யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்காகாலம் 7வது வாரம் செவ்வாய்க்கிழமை
2017-05-30




முதல் வாசகம்

ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிக்கிறேன்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20: 17-27

அந்நாள்களில் பவுல் மிலேத்துவிலிருந்து எபேசுக்கு ஆள் அனுப்பி, திருச்சபையின் மூப்பர்களை வரவழைத்தார். அவர்கள் வந்ததும் அவர்களிடம் அவர் கூறியது: ``நான் ஆசியாவுக்கு வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரை எவ்வாறு உங்களிடம் நடந்துகொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். யூதர்களுடைய சூழ்ச்சிகளால் எனக்கு ஏற்பட்ட சோதனைகளின்போது மிகுந்த மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் ஆண்டவருக்குப் பணிபுரிந்தேன். நன்மை பயக்கும் ஒன்றையும் உங்களுக்கு நான் அறிவிக்காமல் விட்டுவிடவில்லை; பொது இடங்களிலும் வீடு வீடாகவும் சென்று உங்களுக்குக் கற்றுக்கொடுத்தேன். நம் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளுமாறும், மனம்மாறி கடவுளிடம் வந்து சேருமாறும் நான் யூதரிடமும் கிரேக்கரிடமும் வற்புறுத்திக் கூறினேன். இப்போதும் தூய ஆவியாருக்குக் கட்டுப்பட்டு நான் எருசலேமுக்குச் செல்கிறேன். அங்கு எனக்கு என்ன நேரிடும் என்பது தெரியாது. சிறை வாழ்வும், இன்னல்களும் எனக்காகக் காத்திருக்கின்றன என்று தூய ஆவியார் ஒவ்வொரு நகரிலும் என்னை எச்சரித்து வருகிறார். என்னைப் பொறுத்த வரையில் எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை. இறையருளைப் பற்றிய நற்செய்திக்குச் சான்று பகருமாறு ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம். இதுவரை நான் உங்களிடையே வந்து இறையாட்சியைப் பற்றிப் பறைசாற்றினேன். ஆனால் இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப்போவதில்லை என்று நான் அறிவேன். உங்களுள் எவரது அழிவுக்கும் நான் பொறுப்பாளியல்ல என்று இன்று நான் உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுளின் திட்டம் எதையும் நான் உங்களுக்கு அறிவிக்காமல் விட்டுவிடவில்லை.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்
திருப்பாடல் 68: 9-10. 19-20

கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர். 10 உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர். பல்லவி

19 ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக்கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. 20 நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்; நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களோடு என்றும் இருக்கும்படி தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-11

அக்காலத்தில் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ``தந்தையே, நேரம் வந்துவிட்டது. உம் மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும். ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர்மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர். உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு. நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன். தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும். நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள். நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும். ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள். அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள். என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய் நான் மாட்சி பெற்றிருக்கிறேன். இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'தந்தையே, இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன்' என்றார்'' (யோவான் 17:11)

தந்தையிடம் திரும்பிச் செல்கின்ற இயேசு தாம் ''உலகில் இருக்கப்போவதில்லை'' என்கிறார். அதாவது, தம் சீடர்களோடு நடமாடிப் பழகி, அவர்களுக்குக் கடவுளின் ஆட்சி பற்றி அறிவித்த நாள்கள் முடிவுக்கு வந்துவிட்டன என இயேசு அறிவிக்கிறார். தாம் துன்பங்கள் அனுபவித்து, இறக்கப் போவதையும் அவர் சீடர்களுக்குத் தெரிவிக்கிறார். அதே நேரத்தில் இயேசு உலகை விட்டு மறைந்துபோகவில்லை. ஏனென்றால் அவர் சாவை வென்று, உயிர்பெற்றெழுந்தார். புதியதொரு முறையில் அவர் இந்த உலகில் நம்மோடு இருந்துவருகிறார். எனவே, தந்தையிடம் இயேசு சென்றார் என்றதும் அவர் நம்மை மறந்துவிட்டதாகவோ நம்மிடமிருந்து மறைந்துவிட்டதாகவோ நாம் எண்ணலாகாது. மாறாக, தந்தையிடம் சென்ற இயேசு தம் சீடர்களின் வாழ்வில் இன்னும் சிறப்பான விதத்தில் பங்கேற்கிறார்.

தந்தைக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு தனித்தன்மை வாய்ந்தது. தந்தை தம் மகனாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார். அந்த மகிமையில் நமக்கும் பங்கு வழங்கப்படுகிறது. இயேசு நம்மோடு உயிர்பெற்றெழுந்த ஆண்டவராக இருந்து நம்மை வழிநடத்துகிறார். எனவே நாம் தந்தையோடு உறவாட இயலுகிறது. தந்தையை நமக்கு இயேசு வெளிப்படுத்துகிறார். எனவே நாம் கடவுளின் உடனிருப்பை நம் வாழ்வில் உணர முடிகிறது. இது நமக்கு வழங்கப்படுகின்ற தூய ஆவியின் சக்தியால் நிகழ்கிறது. கடவுளிடம் சென்ற இயேசு நமக்காகப் பரிந்துபேசுகிறார் என்பது இன்னொரு ஆழமான உண்மை. நாம் கடவுளை அணுகிச் சென்று நம் தேவைகளை அவரிடம் எடுத்துரைக்கும்போது நமக்காகத் தந்தையிடம் மன்றாட இயேசு இருக்கின்றார். ஏனென்றால் இயேசு நம்மைப் போல மனிதராக வாழ்ந்ததால் மனித நிலை அவருக்கு அன்னியம் அல்ல. நம் தேவைகளை அவர் அறிவார். நமக்குக் கடவுளின்; அன்பையும் அருளையும் பெற்றுத் தருவார். ஆக, உலகில் இருக்கப்போவதில்லை எனக் கூறுகின்ற இயேசு புதிய முறையில் நம்மோடு இருக்கிறார் என்பதும் நம்மைத் தந்தையிடம் இட்டுச் செல்கிறார் என்பதும் நம் நம்பிக்கை.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் காட்டுகின்ற வழியில் நாங்கள் நடந்து சென்று உம்மைக் கண்டடைய அருள்தாரும்.