யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 1வது வாரம் வியாழக்கிழமை
2017-03-09




முதல் வாசகம்

ஆண்டவரே, உமது கைவன்மையால் எங்களைக் காப்பாற்றும்;
எஸ்தர் நூலிலிருந்து வாசகம் எஸ் (கி) 4: 17

சாவுக்குரிய துன்பத்தில் துடித்த எஸ்தர் அரசி ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை அவர் பின்வருமாறு மன்றாடினார். ``என் ஆண்டவரே, நீர் மட்டுமே எங்கள் மன்னர். ஆதரவற்றவளும் உம்மைத் தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்; ஏனெனில், நான் என் உயிரைப் பணயம் வைத்துள்ளேன். ஆண்டவரே, நீர் எல்லா இனங்களிலிருந்தும் இஸ்ரயேலைத் தெரிந்தெடுத்தீர் என்றும் அவர்களின் மூதாதையர் அனைவரிடையிலிருந்தும் எங்கள் முன்னோரை என்றென்றைக்கும் உம் உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்தீர் என்றும், நீர் அவர்களுக்கு வாக்களித்ததையெல்லாம் நிறைவேற்றினீர் என்றும், நான் பிறந்த நாள்தொட்டு என் குலத்தாரும் குடும்பத்தாரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆண்டவரே, எங்களை நினைவுகூரும்; எங்கள் துன்ப வேளையில் உம்மையே எங்களுக்கு வெளிப்படுத்தும். தெய்வங்களுக்கெல்லாம் மன்னரே, அரசுகள் அனைத்துக்கும் ஆண்டவரே, எனக்குத் துணிவைத் தாரும். சிங்கத்துக்குமுன் நாவன்மையுடன் பேசும் வரத்தை எனக்கு வழங்கும்; எங்களுக்கு எதிராகப் போரிடுபவனை மன்னர் வெறுக்கச் செய்யும்; இதனால் அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் அழியச் செய்யும். ஆண்டவரே, உமது கைவன்மையால் எங்களைக் காப்பாற்றும்; ஆதரவற்றவளும் உம்மைத் தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்.
திருப்பாடல் 138: 1-2. 2,3. 7-8

1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 2ய உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி

2bஉ உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி

7உ உமது வலக் கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். 8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்.

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 7-12

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா! ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்' என்றார்'' (மத்தேயு 7:7)

மனிதர் தம் தேவைகளை நிறைவுசெய்ய எவ்வளவுதான் முயன்றாலும் அதில் முழுமையாக வெற்றிபெறுவதில்லை. மனித வாழ்வின் நிறைவு அந்த வாழ்வையும் தாண்டிச் செல்கின்ற ஒன்றாகவே இருக்கிறது. அந்த நிறைவை நமக்குக் கடவுள் ஒருவரே கொடையாக வழங்க முடியும். அதே நேரத்தில் நம் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை நிறைவுசெய்யவும் நாம் கடவுளின் உதவியை நாட வேண்டும் என்றும், அவ்வாறு நாம் கடவுளை நாடிச் செல்லும்போது அவர் நமக்கு உதவுவார் என்றும் இயேசு கற்பிக்கிறார். நாம் கேட்பதையெல்லாம் கடவுள் தருவார் என்பதற்குப் பதிலாக நமக்குத் தேவை எது என கடவுள் கருதுகிறாரோ அதை நமக்குத் தருவார் என்பது பொருத்தமாகும். வீட்டில் பிள்ளைகள் தாம் விரும்பும் பொருள்களைத் தம் பெற்றோரிடம் கேட்டுப் பெறுவார்கள். இயேசுவுக்கும் அந்த வாழ்வு அனுபவம் இருந்தது. எனவே அவர் நம் வானகத் தந்தையாகிய கடவுளை, நாம் அவருடைய பிள்ளைகள் என்னும் முறையில் அணுகிச் சென்று நம் தேவைகளை அவரிடம் எடுத்துக் கூறினால் நமக்கு எது நன்மையோ அதைக் கடவுள் செய்யாமல் இருக்கமாட்டார் என்று கற்பித்தார்.

கடவுளின் பிள்ளைகளாக நாம் இயேசுவின் வழியாகப் புதுப்பிறப்பு அடைந்துள்ளோம். எனவே உரிமையோடு நாம் கடவுளை நம் தந்தை என அழைக்கமுடியும், அவ்வாறே அழைக்கவும் வேண்டும். அப்போது தந்தைக்குரிய பாசத்தோடு கடவுள் நம் தேவைகளை நிறைவுசெய்வார். அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றுதான்: நாம் அவருடைய அன்புப் பிள்ளைகளாக வாழ வேண்டும் என்றால் அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப நம் வாழ்வை அமைத்திட வேண்டும்; சகோதர அன்போடு எல்லா மனிதரையும் அணைத்துப் பேணிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம்மைத் தேடிக் கண்டுபிடிக்கும் வரத்தை எங்களுக்குத் தந்தருளும்.