யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 2வது வாரம் வியாழக்கிழமை
2017-04-27




முதல் வாசகம்

நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார்.
திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசகம் 5:27-33

27 அழைத்து வந்தவர்களை அவர்கள் யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி, 28 "நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக் கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!" என்றார். 29 அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, "மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? 30 நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். 31 இஸ்ரயேல் மக்களுக்கு மனம் மாற்றத்தையும் பாவமன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். 32 இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்" என்றனர். 33 இவற்றைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் கொதித்தெழுந்து, திருத்தூதர்களைக் கொல்லத் திட்டமிட்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்
திருப்பாடல்கள் 34:2,9:17-20

2 நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். 9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.

17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். 18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். 20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3:31-36

31 மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர். 32 தாம் கண்டதையும் கேட்டதையும்பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. 33 அவர் தரும் சான்றை ஏற்றுக் கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார். 34 கடவுளால் அனுப்பப் பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார். 35 தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். 36 மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர்"

ஐயோ பாவம்; கை இல்லையே என்று கவலைப்படுவோர் தங்களிடம் 'நம்பிக்கை' இ;ல்லை என்று அல்லவா கவலைப்பட வேண்டும். நம்பிக்கை, கையைவிட மிகவும் அவசியமானது. அதிலும் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டோருக்கு எந்த குறையுமிருக்காது. தன்மீது நம்பிக்கைக் கொண்டோரை அவர் கைவிடுவதில்லை.

கூரையைப் பிறித்து இறக்கிய முடக்குவாதமுற்ற மனிதனைக் குணப்படுத்தியது அவர்களின் நம்பிக்கை. பார்வையற்ற இருவரும் மீண்டும் பார்வை பெற்றது அவர்களது நம்பிக்கையாலே.(மத் 9:28) " நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்" (மாற்9:23) நம்பிக்கையின் வலிமைக்கு இயேசு தரும் சாட்சியம். நம் இறைவன் இயேசுவை நம்புகிறவர்களுக்கு எந்த நன்மைகளுக்கும் குறையிருக்காது. நிலையான வாழ்வைப் பெறுவார்கள். எல்லா நலன்களும் அவர்களுக்குக் கிடைக்கும். செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்கள்.

கடவுள் மீது நம்பிக்கை இழந்தோர் வாழ்வை இழப்பது உறுதி. வாழ்கைச் சிக்கலில் இறைவன் இயேசுவின் மீது நம்பிக்கை இழந்த காரணத்தால் தன்னம்பிக்கையை இழக்கின்றனர். தொடர்ந்து பொன் பொருளை இழக்கின்றனர். பணம் கரைந்ததும் நட்பும் உறவும் ஓடிவிடும். எல்லாம் இழந்த நிலையில் தன் உயிரையும் இழப்பதற்கு தயாராகிறான். ஆனால் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோம் இச்சூழலிலும் வானிலிருந்து உதவியைப் பெறுவர். அவர்கள் வாழ்வு பெறுவர்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனை நம்பிக்கையோடு ஏற்றிட எங்களுக்கு அருள்தாரும்.