருக்கு ஒப்பிடப்பட்டிருப்பதை அறிந்திருந்தார் (காண்க: திபா 22; 100; எசா 40:11). அதுபோலவே யூத சமயத்தில் தலைவர்களாக இருந்தோரைக் குறிக்கவும் ஆயர் என்னும் உருவகம் பயன்பட்டது (காண்க: எசே 34:8-12). மத்தேயு நற்செய்தி இயேசுவை ''நல்ல ஆயர்'' என வேறு இரண்டு இடங்களிலும் அழைக்கிறது (காண்க: மத் 10:6; 18:12-14). இவ்வாறு நம் ஆயராக வந்த இயேசு நம்மை நல்வழியில் நடத்திச் செல்வதோடு, நாம் உயிர்வாழ நமக்கு உணவளிப்பார்; நம்முடைய பிற தேவைகளையும் நிறைவுசெய்வார் என்பது நம் நம்பிக்கை. நல்ல தலைவர்கள் இருந்தால் சமுதாயம் தழைக்கும். திருச்சபையில் பொறுப்பு வகிக்கின்ற தலைவர்களும் இயேசுவைப் போல பரிவுள்ளம் கொண்டோராக இருக்க வேண்டும். அப்போது அவர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நன்முறையில் வழிநடத்திச் செல்வர்; நம் ஆயராம் இயேசுவைப் போல மக்களின் நலனை மேம்படுத்தத் தம்மையே ஈடுபடுத்துவர்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் நல்வழியில் நடந்து, பிறரையும் நல்வழியில் நடத்திச் சென்றிட அருள்தாரும்.