இறைவார்த்தை

தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். (கலாத்தியர் 5:22-23)

இறைவார்த்தை

நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்
(மத்தேயு 16:18-19)

     இறை வெளிப்பாடு
பற்றிய கோட்பாட்டு விளக்கம்

உட்புகுமுன்


இறைவெளிப்பாடு

கிறிஸ்தவ வாழ்வைப் புதுப்பிக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் திருத்தந்தை 23ஆம் யோவான் தொடங்கிய திருச்சங்கம் கிறிஸ்தவ வாழ்வுக்கு அடிப்படையாக அமையும் இறைவார்த்தையின்பால்தன் பார்வையைத் திருப்பி அது பற்றி ஒருகோட்பாட்டு விளக்கத்தை வெளியிட்டதில் வியப்பில்லை. விவிலியத்தை முந்திய காலங்களைவிடக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும் அதிகமாகப் பயன்படுத்தத்தொடங்கிவிட்ட இக்காலக்கட்டத்தில், அவர்களை ஊக்குவிப்பதும் அவர்களுக்கு வழிகாட்டுவதும் இச்சங்க ஏட்டின் முக்கிய நோக்கங்கள்.

இக்கோட்பாட்டு விளக்கம் ஐந்து முறைகள் திருத்தம் பெற்று இன்றைய வடிவுக்கு வந்துள்ளது. 'இறைவெளிப்பாட்டின் மூலங்கள்' என்னும் பெயரில் 1962இல் தயாரிக்கப்பட்ட இதன் முதல் வரைவு சங்கத் தந்தையரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஊக்கப்படுத்தி வழிகாட்டுவதற்குப் பதிலாக அதில் கண்டனக் குரலும் எச்சரிக்கை உணர்வும் மேலோங்கி நின்றதால் கூடியிருந்த 2190 சங்கத் தந்தையருள் 1368 பேர் அதனை ஏற்கவில்லை. எனவே, விரிவாக்கப்பட்ட ஒரு குழு இவ்வேட்டின் புது வரைவைத் தயாரித்தது. இவ்வரைவு 1963இல் தயாரானது. இது பற்றிய தம் கருத்துகளை 300க்கும் அதிகமான சங்கத் தந்தையர் எழுத்து வடிவில் கொடுத்தனர். இக்கருத்துக்களின் அடிப்படையில் 1964ஆம்ஆண்டு ஒரு துணைக்குழு இவ்வேட்டின் மூன்றாம் வரைவைத் தயாரித்தது. இதுவே 'இறைவார்த்தை' என்னும் கோட்பாட்டு விளக்கத்தின் அடிப்படையாக அமைந்தது. சங்கத்தின் மூன்றாம்அமர்வில் இவ்வரைவு விவாதிக்கப்பட்டு ஒருசில திருத்தங்களும் புகுத்தப்பட்டன. இறுதியாக, சங்கத்தின் நான்காம் அமர்வில் திருத்தப்பட்ட இவ்வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டு 18-11-65 அன்று திருத்தந்தை ஆறாம் பவுலால் பிரகடனம் செய்யப்பட்டது

இயல் 1

இக்கோட்பாட்டு விளக்கம் 6 இயல்களைக் கொண்டுள்ளது. முதல் இயல் இறைவெளிப்பாடு பற்றிப் பேசுகிறது. கடவுளோடு மனிதர்கள் உறவு கொள்ளவேண்டும் என்னும் நோக்குடன்தான் இறைவெளிப்பாடு அருளப்பட்டுள்ளது. தொடக்கமுதல் கடவுள் தம்மை வெளிப்படுத்தியுள்ளார். மனிதர் தோன்றிய காலத்திலிருந்தே கடவுள் தம்மை வெளிப்படுத்தி இருந்தாலும், கிறிஸ்துவில் அவரது வெளிப்பாடு நிறைவுபெறுகிறது. கிறிஸ்துவே கடவுளின் வார்த்தை அவரது வாழ்வு முழுவதும் குறிப்பாக அவரது இறப்பும் உயிர்த்தெழுதலும் இறை வார்த்தையாக - வெளிப்பாடாக இருந்தன. இவ்வளிப்பாட்டுக்கு மனிதர் தரும் பதில்மொழியே இறை நம்பிக்கை.

இயல் 2

இரண்டாம் இயல் இறை வெளிப்பாடு மரபு வழியாக அளிக்கப்படுவது பற்றி எடுத்துரைக்கின்றது. திருத்தூதுதர்கள் தூய ஆவியின் ஏவுதலால் தாம் பெற்றுக்கொண்ட இறைவெளிப்பாட்டை வாய்மொழி வழியாகவும் நூல்கள் வழியாகவும் மக்களுக்கு அளித்தனர். எழுதப்பட்ட நூல்கள் இறைவெளிப்பாட்டின் முழுமையைக் கொண்டிருக்கவில்லை. திருச்சபையின் மரபு வழியாகவும் இறைவெளிப்பாடு அருளப்பட்டது. திருநூல்களும் திருமரபும் ஒரே ஊற்றிலிருந்து உருப்பெற்ற காரணத்தால் இவை இரண்டும் தம்மில் நெருங்கிய தொடர்புடையன் இரண்டுமே சமமான வணக்கத்துக்குரியன. இவை இரண்டும் அனைத்து மக்களுக்கும் கடவுளால் கொடுக்கப்பட்ட கொடைகள்; இவற்றிற்கு விளக்கம் தரும் உரிமை திருச்சபை ஆசிரியத்துக்கே உண்டு.

இயல் 3

மூன்றாம் இயல் இறை ஏவுதல் பற்றியும் இறை வெளிப்பாட்டிற்கான விளக்கம் பற்றியும் எடுத்துக்கூறுகிறது. இறைவெளிப்பாடு என்றால் என்ன என்னும் கொள்கை அளவிலான கேள்விக்கு விடை கூறாது, திருநூல்கள் தூய ஆவியின் ஏவுதலால் எழுதப்பெற்றவை; கடவுளை ஆசிரியராகக் கொண்டவை எனத் திருச்சங்கம் இயல்புகிறது. அதே வேளையில் திருநூல்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்த மனிதர்களும் உண்மையான ஆசிரியர்களே. அவர்கள் சிந்திக்கும் வகை, சொல்லும் வகை, எழுதும் வகை, அவர்கள் காலத்து இலக்கியம், பண்பாடு, வரலாற்று நிகழ்வுகள் ஆகிய அனைத்தும் திருநூல்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை; மனித ஆசிரியர்கள் தம்நோக்கத்திற்கு ஏற்றவாறு சிலவற்றை விட்டுவிட்டு, சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குத் தமக்கே உரிய பாணியில் எழுத்து வடிவம் கொடுத்தார்கள். எனவே அவர்களைத் திருச்சங்கம் 'உண்மையான ஆசிரியர்கள்' என அழைக்கிறது. திருமறை நூல்களுக்கு விளக்கம் கொடுக்கும்போது மூன்று கருத்துகள் மனத்தில் கொள்ளப்படவேண்டும் எனத் திருச்சங்கம் வலியுறுத்துகிறது: 1)இறை ஏவுதல் பெற்ற நூல்கள் யாவுமே மனித மீட்புக்காக எழுதப்பெற்றவை; 2)திருநூலில் உள்ளவை யாவும் தத்தம் இலக்கிய வகையின்படி புரிந்து கொள்ளப்பட ணே;டும்; 3) திருமறை நூல்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அவற்றிற்குப் பொருள் தருபவர் இயேசு கிறிஸ்துவே.

இயல் 4

நான்காம் இயல் பழைய ஏற்பாடு பற்றிப் பேசுகிறது. பழைய ஏற்பாடு இறைவார்த்தையைக் கொண்டுள்ளது. அது கடவுளின் செயல்பாடுகளை எடுத்துக் கூறிக் கடவுளை வெளிப்படுத்துகிறது. அதில் கூறப்பட்டுள்ள சில உண்மைகள் அவை எழுதப்பட்ட காலத்திற்கு இயைந்தவை; முழுமையான உண்மையாகக் கருதப்பட இயலாதவை. எனினும் பழைய ஏற்பாட்ழற்குத் திருச்சபை வாழ்வில் நிலையான மதிப்பு உண்டு. இரு ஏற்பாடுகளையும் இணைப்பவர் கிறிஸ்து; கிறிஸ்துவின் ஒளியில் பழைய ஏற்பாடு நிறைவு பெறவேண்டும்; கிறிஸ்துவின் ஒளியில் பழைய ஏற்பாடு நிறைவு பெறவேண்டும்; பழைய ஏற்பாட்டின் ஒளியில் புதிய ஏற்பாடு புரிந்து கொள்ளப்படவேண்டும்.

இயல் 5

ஐந்தாம் இயல் புதிய ஏற்பாடு பற்றி எடுத்துரைக்கிறது. இறைவாக்கு மனிதரானார்; அதுபோன்றே இறைவெளிப்பாடும் மனிதப் பண்புகளில் எழுத்து வடிவம் பெற்றது. புதிய ஏற்பாட்டு நூல்களுள் நான்கு நற்செய்திகளும் தனிச் சிறப்பிடம் பெற்றுள்ளன. அவை வரலாற்றுத் தன்மை கொண்டவை. அவற்றை நன்கு புரிந்து கொள்ளத் தற்கால ஆய்வு முறைகள் நமக்கு உதவி புரிகின்றன் இவ்வாய்வு முறைகள் இயேசுவைப் பற்றிய உண்மையைப் புரிந்து கொள்ள உதவுகின்றனவே தவிர, அவற்றை மறுப்பதில்லை.


இயல் 6

ஆறாம் இயல் திருச்சபை வாழ்வில் திருமறை நூல்கள் கொண்டுள்ள சிறப்பிடம் பற்றி எடுத்துக் கூறுகின்றது. எல்லா மக்களும் படித்து பயன் பெறும் முறையில் திருநூல்கள் எல்லா மக்களுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும். எல்லா மக்களும் அவற்றை எளிதில் புரிந்து கொள்ளும் முறையில் அவை மொழி பெயர்க்கப்பட வேண்டும். அனைத்துக் கிறிஸ்தவச் சபைகளும் சேர்ந்து விவிலிய நூல்களை மொழிபெயர்த்துப் பயன்படுத்துவது சிறந்தது. திருநூல்களை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளும் நோக்குடன் விவிலிய ஆய்வுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இறையியலுக்கும் அருள்பணி வாழ்வுக்கும் இத்திருநூல்களே அடிப்படையாக அமையவேண்டும். திருப்பணிநிலையினரும் பொதுநிலையினரும் இறைவார்த்தையை ஊன்றிப் படித்து ஆழ்ந்து தியானிக்க வேண்டும்.
இவ்வாறு இறை வெளிப்பாடு பற்றிய சிறந்ததொரு கோட்பாட்டு விளக்கத்தை இரண்டாம் வத்திக்கான் சங்கம் நமக்குத் தந்துள்ளது. இறைவார்த்தை, தூய ஆவி என்னும் இரு கருத்துகளும் ஏடு முழுவதிலும் இழையோடுகின்றன. மரபுப் பார்வைகள், மரபுச் சொற்கள், மரபு வரையறைகள் ஆகியவற்றை விட்டுவிட்டு நேர்முகமான விவிலிய அணுகுமுறையில் திருச்சங்கம் இறைவெளிப்பாடு பற்றிப் பேசுகிறது.
விவிலிய ஆய்வுகளையும் மொழிபெயர்ப்புகளையும் ஊக்கப்படுத்தி, மக்கள் அனைவரும் இறைவார்த்தையை வாசித்துத்தங்கள் அருள் வாழ்வில் வளர்ச்சியடைய வேண்டும் எனத் திருச்சங்கம் விரும்புகிறது. சங்கத் திருத்தந்தையரின் இந்த விருப்பத்தை ஏற்று விவிலியத்தை வாசித்து, தியானித்து அதன்படி வாழ முயலுவது நம் கடமையாகிறது.

பணி.கு.எரோணிமுசு
விவிலியப் பேராசிரியர்
திருச்சி தூய பவுல் கல்லூரி
ஆகஸ்டு, 2000 திருச்சி 1




 	 இறைவெளிப்பாடு பற்றி இறைஅடியாருக்கு 
அடியார் ஆயர் பவுல் திருச்சங்கத் தந்தையரோடு இணைந்து நினைவில் 
       என்றும் நிலைக்குமாறு அருளிய கோட்பாட்டு விளக்கம்


முன்னுரை

1. இறைவனின் வார்த்தைக்குப் பணிவுடன் செவிசாய்த்து, நம்பிக்கையுடன் அதைப் பறைசாற்றும் இத்திருச்சங்கம் தூய யோவானின் கீழ்க்காணும் சொற்களைத் தன் கண்முன் கொண்டுள்ளது: ''தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த ''நிறைவாழ்வு'' பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம். நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.'' (1 யோவா 1:2,3). ஆகவே நிறைவாழ்வின் செய்தியைக் கேட்பதால் உலகம் முழுவதும் நம்பவும் நம்புவதால் எதிர்நோக்கு கொள்ளவும் எதிர்நோக்கு கொள்வதால் அன்பு செய்யவும் இயலுமாறு1 திரிதெந்துச் சங்கம், முதலாம் வத்திக்கான் சங்கம் ஆகியவற்றின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இறை வெளிப்பாட்டையும் அது எவ்வாறு வழிவழியாக வழங்கப்படுகிறது என்பதையும் பற்றிய உண்மைப் படிப்பினையை எடுத்துரைக்க இச்சங்கம் விரும்புகிறது.

இயல் 1
வெளிப்பாடு

இறை வெளிப்பாட்டின் இயல்பும் அது வெளிப்படுத்தும் பொருளும்

2. நன்னயமும், ஞானமும் உள்ள கடவுள் தம்மைத் தாமே வெளிப்படுத்தவும் தமது திருவுளத் திட்டத்தை அறிவிக்கவும் விரும்பினார் (காண் எபே 1:9). இத்திட்டத்தால் மனிதரான இறைவார்த்தையாம் கிறிஸ்துவின் மூலம் தூய ஆவியின் வழியாக மனிதர்கள் இறைத் தந்தையை அணுகுகின்றனர்; இறையியல்பில் பங்கு பெறுகின்றனர் (காண் எபே 2:18, 2 பேது 1:4). இவ்வnளிப்பாட்டின் வழியாகக் கட்புலனாகாக் கடவுள் (காண் கொலோ 1:15; 1 திமோ 1:17) தம் அன்பின் மிகுதியால், மக்களைத் தம்மோடு உறவுகொள்ள அழைத்து, அவர்களோடு உறவு ஏற்படுத்துமாறு அவர்களைத் தம் நண்பர்களாகக் கொண்டு உரையாடுகிறார் (காண் விப 33:11; யோவா 15:14-15); அவர்களோடு குடிகொள்கிறார் (காண் பாரு 3:38). வெளிப்பாட்டின் இத்திட்டம் தம்முள் உள்ளார்ந்த முறையில் தொடர்பு கொண்ட செலய்களாலும் சொற்களாலும் நிறைவேறுகின்றது. அதாவது மீட்பின் வரலாற்றில் கடவுள் ஆற்றிய செயல்கள், போதனையையும் சொற்கள் குறித்துக் க hட்டும் உண்மைகளையும் வெளிப்படுத்தி உறுதிப்படுத்துகின்றன. அவருடைய சொற்கள், செயல்களைப் பறைசாற்றி அவற்றில் அடங்கியுள்ள இறைத்திட்டத்தைத் தெளிவுப்படுத்துகின்றன. ஆகவே, இவ்வெளிப்பாட்டின் மூலம் கடவுளையும் மனிதரின் நிறைவாழ்வையும்பற்றிய ஆழ்ந்த உண்மை இணைப்பாளரும்வெளிப்பாட்டனைத்தின் முழுமையுமான கிறிஸ்துவில் நம்முன் சுடர்விட்டு ஒளிர்கின்றது.2

நற்செய்திக்கான தயாரிப்பு

3. வாக்கு வழியாக அனைத்தையும் படைத்தும் (காண் யோவா 1:3) காத்தும் வரும் கடவுள் படைக்கப்பட்ட பொருள்களின் வழியே தம்மைப் பற்றிய நிலையான ஒ ரு சான்றினை மனிதருக்கு அளிக்கின்றார் (காண் உரோ 1:19-20); மேலும் விண்ணக நிறைவாழ்விற்கான வழியைத் திறக்க எண்ணித் தம்மைத்தாமே நம் முதற்பெற்றோருக்குத் தொடக்கத்திலிருந்தே வெளிப்படுத்தினார்; அவர்களது வீழ்ச்சிக்குப் பின் மீட்பை வாக்களித்து, அதன் மூலம் அவர்களை நிறைவாழ்வு எதிர்நோக்கில் நிலைநிறுத்தினார் (காண் தொநூ 3:15); பின்னர் நிறைவாழ்வை நாடி நற்செயலில் நிலைத்து நிற்பவர்களுக்கு நிலைவாழ்வை அளிப்பதற்காக (காண் உரோ 2:6-7) மக்கள் குலத்தை எந்நாளும் தம் ஆதரவில் வைத்துக்கொண்டார். குறிப்பிட்ட காலத்தில் அவர் ஆபிரகாமை ஒரு டிபரிய இனமாக்கும் பொருட்டு அழைத்தார் (காண் தொநூ 12: 2-3). குலமுதுவருக்குப் பின் மோசே வழியாகவும் இறைவாக்கினர் வழியாகவும் கடவுள் தம்மை உயிருள்ள ஒரே உண்மைக் கடவுள், பராமரிக்கும் தந்தை, நீதி நிறை வடுவர் என இவ்வினத்தார் ஏற்றுக்கொள்ளவும், தாம் வாக்களித்திருந்த மீட்பருக்காகக் காத்திருக்கவும் அவர்களுக்கு கற்பித்தார்; இவ்வாறாகப் பல நூற்றாண்டுகளாக நற்செய்திக்கு வழியை ஆயத்தம் செய்தார்.

கிறிஸ்துவே வெளிப்பாட்டின் முழுமை

4. பற்பல முறையிலும் பல்வேறு வகையிலும் இறைவாக்கினர் வாயிலாகப் பேசிய கடவுள் ''இவ்விறுதி நாட்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்'' (எபி 1:1-2). என்றும் வாழும் இறைவாக்காகிகய அவருடைய மகன் எல்லா மனிதருக்கும் ஒளியாய் இருக்கிறார். அவர் மக்களிடையே வாழ்ந்து தம் உள்ளார்ந்த உண்மைகளை அவர்களுக்கு எடுத்துரைக்கும்படி (காண் யோவா 1: 1-18) கடவுள் அவரை அனுப்பி வைத்தார். ஆகவே மனிதரான வார்த்தையும் ''மனிதருக்காக மனிதராக''3 அனுப்பப்பட்டவருமான இயேசு கிறிஸ்து ''கடவுளின் ;வார்த்தைகளைப் பேசுகிறார்'' (யோவா 3:34); தந்தை அவருக்களித்த நிறைவாழ்வுப் பணியை நிறைவேற்றுகிறார் (காண் யோவா 5:36; 17:4). இயேசுக் கிறிஸ்துவைக் காண்பது தந்தையைக் காண்பதாகும் (காண் யோவா 14:9). உண்மையிலேயே இயேசு கிறிஸ்து தம் உடனிருப்பதாலும்வெளிப்பாட்டாலும் தம் சொற்களாலும் செயல்களாலும் அருள் அடையாளங்களாலும் புதுமைகளாலும் குறிப்பாக தாம் இறந்து மாட்சியுடன் உயிர்பெற்றெழுந்ததாலும் உண்மையின் ஆவியானவரை அனுப்பியதாலும் இறை வெளிப்பாட்டை முழுமைப்படுத்தி நிறைவுசெய்கிறார். பாவம் மற்றும் சாவு ஆகிய இருளின் சக்திகளிலிருந்து நம்மை விடுவித்து நிலை வாழ்விற்கு உயிர்த்தெழச் செய்யும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்னும் அதே இறை வெளிப்பாட்டைத் தெய்வீகச் சான்றால் உறுதிப்படுத்துகின்றார்.
ஆகவே, கிறிஸ்தவ அருள் திட்டம், புதிய திட்டவட்டமான உடன்படிக்கையென்னும் அளவில் என்றும் அழயாது நிற்கும். மேலும் தம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாட்சிமையுடன் தம்மையே வெளிப்படுத்துமுன் நாம் யாதொரு புதிய, பொதுவான வெளிப்பாட்டையும் இனி எதிர்பார்க்க இடமில்லை (காண் 1 திமோ 6:14 தீத் 2:13)

வெளிப்பாட்டை ஏற்க நம்பிக்கை தேவை

5. வெளிப்படுத்தும் கடவுளுக்கு மனிதர் நம்பிக்கை கொண்டு கீழ்ப்படிய வேண்டும் (காண் உரோ 16:26; மேலும் காண் உரோ 1:5; 2 கொரி 10:5-6). இதன் வழியாக அவர்கள் தாமே விரும்பித் தம்மை முழுவதும் கடவுளுக்குக் கையளிக்கின்றார்கள். இவ்வாறு செய்வதன் மூலம், ''வெளிப்படுத்தும் கடவுளுக்கு அவர்கள் அறிவோடும் விருப்பத்தோடும் முழுமையாய்ப் பணிகிறார்கள்'';4 அவர் தந்த வெளிப்பாட்டுக்குத் தாமே விரும்பி இசைவு தெரிவிக்கிறார்கள். இத்தகைய நம்பிக்கையை அளிப்பதற்கு, முன்வந்து துணைபுரியும் கடவுளுடைய அருளும் தூய ஆவியினுடைய உள்ளார்ந்த உதவிகளும் தேவை. இந்தத் தூய ஆவியே இதயத்தை நெகிழ்வுறச்செய்து, கடவுளிடம் திருப்பி, அறிவுக் கண்களை திறந்து ''உண்மைக்கு இசைந்து நம்பும் ஒவ்வொருவருக்கும் மகிழ்வு''5 அளிக்கின்றார். இவ்வெளிப்பாட்டைப் பற்றி இன்னும் ஆழமாய் அறிவதற்கு அதே தூய ஆவி தம் கொடைகளால் நம்பிக்கையை இடையறாது நிறைவடையச் செய்கிறார்.

வெளிப்பாடு அறிவிப்பது

6. இவ்வெளிப்பாட்டின் மூலம் கடவுள் தம்மையும் மனிதருடைய நிறைவாழ்வுப் பற்றிய தம் நிலையாள திருவளத் திட்டங்களையும் வெளிப்படுத்தவும் பகிர்ந்து கொள்ளவும் விரும்பினார்; அதாவது ''மனித அறிவுக்கு முற்றிலும் எட்டாத இறைச் செல்வங்களை மக்களோடு பங்கிட்டுக்கொள்ள''6 விரும்பினார்.
''அனைத்திற்கும் தொடக்கமும் முடிவுமான கடவுளைப் படைக்கப்பட்ட பொருட்களிலின்று மனித அறிவின் இயற்கை ஒளியால் உறுதியாகக் கண்டறிய இயலும்'' (காண் உரோ 1:20) எனத் திருச்சங்கம் அறிக்கையிடுகின்றது; மேலும் ''தன்னிலேயே மனித அறிவுக்கு எட்டும் இறை உண்மைகள் கடவுளின் வெளிப்பாட்டின் வழியாக எல்லா மக்களும் எளிதில், ஆழ்ந்த உறுதியோடு, தவறின்றி, மக்கள் குலத்தின் தற்கால நிலையில்கூட புரிந்துகொள்ளகூடியன ஆகின்றன''7 எனவும் கற்பிக்கிறது.

இயல் 2
வழிவழியாக வழங்கப்படும் இறை வெளிப்பாடு

நற்செய்தி அறிவிப்பாளர்கள்

7. உலகில் எல்லா இனத்தாரும் நிறைவாழ்வு பெறக் கடவுள் வெளிப்படுத்தியவை என்றென்னும் முழுமையாக நிலைத்திருக்கவும், எல்லாத் தலைமுறைகளுக்கும் வழிவழியாக வழங்கப்படவும் வேண்டுமென்று நன்னயம் மிகுந்த அவரே ஏற்பாடு செய்தார். ஒப்புயர்வற்ற கடவுளின் முழு வெளிப்பாடும் கிறிஸ்து ஆண்டவரில் நிறைவு பெறுகின்றது (காண் 2 கொரி 1:20ம் 3:16-4:6). இவரே, நிறைவாழ்வளிக்கும் எல்லா உண்மைகளுக்கும் ஒழுக்கப் போதனைகளுக்கும் ஊற்றாக நற்செய்தியை எல்லாருக்கும் போதிக்கவும்,1 அவர்களுக்குக் கடவுளின் கொடைகளை வழங்கவும் தம் திருத்தூதர்களுக்குக் கட்டளையிட்டார். இந்நற்செய்தி முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக வாக்களிக்கப்பட்டிருந்தது. கிறிஸ்துவே இதை நிறைவுபடுத்தி, தம் வாயாலே அறிக்கையிட்டார். கிறிஸ்துவின் வாய்மொழியாலும் அவரோடு நடத்திய வாழ்வாலும் அவர்தம் செயல்களாலும் தாம் பெற்றவற்றையும் தூய ஆவியின் தூண்டுதலால் தாம் கற்றவற்றையும் திருத்தூதர்கள் தம் வாய்மொழிப் ;போதனை, வாழ்வின் எடுத்துக்காட்டுகள், ஏற்படுத்திய அமைப்புகள் ஆகியவற்றின் வாயிலாக வழிவழியாக வழங்கினர். நிறைவாழ்வுச் செய்தியைத் திருத்தூதர்களும் அவர்கள் காலத்தில் வாழ்ந்த பிறரும் ஆவியின் ஏவுதலினால் எழுத்தில் வடித்துத் தந்தனர். இவ்வாறு இவர்கள் கிறிஸ்துவின் கட்டளையைப் பற்றுறுதியுடன் நிறைவேற்றினார்கள்.2
இந்நற்செய்தியை முழுமையாகவும் உயிருள்ளதாகவும் திருச்சபையில் என்றும் வைத்துக் காக்கத் திருத்தூதர்கள் ஆயர்களைத் தங்கள் வழித்தோன்றல்களாக விட்டுச் சென்றனர். ''தமக்கே உரிய ஆசிரியப் பணியினையும் அவர்களுக்கு அளித்துச் சென்றனர்''3 இத்தூய மரபும், இரு ஏற்பாடுகளடங்கிய விவிலியமும் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு ஒப்பானவை. உலகில் பயணம் செய்யும் திருச்சபை தனக்கு எல்லாவற்றையும் கொடுத்தக் கடவுளை, அவர் இருப்பது போலவே நேருக்கு நேர் பார்க்க அழைத்துச் செல்லப்படும் நாள் வரும்வரை இக்கண்ணாடியில்தான் கண்டு தியானிக்கிறது (காண் 1 யோவா 3:2).

தூய மரபு

8. ஆகவே, கடவுளின் ஏவுதலினால் எழுதப்பட்டுள்ள நூல்களில் சிறப்பான முறையில்காணப்படும் திருத்தூதர்களின் படிப்பினை இறுதிக்காலம் வரை இடைவிடாது காப்பாற்றப்பட வேண்டியிருந்தது. எனவே, திருத்தூதர்களும் தாங்கள் பெற்றுக் கொண்டவற்றை வழிவழியாக அளித்தனர்; வாய்மொழியாகவோ திருமுகம் வழியாகவோ தாங்கள் கற்றுக்கொண்ட மரபுகளைக் கடைபிடிக்க வேண்டுமென்றும் (காண் 2 தெச 2:15), எல்லாக் காலத்துக்குமென ஒப்படைக்கப்பட்ட ந ம்பிக்கையைப் போரிட்டுக் காக்கவேண்டும் என்றும் (காண் யூதா 3) கிறிஸ்தவர்களை எச்சரித்தனர்.4 கடவுளின் மக்களின் தூய வாழ்விற்கும் நம்பிக்கையின் வளர்ச்சிக்கும் உதவுவுன யாவும் திருத்தூதர்கள் வழிவழியாக அளித்துச் சென்னறவற்றுள் அடங்கியுள்ளன. இவ்வாறு, திருச்சபை தன் படிப்பினையிலும் வாழ்விலும் வழிபாட்டிலும் தன்னையும், தான் நம்புபவற்றையும் எல்லாத் தலைமுறைகளுக்கும் வழங்கி, நிலைத்து நிற்கச் செய்கிறது.
திருத்தூதர்களிடமிருந்து வரும் இம்மரபு தூய ஆவியின் துணையால் திருச்சபையில் வளர்ச்சி அடைகிறது.5 ஏனெனில் மரபு வழியே நமக்கு வழங்கப்பட்டுள்ள உண்மைகளையும் சொற்களையும் புரிந்துகொள்வதில் வளர்ச்சி ஏற்படுகிறது. கிறிஸ்தவர்கள் இவற்றைத் தங்கள் உள்ளத்தில் (காண் லூக் 2:19, 51) பதித்துவைத்து, ஆழ்ந்து தியானித்து ஆராய்வதாலும், தாங்கள் உய்த்துணரும் உண்மைகளை ஆழ்ந்தறிந்து கொள்வதாலும், ஆயர் வழிவருகையால் உண்மையென்னும் அருள்கொடையை உறுதியாய்ப் பெற்றவர்களின் படிப்பினையாலும் இவ்வளர்ச்சி ஏற்படுகின்றது. நூற்றாண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாய் ஓடி மறைய, திருச்சபை, கடவுளின் வார்த்தைகள் தன்னில் நிறைவேறும் வரை இறை உண்மையின் முழுமையை நோக்கித் தொடர்ந்து நடைபோடுகிறது.
இம்மரபு உயிராற்றலுடன் திருச்சபையில் வழங்குகிறது என்பதற்குத் தூய திருச்சபைத் தந்தையர்களின் கூற்றுகள் சான்று பகர்கின்றன. வளமான மரபுகள் நம்பி, இறைவேண்டல் செய்யும் திருச்சபையின் வாழ்விலும் வழக்கத்திலும் நிரம்பக் காணக்கிடக்கின்றன. மரபின் வழியாகத்தான் முழு விவிலியத் திருமுறை திருச்சபைக்குத் தெரியவருகின்றது, திருநூல்களைத் திருச்சபை ஆழ்ந்து கற்று, அவற்றிற்குச் செயல்; வடிவம் கொடுக்கிறது. இவ்வாறு, முற்காலத்தில் பேசியக் கடவுள், தம் அன்பு மகனின் மணமகளுடன் இடைவிடாமல் உரையாடி வருகிறார்; திருச்சபையிலும் அதன்மூலம் உலகிலும் நற்செய்தியின் உயிருள்ள குரலை எதிரொலிக்கச் செய்யும் தூய ஆவியானவன், கிறிஸ்தவர்களை முழு உண்மைக்கு இட்டுச் சென்று, கிறிஸ்துவின் வாக்கு நிறைவாக அவர்களுள் குடிகொள்ளச் செய்கின்றார் (காண் கொலோ 3:16).

மரபுக்கும் விவிலியத்திற்கும் உள்ள தொடர்பு

9. ஆகவே, திருமரபும் விவிலியமும் தம்மிடையே நெருங்கிய பிணைப்பும் தொடர்பும் கொண்டிருக்கின்றன. ஏனெனில் அவை இரண்டும் ஒரே இறைஊற்றிலிருந்து வெளிப்பட்டு, ஒரு குறிப்பிட்ட முறையில் ஒன்றாய் இணைந்து ஒரே குறிக்கோளை நாடிச் செல்கின்றன. ஏனெனில், விவிலியம் தூய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டபடியல் அது கடவுளின் வாய்மொழியாயிருக்கின்றது. திருமரபோ எனில், ஆண்டவர் கிறிஸ்துவும் தூய ஆவியும் திருத்தூதர்களிடம் ஒப்படைத்த இறைவார்த்தையை அவர்களின் வழித்தோன்றல்களுக்கு முழுமையுடன் அளிக்கின்றது. உண்மையின் ஆவியாரின் ஒளியில் இவ்வழித் தோன்றல்கள் இறைவார்த்தையைப் பற்றுறுதியுடன் காக்கவும் விளக்கவும் பரப்பவும் வேண்டுமென்பதே இதன் நோக்கம். இவ்வாறாக, வெளிப்படுத்தப்பட்ட எல்லாவற்றையும் பற்றிய உறுதியைத் திருச்சபை விவிலியத்திலிருந்து மட்டுமெ பெறுவதில்லை. ஆகவே திருமரபையும் விவிலியத்திலிருந்து மட்டுமே பெறுவதில்லை. ஆகவே திருமரபையும் விவிலியத்தையும் சமமான பக்திப் பற்றுதலுடனும் மரியாதையுடனும் ஏற்று ஊக்கமளிக்க வேண்டும்.6

மரபும் விவிலியமும் திருச்சபையோடும் அதன் ஆசிரியத்தோடும் கொண்டுள்ள தொடர்பு

10. திருமரபும் விவிலியமும் திருச்சபையிடம் ஒப்புவிக்கப்பட்டுள்ள இறை வார்த்தையின் ஒரே திருக்களஞ்சியமாகும். இத்திருக்களஞ்சியத்தைப் பற்றிக் கொண்டு தூய மக்களனைவரும் தம் அருள்பணியாளர்களோடு இணைந்து திருத்தூதர்களின் போதனையிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் தொடர்ந்து நிலைநிற்கின்றனர் (காண் திப 2:42 கிரேக்க மூலம்). இவ்வாறு வழிவழி வந்த நம்பிக்கையைக் காப்பதிலும் செயல்படுத்துவதிலும் அறிக்கையிடுவதிலும் அவர்களுக்கும் நம்பிக்கை கொண்டோருக்குமிடையே சிறந்த ஒற்றுமை நிலவுகிறது.7
எழுதப்பட்ட அல்லது மரபுவழி வந்த8 கடவுளின் வார்த்தைக்கு அதிகாரப்பூர்வமான பொருள் விளக்கம் கொடுக்கும் பொறுப்பு இயேசு கிறிஸ்துவின் பெயரால் அதிகாரம் செலுத்தும் திருச்சபையின் உயிருள் ஆசிரியத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.9 எனினும், இவ்வாசியரியம் கடவுளின் வார்த்தைக்கு மேற்பட்டதல்ல. மாறாக, அது இறைவார்த்தையின் பணியாள், அது மரபு வழியாக வழங்கப்பட்டுள்ளதை மட்டும் போதிக்கிறது; கடவுளின் கட்டளையாலும், தூய ஆவியின் துணையாலும் அதைப் பக்தியோடு கேட்டு, தூய்மையாகக் காத்து, பற்றுறுதியுடன் விளக்குகிறது; அஃதோடு இறை வெளிப்பாடு என நம்பும்படி அது எடுத்துரைக்கும் எல்லாவற்றையும் நம்பிக்கையின் ஒரே திருக்களஞ்சியத்திலிருந்து பெறுகின்றது.
எனவே திருமரபு, விவிலியம், திருச்சபையின் ஆசிரியம் ஆகியவை கடவுளின் ஞானமிகு திட்டத்தின்படி ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கின்றன. அவற்றுள் ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்கமுடியாது என்பது தெளிவு. இவை யாவும் சேர்ந்து ஒவ்வொன்றும் தத்தம் முறைப்படி ஒரே தூய ஆவியின் செயலால், மக்களின் நிறைவாழ்வுக்கும் பயனுறு வகையில் உதவுகின்றன என்பதும் தெளிவாகிறது.

இயல் 3
விவிலியத்தின் இறை ஏவுதலும் அதன் பொருள் விளக்கமும்

இறை ஏவுதல்

11. விவிலியத்தில் அடங்கியுள்ளவையும் அதில் வெளிப்படுபவையுமான இறைவெளிப்பாட்டு உண்மைகள் தூய ஆவியின் தூண்டுதலினால் எழுதப்பட்டவையாகும். பழைய, புதிய ஏற்பாட்டு நூல்கள் யாவும், அவற்றின் எல்லாப் பாகங்களும் தூய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டுள்ளவை (காண் யோவா 20:31; 2 திமோ 3:16; 2 பேது 1:19-21; 3:16-16). கடவுளையே தங்கள் ஆசிரியராகக் கொண்டுள்ளவை, அவை அப்படியே திருச்சபைக்கு வழிவழியாக வந்துள்ளவை:1 தூய அன்னையாம் திருச்சபை திருத்தூதர்களின் நம்பிக்கையைப் பின்பற்றி அவற்றைத் தூயனவாகவும், திருமுறையைச் சார்ந்தனவாகவும் ஏற்றுக் கொள்கிறது. விவிலிய நூல்களை உருவாக்கக் கடவுள் மனிதர்களைத் தேர்ந்துகொண்டார். கடவுளே, அவர்களில், அவர்கள் வழியே செயலாற்ற2 அவர்கள் தங்கள் திறமையையும் வல்லமையையும் பயன்படுத்தி அவர் விரும்பிய எல்லாவற்றையும், அவற்றை மட்டுமே உண்மையான ஆசிரியர்கள் என்ற முறையில் எழுத்தில் வடிக்குமாறு3 அவர்களைப் பயன்படுத்தினார்.4
ஆகவே கடவுளால் ஏவப்பட்ட ஆசிரியர்கள் அல்லது திரு எழுத்தாளர்கள் உறுதியாய்க் கூறும் யாவும் தூய ஆவியால் உறுதியாய்க் கூறப்படுவதாகக் கொள்ளவேண்டும். இதன் காரணாமக, நம் நிறைவாழ்விற்காகக் கடவுள் இத்தூய நூல்களில் அடக்க விரும்பிய உண்மையையே விவிலிய நூல்கள் நமக்கு உறுதியுடனும் உரிமையுடனும் தவறின்றியும் போதிக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.5 ஆகையால், ''மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதிபெறுகிறார்'' (காண் 2 திமோ 3:16-17 கிரேக்க மூலம்)

விவிலியத்திற்குப் பொருள் விளக்கம் தரும் முறை

12. கடவுள் விவிலியத்தில் மனிதரது வழக்கப்படி மனிதர் வழியாகப் பேசுகிறார்.6 எனவே, அவர் நமக்குக் கூற விரும்பியதை நன்கு உணரும்படியாகத் திரு ஆசிரியர்கள் உண்மையிலேயே உணர்த்த நினைத்ததையும் அவர்களின் சொற்களால் கடவுள் அறிவிக்க விரும்பியதையும் விவிலியப் பொருளுரையாளர் உன்னிப்பாக ஆராயவேண்டும்.
திரு ஆசிரியர்களின் நோக்கத்தைக் கண்டறிய மற்றவைகளோடு இலக்கிய அமைப்புகளையும் கவனிக்கவேண்டும்.
ஏனெனில், வரலாறு, இறைவாக்கு, கவிதை அல்லது வேறு இலக்கிய அமைப்புகளில் உண்மை வௌ;வேறு விதாய் எடுத்துரைக்கப்பட்டு விளக்கப்படுகிறது.
மேலும் தம் காலத்திற்கும் பண்பாட்டு நிலைமைக்கும் ஏற்ற வண்ணம் அக்கால வழக்கிலிருந்த இலக்கிய அமைப்புகளை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் பயன்படுத்தியதன் மூலம் திரு ஆசிரியர் என்ன பொருளை வெளிப்படுத்த விரும்பினார், மற்றும் வெளிப்படுத்தினார் என்பதைப் பொருளுரையாளர் காணவேண்டும்.7 திரு ஆசிரியர் எழுத்து வடிவில் உறுதியாய்க் கூற விருமபியதைச் சரியாய்ப் புரிந்து கொள்ள அவர் காலத்தில் வழக்கிலிருந்த உணரும், பேசும், எடுத்துக்கூறும் இயல்பான முறைகளையும், அக்காலத்தில் மக்கள் ஒருவரோடிடாருவர் பழகும்போது பயன்படுத்திய முறைகளையும் கருத்தில் கொள்ளும் அவசியம்.8
விவிலியம் தூய ஆவியாரால் எழுதப்பெற்றது. அதே ஆவியாரின் துணைகொண்டு, அதை நாம் படிக்கவும் அதற்குப் பொருள் விளக்கம் செய்யவும் வேண்டும்.9 எனவே விவிலியப் பாடங்களின் பொருளைச் சரிவரக் கண்டுணர்வதற்கு அதன் உள்ளடக்கத்தையும் விவிலியம் முழுவதன் ஒற்றுமையையும் கூர்ந்து நோக்கவேண்டும். அஃதோடுகூட திருச்சபை முழுவதன் உயிருள்ள மரபும் நம்பிக்கைச் சார்ந்த உண்மைகளுக்கிடையேயுள்ள ஒப்புமையும் கவனிக்கப்படவேண்டும். இவ்விதிகளைப் பின்பற்றி விவிலியத்தின் பொருளை ஆழ்ந்தறியவும் விளக்கவும் உழைப்பது விவிலிய வல்லுநர்களின் கடமையாகும். இத்தகைய ஆராய்ச்சியின் வழியே திருச்சபையின் கருத்தும் முதிர்ச்சியடையும். ஏனெனில், விவிலியத்தை விளக்கிப் பொருள் கூறும் வழிகளைப் பற்றிய இவை யாவும் இறுதியாகத் திருச்சபையின் தீர்ப்புக்குட்பட்டவையாகும். ஏனெனில் இறைவார்த்தையைக் காத்து, பொருள் விளக்க வேண்டிய இறைக் கட்டளையையும் பணியையும் திருச்சபை பெற்றுள்ளது.10

கடவுளின் இரக்கப் பெருக்கம்

13. ''கடவுளின் சொல்லரிய நன்னயத்தையும் அவர் நம்மீது பராமரிப்பும் அக்கறையும் கொண்டு தம் மொழியை எத்துணைக்குத் தழுவி அமைத்தார் என்பதையும் உணரும் வகையில்'' காலங்கடந்த ஞானத்தின் வியத்தகு இரக்கம் விவிலியத்தில் கண்கூடாகிறது. அதே நேரத்தில் கடவுளின் உண்மையும் தூய்மை நிலையும் பழுதின்றிப் பாதுகாக்கப்படுகிறது.11 காலங்கடந்த தந்தையின் வாக்கு முற்காலத்தில் வலுவற்ற மனித உடலை ஏற்ற பொழுது எவ்வாறு மனிதரைப் போல் இருந்தாரோ, அவ்வாறே மனித மொழியில் வெளிப்படும் கடவுளின் சொற்களும் மனித மொழியை ஒத்தே இருக்கின்ன.

இயல் 4
பழைய ஏற்பாடு

பழைய ஏற்பாட்டில் நிறைவாழ்வு வரலாறு

14. அன்புமிகு கடவுள், மக்கள் குலம் முழுவதும் நிறைவாழ்வு பெறவேண்டும் என்னும் கருத்தைக் கொண்டு அதற்காக அக்கறையுடன் தயாரித்துத் தமது வாக்குறுதிகளை ஒப்படைக்கும் பொருட்டுத் தனித்தன்மை வாய்ந்த திட்டத்தால் ஓர் இனத்தவரைத் தமக்கெனத் ததேர்ந்துகொண்டார். ஆபிரகாமுடனும் (காண் தொநூ 15:18) மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுடனும்; (காண் விப 24:8) ஓர் உடன்படிக்கை செய்து தமக்கென ஒரு மக்கள் குலத்தைத் தேர்ந்துகொண்டு அம்மக்களுக்குச் சொற்கள், செயல்கள் வழியே உயிருள்ள ஒரே உண்மைக் கடவுள் தாமே என்பதை அவர் வெளிப்படுத்தினார். இதனால் இஸ்ரயேல் மக்கள், கடவுள் மக்களுடன் உறவு கொள்ளும் வழிமுறைகளை அனுபவித்தறிந்தனர். தம் இறைவாக்கினர் வழியே அவர் பேச, மக்கள் அவ்வழி முறைகளை மேன்மேலும் தெளிவாக ஆழ்ந்தறிந்து அவற்றைப் பிற இனத்தாருக்கும் பரவலாக எடுத்துக்காட்டினர் (காண் திபா 21:28-29; 95:1-3; எசா 2:1-4; எரே 3:17). திரு ஆசிரியர்கள் முன்னறிவித்து, எடுத்துக்கூறி விளக்கம் தந்த நிறைவாழ்வுத் திட்டம் பழைய ஏற்பாட்டின் நூல்களில் கடவுளின் உ;ணமை வார்த்தையாகக் காணக்கிடக்கின்றது. ஆகவே, இறை ஏவுதலினால் எழுதப்பெற்ற இந்நூல்கள் நிலையான மதிப்புடையனவாக விளங்குகின்றன. ஏனெனில், ''முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. மறைநூல்; தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது'' (காண் உரோ 15:4).

பழைய ஏற்பாட்டின் முக்கியத்துவம்

15. யாவருக்கும் மீட்பரான கிறிஸ்துவினுடையவும் மெசியா ஆட்சியினுடையவும் வருகையைத் தயார் செய்வதும் முன்னறிவிப்பதும் (காண் லூக் 24:44; யோவா 5:39; 1 பேது 1:10) பல்வேறு முன்குறிகளால் சுட்டிக்காட்டுவதுமே (காண் 1 கொரி 10:11) பழைய ஏற்பாட்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. கிறிஸ்துவால் தொடங்கி வைக்கப்பட்ட நிறைவாழ்வுக் காலத்திற்கு முன்வாழ்ந்த மக்கள் குலத்தின் நிலைக்கேற்ப, கடவுளையும் மனிதரையும் பற்றிய அறிவையும் நேர்மையும் இரக்கமும் நிறைந்த கடவுள் மனிதருடன் பழகும் முறைகளையும் பழைய ஏற்பாட்டு நூல்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டுகின்றன. இந்நூல்கள் நிறைவற்று, எழுதிய காலத்திற்கு மட்டும் பொருந்தக் கூடிய காரியங்களை கொண்டிருந்தாலும் கூட, கடவுளின் உண்மையான போதனை முறையைக் காட்டகின்றன.1 மேலும், இதே நூல்கள் கடவுளைப் பற்றிய உயிருள்ள உணர்வை நமக்குத் தருகின்றன. அவை அவரைப் பற்றிய உன்னதமான போதனைகளையும் மனித வாழ்வு பற்றிய தெளிவான ஞானத்தையும் வியத்தகு இறைவேண்டல் களஞ்சியத்தையும் தம்மகத்தே தாங்கி உள்ளன. இறதியாக, இவைகளில் நம் நிறைவாழ்வுத் திட்டம் மறைந்து கிடக்கிறது. எனவே, கிறிஸ்தவர்கள் இந்நூல்களைப் பக்திப் பற்றுதலுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளின் ஒற்றுமை

16. இரு ஏற்பாடுகளையும் எழுதுவதற்கு ஏவியவரும் அவற்றின் ஆசிரியருமான கடவுள் புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டில் மறைந்திருக்கவும், புதிய ஏற்பாட்டில் பழைய ஏற்பாடு தெளிவாய்த் தோன்றவும் ஞானத்துடன் வழி வகுத்தார்.2 கிறிஸ்து தமது இரத்தத்தால் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார் எனினும் (காண் லூக் 22:20; 1 கொரி 1:25), பழைய ஏற்பாட்டின் எல்லா நூல்களும் நற்செய்தி அறிவிப்பில்3 இடம்பெற்று, புதிய ஏற்பாட்டில் தங்கள் முழுப் பொளையும்பெற்று வெளிப்படுத்துகின்றன (காண் மத் 5:17; லூக் 24:27; உரோ 16:25-26; 2 கொரி 3:14-16); புதிய ஏற்பாட்டுக்கு ஒளியேற்றி அ தனை விளக்குகின்ன.

இயல் 5
புதிய ஏற்பாடு

புதிய ஏற்பாட்டின் மேன்மை

17. நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் நிறைவாழ்வளிக்கும் கடவுளின் வல்லமையாக இறைவார்த்தை (காண் உரோ 1:16) புதிய ஏற்பாட்டு நூல்களில் மிகவும் சிறப்பான முறையில் அடங்கியுள்ளது; அவற்றில் தம் ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றது. ஏனெனில், காலம் நிறைவேறியபோது (காண் கலா 4:4) வார்த்தை மனிதரானார்; அருளும் உண்மையும் நிறைந்து விளங்கி (காண் யோவா 1:14) நம்மிடையே குடிகொண்டார். கிறிஸ்து கடவுளின் ஆடசியை இவ்வுலகில் ஏற்படுத்தினார். தம் தந்தையையும் தம்மையும் செயலாலும் சொல்லாலும் வெளிப்படுத்தினார். தாம் இறந்து உயிர் பெற்றெழுந்ததாலும் மாட்சிமையுடன் விண்ணகம் சென்றதாலும் தூய ஆவியை அனுப்பியதாலும் தமது அலுவலை நிறைவு செய்தார். மண்ணுலகிலிருந்து உயர்த்தப்பெற்று எல்லா மனிதரையும் தம்மிடம் ஈர்த்துக்கொள்கின்றார் (காண் யோவா 12:32). முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகளை (காண் யோவா 6:68) அவர் ஒருவரே கொண்டுள்ளார். நற்செய்தியையும் போதிக்கவும் கிறிஸ்தவும் ஆண்டவருhன இயேசுவில் நம்பிக்கையைத் தூண்டவும் திருச்சபை ஒன்றுகூட்டவும் வேண்டி அவருடைய திருத்தூதர்களுக்கும் இறைவாக்கினருக்கும் தூய ஆவியின் வழியால் (காண் எபே 3:46) கிரேக்கமூலம்) இந்த இறைத்திட்டம் இப்போது வெளியாக்கப்படவில்லை. இவ்வுண்மைகளைக்குப் புதிய ஏற்பாட்டு நூல்கள் நிறைவான தெய்வீகச் சான்றாக நிலவுகின்றன.

நற்செய்தி நூல்கள் மறைத்தூதர் காலத்தவை

18. விவிலிய நூல்கள் அனைத்திலும், புதிய ஏற்பாட்டிலுங்கூட, நற்செய்தி நூல்கள் சிறந்த ஓர் இடத்தை கவிக்கின்றன என்பதை அறியாதார் யாரும் இல்லை. மனிதரான வார்த்தையும் நமக்கு நிறைவாழ்வு தருபவருமான இயேசுவின் வாழ்விற்கும் பொதனைக்கும் அவையே முக்கியச் சான்றுகளாக விளங்குகின்றன.
நற்செய்தி நூல்கள் நான்கும் திருத்தூதரிடமிருந்து தோன்றியவை என்பதைத் திருச்சபை என்றும் எங்கும் ஏற்றிருந்தது; ஏற்றும் வருகிறது. ஏனெனில் கிறிஸ்துவின் கட்டளைப்படி திருத்தூதர்கள் போதித்தனர். பின்னர் அவர்களும் அவர்கள் காலத்தவரும் இறை ஆவியின் ஏவுதலால் அப்போதனைகளை எழுத்து வடிவில் நமக்கு விட்டுச் சென்றனர். இவையே நமது நம்பிக்கையின் அடித்தளமான மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோரின் நான்கு வடிவ நற்செய்தியாகும்.1

நற்செய்தி நூல்களின் வரலாற்றுத் தன்மை

19. நற்செய்தி நூல்கள் நான்கும் வரலாற்றுத் தன்மை கொண்டவை என்பதைத் திருச்சபைத் தாய் தயக்கமின்றி எடுத்துக் கூறுகின்றார். இவை இறைமகனான இயேசு மானிடரிடையே வாழ்ந்தபோது, அவர் விண்ணேற்றமடைந்த நாள் வரை (காண் திப 1:1-2) மக்களின் நிலையான நிறைவாழ்விற்காக அவர் உண்மையிலேயே செய்தவற்றையும் போதித்தவற்றையும் அப்படியே நமக்குத் தருகின்றன என்று திருச்சபை உறுதியாக என்றும் தொடர்ந்து ஏற்றுவந்தது; ஏற்றும் வருகின்றது. திருத்தூதர்கள் ஆண்டவர் கிறிஸ்துவின் விண்ணேற்றத்திற்குப்பின், அவர் தம் மாட்சிமிகு நிகழ்ச்சிகளால் கற்பிக்கப்பட்டு, உண்மையின் ஆவியாரின் ஒளியால்2 பயிற்றுவிக்கப்பட்டதால் முழுமையான அறிவுடன் அவர் சொன்னவற்றையும் செய்தவற்றையும் தமக்குச் செவிசாய்த்தவர்களுக்குக் கூறிச்சென்றனர்.3 திரு ஆசிரியர்கள் வாய்மொழி வழிவிலோ எழுத்து வடிவிலோ வழிவழியாக வந்த பற்பல மரபுகளிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மற்றும் சிலவற்றைத் தொகுத்து அல்லது தங்கள் சபைகளின் நிலைகளுக்குத் தக்கவிதத்தில் விவரித்து, அதே சமயத்தில் போதனை வடிவைக் காத்து, ஆனால் எப்போதும் இயேசுவைப் பற்றியுள்ள உண்மையானவற்றையும் நேர்மையானவற்றையும் மட்டுமே அறிவிக்கும் வகையில்4 நான்கு நற்செய்தி நூல்களையும் எழுதினர். அவர் தம் வார்த்தைகளைப் பயின்றுள்ள நாம் அவற்றின் ''உண்மையை'' அறிந்துகொள்ளும் நோக்குடன் அவர்கள் தம்சொந்த ஞாபகத்திலிருந்தும், நினைவிற்கு வந்தவற்றிலிருந்தும் அல்லது 'தொடக்கமுதல் நேரில் கண்டும் இறை வார்த்தையை அறிவித்தும்' இருந்தோரின் சான்றிலிருந்தும் அவற்றை எழுதினர் (காண் லூக் 1:2-4).

புதிய ஏற்பாட்டுப் பிற நூல்கள்

20. நான்கு நற்செய்தி நூல்களையும் தவிரதூய ஆவியால் ஏவப்பட்டுத் தூய பவுல் எழுதிய திருமுகங்களும் பிற திருத்தூதரின் நூல்களும் புதிய ஏற்பாட்டுத் திருமுறையில் அடங்கியுள்ளன. இந்நூல்களின் மூலம் கடவுளின் ஞானமிகு திட்டத்தின்படி ஆண்டவரான கிறிஸ்துவைப் பற்றிய உண்மைகள் உறுதிப்படுத்தப்படுகினற்ன் அவருடைய உண்மையான போதனை மேன்மேலும் விளக்கப்படுகின்றது; கிறிஸ்தவின் தெய்வீகப் பணியால் வரும் நிறைவாழ்வின் வல்லமை அறிவிக்கப்படுகின்றது; திருச்சபையின் தொடக்கமும் அதன் வியத்தகு வளர்ச்சியும் எடுத்துரைக்கப்படுகின்றன் அதன் மாட்சிமிகு நிறைவும் முன்னுரைக்கப்படுகின்றது.
ஏனெனில், ஆண்டவராகிய இயேசு தம் திருத்தூதர்களுக்குத் தந்து வாக்குப்படி அவர்களுடன் இருந்தார் (மத் 28:20); உண்மையின் முழுமைக்கு இட்டுச் செல்லும்படி துணையாளராகிய ஆவியை அவர்ளிடம் அனுப்பினார் (காண் யோவா 16:13).

இயல் 6
திருச்சபையின் வாழ்வில் விவிலியம்

திருச்சபையின் விவிலியத்திற்கு வணக்கம் அளித்தல்

21. திருச்சபை நம் ஆண்டவரின் திருவுடலுக்கு வணக்கம் செலுத்துவது போலவே விவிலியத்திற்கும் என்றும் வணக்கம் செலுத்தி வந்துள்ளது. சிறப்பாக, திருவழிபாட்டில் இறை வார்த்தையையும் கிறிஸ்துவின் உடலையும் பரிமாறும் பந்தியிலிருந்து வாழ்வின் அப்பத்தைப் பெற்று, கிறிஸ்தவர்களுக்கு அளிக்க திருச்சபை தவறுவதில்லை. விவிலிய நூல்களைத் திருமரபுடன் சேர்த்தே திருச்சபை தனது நம்பிக்கையின் ஒப்புயர்வற்ற அளவையாக என்றும் கொண்டிருந்தது; இன்றும் கொண்டிருக்கின்றது. ஏனெனில் இந்நூல்கள் கடவுளால் ஏவப்பட்டு எக்காலத்திற்குமென எழுதப்பட்டுள்ளதால் அதே கடவுளின் வார்த்தையை ஒரு மாற்றமும் இன்றிஅளிப்பதுடன் இறைவாக்கினர், திருத்தூதர்கள் ஆகியோரின் சொற்கள் வழியே தூய ஆவியின் குரலினை எதிரொலிக்கச் செய்கின்றன. ஆகவே, கிறிஸ்தவ மறையைப் போலவே திருச்சபையின் படிப்பினைகள் யாவும் விவிலியத்தால் ஊட்டம்பெற்று நெறிப்படுத்தப் பெறல் இன்றியமையாதது. ஏனெனில் நம் வானகத் தந்தை தம் மக்களை விவிலிய நூல்களில் அன்போடு எப்போதும் சந்தித்து உரையாடுகின்றார். இறை வார்த்தையின் வலிமையும் ஆற்றலும் எத்துணை பெரிது! அது திருச்சபைக்கு ஆதரவும் ஊக்கமுமாக இருக்கிறது; திருச்சபை மக்களின் நம்பிக்கைக்கு உறுதியளிக்கிறது; ஆன்ம உணவாகவும் அருள் வாழ்வின் தூய, நிலையான ஓர் ஊற்றாகவும் திகழ்கின்றது. எனவே கீழ் வரும் சொற்கள் விவிலியத்திற்கு முற்றிலும் பொருந்தும்: ''கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது'' (எபி 4:12) ''அவ்வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்கும் உரிய உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்லது'' (திப 20:32; காண் 1 தெச 2:13).

விவிலிய மொழி பெயர்ப்புகள்

22. விவிலியத்தைப் படித்தறிய கிறிஸ்தவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படவேண்டும். எனவே தான், திருச்சபை தொடக்கத்திலிருந்தே எழுபதின்மர் பெயரைக் கொண்டுள்ள பழைய ஏற்பாட்டின் தொண்மைமிக்கக் கிரேக்க மொழி பெயர்ப்பினைத் தனதாக ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், மற்றைய கீழ்நாட்டு மொழி பெயர்ப்புகளுக்கும் இலத்தீன் மொழி பெயர்ப்புகளுக்கும் குறிப்பாக ''வுல்காத்தா'' என்றழைக்கப்படும் மொழி பெயர்ப்புக்கும் எப்போதும் மதப்பிற்குரிய இடத்தை அது கொடுத்துவந்துள்ளது. இருப்பினும் கடவுளின் வார்த்தை எக்காலத்திலும் யாவருக்கும் எட்டக்கூடிய நிலையில் இருக்கவேண்டுமென்பதால் பல்வேறு மொழிகளிலும் பொருத்தமான, சரியான மொழி பெயர்ப்புகள், சிறப்பாக விவிலிய மூலப் பாடங்களிலிருந்து செய்யப்படும் வண்ணம் தாய்க்குரிய பரிவோடு திருச்சபை கவனித்து வருகிறது. மேலும், தக்க வாய்ப்பும் திருச்சபை அதிகாரிகளின் ஒப்புதலும் இருக்குமாயின், பிற கிறிஸ்தவ சகோதரர், சகோதரிகளின் ஒத்துழைப்போடு இம்மொழிபெயர்ப்புகள் செய்யப்படும்போது எல்லாக் கிறிஸ்தவர்களும் அவற்றைப் பயன்படுத்த இயலும்.

அறிஞர்களின் திருத்தூது ஈடுபாடு

23. இறை மொழியால் இடைவிடாது தன் மக்களை ஊட்டி வளர்க்க மனிதரான வார்த்தையின் மணமகளாம் திருச்சபை தூய ஆவியால் கற்பிக்கப்பட்டு விவிலியத்தை நாளுக்கு நாள் ஆழ்ந்து ஊன்றியறிய முயலுகிறது. ஆகவேதான் திருச்சபை கீழைச் சபைத் தநதையர் மேலைச் சபைத் தந்தையர் ஆகியோரின் நூல்களையும் மற்றும் திருவழிபாட்டு முறைகளையும் கற்றறிய மக்களை ஊக்குவிக்கிறது. கத்தோலிக்க விவிலிய வல்லுநர்களும் மற்றும் இறையியல் அறிஞர்களும் தங்கள் திறமைகளையெல்லாம் ஆர்வத்தோடு ஒன்றுதிரட்டிச் சிறந்த வழிவகைகளைப் பன்படுத்தி திரு ஆசிரியத்தின் கண்காணிப்பின் கீழ் விவிலியத்தை அலசி ஆராயவும் எடுத்துரைக்கவும் வேண்டும். இயன்ற வரையில் எல்லா இறைவார்த்தைப் போதகர்களும் மனத்திற்கு ஒளியூட்டி உள்ளத்தை உறுதிப்படுத்தி மக்களின் இதயங்களை இறையன்பினால் பற்றியெரியச் செய்யும்1 விவிலியம் என்னும் உணவைக் கடவுளின் மக்களுக்குப் பயன்தரு முறையில் அளிக்கவேண்டும் என்பதே இதன் நோக்கம். விவிலிய வல்லுநராயிருக்கும் திருச்சபையின் மக்கள் மகிழ்வுடன் தொடங்கியுள்ள இப்பணியைத் திருச்சபையின் கருத்துப்படி தளராப் புதிய ஆற்றலுடனும் ஊக்கத்துடனும் தொடர்ந்து செய்யத் திருச்சங்கம் தூண்டுகிறது.2

இறையியலில் விவிலியம் வகிக்கும் முக்கிய இடம்

24. தூய இறையியல், திருமரபையும் கடவுளின் எழுதப்பட்ட வார்த்தையையும் தன் நிலையான அடிப்பiயாகக் கொண்டுள்ளது. நம்பிக்கை ஒளியால் கிறிஸ்துவின் மறைபொருளில் அடங்கியுள்ள உ;ணமைகள் அனைத்தையும் கூர்ந்தாராய்வதன் மூலம் இறையியல் அத்திரு வார்த்தையால் மிக்க வலிமைப் பெற்று என்றும் இளமையுடன் இலங்குகிறது. விவிலிய நூல்களில் இறைவார்த்தை அடங்கியுள்ளது. இறை ஏவுதலால் எழுதப்பட்டபடியால் இவை உண்மையாகவே கடவுளின் வார்த்தையாக உள்ளன. எனவே விவிலியப் படிப்பு தூய இறையியலுக்கு உயிர்நாடியைப் போல் இருக்கவேண்டும்.3 மேலும் விவிலியத்திலிருந்தே திருவார்த்தைப் பணியும் நன்முறையில் ஊட்டம்பெற்று தூய முறையில் வளம் பெறுகிறது. இத்திருவார்த்தைப் பணியில் திருப்பணியாளரின் மறையுரையும் மறைக்கல்வியும் அனைத்து வகையான கிறிஸ்தவ அறிவுரைகளும் அடங்கும். இவ்வறிவுரைகளில் திருவழிபாட்டு மறையுரை மிகச் சிறந்த இடம் பெறவேண்டும்.

விவிலியத்தைப் படித்தல் வேண்டும்

25. எனவே, திருபபணி நிலையினர் அனைவரும், சிறப்பாகக் கிறிஸ்துவின் திருப்பணியாளர், அருள்வாக்குப் பணியிலே முறையுடன் பணியாற்றும் திருத்;தொண்டர், மறைக்கல்வி ஆசிரியர் போன்ற பிறரும் விவிலியத்தை ஆர்வத்துடன் படித்துக் க வனத்துடன் ஆராய்ந்து அதில் ஊன்றியிருத்தல் இன்றியமையாதது. ஏனெனில், வளமிக்க இறைவார்த்தையைத் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட கிறிஸ்தவர்களோடு குறிப்பாகத் திருவழிபாட்டின் வழியே, பங்கிட்டுக்கொள்ளும் கடமையுடைய இவர்களுள் யாரும் ''கடவுளின் வார்த்தைக்கு உள்ளத்தால் செவிசாய்க்காது, வெளித்தோற்றத்திற்கு மட்டும் வீண்போதகராக''4 மாறிடல் தகாது. இதுபோலவே விவிலியத்தை அடிக்கடி வாசிப்பதன் மூலம் ''கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம்'' (பிலி 3:8) பெற்றுக்கொள்ளும்படி கிறிஸ்தவ மக்கள் எல்லாரையும் சிறப்பாகத் துறவிகளையும் இத்திருச்சங்கம் மிகவும் தனிப்பட்ட முறையில் தூண்டுகிறது. ''விவிலியத்தை அறியாமல் இருப்பது கிறிஸ்துவையே அறியாமலிருப்பதாகும்''.5 ஆகவே, இறை மொழிகளை மிகுதியாய்க் கொண்டுள்ள திருவழிபாட்டின் மூலம், அல்லது விவிலியத்தை இறைப்பற்றுடன் வாசிப்பதன் மூலம், அல்லது விவிலியத்தை இறைபற்றுடன் வாசிப்பதன் மூலம், அல்லது திருச்சபையின் அருள்பணியாளர்களுடைய ஒப்புதலோடும் ஆதரவோடும் இன்று எங்கும் பாராட்டுக்குரிய முறையில் பரவி வரும் பிற பொருத்தமான முயற்சிகள் மற்றும் வழிவகைகள் மூலம் அனைவரும் விருப்புடன் விவிலியத்தை அண்டிச் செல்லவேண்டும். கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே உரையாடல் நிகழ வேண்டுமென்றால், விவிலியத்தை வாசிக்கும்போது இறைவேண்டல் செய்யவும் வேண்டும் என்பதை மறத்தலாகாது. ஏனெனில் ''நாம் செபிக்கும் இறைவனை நோக்கி வேண்டும்போது அவருடன் பேசுகிறோம்; இறைவார்த்தைகளை வாசிக்கும்போது அவர் பேசுவதைக் கேட்கிறோம்.''6
''திருத்தூதர் போதனையைக் கொண்டுள்ள''7 திரு ஆயர்கள், இந்த விவிலிய நூல்களைச் சிற்பபாக, புதிய ஏற்பாட்டை, அதிலும் தனிப்பட்ட விதத்தில் நற்செய்தி நூல்களைத் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்கள் தகுந்த விதத்தில் பயன்படுத்தும் முறையில் அவர்களைப் பயிற்றுவிக்கவேண்டும். தேவையான, உண்மையிலே போதுமான விளக்கங்களைக் கொண்ட விவிலிய மொழி பெயர்ப்புகள் மூலம் அவர்கள் இப்பணியை ஆற்றவேண்டும். திருச்சபையின் மக்கள் பாதுகாப்புடனும் பயனுள்ள முறையிலும் விவிலிய நூல்களைப் படித்துப் பழகி அவற்றின் உணர்வில் ஊற வேண்டுமென்பதே இதன் நோக்கம்.
மேலும் கிறிஸ்தவரல்லாதாரும் பயன்படுத்தும் வகையில் அவர்களுடையே சூழ்நிலைகளுக்கேற்ப, புதுப்பிக்கப்பட்ட விவிலியப் பதிப்புகள் பொருத்தமான விளக்கக் ''குறிப்புகளுடன் தயாரிக்கப்படவேண்டும்''. அருள்பணியாளர்களும் எல்லா நிலைகளிலுமுள்ள கிறிஸ்தவர்களும் பற்பல வகைகளில் இத்தகைய நூல்களை விவேகத்துடன் பரப்ப வேண்டும்.

முடிவுரை

26. இவ்வாறு விவிலிய நூல்களை வாசிப்பதன் மூலமும் ஆராய்வதன் மூலமும் ''ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே விரைந்து பரவிப் புகழ் பெற்றது'' (2 தெச 3:1). திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறை வெளிப்பாட்டுக் களஞ்சியம் மக்களின் இதயங்களை மேன்மேலும் நிரப்பி நிற்கட்டும். நற்கருணைக் n காண்டாட்டத்தில் அடிக்கடி பங்கு பெறுவதால் திருச்சபையின் வாழ்வு வளர்ச்சியுறுவதுபேல் ''என்றென்னும் நிலைத்திருக்கும்'' (எசா 40:18; 1 பேது 1:23-25) இறை வார்த்தைக்கு அதிக மரியாதை செலுத்துவதன் மூலம் நாம் அருள் வாழ்வில் புதிய தூண்டுதல் பெறுவோம் என நம்பலாம்.
இக்கோட்பாட்டு விளக்கத்தில் கூறப்பட்டுள்ள யாவும், அவை ஒவ்வொன்றும் திருச்சங்கத் தந்தையரின் இசைவைப் பெற்றுள்ளன. நாமும் கிறிஸ்து நமக்கு அளித்துள்ள திருத்தூது அதிகாரத்தால்; வ ணக்கத்திற்குரிய தந்தையருடன் இணைந்து தூய ஆவியில் அவைகளை ஏற்றுக்கொள்கிறோம், தீர்மானிக்கிறோம், நிலை நாட்டுகிறோம். சங்கம் நிலைநாட்டிய இவை யாவையும் கடவுளின் மாட்சிமைக்காகச் செயல்படுத்துமாறு ஆணையிடுகிறோம்.
பவுல்
தூய பேதுரு பேராலயம்
உரோமை கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்,
நவம்பர் 18, 1965