இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.(எபிரேயர் 13:8)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)




இயூஜின் டி மசெனோ

புனித இயூஜின் டி மசெனோ (Saint Eugene de Mazenod, ஆகத்து 1, 1782 - மே 21, 1861) என்பவர் பிரெஞ்சு கத்தோலிக்க குரு ஆவார். இவருக்கு 1975 அக்டோபர் 19 இல் திருத்தந்தை ஆறாம் பவுலினால் அருளாளர் பட்டமும், 1995, திசம்பர் 3 இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலினால் புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது.

வாழ்க்கைச் சுருக்கம்

இயூஜின் டி மசெனோ பிரான்சில் பிரபுக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். 1790 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரான்சியப் புரட்சியை அடுத்து தன் தந்தையுடன் நாடு கடத்தப்பட்டு 11 ஆண்டுகள் இத்தாலியில் வாழ்ந்து 1802 ஆம் ஆண்டில் பிரான்சுக்கு திரும்பினார். 1808 ஆம் ஆண்டு குரு மடத்தில் இணைந்து இறையியல், மெய்யியல் கல்விகளைக் கற்று 1811 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

அமலமரியின் தியாகிகள் சபை உருவாக்கல்

ஏழைகள் வாழும் சேரிப்புறம், வைத்தியசாலை, சிறைச்சாலை போன்ற இடங்களில் சென்று பணி செய்தார். தனது பணியின் தேவையை உணர்ந்த இவர் ஒரு புதிய சபையை உருவாக்கினார். 1816 ஆம் ஆண்டில் "புறொவான்சின் மறைபரப்பாளர் சபை" என்ற பெயருடன் புதிய குழுவாக மறை மாவட்டத்தால் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் 5 குருக்கள் மாத்திரமே இருந்தார்கள்.
1826 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் நாள் இக்குழுவின் பெயர் "அமலமரியின் மறைபரப்புத் தியாகிகள்" ( Missionary Oblates of Mary Immaculate) என மாற்றப்பட்டது. 1832 ஆம் ஆண்டு இவர் மார்செயில் ஆயராக பதவி உயர்வு பெற்றார்

இலங்கையில் அமலமரித் தியாகிகள்

1847 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை பெரும் சவால்களை எதிர்நோக்கியது. அவர்களின் பணியின் தேவை அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்கு குருக்களின் தேவையும் அதிகரித்தது. அப்பொழுது இருந்த ஆயர் ஒராசியோ பெற்றக்கினி குருக்களைத் தேடி ஐரோப்பா சென்றார். பிரான்சில் அவர் ஆயர் இயுஜினை சந்தித்து அவரை இலங்கையில் பணியாற்ற சில குருக்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட யூஜின் டி மசெனோ மூன்று அமலமரித் தியாகிகளை இலங்கைக்கு அனுப்ப முன்வந்தார். முதன் முதலில் 1847, நவம்பர் 28 இல் அருட்தந்தை செமேரியாவின் தலைமையில் மூன்று அமலமரித் தியாகிகள் தென்னிலங்கையின் காலி துறைமுகத்தை வந்தடைந்தார்கள். இவர்கள் அங்கிருந்து 1848, பெப்ரவரி 4 இல் வடக்கே மன்னாரை வந்தடைந்தார்கள். பின் ஊர்காவற்றுறைக்கு சென்றார்கள். அமலமரித் தியாகிகளின் பணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி விரிந்தது. அமலமரித் தியாகிகளே 1862 இல் திருக்குடும்ப கன்னிய சபையினரை இலங்கைக்கு அழைத்து வந்தார்கள்.