யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-04-16

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10:34, 37-43 ,திருப்பாடல் 118:1-2, 16-17, 22-23 ,திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:1-4,+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-9 )




வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்./> வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்./> வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்./> வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்./>


திருப்பலி முன்னுரை

உயிர்ப்புக்குரியவர்களே,

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரணத்தை வீழத்தி, வெற்றி வீரராக உயிர்த்தெழுந்த பெருவிழாவை நாம் இன்று கொண்டாடுகிறோம். உயிர்த்த இயேசுவுக்கு சாட்சிகளாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு வானதூதர்கள் சான்று பகர்ந்தனர். வெறுமையாக இருந்த கல்லறையும் சாட்சியாக இருந்தது. உயிர்த்த இயேசுவை நேரில் கண்ட திருத்தூதர்களும் மற்ற சீடர்களும் அவருக்கு சான்று பகர்ந்து அவருக்காக தங்கள் உயிரையே கையளித்தனர். உலக முடிவு வரை எந்நாளும் நம்மோடு இருப்பதாக வாக்களித்திருக்கும் உயிருள்ள இறைமகன் இயேசுவுக்கு உண்மையுள்ள சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, நாம் இந்த திருப்பலி யில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார்.
இறைவாக்கினர் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10:34, 37-43

அப்போது பேதுரு பேசத் தொடங்கி, திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக்குறித்துச் சான்று பகர்கின்றனர்" என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்
திருப்பாடல் 118:1-2, 16-17, 22-23

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என்று இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! -பல்லவி

ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்; -பல்லவி

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! -பல்லவி

இரண்டாம் வாசகம்

மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:1-4

நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவாகளானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சாhந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

அல்லேலூயா, அல்லேலூயா ! ”நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகவே நாம் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக” அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-9

வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, ``ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!'' என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. உயிர் அளிப்பவராம் இறைவா,

உம் திருமகனின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு தோன்றி வளர்ந்த திருச்சபை உலக மக்கள் அனைவராலும் ஏற்கப்பட்டு, புனிதமான மக்களை உமக்காக உருவாக்க வரமருள வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

2. வெற்றி வேந்தராம் இறைவா,

திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் உம் திருமகனின் உயிர்ப்பை பறைசாற்றும் உன்னத தூதுவர்களாக செயலாற்ற உதவ வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

3. மாட்சியின் மன்னராம் இறைவா,

உடலின் உயிர்ப்பினால் மாட்சிபெற்ற உம் திருமகனைப் போன்று, உள்ளத்தின் உயிர்ப் பினால் உமது மாட்சியில் பங்குபெறும் தகுதி அடையுமாறு எம் நாட்டினர் அனைவருடைய வாழ்வையும் புதுப்பிக்க வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கத்தின் நிறைவாம் இறைவா,

பாவம், நோய், ஏழ்மை, வன்முறை, மதவெறி, தீவிரவாதம் போன்றவற்றால் வீழ்ந்து கிடக்கும் அனைவரும், மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த உம் திருமகனைப் போல, புது வாழ்வுக்கு உயிர்த்தெழ உதவிபுரிய வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

5. உயிர்ப்பின் நாயகராம் இறைவா,

உமது அன்பில் ஒரே குடும்பமாக ஒன்றித்து வாழும் எங்கள் பங்குத்தந்தை, அருட் சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம் திருமகனது சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் மேன்மையை உணர்ந்து, கிறிஸ்துவின் உண்மையுள்ள சாட்சிகளாக வாழ வரம் தர வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

"மகதலா மரியா சீடரிடம் சென்று, 'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்றார்" (யோவான் 20;18)

மகதலா மரியாவுக்குத் "திருத்தூதருக்குத் திருத்தூதர்" என்றொரு சிறப்புப் பெயர் உண்டு. யோவான் நற்செய்திப்படி, மகதலா மரியா இயேசு அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைக்கு வாரத்தின் முதல்நாள் விடியற்காலையே வந்து, உயிர்த்தெழுந்த இயேசுவைச் சந்தித்தார். புத்துயிர் பெற்று எழுந்த இயேசுவைச் சந்தித்த முதல் சீடர் மகதலா மரியா. ஆனால் அவர் இயேசுவை உடனடியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இயேசு அவரைப் பார்த்து, "மரியா" என்று பெயர்சொல்லிக் கூப்பிட்ட வேளையில்தான் மரியா தம் முன்னிலையில் நின்றவர் இயேசுவே என அடையாளம் கண்டார். உடனே இயேசுவை நோக்கிப் "போதகரே" என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கிறார். அதன்பின்னர் இயேசு மரியாவுக்கு ஒரு சிறப்புப் பணி கொடுக்கிறார். அதாவது மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவின் சீடர்களைச் சந்தித்து, இயேசு உயிர்பெற்றெழுந்துவிட்டார் என்னும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும். மரியாவும் சீடர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார். இங்கு மரியா இயேசுவை "ஆண்டவர்" எனக் குறிப்பிடுவது கருதத் தக்கது. இயேசு ஒரு போதகர் மட்டுமல்ல, கடவுளின் இயல்பில் பங்குபெறுகின்ற "ஆண்டவர்".

உயிர்பெற்றெழுந்த இயேசு நம்மோடு உயிர்வாழ்கின்றார். அவரை நாம் அடையாளம் காண வேண்டும் என்றால் நாமும் ஒரு நம்பிக்கைப் பயணம் மேற்கொள்ள வேண்டும். இயேசுவை நாமும் சந்திக்க வேண்டும். இயேசு நம்மைப் பெயர்சொல்லி அழைப்பதை நாம் கேட்க வேண்டும். நாம் பெற்ற அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்துகொண்டு அவர்களையும் இயேசுவில் நம்பிக்கை கொள்ள இட்டுச் செல்ல வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் மகன் இயேசுவை நாங்கள் ஆண்டவராக ஏற்று அவருக்குச் சான்று பகர எங்களைத் திடப்படுத்தியரும்.