யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-06-04

(இன்றைய வாசகங்கள்: திருத்தூதர்பணி 2: 1-11,திருப்பாடல் 104: 1,24. 29-30. 31,34, 1 கொரி 12: 3-7, 12-13,புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 20:19-23)




தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும்.


திருப்பலி முன்னுரை

"தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்."

இறை ஆவிக்குரியவர்களே,

தூய ஆவியாரின் வருகை பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விண்ணகம் செல்லும் முன்பு, சீடர்கள் மேல் ஊதி, தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுமாறு பணித்தார். இயேசு விண்ணேற்றம் அடைந்த பத்தாம் நாளில் கொடுங்காற்றைப் போன்றதோர் இரைச்சலின் நடுவே, தூய ஆவியார் பிளவுற்ற நெருப்பு நாவுகளின் வடிவில் சீடர்கள் மீது இறங்கினார். தூய ஆவியாரின் ஆற்றலால் மனவுறுதி பெற்ற திருத்தூதர்கள் பறைசாற்றிய நற்செய்தியால் முதல் கிறிஸ்தவ சமூகம் திருமுழுக்கு பெற்ற நாளை இன்று நாம் கொண்டாடுகிறோம். திருச்சபையின் பிறந்த நாளான இன்று, கிறிஸ்துவுக்கு சான்று பகரும் வரத்துக்காக தூய ஆவியாரின் ஆற்றலை வேண்டி, இத்திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர்.
திருத்தூதர்பணி 2: 1-11

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வௌ"வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லோரும் மலைத்துப்போய், "இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி? " என வியந்தனர். பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும்,பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும்,யூதரும், யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேகியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே! "என்றனர்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்
திருப்பாடல் 104: 1,24. 29-30. 31,34

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! 24 ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. பல்லவி

29 நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். 30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி

31 ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! 34 என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். பல்லவி

இரண்டாம் வாசகம்

ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்.
1 கொரி 12: 3-7, 12-13

சகோதரர் சகோதரிகளே! தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டடவரன்றி வேறு எவரும் "இயேசுவே ஆண்டவர்" எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.அருள்கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத் தொண்டுகளும் பலவகையுண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர்.பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது.உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 20:19-23

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன்" என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. ஆவியைப் பொழிபவரே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் உம் தூய ஆவியால் நிரப்பி, உம் திருமகனின் திருச்சபையை அருள் வாழ்வில் செழித்தோங்கச் செய்யும் அருளாற்றலைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. புதுவாழ்வு அளிப்பவரே இறைவா,

இவ்வுலகப் பொருட்களில் நாட்டம் கொண்டு, உண்மை வடிவாகிய உம்மைப் புறக்கணித்து வாழும் உலக மக்கள் அனைவர் மீதும் உமது ஆவியைப் பொழிந்து, அருள் வாழ்வின் ஆர்வத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. உண்மை ஒளியே இறைவா,

எம் நாட்டு மக்கள் மீதும், தலைவர்கள் மீதும் உமது ஆவியைப் பொழிந்து, உமது மீட்பின் பாதையில் பயணம் செய்யும் ஒளியின் மக்களாக செயல்படத் தேவையான மனமாற்றத்தை உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. பிரிந்ததை இணைப்பவரே இறைவா,

கிறிஸ்துவின் பெயரால் பல்வேறு சபைகளாக வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், தூய ஆவியாரின் வல்லமையால் ஒன்றிணைந்து, ஒரே திருச்சபையாக கிறிஸ்துவுக்கு சான்று பகர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. உன்னதரான தந்தையே!

வாழ்விலே சந்திக்கின்ற துன்பதுயரங்களை நம்பிக்கையின் வித்துக்களாக கொண்டு நம்பிக்கையில் நாளும் வளர்ந்திடவும், வெப்பமிகுதியால் பரவும் தொற்று நோய்களில் இருந்து எம்மை காப்பாற்ற, நல்ல மழையை தந்து எம்மை காக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

"தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்".

நீங்கள் தூய ஆவியால் எப்பொழுதும் நிரப்பப்பட்டிருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இது மிக அவசியம். ஏனென்றால் வாழ்க்கைக்கு மகிழ்ச்சி மிக அவசியம். மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கையை நீங்கள் விரும்பமாட்டிP;ர்கள். யார்தூய ஆவியால் நிரப்பப்பட்டிருக்கிறார்களோ அவர்களிடம் இந்த மகிழ்ச்சி எப்போதும் இருக்கும். இறைவனின் தூய ஆவி படைக்கும் ஆற்றலுடையது. நீர்த்திரள் மேல் அசைந்தாடிய கடவுளின் ஆவி உலகைப் படைத்ததைத் தொடக்க நூலில் படிக்கிறோம். மண்ணால் மனிதனை உருவாக்கி உயிர் மூச்சை ஊதி மனிதனைப் படைத்ததும் ஆவியின் செயலே.பாவத்தில் வாழ்விழந்த மனிதனின் பாவங்களை மன்னித்து மகிழச்சி நிறைந்த மனித வாழ்வைக் கொடுப்பதும் ஒரு புது படைப்பு அல்லவா. பாவமன்னிப்பு பெறும் மனிதர்கள் தூய ஆவியால் நிரப்பப்படுகிறார்கள். அவர்கள் புதுப்படைப்பாக மாறுகிறார்கள். பாவம் அவர்களிடம் இல்லை. எனவே மனதில் ஒரு தெய்வீக அமைதி குடிகொள்கிறது. இதயத்தில் இனம்புரியாத நிறை மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது. பாவ மன்னிப்பு பெற்று தூய ஆவியால் நிறைந்திருப்போர் வாழ்வில் என்னதான் தடையிருந்தாலும் எப்படித்தான் நான்கு சுவர்களுக்கும் பூட்டி வைத்தாலும் கொடுக்கும் உங்கள் தெய்வம் கூரையை கிழித்து உங்களுக்கு தன் கொடையாம் மகிழ்ச்சியை, அமைதியை, செல்வத்தை குறையின்றி வழங்குவார். உயிர்த்த இயேசு இதையே இன்றைய வாசகத்தில் தன் சீடர்கள்மேல் ஊதி, தூய ஆவியை வழங்கி, பாவமன்னிப்பைக் கொடுத்து அமைதியும் மகிழ்ச்சியும் வாக்களிக்கிறார். நீங்களும் பெற்று மகிழுங்கள்.

மன்றாட்டு:

இறைவா, உம் அமைதியை எங்களுக்கும் உலகுக்கும் அளித்தருளும்.