யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-07-09

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம்: 9:9-10,திருப்பாடல்: 145:1-2.8-9.10-11.13-14 ,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்: 8:9,11-13,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 11:25-30)




தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். 
ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். 
ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். 
ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.


திருப்பலி முன்னுரை

ஆறுதலுக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் பதினான்காம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நாம் துன்பங்களால் சோர்வுறும் நேரங்களில் கிறிஸ்து இயேசுவிடம் ஆறுதலைக் கண்டடைய இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஞானிகளும் அறிஞர்களும் அல்ல, குழந்தை உள்ளம் கொண்டவர்களே கடவுளின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை உணர்வது அவசியம். கனிவும் மனத்தாழ்மையும் உள்ள இயேசுவின் நுகத்தை ஏற்றுக்கொண்டு, அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறோம். நமது சுமைகள் நம்மை அழுத்தும்போது, ஆண்டவரின் பாதத்தில் இளைப்பாறுதல் அடைய வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார்.
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம்: 9:9-10

ஆண்டவர் கூறியது: மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு: மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார் அவர் நீதியுள்ளவர்: வெற்றிவேந்தர்: எளிமையுள்ளவர்: கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச் செய்வார்: எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்: போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்: அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல்வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்.
திருப்பாடல்: 145:1-2.8-9.10-11.13-14

என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப் பொழுதும் போற்றுவேன். நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். (பல்லவி)

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத் தின் மீதும் இரக்கம் காட்டுபவர். (பல்லவி))

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். (பல்லவி))

உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமு றையாக உள்ளது. தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். (பல்லவி)

இரண்டாம் வாசகம்

தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்: 8:9,11-13

சகோதரர் சகோதரிகளே! கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார். ஆகையால் சகோதர சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை: அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்: ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 11:25-30

அக்காலத்தில் இயேசு கூறியது: "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்: மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார். மேலும் அவர், "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது: என் சுமை எளிதாயுள்ளது" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. ஆறுதலின் ஊற்றே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், கிறிஸ்து வழங்கும் ஆறுதலை திருச்சபையின் மக்களுக்கு பெற்றுத்தரும் கருவிகளாக செயல்படத் தேவையான ஆற்றலை வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

2. வாழ்வின் ஊற்றே இறைவா,

உலகெங்கும் அழிவை விளைவிக்கும் தீமையின் ஆதிக்கம் பெருகி வரும் சூழலில், மக்கள் அனைவரும் நீர் அளிக்கும் அமைதி நிறைந்த வாழ்வை விருப்பத்துடன் தேடத் தூண்டுதல் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

3. உண்மையின் ஊற்றே இறைவா,

எம் நாட்டில் உமது மேன்மையை அறியாமல் இருளில் வாழும் மக்களுக்கு, நற்செய்தியின் உண்மை ஒளியை வழங்குபவர்களாக கிறிஸ்தவர்கள் அனைவரையும் உருவாக்கு மாறு உம்மை மன்றாடுகிறோம்.

4. ஆற்றலின் ஊற்றே இறைவா,

போர்கள், வன்முறைகள் உள்ளிட்ட தீமைகளின் பிடியில் சிக்கித் தவிக்கின்ற மக்கள் அனைவரும், இவ்வுலகில் உமது அமைதியின் அரசை நிறுவும் ஆர்வத்துடன் செயல்பட உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

5. மாசற்றோரை அன்ப செய்யும் இயேசுவே,

இன்றைய நாளில் என் குடும்பத்திலுள்ள, நான் அறிந்த அனைத்துக் குழந்தைகளுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன். அவர்களின் இனிமையில், மாசின்மையில் உமது உடனிருப்பை உணர்கின்றேன். உம்மைப் போற்றுகிறேன். இறைவா, உலகெங்கும் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் ஆசிர்வதித்து, அவர்களின் உணவு, உடை, உறைவிடம் மற்றும் அன்பு என்னும் தேவைகளை நிறைவேற்றுவீராக. நானும் குழந்தையைப் போல மாறி, விண்ணரசில்; இடம் பெற அருள் புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

6. பரிவன்புமிக்கத் தந்தையே எம் இறைவா!

எம் இளைய தலைமுறையினர் இறையரசின் விழுமியங்களைத் தங்களுக்குள் பெற்று இச்சமுதாயத்திற்குப் புனிதர்களைப் போல் முன்மாதிரியான நல்வாழ்வு வாழ்ந்திடவும், தன்னலமற்ற சேவையால் உமது இரக்கத்தைக் காட்டும் நல் உள்ளங்கள் உடையவராக மாறிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

"தந்தையே,...ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்" (மத்தேயு 11:25)

கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துவிட்டது என்று இயேசு நற்செய்தி கூறினார். அதைக் கேட்ட அறிஞர்கள் பலர் இருந்தார்கள். இயேசு புரிந்த அதிசய செயல்களைக் கண்ணால் கண்ட ஞானிகளும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் இயேசு யார் என்பதைக் கண்டுணரத் தவறிவிட்டார்கள். குழந்தை உள்ளம் கொண்டு, கடவுளின் வெளிப்பாட்டைத் திறந்த மனத்தோடு ஏற்க முன்வந்தவர்கள் இறையாட்சியின் மறைபொருளைப் புரிந்துகொண்டார்கள். இயேசு இத்தகையோரைப் புகழ்ந்துரைக்கிறார். யார்யார் தங்கள் இதயத்தை இறுகவைத்துக்கொண்டு, கடவுளின் வல்ல செயலுக்கு முட்டுக்கட்டை இடுகிறார்களோ அவர்கள் கடவுளாட்சியின் மாட்சியை அறிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள் என்றே கூற வேண்டும். இந்த இழிநிலை நமக்கு ஏற்படாமல் நாம் குழந்தை மனம் கொண்டவர்களாகக் கடவுளை நம் உள்ளத்தில் ஏற்றிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, கல்லான இதயத்தை எடுத்துவிட்டு எங்களுக்குக் கனிவான இதயத்தைக் கொடுத்தருளும்.