யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-05-07

(இன்றைய வாசகங்கள்: திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2:14,36-41,திருப்பாடல் 23: 1-3a. 3b-4. 5. 6.,திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்: 2:20-25,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-10)




நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர்.


திருப்பலி முன்னுரை

"ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டே நான் வந்துள்ளேன்."

இயேசுவுக்குரியவர்களே,

உயிர்ப்பு காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் நல்லாயன் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். நம் ஒவ்வொருவரையும் அறிந்து வைத்திருக்கும் நல்ல ஆயரான இயேசுவின் குரலுக்கு செவிகொடுத்து வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. வாயில் வழியாக நுழையாமல், வேறு வழியாக ஏறிக் குதிக்கும் திருடரிடமும், கொள்ளையரிடமும் சிக்கிக் கொள்ளாமல், நல்ல ஆயரான இயேசுவின் பாதுகாப்பில் வாழ அழைக்கப்படுகிறோம். ஆட்டுக் கொட்டிலின் வாயிலாக விளங்கும் நம் ஆண்டவரில் நம்பிக்கை வைக்கும்போது, நாம் வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும். நல்ல ஆயரான இயேசுவைப் பின்தொடர்ந்து, நிறைவாழ்வைப் பெற்றுக்கொள்ளும் ஆடுகளாக வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

"நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2:14,36-41

பெந்தகோஸ்து என்னும் நாள் வற்ததோது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்தக் குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்; "நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். "அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் பார்த்து, "சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? " என்று கேட்டார்கள்.அதற்குப் பேதுரு, அவர்களிடம், "நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது" என்றார். மேலும் அவர் வேறுபல சான்றுகளை எடுத்துக்கூறி, "நெறிக்கெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்தினார். அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப்பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
திருப்பாடல் 23: 1-3a. 3b-4. 5. 6.

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3ய அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். 4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி

இரண்டாம் வாசகம்

சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்: 2:20-25

அன்புக்குரியவர்களே! நன்மை செய்தும், அதற்காகப் பொறுமையோடு துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும். கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்: இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள். "வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை: வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை. " பழிக்கப்பட்டபோது பதிலுக்குப் பழிக்கவில்லை: துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை: நியாயமாகத் தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார். சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள். நீங்கள் வழிதவறி அலையும் ஆடுகளைப்போல இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-10

அக்காலத்தில் இயேசு கூறியது: "நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர்.வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார்.தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். அறியாத ஒருவரை அவை பின் தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது. "இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. மீண்டும் இயேசு கூறியது: "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே. எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்: வெளியே வருவர்: மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. நல்ல ஆயரே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், பல்வேறு சபைகளாக பிரிந்து வாழும் கிறிஸ்தவர்களை உமக்கு உகந்த ஒரே மந்தையாக ஒருங்கிணைக்க உதவு மாறு உம்மை மன்றாடுகிறோம்.

2. உண்மை ஆயரே இறைவா,

தவறானவற்றை தெய்வங்களாக கருதி வழிபடும் மக்கள் அனைவரும், நீர் ஒருவரே கடவுள் என்பதை அறிந்து மனம் திரும்பவும் உமது மந்தையில் ஒன்றிணையவும் உதவு மாறு உம்மை மன்றாடுகிறோம்.

3. இரக்கத்தின் ஊற்றே இறைவா,

உலகத்தின் கவலைகளுக்கும், துன்பங்களுக்கும் தீர்வு தேடி அலையும் மக்கள் அனைவரும், உம் வழியாக அமைதி காணவும், நீரே உண்மையான கடவுள் என்பதை உணரவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

4. அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!

எங்களை பராமரித்து பாதுகாத்த எம் பெரியவர்கள் இன்று ஆதரவின்றி, அனாதைகளாக்கப்பட்டு, தெரு ஒரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் முதியோர் இல்லங்களிலும் தனித்து விடப்பட்டு, அவர்கள் படும் வேதனைகள் தொடர் நிகழ்வாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்கள் உம் இறை இரக்கத்தினால், பாதுகாப்புடன் வாழ, இத்தலைமுறையினர் பெரியவர்கள் மேன்மையை உணர்ந்து அவர்களை பாதுகாக்க தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. நேரிய ஆயரே இறைவா,

பணம், பதவி, போதை, வன்முறை ஆகியவற்றின் மீதான ஆர்வத்தால், பிறருடைய நிம்மதியை கெடுப்பவர்கள் அனைவரும், நல்லவர்களாக மனம் மாற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றிற்குத் தெரியும்'' (யோவான் 10:4)

ஆடுகள், ஆட்டு மந்தை, ஆயன் ஆகிய உருவகங்கள் கடவுளையும் கடவுள் அன்புசெய்கின்ற மக்களையும் குறிப்பதற்குப் பயன்பட்டன. பழைய ஏற்பாட்டில் இவ்வுருவகங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன (காண்க: திபா 23; எசா 40:41; எரே 32:1-3; எசே 34:11-15). அதுபோலவே, புதிய ஏற்பாட்டில் இயேசு தம்மை ''நல்ல ஆயனாக'' அறிவிக்கிறார் (காண்க: மத் 9:36; 18:12-13; மாற் 6:34; லூக் 15:3-7; யோவா 10:1-30; 1 பேது 2:25). இயேசு நம் நல்ல ஆயர் என்றால் நாம் அவருடைய மந்தை. ஆட்டு மந்தை என்றதும் சிலர் எதிர்மறையாகப் பார்ப்பதுண்டு. அதாவது, சுய சிந்தனை இல்லாமல் கூட்டத்தோடு கூட்டமாகச் செல்கின்ற போக்கு ''மந்தை மனப்பான்மை'' எனப்படுவதுண்டு. ஆனால் இயேசு குறிப்பிடுகின்ற மந்தை இத்தகைய சிந்தனையற்ற கும்பல் அல்ல. கடவுள் அன்போடும் பாசத்தோடும் பராமரிக்கின்ற மக்களே இங்கு ''மந்தை'' என்னும் உருவகத்தால் குறிக்கப்படுகின்றனர். பாலஸ்தீன நாட்டில் ஆடு மேய்க்கும் பணி சிறிது வித்தியாசமாக நடக்கும். அதாவது, ஆயர் தம் ஆடுகளை ஓட்டிச் செல்வதில்லை, மாறாக அவற்றிற்கு முன் தாம் நடந்துசென்று வழிகாட்டுவார். ஆடுகள் ஆயரைப் ''பின்தொடரும்''. அவ்வாறு வழிநடத்தும்போது ஆயர் தம் ஆடுகளைப் பெயர் சொல்லி அழைப்பதும் உண்டு. ஆயரின் குரலை ஆடுகள் அடையாளம் கண்டுகொள்வதால் அவை ஆயரின் அடிச்சுவட்டில் நடந்துசெல்லும்.

இந்த உருவகத்தை இயேசு தமக்குப் பொருத்தி உரைக்கிறார். இயேசுவின் அன்புக்கு உரிய நாம் அவருடைய குரலைக் கேட்கின்றோம். அவர் நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். எனவே கடவுளின் அழைத்தலுக்குச் செவிமடுக்கும் போது நாம் ஒவ்வொருவரும் கடவுளின் அன்பைத் தனிப்பட்ட விதத்தில் உணர்கிறோம். அதே நேரத்தில் கடவுள் தம் மந்தையை ஓர் அன்புச் சமுதாயமாக உருவாக்குகிறார். அச்சமுதாயம் அன்புப் பிணைப்பால் இணையும். இஸ்ரயேல் மக்களைக் கடவுள் முன்னின்று வழிநடத்திய போது மக்கள் பயமின்றி அவரைப் பின்தொடர்ந்தனர். எகிப்திய நாட்டில் அடிமைகளாக இருந்த நிலையைக் கடந்துசென்று கடவுள் வாக்களித்த நாட்டில் சுதந்திர மக்களாகக் குடியேறினார்கள். இயேசு நம் நல்ல ஆயராக இருப்பதால் அவர் முன்செல்ல நாம் அவரைப் பின்செல்ல அழைக்கப்படுகிறோம். அவர் வழிநடந்த பாதை சிலுவைப் பாதை. அவ்வழியில் செல்வோர் துன்பத்தையும் சாவையும் சந்திக்க நேரிடும். ஆனால் சாவின் வழியாக வாழ்வு பிறக்கும் என்னும் நம்பிக்கை நமக்கு உண்டு. நம் ஆயர் இயேசுவை நமக்கு இந்நம்பிக்கையைத் தருகின்றார். அவர் சென்ற வழியில் நாம் சென்றால் நிலைவாழ்வு நமக்குக் கடவுளின் கொடையாக வழங்கப்படும்.

மன்றாட்டு:

இறைவா, உம் வழிநடத்தல் இருப்பதால் நாங்கள் தவறிச் செல்லாதிருக்க அருள்தாரும்.