யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-03-12

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு

(இன்றைய வாசகங்கள்: தொடக்க நூலிலிருந்து வாசகம். 12:1-4,பல்லவி:ஆண்டவரே உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!,திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1:8-10,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17:1-9)




ஒளிரும் மேகத்தினின்று,தந்தையின் குரலொலி கேட்டது ;என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் . ஒளிரும் மேகத்தினின்று,தந்தையின் குரலொலி கேட்டது ;என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் . ஒளிரும் மேகத்தினின்று,தந்தையின் குரலொலி கேட்டது ;என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் . ஒளிரும் மேகத்தினின்று,தந்தையின் குரலொலி கேட்டது ;என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் .


திருப்பலி முன்னுரை

இறை மக்கள் அனைவருக்கும் தவக்கால இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையின் வாழ்த்தைக் கூறிக்கொள்ளுகிறேன். எல்லாம் வல்ல ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம்.

நமது பாவங்களுக்காக இறந்து, உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவின் மாட்சியில் பங்கு பெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைத்தந்தையின் அன்பு மைந்தர் இயேசுவுக்கு செவிசாய்க்க கடவுள் நம்மை அழைக்கிறார். திருச்சட்டத்தையும், இறைவாக்குகளையும் நிறைவேற்றிய இயேசுவைப் போன்று, இறைத்திட்டத்தை அறிந்து வாழ்வில் செயல்படுத்த நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். இயேசுவின் பாடுகள் வழியாக, அவரது உயிர்ப்பின் மாட்சியில் பங்குபெற வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

இறைமக்களுக்கு தந்தையாகிய ஆபிரகாம் அழைக்கப்பெறுதல்:
தொடக்க நூலிலிருந்து வாசகம். 12:1-4

அந்நாட்களில் "ஆண்டவர் ஆபிராமை நோக்கி, "உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்." உன்னை நான் பெரிய இனமாக்குவேன்: உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்: நீயே ஆசியாக விளங்குவாய். "உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்: உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்: உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்" என்றார்." ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

திருப்பாடல்கள்: திபா: 33;4-5,18-20,22
பல்லவி:ஆண்டவரே உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது: அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்: அவரது பேரன்பால் ப+வுலகு நிறைந்துள்ளது. பல்லவி

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி

நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்: அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! பல்லவி

இரண்டாம் வாசகம்

இறைவன் நம்மை அழைத்து, நம்மீது ஒளி வீசுகின்றார்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1:8-10

அன்புக்குரியவரே, கடவுளின் வல்லமைகேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள். அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்: நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார். நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன்மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

ஒளிரும் மேகத்தினின்று,தந்தையின் குரலொலி கேட்டது ;என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் ;

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17:1-9

அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து, " ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா? " என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, " என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் ப10ரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் " என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, " எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள் " என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, "மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது " என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. மாட்சி மிகுந்தவரான இறைவா,

திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், ஆபிரகாம் கொண்ட நம்பிக்கையின் வழிமரபினராக விளங்கும் திருச்சபையின் மக்களை, உமது மாட்சிக்கு உகந்தவர்களாக உருமாற்றும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. மகத்துவம் மிக்கவரான இறைவா,

சிலுவை வழியாக உம் திருமகன் நிறைவேற்றிய மீட்புச் செயலை, உலக மக்கள் அனைவரும் அறிந்து ஏற்றுக்கொள்ளவும், உம்மில் நம்பிக்கை கொண்டவர்களாய் நீர் தருகின்ற மாட்சியை உரிமையாக்கவும் அருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. நலம் அளிப்பவரான இறைவா,

எம் நாட்டு மக்களிடையே நிலவும் தவறான நம்பிக்கைகள், கொள்கைகள், கோட்பாடுகள் அனைத்தும் மறையவும், தீமை, வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றின் மீதான வெறுப்புணர்வு பெருகவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. நிறைவு தருபவரான இறைவா,

உலக ஆசைகளாலும், போட்டி, பொறாமையினாலும் மன அமைதி இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும், உமது மாட்சியில் நிறைவு காண்பவர்களாய் வாழ்ந்து, அமைதியையும் மகிழ்ச்சியையும் சுவைக்க வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா!

இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு நாள் என்று அழைத்தீரே. நாங்கள் கிறிஸ்துவின் தூதர்களாய் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, இத்தவக்காலத்தை நன்கு பயன்படுத்திக் கடவுளோடு ஒப்புரவாகி, இயேசு கிறிஸ்துவிற்கு ஏற்படையவர்களாய் மாற நல்லமனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

6. நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கும் தந்தையே இறைவா!

பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வேதனையோடும், கவலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களைக் குணப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

7. பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா!

இக்காலச்சூழலில் இரக்கமும், தூய்மையான உள்ளம் படைத்தோர், நீதியினிமித்தம் துன்புறுத்த படுவோர், இவர்கள் அனைவரும் உம் பொருட்டுத் துன்புறுத்தப்படும் போது உமது இரக்கப்பார்வையால், அடிமைதனத்திலிருந்து அன்று எம் முன்னேரை மீட்டதுபோலக் காக்கவும், இன்று உம்மை மட்டுமே நம்பிச் சரணகதியாக வரும் எம் அனைத்து மக்களையும் உமது பேராற்றலினால், இடிந்துபோன எம் வாழ்வை வென்றெடுக்கத் தேவையான உமது இரக்கப் பார்வையை எம் மீது பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

இயேசுவின் உருமாற்றம் !

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறாகிய இன்று ஆண்டவர் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை நமக்கு இறைமொழி விருந்தாகத் தருகிறது தாய்த் திருச்சபை. இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு வித்தியாசமான நிகழ்வுகளின் தொகுப்புதான் உருமாற்ற நிகழ்வு. மொத்தம் எத்தனை நிகழ்வுகள்?

1. மலைமீது இயேசு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது,

2. அவரது முகத்தோற்றம் மாறியது.

3. அவருடைய ஆடையும் வெண்மையாக மாறியது.

4. மோசேயும், எலியாவும் தோன்றி அவரோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.

5. வரவிருக்கும் இயேசுவின் இறப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர் என்கிறார் நற்செய்தியாளர்.

6. மேகத்திலிருந்து தந்தையின் குரல் ஒலித்து, இயேசுவுக்கு ஒப்பிசைவு கொடு;த்தது.

இத்தனை நிகழ்வுகளும் இணைந்ததுதான் இயேசுவின் உருமாற்றம். இயேசுவின் இறைத்தன்மையை, அவருடைய மாட்சிமையை வெளிப்படுத்திய அதே வேளையில், அவருடைய பாடுகளை, கீழ்ப்படிதலையும் சீடர்களுக்கு உணர்த்தியது.

இந்த உருமாற்ற நிகழ்விலிருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

1. நாம் இறைவேண்டலின் வழியாக, இறைவனோடு நெருக்கமான உறவுகொள்வதன் வழியாக அவருடைய மாட்சியில் பங்குபெறலாம். அவரது சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

2. இறைத் தந்தைக்குப் பணிந்து வாழ்வதன் மூலமே அவருடைய ஒப்பிசைவைப் பெறமுடியும் என்பதை உணரவேண்டும்.

3. துன்பங்கள், தோல்விகள் நிரந்தரமல்ல. அவை வெற்றிக்கான படிக்கட்டுகள். எனவே, துணிவுடன் அவற்றை எதிர்கொள்ளலாம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இத்தவக்காலத்தில் இந்த சிந்தனைகளை நம் சிந்தையில் கொள்வோம்.

மன்றாட்டு:

எங்களை உமது மாட்சியின் பங்குதாரர்களாக அழைக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது சாயலாகப் படைக்கப்பட்டிருக்கும் நாங்கள் எங்களது உண்மையான சாயலை, மாட்சியைக் கண்டுகொள்ளும் அனுபவங்களை எங்களுக்குத் தாரும். இத்தவக்காலத்தில் நாங்கள் செபத்திலும், தவ முயற்சிகளிலும் உம்மோடு ஒன்றித்து, உரு மாறுவோமாக ஆமென்.