யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 9வது வாரம் திங்கள்கிழமை
2017-06-05

புனித பொனிப்பாஸ்




முதல் வாசகம்

. வாரங்களின் விழாவான பெந்தெகோஸ்து திருவிழாவின்பொழுது எனக்காக நல்லதொரு விருந்து தயாரிக்கப்பட்டது
தோபித்து 1;1-3, 2;1-8

இது தோபித்தின் கதை; தோபித்து தொபியேலின் மகன்; தொபியேல் அனனியேலின் மகன்; அனனியேல் அதுவேலின் மகன்; அதுவேல் கபேலின் மகன்; கபேல் இரபேலின் மகன்; இரபேல் இரகுவேலின் மகன்; இரகுவேல் அசியேலின் குடும்பத்தினர், நப்தலி குலத்தைச் சேர்ந்தவர். 2 தோபித்து அசீரியர்களின் மன்னரான எனமேசரின் காலத்தில் திசிபேயிலிருந்து நாடு கடத்தப்பட்டார். திசிபே வட கலிலேயாவில் ஆசேருக்கு வடமேற்கே தென்திசையில் காதேசு நப்தலிக்குத் தெற்கே, பெயேருக்கு வடக்கே உள்ளது. 3 தோபித்தாகிய நான் என் வாழ்நாளெல்லாம் உண்மையையும் நீதியையும் பின்பற்றி வாழ்ந்துவந்தேன்; அசீரிய நாட்டில் உள்ள நினிவே நகருக்கு என்னுடன் நாடு கடத்தப்பட்ட என் உறவின் முறையாருக்கும் என் இனத்தாருக்கும் தருமங்கள் பல செய்துவந்தேன்.1 சக்கர்தோன் ஆட்சியில் நான் வீடு திரும்பினேன். என் மனைவி அன்னாவும் என் மகன் தோபியாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டனர். வாரங்களின் விழாவான பெந்தெகோஸ்து திருவிழாவின்பொழுது எனக்காக நல்லதொரு விருந்து தயாரிக்கப்பட்டது. நான் உணவு அருந்த அமர்ந்தேன். 2 விருந்தின்போது எனக்குப் பலவகை உணவு பரிமாறப்பட்டது. அப்பொழுது என் மகன் தோபியாவிடம், "பிள்ளாய், நீ போய், நினிவேக்கு நாடு கடத்தப்பட்ட நம் உறவின் முறையாருள் கடவுளை முழு மனத்தோடு தேடும் ஏழை எவரையேனும் கண்டால், அவரை அழைத்துவா; அவர் என்னோடு உணவு அருந்தட்டும். நீ திரும்பிவரும்வரை நான் உனக்காகக் காத்திருப்பேன், மகனே" என்று கூறினேன். 3 தோபியா எங்கள் உறவின் முறையாருள் ஏழை ஒருவரைத் தேடிச் சென்றான். அவன் திரும்பி வந்து, "அப்பா" என்று அழைத்தான். நான், "என்ன மகனே?" என்றேன். அவன் மறுமொழியாக, "அப்பா, நம் இனத்தாருள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் சந்தை வெளியில் எறியப்பட்டு அங்கேயே கிடக்கிறது" என்றான். 4 உடனே நான் எழுந்து, உணவைத் தொடாமலே வெளியேறித் தெருவிலிருந்து கடலத்தைத் தூக்கிவந்தேன்; கதிரவன் மறைந்தபின் அடக்கம் செய்யலாம் என்று அதை என் வீட்டின் ஓர் அறையில் வைத்தேன். 5 வீடு திரும்பியதும் குளித்து விட்டுத் துயருடன் உணவு அருந்தினேன். 6 "உங்கள் திருநாள்களைத் துயர நாள்களாகவும் பாடல்களையெல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்" என்று பெத்தேலைக் குறித்து இறைவாக்கினர் ஆமோஸ் கூறிய சொற்களை நினைத்து அழுதேன். 7 கதிரவன் மறைந்ததும் நான் வெளியே சென்று, குழி தோண்டிச் சடலத்தைப் புதைத்தேன். 8 என் அண்டை வீட்டார், "இவனுக்கு அச்சமே இல்லையா? இத்தகையதொரு செயலைச் செய்ததற்காகத்தானே ஏற்கெனவே இவனைக் கொல்லத் தேடினார்கள். இவனும் தப்பியோடினான். இருப்பினும் இறந்தவர்களை மீண்டும் அடக்கம் செய்கின்றானே" என்று இழித்துரைத்தனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அல்லேலூயா! ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
திருப்பாடல்கள் 112;1-6

1 அல்லேலூயா! ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.பல்லவி

2 அவர்களது வழிமரபு ப+வுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். பல்லவி

3 சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும். பல்லவி

4 இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். பல்லவி

5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். பல்லவி

6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு 12;1-12

அக்காலத்தில் இயேசு அவர்களிடம் உவமைகள் வாயிலாகப் பேசத் தொடங்கினார்; "ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுச் சுற்றிலும் வேலியடைத்து, பிழிவுக்குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார். பிறகு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும்பயணம் மேற்கொண்டார். 2 பருவகாலம் வந்ததும் அத்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். 3 ஆனால் அவர்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள். 4 மீண்டும் அவர் வேறொரு பணியாளரை அவர்களிடம் அனுப்ப, அவரையும் அவர்கள் தலையில் அடித்து அவமதித்தார்கள். 5 அவர் மேலும் ஒருவரை அனுப்ப, அவரையும் கொலை செய்தார்கள்; அவர் வேறு பலரையும் அனுப்பினார். அவர்களுள் சிலரை நையப்புடைத்தார்கள்; சிலரைக் கொன்றார்கள். 6 இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே. அவர் அவருடைய அன்பு மகன், தம்மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு இறுதியாக அவரை அவர்களிடம் அனுப்பினார். 7 அப்பொழுது அத்தோட்டத் தொழிலாளர்கள், "இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நமக்கு உரியதாகும்" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 8 அவ்வாறே அவரைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள். 9 திராட்சைத் தோட்ட உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார். 10 "கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. 11 ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று" என்னும் மறைநூல் வாக்கை நீங்கள் வாசித்தது இல்லையா?" என்று அவர் கேட்டார். 12 தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டு அவரைப் பிடிக்க வழிதேடினார்கள்; ஆனால் மக்கள் கூட்டத்துக்கு அஞ்சினார்கள்; ஆகவே அவரை விட்டு அகன்றார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பருவகாலம் வந்ததும் அத்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார்'' (மாற்கு 12:2)

மக்களுக்குக் கடவுளாட்சி பற்றி போதித்த இயேசு உவமைகளைப் பயன்படுத்தி கருத்துக்களை எடுத்துரைத்தார். ''கொடிய குத்தகைக்காரர் உவமை'' என்னும் கதையில் வருகின்ற திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் தோட்டத்தைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும்பயணம் மேற்கொண்டார். குத்தகைக்காரர்கள் தோட்டத்தை நன்முறையில் காவல் காத்து, அதிலிருந்து பலன் எடுத்து, தம்மிடம் அத்தோட்டத்தை ஒப்படைத்த உரிமையாளருக்கு அவருக்கு உரிய திராட்சைப் பழங்களைக் கொடுக்கக் கடமைப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றத் தவறியது மட்டுமல்ல, அத்தோட்டத்தின் உரிமையாளர் அனுப்பிய பணியாளர்களை அவமதித்து, அவருடைய மகனையும் கொன்றுபோடுகிறார்கள். இயேசு இந்த உவமை வழியாகக் கூறிய உண்மை இயேசுவின் பகைவர்களுக்குத் தெளிவாகவே புரிந்தது. அவர்களிடம் கடவுள் ஒப்படைத்த பொறுப்பை அவர்கள் நிறைவேற்றத் தவறியதோடு, கடவுளால் அனுப்பப்பட்டு அவர்களைத் தேடி வந்த இயேசுவையும் அவர்கள் கொல்லத் தேடினார்கள்.

கடவுள் நம்மிடம் பல பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறார். அவருடைய அழகிய படைப்பாகிய இவ்வுலகம் அவர் நம் கைகளில் தந்துள்ள பொறுப்பு. இந்த உலகத்தைக் கடவுளின் திட்டத்திற்கு ஏற்ப நன்முறையில் பாதுகாத்துப் பேணுவது நம் கடமை. ஆனால் நாம் இப்பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிடுகிறோம். இவ்வுலகில் உள்ள வளங்களும் செல்வங்களும் எல்லையற்றவை என்னும் தவறான எண்ணத்தில் மனிதர்கள் உலக வளங்களைச் சுறண்டுகிறார்கள். அதன் விளைவாக, நீரும் நிலனும், காடும் மலையும், காற்றும் சுற்றுப்புறமும் மாசடைந்து மனித வாழ்க்கை சீர்குலையத் தொடங்குகிறது. நாம் உலகத்தை ''அடக்கி ஆளலாம்'' என நினைப்பதற்குப் பதிலாக, இவ்வுலகத்தைப் ''பொறுப்போடு கண்காணிக்க வேண்டும்'' என்னும் சிந்தனையைப் பெற வேண்டும். அப்போது இன்றைய தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைகளுக்கும் சீரிய வாழ்வை உருவாக்கிக் கொடுக்க இயலும். இவ்வாறு பொறுப்போடு செயல்பட்டால் நாம் மனிதரை மனிதராக மதிப்போம். மனிதரைக் கடவுளின் சாயலாக ஏற்று, அவர்களுடைய நலனை முன்னேற்றுவதில் கருத்தாயிருப்போம்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு நீர் அளிக்கின்ற கொடைகளை நன்றியோடு ஏற்று வாழ்ந்திட அருள்தாரும்.