யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 5வது வாரம் செவ்வாய்க்கிழமை
2017-04-04




முதல் வாசகம்

பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9

அந்நாள்களில் ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேலர் `செங்கடல் சாலை' வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: ``இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது'' என்றனர்.

உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, ``நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்ளும்'' என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார்.

அப்போது ஆண்டவர் மோசேயிடம், ``கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்'' என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்!
திபா 102: 1-2. 15-17. 18-20 (பல்லவி: 1)

1 ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்! என் அபயக் குரல் உம்மிடம் வருவதாக!

2 நான் இடுக்கண் உற்ற நாளிலே உமது முகத்தை மறைக்காதீர்! உமது செவியை என் பக்கமாகத் திருப்பியருளும்! நான் மன்றாடும் நாளில் விரைவாய் எனக்குப் பதிலளியும்! பல்லவி

15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர். 16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார். 17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். பல்லவி

18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும். 19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். 20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கென குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நீங்கள் மானிடமகனை உயர்த்தியபின்பு, `இருக்கிறவர் நானே' என்பதை அறிந்துகொள்வீர்கள்.

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 21-30

அக்காலத்தில் இயேசு பரிசேயர்களை நோக்கி, ``நான் போனபின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்'' என்றார். யூதர்கள், `` `நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது' என்று சொல்கிறாரே, ஒருவேளை தற்கொலை செய்துகொள்ளப்போகிறாரோ?'' என்று பேசிக்கொண்டார்கள்.

இயேசு அவர்களிடம், ``நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல. ஆகவேதான் நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். `இருக்கிறவர் நானே' என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்'' என்றார். அவர்கள், ``நீர் யார்?'' என்று அவரிடம் கேட்டார்கள். அவர், ``நான் யார் என்று தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்துள்ளேன். உங்களைப் பற்றிப் பேசுவதற்கும் தீர்ப்பிடுவதற்கும் பல உண்டு. ஆனால் என்னை அனுப்பியவர் உண்மையானவர். நானும் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கிறேன்'' என்றார். தந்தையைப் பற்றியே அவர் பேசினார் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.

இயேசு அவர்களிடம், ``நீங்கள் மானிடமகனை உயர்த்தியபின்பு, `இருக்கிறவர் நானே'; நானாக எதையும் செய்வதில்லை; மாறாகத் தந்தை கற்றுத்தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள். என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்'' என்றார். அவர் இவற்றைச் சொன்னபோது பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"நீர் யார்?"

இயேசுவின்; காலம்தொட்டு இன்று முதல் 'யார் இந்த இயேசு' என்ற கேள்வி, பலராலும் பலவிதங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த கேள்வியும் அதன் பதிலும் மனிதர்களையும் மனித வரலாற்றையும் மாற்றியுள்ளது. "; நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" (மத்16:15) என்ற கேள்வியும் அதன் பதிலும் சீமோனைப் பேதுருவாக மாற்றியது. திருச்சபையின் அடித்தளமாக மாற்றியது. விண்ணின் ஆற்றல், அதிகாரம் மண்ணுக்கு வழங்கப்பட்டது. இந்த கேள்வியை எழுப்பி, அதற்குச் சரியான பதில்காணும் இன்றைய மனிதர்களும் இத்தகைய பெரும் மாற்றத்தை, தன்னிலும் தான் வாழும் சமுதாயத்திலும் ஏற்படுத்துகிறார்கள். இயேசு தான் யார் என்பதை தான் வாழ்ந்த சம காலத்து மக்களுக்கு, தன் போதனையாலும் அரும்செயல்களாலும் பலமுறை மறைமுகமாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் சொல்லிவந்துள்ளார். கேட்டவர்கள் வாழ்வு பெற்றார்கள். கேளாதோர் வாழும் வாய்ப்பை இழந்தார்கள். இயேசுவின் கடைசி நாட்களிலும் இந்த கேள்வி எழுகிறது. இயேசுவும் வழக்கம் போல் பதில் கொடுக்கிறார். 'நான் வந்த இடமும் போகுமிடமும் உங்களுக்குத் தெரியாது', 'நான் மேலிருந்து வந்;தவன்', 'இருக்கிறவர் நானே', 'என்னை அனுப்பிய தந்தை என்னோடு இருக்கிறார்' என்னும் விவரங்கள் இந்த கேள்விக்கு போதுமான பதில். ஆயினும் அப் பரிசேயர்கள் அதற்குச் செவி சாய்க்கவில்லை. எனவே அவர்களில் எந்த மாற்றமும் இல்லை. கேள்விக்குப் பதில் காண்போம். மகிழ்ந்து இனிது வாழ்வோம்.

மன்றாட்டு:

இரக்கமும் மன்னிப்பும் வழங்கும் இறைவா, உமது பேரன்பால் எங்களைத் தீர்ப்பிடாமல், மன்னித்து ஏற்றுக்கொள்வதற்காக நன்றி கூறுகிறோம். உமது மன்னிப்பைப் பெற்றுக்கொண்ட நாங்கள் இனி பாவம் செய்யாமல் வாழ அருள்தாரும்.