யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 6வது வாரம் திங்கட்கிழமை
2017-02-13




முதல் வாசகம்

காயின் தன் சகோதரன் ஆபேலைக் கொன்றான்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 4: 1-15,25

அந்நாள்களில் ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள் ``ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்'' என்றாள். பின்பு அவள் அவன் சகோதரன் ஆபேலைப் பெற்றெடுத்தாள். ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான். காயின் நிலத்தைப் பண்படுத்துபவன் ஆனான். சில நாள்கள் சென்றன. காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான். ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார். ஆனால் காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே, காயின் கடுஞ் சினமுற்றான். அவன் முகம் வாடியது. ஆகவே, ஆண்டவர் காயினிடம், ``நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்? நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்'' என்றார். காயின் தன் சகோதரன் ஆபேலிடம், ``நாம் வயல்வெளிக்குப் போவோம்'' என்றான். அவர்கள் வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின்மேல் பாய்ந்து அவனைக் கொன்றான். ஆண்டவர் காயினிடம், ``உன் சகோதரன் ஆபேல் எங்கே?'' என்று கேட்டார். அதற்கு அவன், ``எனக்குத் தெரியாது, நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?'' என்றான். அதற்கு ஆண்டவர், ``நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக்கொண்டிருக்கிறது. இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய். நீ மண்ணில் பயிரிடும்பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்'' என்றார். காயின் ஆண்டவரிடம், ``எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது. இன்று நீர் என்னை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கின்றீர்; உமது முன்னிலையினின்று நான் மறைக்கப் பட்டுள்ளேன். மண்ணுலகில் நான் நாடோடியாக அலைந்து திரிய வேண்டியுள்ளது. என்னைக் காண்கின்ற எவனும் என்னைக் கொல்வானே!'' என்றான். ஆண்டவர் அவனிடம் ``அப்படியன்று; காயினைக் கொல்கின்ற எவனும் ஏழு முறை பழி வாங்கப்படுவான்'' என்று சொல்லி, காயினைக் கண்டுபிடிக்கும் எவனும் அவனைக் கொல்லாமல் இருக்க ஆண்டவர் அவன்மேல் ஓர் அடையாளம் இட்டார். ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் மகன் ஒருவனைப் பெற்று அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டாள். ``காயின் ஆபேலைக் கொன்றதால் அவனுடைய இடத்தில் இன்னொருவனைக் கடவுள் வைத்தருளினார்'' என்றாள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்.
திபா 50: 1,8. 16-17. 20-21 (பல்லவி: 14ய)

1 தெய்வங்களுக்கெல்லாம் இறைவனாம் ஆண்டவர் பேசினார்; கதிரவன் எழும் முனையினின்று மறையும் முனைவரை பரந்துள்ள உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார். 8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன. பல்லவி

16 என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? 17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். பல்லவி

20 உங்கள் சகோதரரைப் பற்றி இழிவாகப் பேசுகின்றீர்கள்; உங்கள் தாயின் மக்களைப் பற்றி அவதூறு பேசுகின்றீர்கள். 21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக் கின்றேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 11-13

அக்காலத்தில் பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்; வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர். அவர் பெருமூச்சுவிட்டு, ``இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறு கரைக்குச் சென்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பரிசேயர் வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி இயேசுவைச் சோதித்தனர். அவர் பெருமூச்சுவிட்டு, '...இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது...' என்றார்'' (மாற்கு 8:11-12)

பரிசேயர் இயேசுவை அணுகிவந்து, வாதாட முற்படுகின்றனர். அவர்களது உள்ளத்தில் நேர்மையில்லை. இயேசுவின் போதனைபற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்னும் நன்மனது அவர்களுக்கு இல்லை. எனவே இயேசு அவர்களுடைய வேண்டுகோளை ஏற்க மறுத்துவிடுகிறார். யூத மரபுகளை இயேசு புறக்கணித்து, இறையாட்சி பற்றிப் புதியதொரு போதனையை அளித்ததால் பரிசேயருக்கு அவர்மீது வெறுப்பு எழுந்தது. இயேசு எல்லா மனிதரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடிய ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தினால் அவருடைய போதனையை ஒருவேளை ஏற்கலாம் என்னும் அணுகுமுறையோடு பரிசேயர் அவரிடம் வருகின்றனர். ஆனால் இயேசு அவர்களுடைய கபட உள்ளத்தை அறிந்துகொள்கிறார். எனவே அவர்களுக்கு எந்த அடையாளமும் கொடுக்கப்படமாட்டாது என இயேசு மறுத்துவிடுகிறார்.

கடவுளை சோதிக்கும் மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கடவுளை உருவகிக்க முற்படுகிறார்கள். தங்கள் விருப்பத்தைக் கடவுள் நிறைவேற்றாவிட்டால் கடவுளின் வார்த்தையை இவர்கள் ஏற்க முன்வருவதில்லை. நம் விருப்பத்திற்கு ஏற்ப கடவுள் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது ஒருவித ஆணவப் பண்பே. இது நம் உள்ளத்திலிருந்து மறைய வேண்டும். அப்போது இயேசுவை நாம் திறந்த உள்ளத்N தாடு அணுகுவோம். இயேசு நமக்கு அறிவிக்கின்ற நற்செய்தியை நம் இதயம் திறந்து ஏற்போம். அதிசய செயல்கள் நிகழாவிட்டாலும் கடவுள் நம்மோடு பேசுகிறார் என்னும் உண்மையை அப்போது உணர்ந்துகொள்வோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் பேசுகின்ற உம் குரலை அடையாளம் கண்டுகொள்ள எங்களுக்கு அருள்தாரும்.