யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்காகாலம் 6வது வாரம் வியாழக்கிழமை
2017-05-25




முதல் வாசகம்

கொரிந்து நகரில் பவுல் வேலை செய்துவந்தார். ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக்கூடத்தில் பேசினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 1-8

அந்நாள்களில் பவுல் ஏதென்சை விட்டு கொரிந்துக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே போந்துப் பகுதியில் பிறந்த அக்கிலா என்னும் பெயருடைய ஒரு யூதரையும் அவர் மனைவி பிரிஸ்கில்லாவையும் கண்டு அவர்களிடம் சென்றார். அவர்கள், ``யூதர் அனைவரும் உரோமை நகரத்தை விட்டு வெளியேற வேண்டும்'' என்ற கிலவுதியு பேரரசருடைய கட்டளைக்கு இணங்கி இத்தாலிய நாட்டைவிட்டு அண்மையில் அங்கு வந்திருந்தார்கள். கூடாரம் செய்வது அவர்களது தொழில். தாமும் அதே தொழிலைச் செய்பவராதலால் பவுல் அவர்களிடம் தங்கி வேலை செய்துவந்தார். ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக் கூடத்தில் யூதரிடமும் கிரேக்கரிடமும் பேசி அவர்கள் நம்பிக்கை கொள்ளச் செய்தார். சீலாவும் திமொத்தேயுவும் மாசிதோனியாவிலிருந்து வந்தபோது பவுல் இறைவாக்கை அறிவிப்பதில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தார்; `இயேசுவே மெசியா' என்று யூதரிடம் சான்று பகர்ந்துவந்தார். அவர்கள் அதனை எதிர்த்துப் பழித்துரைத்தபோது அவர் தமது மேலுடையிலிருந்த தூசியை உதறி, ``உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பு, நான் அல்ல. இனிமேல் நான் பிற இனத்தாரிடம் செல்கிறேன்'' என்று கூறினார்; அவ்விடத்தை விட்டுவிட்டுக் கடவுளை வழிபடும் தீத்துயுஸ்து என்னும் பெயருடைய ஒருவரின் வீட்டுக்குப் போனார். அவரது வீடு தொழுகைக்கூடத்தை அடுத்து இருந்தது. தொழுகைக்கூடத் தலைவரான கிறிஸ்பு என்பவர் தம் வீட்டார் அனைவரோடும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார். கொரிந்தியருள் பலரும் பவுல் கூறியவற்றைக் கேட்டு நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெற்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பிற இனத்தார் முன், ஆண்டவர் தம் நீதியை வெளிப்படுத்தினார்
திபா 98: 1. 2-

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3யb இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3உன உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்; உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 16-20

அக்காலத்தில் இயேசு தம் சீடரிடம்: ``இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்'' என்றார். அப்போது அவருடைய சீடருள் சிலர், `` `இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்' என்றும் `நான் தந்தையிடம் செல்கிறேன்' என்றும் சொல்லுவதன் பொருள் என்ன?'' என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். ``இந்தச் `சிறிது காலம்' என்பது என்ன? அவர் பேசுவது நமக்குப் புரியவில்லையே'' என்றும் பேசிக்கொண்டனர். அவர்கள் தம்மிடம் கேள்வி கேட்க விரும்புவதை அறிந்த இயேசு அவர்களிடம் கூறியது: `` `இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்' என்று நான் சொன்னதைப் பற்றி உங்களிடையே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"சிறிது காலம்"

வாழ்க்கை வசந்தமாக அமைந்திட 'எல்லாம் சிறிது காலம்' என்ற எண்ணம் இருக்க வேண்டும். 'This too will pass away' என்ற மனஉறுதியுடன் இருப்போரை யாரும் எதுவும் அசைக்க முடியாது.எல்லாம் சிறிது காலம் என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடையவர்கள் பெரிய காலத்தைத் தமதாக்கிக் கொள்ளும் பேறு பெறும் தகுதிபெறுவர். துன்பம் சிறிது காலம்; இன்பம் சிறிது காலம்; கவலை சிறிது காலம், மகிழ்ச்சி சிறிது காலம்; பாடுகள் சிறிது காலம், உயிர்ப்பு சிறிது காலம்; எல்லாம் சிறிது காலம் என்று எண்ணும் மனிதன் தன் வாழ்வின் எந்த சவாலையும் சந்திப்பதற்குத் தன்னை தயாரிக்கிறான். குறுகிய காலத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துபவன் காலம் கடந்த நிறை வாழ்வுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறான். நாம் வாழ்வது கொஞ்ச நாட்கள். அதை தாலந்து பெற்றவன்போல,பயன்படுத்த வேண்டும். நியாயமாகப் பயன்படுத்த வேண்டும். செல்வத்தில் செருக்குடனோ, ஏழ்மையில் நொருங்கியோ வாழலாகாது. மகிழ்ச்சியில் மதியிழந்தோ துன்பத்தில் துவண்டோ வாழக்கூடாது.எல்லாம் சிறிது காலம் என்ற கணிப்போடு செய்ய வேண்டியதைச் சிறப்பாகச் செய்தால், இறுதி நாளில் இறைவனின் பாராட்டும் பரிசும் உங்களுக்குக் கிடைக்கும்;. இனிது வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உண்மையின் ஊற்று நீர் ஒருவரே என நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.